14 ஜூலை 2020

ஜாவா காட்டில் திரௌபதி ஆலயம்

தமிழ் மலர் - 14.07.2020

இந்தோனேசியா ஜாவா தீவில் ஓர் உயரமான மலை. பெயர் பிராகு மலை. படகு போன்று வடிவத்தில் பச்சை பசேல் மலை. அங்கே தன்னந்தனியாய் தனித்து வாழும் ஓர் ஆலயம். தரணி மாந்தர்களுக்குத் தெரியாமல் தத்துவம் பேசும் அழகிய ஆலயம். அதுவே திரௌபதி அம்மன் ஆலயம். அங்கே அந்த பச்சைப் பசுங்காட்டில் பச்சை வண்ண ஓவியம்.



பெரிய ஒரு வனாந்திர மலைக் காட்டுப் பகுதியில் மிக மிக ஒதுக்குப் புறமாக அந்த ஆலயம் உள்ளது. ஓராண்டு அல்ல. ஈராண்டுகள் அல்ல. 1300 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

ஏன் அந்த ஆலயத்தை அங்கே போய் அப்படி ஒரு காட்டுப் பகுதியில் கட்டினார்கள். தெரியவில்லை. இருந்தாலும் இந்தோனேசியா கலிங்க நாட்டு அரசர்களில் ஒருவர் கட்டியது என்பது மட்டும் தெரியும்.

நீண்ட நாட்களாக மர்மமாக இருந்தது. கட்டிய அவர் பெயரும் தெரியாது. ஏன் அவர் அங்கே போய் கட்டினார் என்பதும் தெரியாது. கட்டியவர் ஒரு பல்லவர் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். ஏன் என்றால் கலிங்கா பேரரசு என்பது ஒரு பல்லவ அரசு.



ஆனாலும் அண்மையில் சில தகவல்கள் கசிகின்றன. கலிங்கா பேரரசின் மகாராணியார் ஷீமா கட்டி இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்றை மட்டும் நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த ஆலயம் அமைந்து இருக்கும் இடம் ஓர் எரிமலைப் பகுதி. எரிமலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த எரிமலை பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல முறை குமுறி உள்ளது.

ஒருக்கால் அந்த எரிமலையின் சீற்றத்தைத் தணிப்பதற்காக அல்லது நல்லது நடக்க வேண்டும் எனும் வேண்டுதலுக்காக அந்த ஆலயத்தை அங்கே கட்டி இருக்கலாம். சொல்ல முடியாது. இது ஓர் அனுமானம்.



இந்தோனேசியா முழுமைக்கும் பல ஆயிரம் ஆலயங்கள் உள்ளன. பற்பல அரசப் பரம்பரையினர் பற்பல காலக் கட்டங்களில் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.

ஆற்று ஓரங்களில் கட்டி இருக்கிறார்கள். ஏரிகளில் கட்டி இருக்கிறார்கள். சமவெளிகளில் கட்டி இருக்கிறார்கள். கடல்கரைகளில் கட்டி இருக்கிறார்கள். மலைகளின் உச்சியிலும் கட்டி இருக்கிறார்கள். திரௌபதி அம்மன் ஆலயத்தை எரிமலை அடிவாரத்தில் கட்டி இருக்கிறார்கள்.

காலம் செய்த கோலமோ; மனிதன் செய்த கோலமோ தெரியவில்லை. பல ஆலயங்கள் காணாமல் போய் விட்டன. பல ஆலயங்கள் இருந்தும் இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பிராகு மலை திரௌபதி அம்மன் ஆலயம்.


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் பிராகு மலை (Mount Prahu) உள்ளது. இது ஓர் எரிமலை. பல முறை வெடித்து உள்ளது. ஆகக் கடைசியாக 2019-ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெடித்து தீப்பிழம்புகளைக் கக்கி உள்ளது.

இந்த மலையின் அடிவாரத்தில் தான் திரௌபதி அம்மன் ஆலயத்தைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மலையின் அடிவாரத்தில் இந்த ஆலயம் மட்டுமே இருக்கிறது. இந்தோனேசியாவை ஆட்சி செய்த கலிங்கா பேரரசின் மன்னர்களில் ஒருவர் கட்டி இருக்கிறார். அவர் மகாராணியார் ஷீமாவாக இருக்கலாம்.

இந்தோனேசியாவின் ஆலயங்களைப் பார்க்க வருகிறவர்கள் இந்த திரௌபதி ஆலயத்திற்கு அதிகமாய்ச் செல்வது இல்லை. பாவம் என்று சொல்லும் அளவிற்குத் தனித்து விடப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த ஆலயத்தைக் கவனிப்பதற்கு ஒரு பாதுகாவலர்கூட இல்லை.




இந்த ஆலயம் தாயாங் கூலோன் கிராமத்தில் (Dieng Kulon Village) இருக்கும் பிராகு மலையில் (Mount Prahu), 2,500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஆலயத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். உயரம் 6 மீட்டர். யோக் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

ஜாவா தீவின் வடப் பகுதியில் ஜெப்பாரா (Jepara Regency) எனும் மாநிலம் உள்ளது. அங்குதான் கலிங்கா பேரரசு மையம் கொண்டு இயங்கியது. கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.850-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறது. இப்போது அந்த இடத்திற்கு கெலிங் (Keling) என்று பெயர்.

கலிங்கப் பேரரசின் கலிங்கம் எனும் சொல்லில் இருந்து தான் கெலிங் என்கிற பெயரையும் வைத்து இருக்கிறார்கள். சீனர்கள் இந்த அரசை ஹெலிங் (Helíng) என்று அழைக்கிறார்கள்.



இன்னும் ஒரு விசயம். கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு. இந்த மூன்று பேரரசுகளும் தான் இந்தோனேசியாவின் வரலாற்றில் மிக மிகப் பழமையான பேரரசுகள்.

1. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 605

2. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

3. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 650 – 850

கலிங்கா பேரரசு உருவான கதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கி.பி. 120-ஆம் ஆண்டுகளில் தேவ வர்மன் என்பவர் இந்தியாவில் இருந்து ஜாவா தீவிற்கு வந்தார். இவர் ஒரு வணிகர். ஜாவாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் வந்தவர்.



அப்படி வந்தவர் தான் சில ஆண்டுகளில் சாலகநகரம் (Salakanagara kingdom) எனும் அரசைத் தோற்றுவித்தார். எப்படித் தோற்றுவித்தார் என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் சாலகநகரப் பேரரசை ஓர் இந்திய வணிகர் தான் தோற்றுவித்தார். அவரின் பெயர் தேவ வர்மன் என்று கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கி.பி. 674-ஆம் ஆண்டில் சீமா சத்தியா என்பவர் கலிங்கா பேரரரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார். நேர்மையான அரசியல் வாழ்க்கை. இவர் காலத்தில் பிராகு மலை திரௌபதி ஆலயம் கட்டப்பட்டு இருக்கலாம் எனும் ஐயப்பாடு உள்ளது. சரி.



மேலே சொன்ன  கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு; இந்த மூன்று இந்தியர்ப் பேரரசுகளுக்கு முன்பே இன்னும் ஒரு பேரரசு இந்தோனேசியாவில் இருந்து இருக்கிறது.

திரௌபதி ஆலயம் போல பிரபலம் இல்லாத பெயர். அந்தப் பேரரசைப் பற்றி யாருமே எதையும் பேசுவது இல்லை. மறந்து போய் இருக்கலாம். அந்தப் பேரரசின் பெயர் தான் சாலகநகரப் பேரரசு (Salakanagara kingdom).

(Coedès, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. பக்:52)

இந்த சாலகநகரப் பேரரசு, மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த பேரரசு. வருடத்தைக் கவனியுங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தோனேசியாவில் இந்தியர்களின் ஆட்சி.



திரௌபதி ஆலயத்தில் துர்கா, அகஸ்தியர், மற்றும் விநாயகர் உள்ளிட்ட சில வளைவு வடிவங்கள் இருந்தன. இப்போது அந்த வடிவப் பொருட்கள் எதுவும் இல்லை. திருடப்பட்டு இருக்கலாம்.

அல்லது கைலாசா அருங்காட்சியகத்திற்கு (Kailasa Museum) மாற்றப்பட்டு இருக்கலாம். அப்படியும் ஒரு வதந்தி உலவுகிறது. சுருங்கச் சொன்னால் திரௌபதி ஆலயத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் வெற்று ஆலயத்தை மட்டுமே காண முடியும்.

இது போன்ற ஒரு வரலாற்று தளம் புறக்கணிக்கப் படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆலயம் பாழடைந்து விட்டது. அதற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.

ஆலயத்தை மேம்படுத்துவதில் உள்ளூர் அரசாங்கம் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆலயக் கட்டமைப்பின் வரலாறு தொடர்பான தகவல் பலகைகளை நிறுவ வேண்டும்.


திரௌபதி ஆலயக் குழுமத்தில் நான்கு ஆலயங்கள் இருந்தன. திரௌபதி (Dwarawati) ஆலயம்; அபிமன்யு (Abiyasa) ஆலயம்; பாண்டு (Pandu) ஆலயம்; மார்க்கண்டேயர் (Margasari) ஆலயம் என நான்கு ஆலயங்கள்.

இப்போது திரௌபதி ஆலயம் மட்டுமே உள்ளது. மற்ற மூன்று ஆலயங்களும் இடிந்து போய் விட்டன. இடிபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றைப் புனரமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அங்கே எப்படி செல்வது?

திரௌபதி ஆலயம் பத்தூர் (Batur) எனும் இடத்தில் உள்ள தாயாங் கூலோன் கிராமத்தில் இருக்கிறது. வோனோசோபோ (Wonosobo) நகரத்தில் இருந்து அந்த இடத்தை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும்.

பயணிகள் பேருந்தில் ஏறி தாயாங் ராயா சாலையைப் பயன்படுத்தி பத்தூருக்குச் செல்லலாம். கிராமத்திற்கு வந்த பிறகு, கோயிலை அடைவதற்கு ஒரு சிறிய மலையில் ஏற வேண்டும். போகும் வழியில் உருளைக்கிழங்கு விவசாயப் பண்ணைகள் இருக்கும்.



திரௌபதி ஆலயத்தின் வடிவம் கடோற்கஜன் ஆலயத்தின் பாணியைக் கொண்டு உள்ளது. ஆலயத்தின் கூரை ஒரு கோணமான கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

திரௌபதி ஆலயத்திற்கு அருகில் 1864-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பரிகேசிட் கோயில்களும் (Parikesit Temple) இருந்தன. இப்போது ஒரே ஒரு பரிகேசிட் கோயில் மட்டுமே தனியாக உள்ளது.

திரௌபதி ஆலயம் உண்மையில் தாயாங் பீடபூமி வளாகத்தில் உள்ள மற்ற கோயில்களை விட சுற்றுலாப் பயணிகளால் நன்கு அறியப் பட்டதாகும். ஆனால் அங்கு செல்பவர்கள் குறைவு. ஒரே ஒரு கோயிலைப் பார்ப்பதற்கு மலை மேல் ஏற வேண்டுமே என்று பலர் போவது இல்லை.

காலத்தால் மறைந்து வரும் வரலாற்றுச் சின்னங்களில் ஜாவா திரௌபதி ஆலயமும் ஒன்றாகும். இப்படி ஓர் ஆலயம் இந்தோனேசியாவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். அதுவே அந்த ஆலயத்திற்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

சான்றுகள்:

1. Romain, J. (2011). Indian Architecture in the ‘Sanskrit Cosmopolis’: The Temples of the Dieng Plateau.

2. Suherdjoko (28 April 2006). "Dieng tidies itself up to regain past glory". The Jakarta Post.

3. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet.

4. Dumarcay, J and Miksic J. Temples of the Dieng Plateau in Miksic, John 1996 (editor) 1996 Ancient History Volume 1 of Indonesian Heritage Series Archipleago Press, Singapore.



13 ஜூலை 2020

ஜாவா பீடபூமியில் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்கள்

தமிழ் மலர் - 13.07.2020

இந்தோனேசியாவின் ஆலயங்கள் என்று சொல்லும் போது பாலித் தீவில் உள்ள ஆலயங்கள் முதலில் தெரிய வரும். அடுத்து யோக்ஜாகர்த்தாவில் உள்ள பிரம்பனான் (Prambanan) ஆலயம் தெரிய வரும். அடுத்து அதன் அருகில் இருக்கும் போரோபுதூர் (Borobudur) ஆலயம் தெரிய வரும்.


ஆனால் இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தலைவாசல் வைக்கும் ஓர் ஆலய வளாகம் இருக்கிறது. அதைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதுதான் தாயாங் பீடபூமி ஆலயங்கள் (Dieng Plateau Temples). 400-க்கும் மேற்பட்ட ஆலயங்கள்.

உண்மையில் இந்தத் தாயாங் ஆலயங்கள் (Dieng Temples) தான் இந்தோனேசியாவிலேயே மிக மிகப் பழமையான ஆலயங்கள் ஆகும். பிரம்பனான் ஆலயம்; போரோபுதூர் ஆலயம்; பாலித் தீவு ஆலயங்கள் (Bali Island Temples) வருவதற்கு முன்னதாகவே தாயாங் பீடபூமி ஆலயங்கள் உருவாகி விட்டன.

1000 ஆண்டுகளுக்கு முன்னர் தாயாங் பீடபூமியில் ஒரே இடத்தில் 400 ஆலயங்கள் இருந்து இருக்கின்றன. ஆனால் இப்போது 8 ஆலயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. மற்றவை இயற்கையின் சீற்றத்தில் சிதைந்த மரபு அணுக்களாகி விட்டன.




எரிமலை வெடிப்புகளினால் பல ஆலயங்கள் அழிந்து போயின. இன்னும் பல ஆலயங்களின் கற்களும் கற்பாறைகளும் கிராமவாசிகளால் எடுத்துச் செல்லப் பட்டன. நிலநடுக்கம்; இயற்கைப் பேரிடர்களினால் மேலும் பல ஆலயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு போயின. 1000 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட கால வரலாறு.

எஞ்சிய எட்டு ஆலயங்களையும் இந்தோனேசிய அரசாங்கம் பத்திரமாய்ப் பாதுகாத்து நெகிழ வருகிறது.

மத்திய ஜாவாவில் வோனோசோபோ (Wonosobo) நகருக்கு அருகில் தாயாங் பீடபூமி உள்ளது. மலைப்பாங்கான பகுதி. முதன்முதலில் கலிங்கா பேரரசின் (Kalingga Kingdom) அரசர்கள் 7-ஆம் நூற்றாண்டில் அந்த ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.


அடுத்து 8-ஆம் நூற்றாண்டில் மத்தாரம் பேரரசு (Mataram Kingdom) ஆட்சியாளர்கள் கட்டி இருக்கிறார்கள். இவர்கள் சஞ்சய வம்சாவளியைச் (Sanjaya Dynasty) சேர்ந்தவர்கள். பெரும்பாலான ஆலயங்களை மத்தாரம் அரசர்கள் தான் கட்டினார்கள். ஏற்கனவே சொன்னது போல 400 ஆலயங்கள். போட்டிப் போட்டுக் கொண்டு கட்டி இருக்கிறார்கள்.

ஜாவாவில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பழமையான மதக் கட்டமைப்புகள்;  அல்லது ஆரம்பகால இந்து ஆலயங்களில் தாயாங் ஆலய வளாகம் தான் பழைமையானது என்று சொல்லலாம். 

இந்தியாவின் இந்து ஆலயக் கட்டிடக் கலையின் பல அம்சங்களை இந்தத் தாயாங் ஆலயங்கள் பறைசாற்றுகின்றன.



கம்போடியா அங்கோர் வாட் ஆலய வளாகத்திலும் இப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. ராஜவர்மன் (Rajavarman); சூரியவர்மன் (Suriavarman) பரம்பரையினர் நீயா நானா என்று போட்டிப் போட்டுக் கொண்டு மூலைக்கு மூலை ஆலயங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.

தாயாங் ஆலயங்கள் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் அல்லது 6500 அடி உயரத்தில் உள்ளன. எவ்வளவு உயரத்தில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்வோம்.

கோயில்களின் உண்மையான பெயர், வரலாறு மற்றும் இந்தக் கோயில்களின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான மன்னர்கள் யார் எவர் என்று சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த ஆலயங்களின் கட்டுமானத்துடன் தொடர்புடைய தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.



ஒன்று மட்டும் உண்மை. தாயாங் ஆலயங்கள் அனைத்தும் 7-ஆம் - 8-ஆம் நூற்றாண்டுகளில், ஒரே காலக் கட்டத்தில் கட்டப் பட்டவை ஆகும். இவற்றின் கட்டுமானப் பாணியில் ஜாவாவில் காணப்படும் மற்ற மற்ற கட்டுமான அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றன.

வட மத்திய ஜாவானிய கட்டுமான அமைப்பு (Northern Central Javanese); கிழக்கு ஜாவானிய பதுட் கோயில் கட்டுமான அமைப்பு (East Javanese Badut Temple); கெடாங் சாங்கோ கோயில்கள் கட்டுமான அமைப்பு (Gedong Songo Temples); மேற்கு ஜாவானிய கங்குவாங் (West Javanese Cangkuang) கட்டுமான அமைப்பு; பூஜோங் மிஞ்சா கட்டுமான அமைப்பு (Bojongmenje) ஆகிய அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றன.



1814-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் தாயாங் ஆலயங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்கனவே அந்தப் பகுதியில் வாழ்ந்த ஜாவானிய கிராமவாசிகள் அந்த ஆலயங்களைப் பற்றி அறிந்து வைத்து இருந்தார்கள்.

இந்த ஆலயங்கள் கட்டப்படும் போது அதன் மேற்பரப்பு ஒரு சமவெளிதான். குளங்கள் எதுவும் இல்லை. அந்த இடத்தில் மட்டும் 400 ஆலயங்கள் இருந்து இருக்கின்றன. அத்தனை ஆலயங்களும் பல நூறாண்டுகளாக அந்த ஏரிக்குள் மூழ்கிப் போய் இருந்து இருக்கின்றன.

எரிமலை வெடிப்பினால் ஒரு பெரிய பள்ளம் உண்டாகி அதில் நீர் நிரம்பி அந்த ஆலயங்கள் மூழ்கிப் போய் விட்டன.



பல நூறு ஆண்டுகளுக்கு வெளியுலகத்திற்குத் தெரியாமலேயே அந்த ஆலயங்கள் குளத்திற்குள் மூழ்கி இருந்து இருக்கின்றன. அந்தக் குளத்தின் நீரை அகற்றியதும் கோயில்களின் கட்டுமானங்கள் தெரிய வந்தன.

1856-ஆம் ஆண்டில், குளத்தின் நீரை வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்றன.  ஐசிடோர் கின்ஸ்பெர்கன் (Isidore van Kinsbergen) எனும் ஒரு டச்சுக்காரர் அந்த முயற்சிகளில் இறங்கினார். 

1864-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய டச்சு அரசாங்கம் (Dutch East Indies Government) புனரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியது. அந்தக் கோயில்களுக்கு இந்து காப்பியமான மகாபாரதத்தின் கதாமாந்தர்களின் பெயர்கள் வைக்கப் பட்டன.


பொதுவாகவே தாயாங் ஆலயங்கள் அனைத்தும் தென்னிந்தியாவின் பல்லவ பாணி ஆலயங்களுடன் தொடர்பு உடையவை ஆகும்.

தாயாங் ஆலய வளாகத்தில் அர்ஜுனா கோயிலுக்கு (Arjuna temple) அருகே ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கி.பி 808 - 809 என பொறிக்கப்பட்டு இருந்தது.

(An inscription discovered near Arjuna temple in Dieng was dated circa 808-809 CE, it was the oldest surviving specimen of old Javanese script, which revealed that the Dieng temple is continuously inhabited from mid 7th to early 9th century.)

உள்ளூர் ஜாவானிய மக்கள் ஒவ்வோர் ஆலயத்திற்கும் அவர்களின் ஜாவானிய காப்பியக் கதாபாத்திரங்களின்படி பெயரிட்டு உள்ளனர். பெரும்பாலும் மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்.



இந்தத் தாயாங் ஆலயங்களுக்கு என்று ஓர் அருங்காட்சியகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் கைலாசா அருங்காட்சியகம் (Kailasa Museum). தாயாங் ஆலயங்களில் இருந்து அகற்றப்பட்ட பல சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

தாயாங் என்றால் பழைய ஜாவானிய காவி (Old Javanese Kawi) மொழியில் தெய்வங்கள் தங்குமிடம் (Abode of Gods) என்று பொருள்.

தாயாங் ஆலயங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

1. அர்ஜுனா (Arjuna) ஆலயங்கள்;

2. கடோற்கஜன் (Gatotkaca) ஆலயங்கள்;

3. திரௌபதி (Dwarawati) ஆலயங்கள்;

4. பீமா (Bima) ஆலயம்.

(The temples are clustered around three groups; Arjuna, Dwarawati and Gatotkaca clusters, while Bima temple was constructed as a separate single temple.)



முதலாவது: அர்ஜுனா ஆலயக் குழுமத்தில் அர்ஜுனா ஆலயம் தான் பிரதான ஆலயம். அந்தக் குழுமத்தில் நான்கு ஆலயங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் கொத்து கொத்தாக மலைகள். அந்த மலைகளுக்கு மத்தியில் அர்ஜுனா ஆலயங்களின் சமவெளி. தலைக் கோயிலாக அர்ஜுனா ஆலயம்; தென் பகுதியில் ஸ்ரீகண்டி (Srikandi) ஆலயம்; புந்ததேவா (Puntadewa) ஆலயம்; செம்பத்திரா (Sembadra) ஆலயம்; மற்றும் செமர் (Semar) ஆலயம்.

இரண்டாவது: கடோற்கஜன் ஆலயக் குழுமத்தில் ஐந்து ஆலயங்கள் உள்ளன. கடோற்கஜன் ஆலயம் (Gatotkaca); சாத்தியகி ஆலயம் (Setyaki); நகுலன் ஆலயம் (Nakula); சகாதேவா ஆலயம் (Sadewa); கர்ணன் (Gareng) ஆலயம்.

அந்தக் குழுமத்தில் இன்று கடோற்கஜன் ஆலயம் மட்டுமே தனியாய் நிற்கின்றது. மற்ற நான்கு ஆலயங்களும் நிலநடுக்கங்களினால் இடிந்து விழுந்து சிதைந்து விட்டன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.



மூன்றாவது: திரௌபதி ஆலயக் குழுமத்தில் நான்கு ஆலயங்கள் இருந்தன. திரௌபதி (Dwarawati) ஆலயம்; அபிமன்யு (Abiyasa) ஆலயம்; பாண்டு (Pandu) ஆலயம்; மார்க்கண்டேயர் (Margasari) ஆலயம் என நான்கு ஆலயங்கள்.

இருப்பினும் அவற்றில் தற்போது திரௌபதி ஆலயம் மட்டுமே அப்படியே உள்ளது. மற்றபடி மற்ற மூன்று ஆலயங்களும் இடிந்து போய் விட்டன. இடிபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றைப் புனரமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அதற்காக இந்தோனேசிய அரசாங்கம் ஒரு வரலாற்று ஆய்வுக் குழுவை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இருந்து அறிஞர்களையும் வரவழைத்து உள்ளது.



நான்காவது: பீமா (Bima) ஆலயம் அல்லது பீமர் ஆலயம். மற்ற ஆலயங்களில் இருந்து தனியாக வேறு ஒரு மலைப் பகுதியில் உள்ளது.

தாயாங் ஆலய வளாகத்தில் பீமா ஆலயம் தான் மிகப் பெரிய ஆலயம். மிக உயரமான ஆலயம். இந்த ஆலயத்தின் வடிவம் மத்திய ஜாவாவில் உள்ள மற்ற மற்ற கோயில்களில் இருந்து மாறுபட்டது.

இந்தியாவில் இருக்கும் ஆலயங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பு உடையது. குறிப்பாக கி.பி. 650-ஆம் ஆண்டில் ஒடிசா, புவனேஸ்வரில் கட்டப்பட்ட பரசுராமேஸ்வரர் ஆலயம் (Parashurameshvara Temple); கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கர் (Chhattisgarh), சிர்பூரில் (Sirpur) கட்டப்பட்ட இலட்சுமன் ஆலயங்களுடன் சற்று நெருக்கமாக உள்ளது.



இந்த ஆலயங்களுக்கு இந்தோனேசியர்கள் தான் அதிகமாக வருகை புரிகிறார்கள். தங்களின் மூதாதையரின் கலை வடிவங்கள் என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். படம் பிடித்துக் கொள்கிறார்கள். சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அது மட்டும் அல்ல. இந்த ஆலயங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். ஆலய வளாகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். சுற்று வட்டாரங்களில் அழகு அழகாய் மரங்களை நட்டு வைத்து அழகு பார்க்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஓரளவிற்கு வருமானமும் வருகிறது. இந்த தாயாங் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்களில் மட்டும் இருபது பேர் வேலை செய்கிறார்கள்.



இந்தோனேசியவில் உள்ள கோயில்களில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்புகள் கிடைத்து உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் உள்ளன.

ஆனால் இந்த ஆலயங்களின் பக்கத்து நாட்டில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது. முடிந்த வரையில் இருக்கிற கோயில்களை எல்லாம் இல்லாமல் ஆக்குவதில் மிகச் சிறப்பாக; மிகப் பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். இரவோடு இரவாக வந்து கணக் கச்சிதமாகக் கடாசி விட்டுப் போய் விடுகிறார்கள். என்னே ஜிம்கானா அக்கினிப் பிரவேசங்கள். டேவிட் காப்பர்பீல்ட் தோற்றார் போங்கள்.

இன்று போய் நாளை வா என்பது எல்லாம் இல்லை. இன்று இருக்கும் நாளை இருக்காது என்று தேய்பிறை இரவுகளின் தேய்மானங்களாய்ச் சிலாகித்து விட்டுப் போய் விடுகிறார்கள். மதவாதத்தில் கோணலாகிப் போன சில மக்குச் சாம்பிராணிகள். மன்னிக்கவும். மன வேதனையின் இரத்த வடிக்காலைப் பார்த்து தாயாங் ஆலயங்களும் தலை குனிகின்றன.

சான்றுகள்:

1. Dumarcay, J and Miksic J. Temples of the Dieng Plateau in Miksic, John 1996

2. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet. pp. 209–211.

3. https://en.wikipedia.org/wiki/Dieng_temples

4. Hindu Council UK: "Great Expectations: Hindu Revival Movements in Java and other parts of Indonesia" by Thomas Reuter

5. The Hinduization of Indonesia Reconsidered – The Far Eastern Quarterly, Vol. 11, No. 1. (Nov., 1951)

6. Ann Kinney (2003), Worshiping Siva and Buddha: The Temple Art of East Java, University of Hawaii Press, ISBN 978-0824827793

7. Jan Gonda, The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali, p. 1, at Google Books




12 ஜூலை 2020

பூஜோங் மிஞ்சா

தமிழ் மலர் - 12.07.2020

பூஜோங் மிஞ்சா (Bojongmenje). இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோயிலின் இடிபாடுகள். கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவை ஆட்சி செய்த கலிங்கா பேரரசு (Kalingga Kingdom) காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயிலின் இடிபாடுகள். இந்தோனேசிய அரசாங்கத்தால் இப்போது மீட்டு எடுக்கப்பட்டு வரும் தொல்பொருள் இடிபாடுகள்.



பல மில்லியன்கள் செலவு செய்து, புதையுண்டு கிடக்கும் பூஜோங் மிஞ்சா கோயிலின் கட்டுமானத்தை இந்தோனேசிய அரசாங்கம் மீட்டு எடுத்து வருகிறது. ஆனால் இந்தோனேசியாவிற்குப் பக்கத்தில் இருக்கும் நாட்டில் அப்படியா நடக்கிறது.

இருக்கிற கோயில்களை எல்லாம் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். இருக்கிற வரலாறுகளை எல்லாம் அழித்துக் கொண்டு போகிறார்கள். தலைகால் தெரியாமல் ஜிங்கு ஜிக்கான் அரசியல் கூத்துகள் நடத்துகிறார்கள். 



ஒரு புறம் உயிர்ப்பு. இன்னொரு புறம் தவிர்ப்பு. ஒரு புறம் போற்றுகிறார்கள். இன்னொரு புறம் தூற்றுகிறார்கள். ஒரு புறம் பெருமை சேர்க்கிறார்கள். இன்னொரு புறம் சிறுமை படுத்துகிறார்கள். வேதனை.

தமக்கு வந்தால் இரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? மொழிவாதம், இனவாதம், மதவாதத்தில் கோணலாகிப் போன ஒரு பக்கவாதம். அதில் வீணாய்ப் போன ஒரு வக்கிரவாதம். 

மண்ணுக்குள் புதைந்து கிடந்த அந்தக் கோயிலைச் சீரமைக்கும் பணிகளில் இந்தோனேசிய மக்கள் தீவிரம் காட்டுகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கமும் மும்முரம் காட்டுகிறது. 



மண்ணில் இருந்து கிடைத்த பொருள் மண்ணுக்கு மட்டும் சொந்தம் அல்ல. மனிதர்களுக்கும் சொந்தம் என்று அங்கே வரலாறு படைக்கின்றார்கள்.

இந்த இடிபாடுகள் மேற்கு ஜாவா, பண்டுங் (Bandung) மாவட்டத்தின் பூஜோங் மிஞ்சா கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தக் கோயிலை மீட்டு எடுக்கும் பணியில், குறிப்பாக ஜாவா மக்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி சுற்றுலாத் தளமாக மாறலாம் என்பதே அவர்களின் வியூகம். பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்.

இந்தத் தொல்பொருள் தளம் 2002 ஆகஸ்ட் 18-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பூஜோங் மிஞ்சா கிராமத்தில் மேடும் குழியுமான ஒரு கிராமத்துப் பாதை. அதில் மண்ணைப் போட்டு நிரப்ப வேண்டி இருந்தது. பாதைக்கு அருகில் ஒரு சமவெளிப் பகுதி. அங்கே மண்ணைத் தோண்டினார்கள்.  



மண்ணைத் தோண்டிக் கொண்டு இருக்கும் போதுதான் அந்தக் கோயில் இடிபாடுகளைக் கண்டுபிடித்தார்கள். கோயில் இடிபாடுகள் இருந்த இடம் அனென் (Anen) எனும் உள்ளூர்வாசிக்குச் சொந்தமான இடம். இடிபாடுகள் இருந்த இடத்தைச் சுற்றிலும் எறும்புகளின் புற்றுகள். மஞ்சள் சாம்பல் நிறம் கலந்த புற்றுகள்.

ஏன் இவ்வளவு புற்றுகள். ஏன் இவ்வளவு எறும்புகள். ஜாவாவில் அப்படிப்பட்ட எறும்புகள் இல்லையே என்று ஆச்சரியம் அடைந்தார்கள். கருநீல நிறத்தில்; நீண்ட கால்களைக் கொண்ட எறும்புகள். ரொம்பவுமே வித்தியாசமான எறும்புகள். முதல் தடவையாகப் பார்க்கிறார்கள்.

மண்ணைத் தோண்டிய பின்னர் தான் அந்தப் புற்றுகள் தெரிய வந்தன. ஆக அங்கே மேலும் என்ன இருக்கலாம் என்று கண்டுபிடிக்க ஆழமாய்த் தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு மீட்டர் ஆழத்தில் பாறைகளின் இடிபாடுகள் இருந்தன. சதுர வடிவிலான பாறைகள் அடுக்கடுக்காய் இருப்பதைக் கண்டார்கள்.



பாறைகளின் முழு வடிவங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரியும் வரையில் தோண்டிப் பார்த்தார்கள். அங்கே ஒரு பழமையான கற்பாறை இடிபாடுகள் இருந்தன. உடனே தோண்டுவதை நிறுத்திக் கொண்டு அரசாங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.

அங்கே ஒரு பழமையான இந்து கோயில் இருப்பது தெரிய வந்தது. அரசாங்க அதிகாரிகள் உடனே அந்த இடிபாடுகளைச் சுற்றிலும் முள்வேலி அமைத்தார்கள்.  இது ஒரு பழங்காலத்துப் புதைபொருள் இடம். பொது மக்கள் உள்ளே நுழையக் கூடாது. மீறி நுழைந்தால் 20 மில்லியன் ரூப்பியா அபராதம் என ஓர் அறிவிப்பு பட்டையையும் நிறுத்தி வைத்தார்கள்.

இந்தக் கோயிலை யார் கட்டி இருப்பார்கள் என்பதில் அனைவருக்கும் முதலில் ஐயப்பாடு. இருப்பினும் கற்பாறைகளின் சில்லுகளை எடுத்துக் கொண்டு போய் கார்பன் காலக்கணிப்பு (carbon dating) செய்து பார்த்தார்கள். 1300 ஆண்டுகள் பழமையானவை எனத் தெரிய வந்தது. 



1300 ஆண்டுகள் என்றால் அந்தக் காலக் கட்டத்தில் மத்திய ஜாவாவை கலிங்கா பேரரசு ஆட்சி செய்து வந்தது. ஆகவே அந்தக் கோயில் இடிபாடுகள் கலிங்கா அரசு காலத்தின் இடிபாடுகள் என முடிவு செய்தார்கள்.

கோயில் இடிபாடுகள் இருந்த பகுதியை, முன்னர் காலத்தில் கலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

அகழ்வாராய்ச்சி இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த இடம் கிராமவாசிகளின் குடியிருப்பு பகுதியில் அமைந்து உள்ளது. கோயில் தளத்தின் சுற்றுப்புறப் பகுதி நீரால் நிரப்பப்பட்ட ஒரு குளமாக இருக்கலாம். இப்போது  அந்தப் பகுதியின் மையத்தில் உள்ள இடிபாடுகள் முள் கம்பிகளால் பாதுகாக்கப் படுகின்றன.



கோயிலுக்கு அருகே ஒரு கட்டிடம். கண்டு எடுக்கப்படும் பொருள்களைப் பற்றிய பதிவுகள்; அகழ்வாராய்ச்சி தொல்பொருள்கள் (registration, research, excavation and storing the archeological items) போன்றவற்றைச் சேமித்து வைக்கும் தளமாக அந்தக் கட்டிடம் உள்ளது.

இந்தக் கோயில் சேதம் அடைந்ததற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. 75 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஜாவாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தார்கள். அப்போது அவர்களின் இராணுவப் பயிற்சிக்கு பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற கனரக உபகரணங்களைப் பயன்படுத்தினார்கள். இந்த இடத்தில் போர்ப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு இருந்தார்கள். 



அதனால் அந்தக் கோயில் சேதம் அடைந்து இருக்கலாம். தவிர பழங்காலத்து கல்லறையும் அங்கே இருந்தது. அந்தக் கல்லறையில் இருந்து பழைமைப் பொருள்கள் களவாடப்பட்டு இருக்கலாம்.

ஆக ஆரம்ப காலத்தில் அந்தக் கோயில் எப்படி இருந்தது; எப்படி இருந்து இருக்கலாம் என்பது எவருக்கும் தெரியாது. அகழ்வாராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோயில் கட்டுமானத்தைச் சீரமைப்பு செய்து புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் பெக்காலோங்கான் (Pekalongan) நகரம். இந்த நகரம் இப்போது ஜெப்பாரா (Jepara Regency) எனும் மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் கெலிங் (Keling) எனும் துணை மாநிலம் உள்ளது.

இங்கே தான் 6-ஆம்; 7-ஆம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்ற ஒரு பேரரசு ஆட்சி செய்தது. அதன் பெயர் கலிங்கா பேரரசு. ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.



இந்தோனேசியாவை ஆட்சி செய்த மேடாங் பேரரசு (Medang Kingdom); சைலேந்திரா பேரரசு (Shailendra Kingdom); ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya Kingdom) ஆகியவற்றின் முன்னோடி மூதாதையர் பேரரசு எனும் பெருமை இந்த கலிங்கா பேரரசிற்கு உண்டு. இந்தோனேசியாவை ஆட்சி செய்த மிகப் பழமையான பேரரசுகளில் கலிங்கப் பேரரசும் ஒன்றாகும்.

தொடக்கக் காலத்தில் கலிங்கா பேரரசு இந்து மதம் சார்ந்த அரசாக இருந்தது. காலப் போக்கில் புத்த மதம் பரவியதால் இந்தப் பேரரசு புத்தம் சார்ந்த பேரரசாகவும் கொஞ்ச காலம் ஆட்சி செய்தது.

இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கலிங்கம் என்பது வேறு. இந்தோனேசியாவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த கலிங்கா நாடு என்பது வேறு. இரு நாடுகளுக்கும் சொல் ஒற்றுமைகள் உள்ளன.

 

இருப்பினும் இரண்டும் வெவ்வேறான கலிங்கங்கள். ஆக இந்தியக் கலிங்கம் என்பது வேறு. இந்தோனேசியக் கலிங்கம் என்பது வேறு.

அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவின் கலிங்க நாட்டவர் இலங்கை, பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் குடியேறினார்கள். ஆங்காங்கே சிற்றரசுகளை உருவாக்கினார்கள். சிறப்பாக ஆட்சி செய்தார்கள். வரலாறு பேசுகிறது.

அந்த வகையில் உருவாக்கப் பட்டது தான் இந்தோனேசியா, ஜாவா தீவின் கலிங்கா பேரரசு. ஜாவா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்டது.

கலிங்கா பேரரசு என்பதில் கலிங்கம் எனும் சொல் வருகிறது. அந்த வேர்ச் சொல்லில் இருந்து தான், இந்தோனேசியாவில் இப்போது இருக்கும் கெலிங் துணை மாநிலத்திற்கும் பெயர் வைத்து அழகு பார்க்கிறார்கள்.



கலிங்கம் அல்லது கலிங்கா எனும் சொல்லில் இருந்து தான் கெலிங் (Keling) எனும் சொல்லும் உருவானது. கெலிங் என்பது நல்ல ஒரு வரலாற்றுச் சொல் தான். தப்பாகப் பயன்படுத்தப் போய் தப்பாக திரிந்து போய் விட்டது. விடுங்க.

இதை எல்லாம் ஆராய்ச்சிப் பன்ணிக் கொண்டு இருந்தால் அப்புறம் சோற்றுக்குச் சுண்ணாம்பு கிடைக்காமல் போய் விடும்.

ஜாவாவில் பெக்கா லோங்கான் எனும் ஓர் இடம். பாத்தாங் மாநிலத்தில் உள்ளது. அங்கே அகழாய்வுகள் செய்தார்கள். அந்தப் பெக்கா லோங்கான் தான் கலிங்கப் பேரரசின் தலைநகரமாக விளங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். பெ-கலிங்கா-ன் என்பதே பெக்கா லோங்கான் என்று மாறி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. சரி.



பூஜோங் மிஞ்சா கோயில், ஆண்டிசைட் (andesite rocks) எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டு உள்ளது. மிகவும் எளிமையான பாணியில் கட்டப்பட்டு இருக்கலாம். நடுத்தரமான கோயில் பரப்பளவு.

பிரம்பனான் (Prambanan) சிவன் கோயில்; போரோபுதூர் (Borobudur) புத்த கோயில்கள் கட்டப்படும் போது ஜாவா மக்களிடம் கலாச்சாரத் தரம் (cultural quality) உயர்ந்து இருந்தது.

ஆனால் பூஜோங் மிஞ்சா கோயில் கட்டப்படும் போது அந்தக் கலாச்சாரத் தரம் மிக எளிமையாகவும் குறைவாகவும் இருந்து இருக்க வேண்டும். பூஜோங் மிஞ்சா கட்டுமான அமைப்பில் இருந்து தெரிய வருகிறது.



இந்தோனேசியா எனும் நாட்டையும் இந்தோனேசியாவில் உள்ள இந்து கோயில்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நாட்டில் கோயில்கள் ஆழமாய்ப் பதிந்து விட்டன. இந்தோனேசிய மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இந்தோனேசியாவின் கடந்த கால கலாசாரத்தின் விளைபொருளாகத் தான் கோயில்கள் அங்கே காட்சி அளிக்கின்றன. கடந்த கால அரசுகளின் கடந்த காலத்தையும் பிரதிபலிக்கின்றன. அங்கு உள்ள பெரும்பாலான இந்து கோவில்கள் அங்கு வாழ்ந்த மன்னர்களால் கட்டப் பட்டவையாகும்.

ஜாவா பள்ளத்தாக்கில் மட்டும் ஆயிரக் கணக்கான இந்து கோயில்கள் இருந்தன. கி.பி 1006-ஆம் ஆண்டில் மெராபி மலை (Mount Merapi) வெடித்ததினால் பல கோயில்கள் புதையுண்டு போயின.



பாலி தீவில் மட்டும் இப்போது 20,000-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் உள்ளன. ஒரு கிராமத்திற்கு ஒரு கோயில் என மூலைக்கு மூலை கோயில்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.

பாலி கோயில்களில் வைக்கப்பட்டு இருக்கும் விஷ்ணு, பிரம்மா, தாரா, துர்கா போன்ற தெய்வங்களின் சிலைகள், பாலி மக்கள் முன்னோர்களின் வெளிப்பாடாகக் காட்சி தருகின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.07.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Bojongmenje

2. https://candi.perpusnas.go.id/temples_en/deskripsi-west_java-bojongmenje_temple_10

3.https://www.liputan6.com/lifestyle/read/3869065/cerita-penemuan-situs-candi-bojongmenje-di-rancaekek

4. https://ssyoutu.be/6vlIRDENo6Y?t=108



ஜாவா தாயாங் அர்ஜுனா ஆலயங்கள்

இந்தோனேசியாவின் ஆலயங்கள் என்று சொல்லும் போது பாலித் தீவில் உள்ள ஆலயங்கள் முதலில் தெரிய வரும். அடுத்து யோக்ஜாகர்த்தாவில் உள்ள பிரம்பனான் (Prambanan) ஆலயம் தெரிய வரும். அடுத்து அதன் அருகில் இருக்கும் போரோபுதூர் (Borobudur) ஆலயம் தெரிய வரும்.


ஆனால் இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தலைவாசல் வைக்கும் ஓர் ஆலய வளாகம் இருக்கிறது. அதைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதுதான் தாயாங் பீடபூமி ஆலயங்கள் (Dieng Plateau Temples). 400-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன.

உண்மையில் இந்தத் தாயாங் ஆலயங்கள் (Dieng Temples) தான் இந்தோனேசியாவிலேயே மிக மிகப் பழமையான ஆலயங்கள் ஆகும். பிரம்பனான் ஆலயம்; போரோபுதூர் ஆலயம்; பாலித் தீவு ஆலயங்கள் (Bali Island Temples) வருவதற்கு முன்னதாகவே தாயாங் பீடபூமி ஆலயங்கள் உருவாகி விட்டன.


1000 ஆண்டுகளுக்கு முன்னர் தாயாங் பீடபூமியில் ஒரே இடத்தில் 400 ஆலயங்கள் இருந்து இருக்கின்றன. ஆனால் இப்போது 8 ஆலயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.

எரிமலை வெடிப்புகளினால் பல ஆலயங்கள் அழிந்து போயின. இன்னும் பல ஆலயங்களின் கற்களும் கற்பாறைகளும் கிராமவாசிகளால் சூறையாடப்பட்டன. இன்னும் பல ஆலயங்கள் நிலநடுக்கம்; இயற்கைப் பேரிடர்களினால் மண்ணுக்குள் புதையுண்டு போயின. 1000 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம் ஆகும்.

எஞ்சிய எட்டு ஆலயங்களையும் இந்தோனேசிய அரசாங்கம் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறது.


மத்திய ஜாவாவில் வோனோசோபோ (Wonosobo) நகருக்கு அருகில் தாயாங் பீடபூமி உள்ளது. மலைப்பாங்கான பகுதி. முதன்முதலில் கலிங்கா பேரரசின் (Kalingga Kingdom) அரசர்கள் 7-ஆம் நூற்றாண்டில் அந்த ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.

அடுத்து 8-ஆம் நூற்றாண்டில் மத்தாரம் பேரரசு (Mataram Kingdom) ஆட்சியாளர்கள் கட்டி இருக்கிறார்கள். இவர்கள் சஞ்சய வம்சாவளியைச் (Sanjaya Dynasty) சேர்ந்தவர்கள். பெரும்பாலான ஆலயங்களை மத்தாரம் அரசர்கள் தான் கட்டினார்கள். ஏற்கனவே சொன்னது போல 400 ஆலயங்கள். போட்டிப் போட்டுக் கொண்டு கட்டி இருக்கிறார்கள்.

ஜாவாவில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பழமையான மதக் கட்டமைப்புகள்;  அல்லது ஆரம்பகால இந்து கோவில்களில் தாயாங் ஆலய வளாகம் தான் பழைமையானது.


இந்திய இந்துக் கோயில் கட்டிடக் கலையின் பல அம்சங்களை இந்தக் கோயில்கள் பறைசாற்றுகின்றன.

கம்போடியா அங்கோர் வாட் ஆலய வளாகத்திலும் இப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. ராஜவர்மன் (Rajavarman); சூரியவர்மன் (Suriavarman) பரம்பரையினர் நீயா நானா என்று போட்டிப் போட்டுக் கொண்டு மூலைக்கு மூலை ஆலயங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் அல்லது 6500 அடி உயரத்தில் உள்ளது. எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


கோயில்களின் உண்மையான பெயர், வரலாறு மற்றும் இந்தக் கோயில்களின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான மன்னர்கள் யார் எவர் என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த கோயில்களின் கட்டுமானத்துடன் தொடர்புடைய தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.

ஒன்று மட்டும் உண்மை. இந்தக் கோயில்கள் அனைத்தும் 7-ஆம் - 8-ஆம் நூற்றாண்டுகளில் ஒரே காலக் கட்டத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

தாயாங் ஆலய வளாகத்தில் அர்ஜுனா கோயிலுக்கு (Arjuna temple) அருகே ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கி.பி 808-809 என பொறிக்கப்பட்டு இருந்தது.

(An inscription discovered near Arjuna temple in Dieng was dated circa 808-809 CE, it was the oldest surviving specimen of old Javanese script, which revealed that the Dieng temple is continuously inhabited from mid 7th to early 9th century.)


உள்ளூர் ஜாவானிய மக்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் அவர்களின் ஜாவானிய காப்பியக் கதாபாத்திரங்களின்படி பெயரிட்டு உள்ளனர். பெரும்பாலும் மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்.

இந்தத் தாயாங் ஆலயங்களுக்கு என்று ஓர் அருங்காட்சியகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் கைலாசா அருங்காட்சியகம் (Kailasa museum). தாயாங் ஆலயங்களில் இருந்து அகற்றப்பட்ட பல சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

தாயாங் என்றால் பழைய ஜாவானிய காவி (Old Javanese Kawi) மொழியில் “தெய்வங்கள் தங்குமிடம்” (Abode of Gods) என்று பொருள்.

தாயாங் ஆலயங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

1. அர்ஜுனா (Arjuna) ஆலயங்கள்;

2. துவாராவதி (Dwarawati) ஆலயங்கள்;

3. கடோட்கஜன் (Gatotkaca) ஆலயங்கள்;

4. பீமா (Bima) ஆலயம்.

(The temples are clustered around three groups; Arjuna, Dwarawati and Gatotkaca clusters, while Bima temple was constructed as a separate single temple.)


இந்த ஆலயங்களுக்கு இந்தோனேசியர்கள் தான் அதிகமாக வருகை புரிகிறார்கள். தங்களின் மூதாதையரின் கலை வடிவங்கள் என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். படம் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்த ஆலயங்களின் பக்கத்து நாட்டில் அப்படியா நடக்கிறது. எதிர்மாறாக நடக்கிறது.

இருக்கிற கோயில்களை எல்லாம் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். இருக்கிற வரலாறுகளை எல்லாம் அழித்துக் கொண்டு போகிறார்கள். தலைகால் தெரியாமல் ஜிங்கு ஜிக்கான் அரசியல் கூத்துகள் நடத்துகிறார்கள்.

ஒரு புறம் உயிர்ப்பு. இன்னொரு புறம் தவிர்ப்பு. ஒரு புறம் போற்றுகிறார்கள். இன்னொரு புறம் தூற்றுகிறார்கள். ஒரு புறம் பெருமை சேர்க்கிறார்கள். இன்னொரு புறம் சிறுமை படுத்துகிறார்கள். வேதனை.

தமக்கு வந்தால் இரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? மொழிவாதம், இனவாதம், மதவாதத்தில் கோணலாகிப் போன ஒரு பக்கவாதம். அதில் வீணாய்ப் போன ஒரு வக்கிரவாதம். 

தாயாங் ஆலயங்களைப் பற்றிய முழுக் கட்டுரை விரவில் வெளிவருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.07.2020

சான்றுகள்:

1. Dumarcay, J and Miksic J. Temples of the Dieng Plateau in Miksic, John 1996

2. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet. pp. 209–211.

3. https://en.wikipedia.org/wiki/Dieng_temples







09 ஜூலை 2020

தாமரைக் கோயில்

இந்தியா, டில்லியில், பாஹாபூர் (Bahapur) என்ற கிராமத்தில் உள்ள பஹாய் வழிபாட்டுத் தலம். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் (Lotus Temple) என அறியப் படுகிறது. 


The Lotus Temple has won numerous architectural awards and has been featured in many newspaper and magazine articles

இந்த பஹாய் வழிபாட்டுத் தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 26 ஏக்கர் பரப்பளவு. இது வரை 150 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்து உள்ளனர். A 2001 CNN report referred to it as the most visited building in the world.

இந்த நிலத்தை வாங்குவதற்கு ஹைதராபாத்தின் ஆர்டிஷிர் ருஸ்டாம்பூர் (Ardishír Rustampúr) என்பவர் பெரும்பகுதி நிதியைக் கொடையாக அளித்தார். 



1986-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப் படுகிறது. எண்ணற்ற கட்டிடக்கலை விருதுகளை வென்று உள்ளது.

இதனைக் கட்டியவர் கட்டடக்கலை நிபுணர் பாரிபோர்ஸ் சாபா (Fariborz Sahba). ஓர் ஈரானியர்.

தாமரைக் கோயிலின் மைய மண்டபத்திற்குச் செல்வதற்கு ஒன்பது கதவுகள் இருக்கின்றன. அந்த மண்டபத்தில் 2,500 பேர் வரை பிரார்த்தனைகள் செய்யலாம்.



தாமரை மலரின் வடிவம். ஒன்பது பக்கங்களில் மூன்று கொத்துக்களில் 27 பளிங்கு இதழ்கள்.

கோயிலின் உட்புறத்தில் எந்த இசைக் கருவிகளும் இசைக்கப்படக் கூடாது. இங்கு எந்த சமய போதனைகளும் வழங்கப்படுவது இல்லை. சடங்கு ரீதியான நடைமுறைகள் எதுவும் செயல் படுத்தப்படுவதும் இல்லை.

இந்துப் பண்டிகையான துர்கா பூஜையின் போது தாமரைக் கோயிலில் பந்தல் அமைக்கப்பட்டு அதன் பல்வேறு உருவப் படிமங்கள் அமைக்கப் படுகின்றன.