21 ஜூன் 2021

கம்பார் போர்

தமிழ் மலர் - 07.06.2021

கம்பார் மலை அடிவாரத்தில்
கரைந்து போன 750 மனித உயிர்கள்


1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி. பசிபிக் பெருங்கடலில் ஹவாய்த் தீவு (Hawaii). அங்கே அமெரிக்கக் கப்பல் படை தளம். பெயர் பேர்ல் துறைமுகம். காதும் காதும் வைத்த மாதிரி 353 குட்டிக் குட்டி ஜப்பானியர் விமானங்கள் வருகின்றன. இராத்திரியோடு இராத்திரியாகக் கணக்கு வழக்கு இல்லாமல் அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்கின்றன. அதுவே இரண்டாம் உலகப் போருக்கு ஒரு பீடிகை.

அமெரிக்கப் படையின் நான்கு பெரிய கப்பல்கள்; 3 ஆயுதம் தாங்கிய சிறு கப்பல்கள் (cruisers); 217 விமானங்கள்; 3 நீர்மூழ்கி கப்பல்கள் அழிக்கப் பட்டன. 2402 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 1282 பேர் காயம் அடைந்தனர். ஜப்பானியருக்குச் குறைந்த சேதம். 69 ஜப்பானிய வீரர்கள் கொல்லப் பட்டனர். இதைப் பேர்ல் துறைமுகத் தாக்குதல் (Pearl Harbor Attack) என்று சொல்வார்கள்.


இவ்வளவு நடந்த பின்னர் அமெரிக்கா சும்மா இருக்குமா. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை. தெரியும் தானே. இரண்டாம் உலகப் போர்க் களத்தில் அமெரிக்கா  குதித்தது.

இந்தப் போர் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்காணா இடத்தில் நடந்தது. இங்கே மலாயா அடிவாசலில் அதே காலக் கட்டத்தில் ஒரு போர். ஜப்பானியருக்கும் மலாயா மக்களுக்கும் இடையே நடந்த போர். அதுதான் கம்பார் போர்.

அங்கே நடந்த மாதிரி கப்பல்கள் எல்லாம் இங்கே கம்பாரில் மூழ்கடிக்கப் படவில்லை. ஆனால் ஈய லம்பங்களில் போர் வீரர்கள்தான் மூழ்கடிக்கப் பட்டார்கள். பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே அமெரிக்கர்கள். இங்கே மலாயா இராணுவத்தினர்.

மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.

ஆக கம்பார் போர் (Battle of Kampar) என்பது மலாயாவைக் கிடுகிடுக்க வைத்த போர்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்தக் கம்பார் போரைப் பற்றி இப்போதைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது. இது ஒரு வரலாற்றுப் பதிவு. பத்திரப்படுத்தி வையுங்கள்.

1941-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரையில், ஜப்பானியர் மலாயாவை ஆட்சி செய்தார்கள். அந்த ஆட்சியில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதில் கம்பார் போரும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.

கம்பார் போர் 1941 டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 1942 ஜனவரி 2-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 1300 பிரித்தானிய கூட்டுப் படை வீரர்களும் (11th Indian Infantry Division) 9000 ஜப்பானியப் படை வீரர்களும் (Japanese 5th Division) ஈடுபட்டனர். ஜப்பானியர் 200 கவச வாகனங்கள்; 100 பீரங்கிகளைப் பயன்படுத்தினார்கள்.

தீபகற்ப மலேசியாவின் வடக்கே இருந்து இடியும் மின்னலுமாக இறங்கி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் நிகழ்ச்சி தான். ஜப்பானியர் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு.

கூட்டுப் படையினர் இப்படியொரு பெரிய எதிர்ப்பைக் கொடுப்பார்கள் என்று ஜப்பானியப் படையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜப்பானியர் தங்களின் விமானங்களைக் கொண்டு கூட்டுப் படையினரைத் தாக்கினார்கள். இருப்பினும் கூட்டுப் படையினரின் கம்பார் தற்காப்பு அரணைத் தாண்டி அவர்களால் போக முடியவில்லை.


ஒரு செருகல். கம்பார் நகரம் 1887-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பழைய பெயர் மம்பாங் டி அவான் (Mambang Di Awan). 1894 மார்ச் 13-ஆம் தேதி மம்பாங் டி அவான் எனும் பெயர் கம்பார் என மாற்றம் கண்டது. கம்பார் எனும் பெயர் வருவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன.

சீனக் கண்டனீஸ் மொழியில் காம் பாவ் என்றால் விலை உயர்ந்த தங்கம் என்று பொருள். அந்தக் கால கட்டத்தில் கம்பார் பகுதியில் ஈயம் அளவுக்கு மீறிக் காணப் பட்டதால் சீனர்கள் காம் பாவ் என்று அழைத்து இருக்கலாம். காம் பாவ் எனும் சொல் மருவிக் கம்பார் ஆனது என்று ஒரு சாரார் கருத்துச் சொல்கின்றனர்.

கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் காணப் படுகின்றன. சரி. கம்பார் போருக்கு வருவோம்.

ஜப்பானியருக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.


ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)


மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் ஜப்பானியரின் மின்னல் வேகப் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. புசு புசு என புற்றீசல் மாதிரி இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள். ஜித்ராவில் முதல் போர் நடந்தது. அதன் பின்னர் குரோ; அலோர் ஸ்டார்; குரூண்; ஈப்போ ஆகிய இடங்களில் போர்களும் சண்டைகளும் நடந்து உள்ளன.

ஜப்பானியர் படையின் 5-ஆவது பிரிவுக்கு, தக்குரோ மாட்சுயி (Takuro Matsui) என்பவர் தலைமை தாங்கினார். அதில் 41-ஆவது காலாட்படை பிரிவு (சுமார் 4,000 வீரர்கள்). இந்தப் பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சபுரோ கவாமுரா (Major General Saburo Kawamura) என்பவர் தலைமை தாங்கினார். கம்பார் குன்றில் தற்காப்பில் இருந்த பிரிட்டிஷ் கூட்டுப் படையைத் தகர்ப்பது அவர்களின் இலக்கு.

1941 டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி கம்பாரில் இருந்த பிரிட்டிஷ் கூட்டுப் படையை, ஜெராம், கோப்பேங் பகுதிகளில் இருந்து வந்த ஜப்பானியப் படையினர் சுற்றி வளைத்தார்கள். முதல் அரணாகக் கூர்காப் படைப் பிரிவு இருந்தது. கூர்காப் படையினர் கம்பார் குன்றின் அடிவாரத்தில் மறைந்து இருந்தனர்.

இதைக் கண்டறிந்த ஜப்பானியர் அங்கு குவியத் தொடங்கினார்கள். பிரிட்டிஷ் கூட்டுப் படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. ஜப்பானியருக்கு விமானங்களின் உதவி இருந்தது. உணவுப் பொருட்களும் ஆயுதங்களும் விமானங்கள் மூலமாகப் போடப் பட்டன.

முதலில் ஜப்பானிய உயிரிழப்புகள் கடுமையாக இருந்தன. பெருகி வரும் உயிரிழப்புகளுக்கு ஈடாக புதிய ஜப்பானிய வீரர்கள் கொண்டு வரப் பட்டார்கள். கம்பார் குன்றின் (Kampar Hill); தாம்சன் முகட்டில் (Thompson Ridge) தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கடும் சண்டை. இந்தத் தாக்குதலில் 34 இந்திய வீரர்கள் இறந்தனர்.


கம்பாரில் பிரிட்டிஷ் கூட்டுப் படையின் தற்காப்பு அரண் பலமாக இருந்ததால் ஜப்பானியர்களால் எளிதில் ஊடுருவ முடியவில்லை. அதனால் தெலுக் இந்தான் பகுதியில் இருந்து ஜப்பானியத் துணைப் படை உதவிக்கு வரவழைக்கப் பட்டது.

ஜப்பானியரின் ஆக மூத்தத் தளபதி ஜெனரல் யமாஷித்தா (General Yamashita). அவரே களம் இறங்கினார். கம்பார் போருக்குக் கட்டளைகள் போட்டார்.

இந்தக் கட்டத்தில் தெலுக் இந்தான்; ஊத்தான் மெலிந்தாங்; பேராக் ஆற்றுப் பகுதிகள் ஜப்பானியரிடம் விழுந்து விட்டன. கம்பாரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

இந்தப் பக்கம் கம்பாரில் பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆயுதப் பற்றாக்குறை உருவானது. இந்தக் கட்டத்தில் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர்-ஜெனரல் பாரிஸ் போர்க் களத்தில் இருந்து பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தார். அதனால் கம்பாரில் இருந்த படைகள் சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்கின.

ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போராடிய அனைத்து இந்தியக் காலாட் படைகளுக்கும் பிரிட்டிஷ் தளபதி மேஜர்-ஜெனரல் பாரிஸ் என்பவர் தலைமை தாங்கினார் (Major-General Paris - Commander of the 12th Indian Infantry Brigade). இவருக்கு உதவியாக ஒவ்வொரு காலாட் படைக்கும் துணைத் தளபதிகள் இருந்தார்கள்.

1941 டிசம்பர் 30 தொடங்கி 1942 ஜனவரி 2 வரையில் நான்கு நாட்களுக்கு, பிரிட்டிஷ் கூட்டுப் படையினர், ஜப்பானியர்த் தாக்குதல்களை எதிர்த்துப் போராட முடிந்தது. ஜப்பானியர் மீது பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடிந்தது.

அதனால் ஜப்பானிய 41-ஆவது காலாட்படை வலுவிழந்து போனது. பின்னர் சிங்கப்பூர் மீதான படையெடுப்பில்கூட பங்கேற்க முடியாமலேயே போனது.

இந்தப் போரில் பிரிட்டிஷ் கூட்டுப் படையினருக்கு 150 உயிரிழப்புகள். ஜப்பானியருக்கு 500 உயிரிழப்புகள். ஆனால் உண்மையான ஜப்பானிய உயிரிழப்புகளை அதிகாரப்பூர்வமாக ஜப்பானிய அரசாங்கம் வெளியிடவில்லை.

மலாயா மீது ஜப்பானியர் படையெடுத்ததில் கம்பார் போரில் தான் ஜப்பானியருக்குக் கடுமையான தோல்வி. இந்தப் போரில் கூட்டுப் படைகளுக்கு வெற்றி.


இருந்த போதிலும், போதுமான படை ஆயுத உதவிகள் கிடைக்கவில்லை. அதனால் சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்த்துப் போர் செய்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்க முடியாது.

கம்பார் போர் ஓர் இரத்தக் களறிக் கூடம் என்றும் வர்ணிக்கப் படுகிறது. அங்கே ஓர் இரத்த ஆறே ஓடி இருக்கிறது. தீபகற்ப மலேசியாவின் வடக்கில் இருந்து இறங்கி வந்த ஜப்பானியரைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் போர் தான்.

கம்பார் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். 1999-ஆம் ஆண்டு, கம்பார் போர் நடந்த இடத்தை ஒரு வரலாற்றுத் தளமாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.


மலாயாவில் ஜப்பானியர்களின் ஆட்சி மறக்க முடியாத ஒரு வரலாற்றுக் கொடுமை. 69 நாட்களில் மலாயாவை வளைத்துப் போட்டது ஒரு மண்ணாசைக் கொடுமை. அந்த இரு கொடுமைகளிலும் பெரும் கொடுமை என்பது பல்லாயிரம் மலாயாத் தமிழர்களின் முகவரிகளைத் தொலைக்கச் செய்த கொடுமைதான் கொடுமையிலும் கொடுமை. சயாம் மரணப் பாதைக் கொடுமையைச் சொல்கிறேன்.

அடுத்தக் கட்டுரையில் துரோலாக்; சிலிம் ரிவர்; ஆகிய இரு இடங்களில் நடந்த போரைப் பற்றி தெரிந்து கொள்வோம். சிலிம் ரிவர் அரண் உடைந்து போனதால் தான் தஞ்சோங் மாலிம் விழுந்தது. கோலாகுபுபாரு விழுந்தது. பத்தாங் காலி விழுந்தது. இப்படியே வரிசையாகப் பல நகரங்கள் விழுந்தன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.06.2021

சான்றுகள்:

1.  Remembering the Battle of Kampar: The Forgotten Heroes of The British Battalion. (http://www.nmbva.co.uk/remembering_the_battle_of_kampar.htm).

2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992).

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. The Battles of Kampar by Chye Kooi Loong.

 

20 ஜூன் 2021

சங்லூன் ஜித்ரா போர்

தமிழ் மலர் - 06.06.2021

69 நாட்கள். அதாவது 9 வாரங்கள். அதாவது 2 மாதங்கள் 2 வாரங்கள். இந்த 69 நாட்கள் கால இடைவெளியில் 2 நாடுகளைப் பிடிக்க முடியுமா. அதுவும் சைக்கிள் சவாரி செய்து பிடிக்க முடியுமா. சொல்லுங்கள். முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். சாதனை என்று சொல்ல முடியாது. சாமர்த்தியம் என்று சொல்லலாம்.

1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மலாயா சிங்கப்பூர் நாடுகளை ஜப்பான்காரர்கள் கபளீகரம் செய்து விட்டார்கள்.

மலாயாவுக்கு வரும் போது அவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், மெர்சிடிஸ், ஹோண்டா, தொயோத்தா கார்களை எல்லாம் எடுத்து வரவில்லை.

முதுகில் சும்மா ஒரு பெரிய பையை மாட்டிக் கொண்டுதான் வந்தார்கள். கையில் ஆளாளுக்கு ஒரு துப்பாக்கி. கூடவே ஜீப் வண்டிகள். கவச வாகனங்கள். அம்புட்டுத்தான்.

தீபகற்ப மலேசியாவில் இரண்டு இடங்களில் தரை இறங்கினார்கள். கோத்தா பாரு ஓர் இடம். அலோர் ஸ்டார் தாய்லாந்து எல்லை மற்றோர் இடம். முதலில் நடடா ராஜா கதைதான். பல மைல்கள் நடந்தே வந்து இருக்கிறார்கள். போகும் வழியில் யாராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால் அம்புட்டுத்தான்.

அவனை அங்கேயே மடக்கி அப்படியே அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொள்வது. இல்லை என்றால் போகிற வழியில் யார் வீட்டிலாவது அழையா விருந்தாளியாக நுழைய வேண்டியது. நல்ல ஒரு சைக்கிளாகப் பார்த்து உருட்டிக் கொண்டு போவது. பழைய சைக்கிளாக இருந்தால் சொந்தக்காரனுக்கு இரண்டு மூன்று உதைகள். ஜப்பான்காரனுக்கு அப்போது தெரிந்த நன்றி விசுவாசம்.

ஆக வெறும் காலங்களில் நடந்து வந்து, பின்னர் கண்ணில் பட்ட இளிச்சவாயர்களின் சைக்கிள்களில் பயணம் செய்து, இரண்டு நாடுகளை 69 நாட்களில் கைப்பற்றி இருக்கிறார்கள். இது மலாயாவில் ஜப்பான்காரன் காலத்தில் நடந்த ஜப்பான்காரன் சாதனை.


ஆக சைக்கிள் சவாரி செய்தே இரண்டு நாடுகளைப் பிடித்து இருக்கிறார்கள் என்றால் சும்மாவா? கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிய வேண்டிய சாதனை. இன்னும் யாரும் செய்யவில்லை. முடிந்தால் செய்து பார்க்கலாம். ஜப்பான்காரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்த மாதிரி ஜப்பான்காரகள் மலாயாவுக்குள் வரும் போது, தொடக்கத்தில் அதிகமான எதிர்ப்புகள் இல்லை. ஐலசா பாடிக் கொண்டே மலாயா எல்லையைக் கடந்து வந்து விட்டார்கள். கெடா சங்லூன் ஜித்ரா நகர்களில் தான் முதல் எதிர்ப்பு. பிரிட்டிஷ் கூட்டுப் படையினர் கொடுத்த எதிர்ப்பு.

இந்த இடத்தில் தான் ஜப்பானியருக்கும் பிரிட்டிஷாருக்கும் முதல் போர் நடந்தது. 1941 டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு சங்லூன் ஜித்ரா போர் நடந்தது. மலாயா போர்களில் முதல் போர்.

மலாயா போர்களைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நேற்று சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு மீள் பார்வை. அரைத்த மாவையே அரைப்பதாகச் சொல்ல வேண்டாம். இப்போதுதான் பலருக்கும் பலவிதமான மறதிகள் வந்து தொலைக்கிறதே.

நேற்றைக்குச் சாப்பிட்டது இன்றைக்கு மறந்து போகிறது. இன்றைக்குச் சாப்பிட்டது நாளைக்கு மறந்து போகிறது. அப்புறம் என்னங்க. பக்கத்தில் இருக்கிற பெண்டாட்டி பிள்ளைகளையே மறந்துவிடும் அலங்கோலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆக அடிக்கடி நினைவு படுத்தினால் தான், ’கொர் கொர்’ கொரோனா காலத்தில் புருசனுக்குப் பெண்டாட்டி நினைவு வரும். பெண்டாட்டிக்குப் பிள்ளைகள் நினைவு வரும். என்ன செய்வது. சீனாக்காரன் போட்ட ஊயான் கோலங்கள். சரி. விடுங்கள். ஜப்பான்காரன் கதைக்கு வருவோம்.


ஜப்பான்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.

ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)

இட்லர் இடி அமின் வேகத்தில் இறங்கி வந்த ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த மலாயா பிரிட்டிஷ் இராணுவம் எவ்வளவோ போராடிப் பார்த்தது. உஹூம். முடியவில்லை.

மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.

இருந்தாலும் ஜப்பானியர்களின் மின்னல் வேகப் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஜிவு ஜிவு என புற்றீசல் மாதிரி இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள். சங்லூன் ஜித்ராவில் முதல் ’செக்’ வைக்கப்பட்டது. இங்குதான் முதல் போர் நடந்தது.

சங்லூன் ஜித்ரா பகுதியில் மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தின் பாதுகாப்பு முழுமையாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜப்பானியர்கள் இறங்கி வரும் பாதைகளில் முள்வேலிகள் அமைக்கப்பட்டன. சரி.

சில இடங்களில் கண்ணி வெடிகள் வைக்கப் பட்டன. சரி. அவற்றை எல்லாம் தூசு தட்டி தோளில் போட்டுக் கொண்டு ஜப்பானியர்கள் இறங்கி வந்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது பெர்லிஸ் கெடா பகுதிகளில் பயங்கரமான மழை. ஆழமற்ற அகழிக் குழிகளில் வெள்ளம். தொடர்பு சாதனங்கள் நீரில் மூழ்கிப் போயின. வெளித் தொடர்புகள் அறுந்து போயின. ஜப்பானியர்களுக்கு அவை சாதகமாகிப் போயின.

இந்த ஜித்ரா போரில் தான் முதன்முறையாக இந்திய இராணுவம் களம் இறக்கப்பட்டது. ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்த இந்திய இராணுவப் படையினர் ஜித்ராவிற்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

மேஜர் ஜெனரல் டேவிட் முரே லியோன் (Major General David Murray-Lyon) என்பவர் 11-ஆவது இரண்டு இந்தியப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தியப் படைகள் தான் முன் வரிசையில் நின்றன.

வலது புறத்தில் 15-ஆவது இந்தியக் காலாட்படை; பிரிட்டிஷ் லீசெஸ்டர்ஷைர் ரெஜிமென்ட் (Leicestershire Regiment); பஞ்சாப் ரெஜிமென்ட்; ஜாட் ரெஜிமென்ட் (Jat Regiment).

இடது புறத்தில் 6-ஆவது இந்திய காலாட்படை படை. மூன்று கூர்க்கா பட்டாளங்கள். 28-ஆவது இந்திய காலாட்படை தற்காப்புக்காக நின்றது.

இந்தியப் பிரிட்டிஷ் படையினர் முன் வரிசையில் 14 மைல் (23 கி.மீ) வரை அகன்று நீண்டு நின்றனர். அவர்கள் இருந்த இடத்தில் இரு சாலைகள். ஓர் இரயில் பாதை.  இருபுறமும் காடுகள் சூழ்ந்த மலைகள். வெள்ளம் பாய்ந்த நெல் வயல்கள். ரப்பர்  தோட்டங்கள். இவர்களைத் தாண்டித்தான் ஜப்பான்காரர்கள் அலோர் ஸ்டார் நகரத்திற்குள் வர முடியும்.

1941 டிசம்பர் 8-ஆம் தேதி தாய்லாந்தின் சிங்கோரா; பட்டாணி நகரங்களில் ஜப்பானியர்கள் தரை இறங்கி விட்டார்கள். அடுத்து அவர்களின் இலக்கு வடமேற்கு மலாயா.

ஜப்பானியர்கள் அலோர் ஸ்டாருக்கு நேராக வராமல் சங்லூன் (Changlun) நகரில் இருந்து அசூன் (Asun); ஜித்ரா (Jitra) நகரங்கள் வழியாக வந்தனர்.


சங்லூன் நகரம், கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில், தாய்லாந்து நாட்டிற்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து மொழியில் இருந்து சங்லூன் எனும் பெயர் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சங் (Chang) என்றால் யானை. லூன் (Lun) என்றால் விழுந்தது அல்லது வீழ்ச்சி. முன்பு காலத்தில் இந்தப் பகுதியில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன. அவை இந்த இடத்திற்கு வந்ததும் சேறும் சகதியுமான சதுப்பு நிலங்களில் தடுமாறி விழுவது வழக்கம். அதனால் அந்த இடத்திற்கு யானைகள் விழுந்து செல்லும் இடம் என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

சங்லூன் பகுதியில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் படை வீரர்கள் குறைவாக இருந்ததால் தோற்கடிக்கப் பட்டார்கள். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வந்து இந்திய வீரர்களை ஜப்பானியர்கள் தாக்கி இருக்கிறார்கள். எதிர்பாராத தாக்குதல். அதனால் பல உயிரிழப்புகள்.

ஜப்பானியர்கள் கவச வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கூர்கா; பஞ்சாப் படை வீரர்களிடம் கவச வாகனங்கள் எதுவும் இல்லை. காட்டுக்குள் ஓடி மறையவும் முடியவில்லை. அந்த வகையில் ஜப்பானியர்களை வலுவாக எதிர்க்க முடியாமல் போய் விட்டது.

சங்லூன் - ஜித்ரா போர் 15 மணி நேரம் நடந்த ஒரு கசப்பான போர். ஜப்பானியர்களின் 5-ஆவது பிரிவு முதலில் சங் லூனைக் கைப்பற்றியது. பின்னர் ஜித்ராவைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 386 வீரர்கள் பலியானார்கள். பெரும்பாலும் கூர்கா; பஞ்சாப் படை வீரர்கள். ஜப்பானிய இழப்புகளின் விவரங்கள் தெரியவில்லை.

இதே நேரத்தில், ஜப்பானியக் கடற்படையின் விமானங்கள் பினாங்கு மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தின. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு ஜப்பானியர்களால் அனுதினமும் குண்டுகள் வீசப்பட்டன. 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள்.

இதில் இருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் பல இடங்களில் இருந்து ஜப்பானியர்கள் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறார்கள். ஆக நேர்த்தியாகப் ’பிளேன்’ போட்டுச் செய்து இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியக் கூட்டுப் படையினர் ஜப்பானியர்களின் வியூகமான இராணுவத் தந்திரங்களைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. போர் வரும். சமாளித்து விடலாம் என்றுதான் கணக்குப் போட்டு இருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் போட்ட கணக்கு வேறு. ஜப்பானியர்கள் போட்ட கணக்கு வேறு.

’எங்களைக் கேட்டுத்தான் சூரியன் உதிக்கும்’ என்று வீரவசனம் பேசியவர்கள் வெள்ளைக்காரர்கள். ஆனால் சங்லூன் ஜித்ரா போரில் சூரியன் மறைந்து போய் மழை பெய்ததால் அவர்களின் வீர வசனமும் நனைந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஜப்பானியர்கள் மலாயாவின் இரு புறங்களில் ஒரே சமயத்தில் தரை இறங்கினார்கள் என்று  சொல்லி இருக்கிறேன். முதலாவது: கிளாந்தான் கோத்தா பாரு கடற்கரை. இரண்டாவது தாய்லாந்து - மலாயா சங்லூன் எல்லைப் பகுதி. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி நடந்தவை.

நாளைய கட்டுரையில் கம்பார் போர் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. இந்தப் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

மேற்கோள்கள்:

1. Falk, Stanley L. (1975). Seventy days to Singapore: The Malayan Campaign, 1941–1942. London: Hale. ISBN 978-0-7091-4928-6.

2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992)

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. Gurcharn Singh Sandhu, The Indian cavalry: history of the Indian Armoured Corps, Volume 2, Vision Books, 1978 ISBN 978-81-7094-004-3




19 ஜூன் 2021

மலாயாவில் இந்திய இராணுவத்தினரின் தியாகங்கள்

தமிழ் மலர் - 05.06.2021

ஒரு நாட்டின் விடுதலை என்பது அர்த்த இராத்திரி மழையில் அவதரித்த அந்திமந்தாரை பூக்கள் அல்ல. பட்டப் பகலில் காய்த்த பூஞ்சைக் காளான்கள் அல்ல. இடி மின்னல்களை கிழிந்து வந்த வானத்துக் கீற்றுகள் அல்ல. சுனாமிப் பேரலைகளுக்குச் சுண்ணாம்பு பூசிய காண்டா மரங்களும் அல்ல.

பல ஆண்டுகளாக; பல நூறு ஆண்டுகளாக; இடைவிடாமல் தூறி ஊறிய அர்ப்பணிப்புகளின் அடிவானக் கூறுகள். அவைதான் ஒரு நாட்டின் விடுதலை. அவைதான் ஒரு நாட்டின் சுதந்திரம். அவைதான் ஒரு நாட்டின் மரியாதைக்கு உரிய வீர வணக்கங்கள்.

மலாயாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த மகிழ்ச்சியில் ஆண்டு தோறும் ஆரவாரத்துடன் அமர்க்களமாய்க் கொண்டாடி வருகிறோம். செய்ய வேண்டியதைச் செம்மையாகவே செய்து வருகிறோம். மகிழ்ச்சி.

இங்கு மட்டும் அல்ல. எல்லா நாடுகளிலும் அந்த மாதிரியான மகிழ்ச்சிக் கோலங்கள். மகிழ்ச்சிக் கொப்பளிப்புகள்\. மகிழ்ச்சிப் பேரலைகள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னணியில் எத்தனை எத்தனை அர்ப்பணிப்புகள்; எத்தனை எத்தனை உயிர்த் தியாகங்கள். எத்தனை எத்தனைத் தன்னல மறுப்புகள் உள்ளன. பலருக்கும் தெரியாது.

சும்மா இந்தப் பக்கம் திரும்பிப் பாருங்கள். ஒரு நாடு சுதந்திரம் அடைந்த வரலாற்றைப் படித்துப் பாருங்கள். பல இனங்களின் அர்ப்பணிப்புத் தியாகங்களில் ஓர் இனத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பளங்கள்; ஓர் இனத்திற்கு மட்டும் பட்டுச் சால்வைகள்; கலர் கலராய்ச் செம்பருத்தி மலர்மாலைகள்.

பெரிய அதிசயம் என்ன தெரியுங்களா. ஒரே ஓர் இனத்திற்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். மற்ற இனங்களைப் பற்றி ஒப்புக்கு உப்புமா கிண்டி இருப்பார்கள். நியாயங்கள் சாகாமல் இருக்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் பாடநூல்கள் எழுதப்பட வேண்டும். உண்மை மறைக்கப்படக் கூடாது. இதை சொல்லிச் சொல்லி எனக்கு வயதுதான் ஓடிக் கொண்டு இருக்கிறது. உருப்படியாக ஒன்றும் நடந்த பாடு இல்லை.

மலாயா விடுதலை வரலாற்றில் இந்திய இராணுவத்தினர் மறக்க முடியாத சுவடுகளைப் பதித்துச் சென்று உள்ளார்கள். பெரிய பெரிய உயிர்த் தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள். கை இலாலாமல் கால் இல்லாமல் அழுகிய நிலையில் அனாதைகளாய்க் காடுகளிலேயே கரைந்து போய் இருக்கிறார்கள்.

மனைவி மக்களைப் பார்க்காமலேயே பாசா காடுகளில் உறைந்து நீர்த்துப்  போய் இருக்கிறார்கள். ஓர் ஆள், இரண்டு ஆள் இல்லீங்க. பல ஆயிரம், பல பத்தாயிரம் பேர்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல்; வயிற்றுக்குச் சோறு இல்லாமல்; சூடுபட்டுக் காயத்திற்கு மருந்து இல்லாமல்; படுத்த வாக்கிலேயே செத்துப் போய் இருக்கிறார்கள். பலருக்கும் தெரியாத உண்மைகள்.

இவை எல்லாம் மறைக்கப்பட வேண்டிய விசயமா. எங்கோ இருந்து வந்து எங்கேயோ போர் செய்து இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் மறக்கலாமா. எப்படிங்க மறப்பது. இந்த விசயம் எல்லாம் என்ன, கோரேங் பீசாங் விற்கிற விசயமா. சொல்லுங்கள்.

இவற்றைப் பற்றி எல்லாம் வரலாற்றில் எழுத மாட்டார்கள். இனவாதம் மதவாதத்தில் மயங்கிப் போனால் மதம் பிடிக்காமல் என்னங்க செய்யும். பிரச்சினை வேண்டாம். உண்மை வரலாற்றை உரித்துக் காட்ட ஒரு சிலர் வருவார்கள். அந்த வரிசையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1941-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் தொடங்கி விட்டது. இந்தப் பக்கம் மலாயாவில் ஜப்பானியர்கள் சயாம் (தாய்லாந்து) வழியாகக் கோத்தா பாரு; அலோர் ஸ்டார் பகுதிகளில் வேகம் வேகமாக இறங்கி வருகிறார்கள்.

மலாயா பிரிட்டிஷ் இராணுவம் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்தப் போராடியது. மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இராணுவத்தினர் இருந்தனர். இருப்பினும் இந்தக் கூட்டு இராணுவத்தினர், ஜப்பானியர்கள் இறங்கி வருவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதனால் இந்தியாவில் இருந்து இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக வரவழைக்கப் பட்டார்கள். சிங்கப்பூருக்குக் கப்பல் கப்பலாக இந்திய இராணுவ வீரர்கள் போய்ச் சேர்ந்தார்கள். ஏறக்குறைய 25,000 பேர் வரை இருக்கலாம். இது சிங்கப்பூரில் நடந்தது.

இந்தப் பக்கம் மலாயாவில் 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்திய இராணுவ படையைச் சேர்ந்த 42,651 இராணுவ வீரர்கள் வந்து சேர்ந்தார்கள். சிலாங்கூர் மோரிப் பகுதியில் தரை இறங்கினார்கள். அந்தப் படையில் 46 அணிகள் இருந்தன. அவர்களுடன் 3698 கவச வாகனங்களும் (டாங்கிகள்) இருந்தன.

கோலா கிள்ளான்; போர்டிக்சன் பகுதிகளில் ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தான் மெட்ராஸ்; கல்கத்தா துறைமுகங்களில் இருந்து இந்த இராணுவ வீரர்கள் வந்தார்கள். அதற்குள் ஜப்பானியர்கள் சரண் அடைந்து விட்டார்கள்.

மோரிப் ஒரு கடற்கரைப் பகுதி. ஓர் ஒதுக்குப் புறமான இடம். தரை இறங்க சரியான இடமாக இருந்தது. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். ஒரு முக்கியமான விசயத்திற்கு முதலில் வருகிறேன்.

ஜப்பானியர்களின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த மலாயாவில் பல போர்கள் நடந்து உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை நான்கு போர்கள். இந்தப் போர்களில் இந்திய இராணுவ வீரர்களின் பங்கு அளப்பரியது. வார்த்தைகள் எழுதி வைக்க முடியாது. அது தனி ஒரு வரலாறு.

அந்தப் போர்களை மலாயா போர்கள்(Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள். மலேசியாவில் வாழும் பலருக்கு இந்தப் போர்களைப் பற்றி அதிகமாகத் தெரியாது. மன்னிக்கவும்.

அக்கரையில் புக் போஸ் நிகழ்ச்சி. அதில் ஒரு கூத்தாடி வழுக்கி விழுந்து விட்டால் போதும். வாட்ஸ் அப் தெறிக்கும். அப்புறம் கொசுவிற்குக் கோயில் கட்டியது தெரியும். நடைப் பயிற்சியில் அயன்தாரா அதிர்ச்சி அடைந்து மயக்கம் போட்டது எல்லாம் தெரியும். 

ஆனால் மலாயாவில் முப்பது நாற்பதாயிரம் இந்திய வீரர்கள் இறந்து போனார்கள். அது தெரியுமா என்று கேளுங்கள். உஹூம். தெரியாது. ரோஜா தெரியும். சந்திரலேகா தெரியும். மகராசி தெரியும். ஆனால் மலாயா நாட்டுக்காக உயிர் விட்ட மனிதர்களைத் தெரியாது. விடுங்கள். வயிற்றெரிச்சல். நம்ப கதைக்கு வருவோம்.

ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்.

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)

இவைதான் மலாயாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான போர்கள். இதைத்தவிர மலாயாவில் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு துறைமுகத்திலும் சண்டைகள் நடந்து உள்ளன. பல ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் போது மலேசியா உருவாகவில்லை. மலாயாதான் இருந்தது. பிரிட்டிஷார் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்கள்.

இன்னும் ஒரு கொசுறு தகவல். மலாயாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்யவில்லை என்று ஒரு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் தகவல் வெளிவந்து உள்ளது. ரொம்ப சந்தோஷம். கட்டிக் காக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன். இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியப் படை வீரர்கள் செய்த தியாகங்கள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

மேலே சொன்ன மலாயா போர்களில் முதலில் சிலிம் ரிவர் போரைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். அடுத்தடுத்து மற்ற போர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சிலிம் ரிவர் போர் (Battle of Slim River) என்பது 1942-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டிஷ் (பிரித்தானியம்) இந்திய இராணுவத்திற்கும் ஜப்பானிய இராணுவத்திற்கும் இடையே தீபகற்ப மலேசியா, சிலிம் ரிவர் பகுதியில் நடந்த போர்.

போர் முனையில் இந்திய இராணுவத்திற்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்கள்; மருந்துகள்; உணவு நீர் வகைகள்; தொலைத் தொடர்புச் சாதன வசதிகள்; பின்னணிக் காப்புகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால் நிராதிபதிகளான பல நூறு இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டார்கள். சிலிம் ரீவர் காட்டுப் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள்.

காயங்கள் அடைந்து நடக்க முடியாமல் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் பலரை ஜப்பானியப் படையினர் கத்தியால் குத்திக் கொன்று உள்ளனர். சிலரைச் சுட்டுக் கொன்று உள்ளனர். ஓரளவிற்கு நடக்க முடிந்த இராணுவ வீரர்களைக் கொண்டு குழிகள் தோண்ட வைத்தார்கள்.

ஏற்கனவே கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் அந்தக் குழிகளில் புதைக்கப் பட்டனர். ஜப்பானியர்களின் மலாயா படையெடுப்பின் போது நடத்தப் பட்ட போர் அத்துமீறல்களில் இதுவும் ஒன்றாகும்.

1941 டிசம்பர் 7-ஆம் தேதி ஜப்பானியப் படைகள் கிழக்கு கிளாந்தான், கோத்தா பாருவில் தரை இறங்கினர். அடுத்த நான்கு நாட்களில், அதாவது 1941 டிசம்பர் 11-ஆம் தேதி, தென் தாய்லாந்தில் இருந்து வடமேற்கு மலாயாவில் படை எடுத்தனர்.

பிரித்தானிய படைகள் தொடுத்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி மலாயா மேற்குக் கரையில் முன்னேறி வந்தனர். கிறிஸ்துமஸ் தினத்திற்குள் ஜப்பானியர்கள் வடமேற்கு மலாயா முழுவதையும் கைப்பற்றி விட்டனர்.

ஜப்பானியர்கள் மலாயாவுக்குள் அதிவேகமாகப் படை நடத்தி வருவதைப் பிரித்தானிய படைகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜப்பானியர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் கம்பார் நகரத்திற்கு அருகே கோலா டிப்பாங் ஆற்றுப் பகுதியில் (Dipang River) மட்டுமே ஜப்பானியர்களுக்கு முதன் முறையாகத் தடை ஏற்பட்டது.

கம்பாரில் நான்கு நாட்கள் போர் நடந்தது. இந்தப் போருக்குக் கம்பார் போர் (Battle of Kampar) என்று பெயர். பிரித்தானியப் படையின் பீரங்கித் தாக்குதல்களினால் ஜப்பானியர்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தது.

கம்பார் நகருக்குத் தெற்கே இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை பிரிவு முகாம் அமைத்தது. அங்கு இருந்து பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.. இருப்பினும் ஜப்பானியர்களுக்குக் கடலோரத் தரையிறக்கங்கள் (seaborne landings) சாதகமாக அமைந்து விட்டன. அங்கு இருந்து அதிகமான ஜப்பானியப் போர் வீரர்கள் கம்பாரில் களம் இறக்கப் பட்டனர்.

அதனால் இந்திய இராணுவத்தினரால் சமாளிக்க முடியவில்லை. பின்வாங்க வேண்டிய இக்கட்டான நிலைமை. துரோலாக் நகருக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள சிலிம் ரிவர் பகுதிக்குப் பின்வாங்கினர். எதிர்த் தாக்குதலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளையும் இடம்பெறும். சொல்ல மறந்த தகவல். கடந்த ஒரு மாதமாகக் கட்டுரை எழுத இயலயவில்லை. உடல்நலம் சற்றே பாதிப்பு. வயது ஓடுகிறது அல்லவா. பழைய கார். கொஞ்சம் மக்கார் செய்து விட்டது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு ஒரு வகையாகப் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது. ஊடகங்கள் மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு அன்பான ஆதரவான சொற்கள் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள் ஆயிரம். தொடர்ந்து பயணிப்போம்.

(தொடரும்)

மேற்கோள்கள்:

1. Corfield, Justin & Robin (2012). The Fall of Singapore. Singapore: Talisman Books. ISBN 978-981-07-0984-6.

2. Remembering the British Indian Army's fight during the Japanese Occupation of Malaya  - https://www.thestar.com.my/lifestyle/living/2020/09/30/remembering-the-british-indian-army039s-fight-during-the-japanese-occupation-of-malaya

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. Gurcharn Singh Sandhu, The Indian cavalry: history of the Indian Armoured Corps, Volume 2, Vision Books, 1978 ISBN 978-81-7094-004-3