25 டிசம்பர் 2022

மேரி சாந்தி தைரியம்

(தமிழ் மலர் - 24.12.2022)

மலேசிய மனித உரிமை போராட்டவாதி. மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி. அழகிய அறிவார்ந்த பெண்மணி. மலேசியத் தமிழ்ப் பெண்ணியவாதி. மேரி சாந்தி தைரியம். கைகூப்புகிறோம்.

மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் (Committee on the Elimination of All Forms of Discrimination against Women) பணியாற்றியவர்.

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). ஓர் அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. மலேசியாவில் பலருக்கும் இவரைத் தெரியாது. வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமையாகும்.

இப்படி உலகப் பெண்களுக்காகப் போராடிய பெண்கள்; போராடும் பெண்களை எல்லாம் மேலாதிக்கப் பெரும் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இனவாதத்தில் மனவாதம் கலந்தால் மனிதவாதம் மறைந்து போகலாம். அந்த வகையில் இந்தப் பெண்மணியும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஒரு செருகல்.

தயிர் ரசம், மிளகு ரசம், பருப்பு சாம்பார் காணொலிகள் செய்து புகழ் பெறும் சோடா புட்டிகளுக்குத் தான் இன்றைய காலத்தில் மவுசு அதிகம். விளம்பரங்களும் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்குத் தான் அதிகம் வெளிச்சமும் கிடைக்கிறது. அசலுக்கு மவுசு குறைவு.

மேரி சாந்தி தைரியம். குடும்ப வன்முறைகளுக்கு எதிராக 1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள்; கண்டனக் குரல்கள் எழுப்பியவர். குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர்.

அவரின் தொடர் பரப்புரைகளினால் தான் 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act 1994) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு (Domestic Violence (Amendment) Act 2017) என்று மறுபடியும் திருத்தம் செய்யப்பட்டது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். கையில் விலங்குடன் அந்தச் சட்டம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். மேரி சாந்தி கொண்டு வந்த சட்டம்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. ஆண்களே நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் வந்து... அது போதுங்க.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம். ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா. சந்தோஷம் தானே.

குடும்ப வன்முறை என்றால் என்ன. ஒரு குடும்ப உறுப்பினர் இன்னும் ஒரு குடும்ப உறுப்பினர் மீது பயன்படுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்குத்தான் குடும்ப வன்முறை என்று பெயர். இது கணவன், மனைவி மீது அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாகச் சுட்டுகின்றது.

அது யாராக இருந்தாலும் சரி; தன்னுடைய துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் அது வெளிப்படலாம்.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

’நான் தாலி கட்டியவன். நான் சொன்னால் நீ கேட்கணும்டி’ என்று வறுபுறுத்துவது எல்லாம் தப்பு. மனைவியின் சம்மதம் இல்லாமல் ஒரு கணவன் தன் மனைவியைத் தொட்டாலே அது ஒரு வகையான வன்முறைதான். அது சட்டப்படி குற்றம். அதற்காக இதை வைத்துக் கொண்டு கணவனை ரொம்பவும் மிரட்ட வேண்டாம் பெண்களே.

புருசன்காரன் தானே என்று பெண்கள் பெரும்பாலும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கே உள்ள இயல்பான குணம். கணவனுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் குணம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் விட்டுக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்த இடத்தில் வற்புறுத்தல் வந்து நிற்கிறது. வற்புறுத்தல் என்பது ஒரு வகையில் பயமுறுத்துவது போலாகும்.

’நான் சொல்லி நீ கேட்கவில்லை. உனக்கு இனிமேல் ஒரு காசு தர மாட்டேன் போடி’ என்று சொல்வது குற்றம் அல்ல. ஆனால் அதைச் சொல்லி வறுபுறுத்தி அவளை இணங்க வைப்பது குற்றமாகும். புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கச் சமாதானமாகப் பேசி விட்டுப் போகலாமே. ’இகோ’ தன்மையைத் தவிர்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது. ஆண்களுக்கு ஒரு ஐடியா… ஒரு பெண்ணைப் புகழ்ந்தால் போதுங்க. அம்புட்டுத்தான்…

’உலகத்திலேயே நீ தாண்டி அழகி. உன்னைத் தவிர வேறு எவளும் இல்லடி கண்ணே மணியே’ என்று இரண்டு வார்த்தை ஆசையாகப் பேசினால் போதுங்க. கதை முடிஞ்சது. மறுபேச்சு இல்லை. காலடியில் வந்து விழுந்து விடுவாள். அப்புறம் எதற்கு சண்டை; சச்சரவு; பசார் மாலாம் மீட்டிங் எல்லாம். மனைவியைப் புகழ்வதற்கு காசா பணமா? அன்பே, அமுதே, அழகே என்று அள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருங்கள்.

அல்வா இனிப்பான பொருள். அதை ஒரேயடியாக ’லபக்’ என்று முழுங்குவதைக் காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவையே வேறு. சமயங்களில் என்னுடைய கட்டுரைகளிலும் இடை இடையே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். அல்வா மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைப் புகழ்ந்து பேசி காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஆண்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் புருசன்காரன் அமைதியாக அன்பாக இருக்கிறானே என்று புருசன்காரனை ஏறி மிதிப்பதும் உண்டு. நடக்கிற காரியம் தான். சான்றுகள் உள்ளன. சீரியல்கள் ஒன்றே போதும்.

எல்லாக் குடும்பங்களிலும் அல்ல. சில குடும்பங்களில் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட மனைவியை இரண்டு நாள்களுக்குக் கண்டு கொள்ள வேண்டாம். அவள் சமைத்ததைச் சாப்பிட வேண்டாம். மூன்றாவது நாள் அவளே இறங்கி வந்து விடுவாள்.

ஆக இப்படிப்பட்ட ஒரு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. அதில் ஓரவஞ்சனை வேண்டாமே.

மேரி சாந்தி தைரியம், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (முன்பு University of Madras). 1991-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்து இருக்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கையைத் தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அங்கு அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர். இப்படி ஒரு பெரிய அமைதித் தூதுவராகப் பணியாற்றியவர்.

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

இவர் பல பசிபிக் நாடுகளுக்கு பெண்ணுரிமை அறிவுரைஞராகவும் திகழ்கிறார். இவர் எழுதிய ’ஒரு பெண்ணின் சமத்துவ உரிமை: சிடாவின் வாக்குறுதி’ (A Woman’s Right To Equality: The Promise Of Cedaw) எனும் நூல் தாய்லாந்து பாங்காக் நகரில் பெண்ணுரிமை மாநாட்டில் (Beijing +20 conference) வெளியிடப் பட்டது.

இப்படிப்பட பெண்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெண்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். ரசம் அதிரசம் காணொலிகள் தயாரிக்கும் போலி விளம்பரப் பிரியர்களுக்கு அல்ல; சிறுபான்மை இனத்தைச் சிறுமைப் படுத்தும் சின்னக் கொசுறுகளுக்கு அல்ல.

உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பெண்டத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டும் அரை வேக்காடுகளுக்கு அல்ல. அதிரசம் பாரம்பரியச் சொத்து; ரசம் எங்க பாட்டி செஞ்ச பருப்பு சாம்பார் என்று சொல்லும் சோடா புட்டிகளைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும்.

கங்கையில் குப்பையை எரிந்தால் கங்கையின் மவுசு குறைந்து விடாது. குப்பைக்குத்தான் மவுசு. அப்படித்தான் நாமும் இங்கே...

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
24.12.2022


சான்றுகள்:

1. Mary Shanthi Dairiam (Malaysia) (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights.

2. Mary Shanthi Dairiam - https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. Malaysian human rights and women's rights advocate - http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam

4. A Woman’s Right To Equality: The Promise Of Cedaw - https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/

5. International Expert Leads High Level Anti-Discrimination Forum for Royal Government of Cambodia". UNIFEM.


19 டிசம்பர் 2022

மஞ்சோங் கணேசன் சண்முகம்

தமிழ் மலர் - 19.12.2022

உன்னதமான இலட்சியங்களில் உயர்வான இலக்கணங்கள்; உயர்வான கொள்கைகளில் உண்மையான நோக்கங்கள்; இனிதான நகர்வுகளில் புனிதமான பண்புகள்; சிங்காரச் சித்தியவானில் சிறப்புமிகுச் சேவைகள்; மஞ்சோங் மண்ணில் மகிமை பேசும் ஒரு மைந்தர்; வாழ்த்துகிறோம் சண்முகம் கணேசன்.


மலேசியத் தமிழர் இனத்திற்கு சேவை செய்யும் தமிழர்களை அடையாளம் காண வேண்டியது நம் கடமை. சமயம் பேசும் இமயத்தில் வாழ்ந்தாலும் சரி; சரித்திரம் பேசும் கங்கா நகரத்தில் வாழ்ந்தாலும் சரி; சாதனைகள் பார்க்கும் கடாரத்தில் வாழ்ந்தாலும் சரி; தமிழர்ச் சேவையாளர்களை உலகளாவிய நிலையில் போற்ற வேண்டியது தமிழர்களின் கடமை அல்ல.

காலத்தின் கட்டாயம். வாழ்கின்ற தமிழர்ச் சேவையாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்போம். உற்சாகப் படுத்துவோம். ஆதரவளிப்போம். அரவணைப்போம்.

நம் இனத்தின் எதிர்காலத் தலைமுறைகளுக்காக; நம் பிள்ளைகளுக்காக; நம் பேரப் பிள்ளைகளுக்காக; இயன்ற வரையில் நல்லதைச் செய்து விட்டுச் செல்வோம். மலேசியத் தமிழர்களுக்கு நம்மால் இயன்ற நல்சேவைகளைச் செய்த பெருமையில் மனச் சாந்தி கொள்வோம்.


மஞ்சோங் கணேசன் சண்முகம்

நம் நாட்டில் தமிழர்கள் சிலர் நல்ல நல்ல சேவைகளைச் செய்து வருகின்றார்கள். சமூக நலம் கருதும் நல்ல சேவையாளர்களாகவும் பயணிக்கின்றார்கள்.

அந்த வகையில் தமிழ்ச் சேவையாளர் ஒருவரை அறிமுகம் செய்கிறேன். அவர்தான் மஞ்சோங் கணேசன் சண்முகம். இன்றும் அன்றும் இனிகூறும் சமூகப் பார்வைகளில் இனிதாய்ப் பயணிக்கும் தமிழ்ச் சேவகர். சுருங்கக் கூறின்...

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழர் இனம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள்; தமிழர் அமைப்புகள்.


மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளின் தலையாய ஆர்வலர்களில் ஒருவராய்ப் பயணிக்கின்றார் சண்முகம் கணேசன். நல்ல ஓர் இனிமையான தமிழர். பலருக்கும் அறிமுகம் இல்லாத மனிதர்.

பேரா மாநிலத்தில் மஞ்சோங் மாவட்டம் என்றாலே கடலும் ஆறுகளும்; மலைத் தொடர்களும்; பச்சைக் காடுகளும்; பச்சைப் பசும் புல்வெளிக் கோடுகளும் படர்ந்து ஊர்ந்து பாயும் சுற்றுலாக் களஞ்சியம் என்று சொல்வார்கள். உண்மைதான். அப்பேர்ப்பட்ட பச்சை மண் மஞ்சோங். அந்த மஞ்சோங்கில் வாழும் தமிழர்கள் அனைவரும் மணி மணியான மைந்தர்கள். மகத்தான சாதனைகள் படைக்கும் இனிதான அழகிய தமிழ் மக்கள்.

தமிழ்ச் சேவையாளர் கணேசன் சண்முகம். இவரைப் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. தெரிந்து கொள்வோம். மஞ்சோங் சித்தியவான் தமிழர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு சேவையாளர். பெரிதுபடுத்திப் பேசவில்லை. தெரிந்து கொள்வதில் தவறும் இல்லை. சரி.


இன்றைய காலக் கட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களில் பெரும்பாலோருக்கு பல்வேறான வாழ்வியல் நெருக்கடிகள்; தனிமனிதச் சோதனைகள். தமிழர்களின் வாழ்வுரிமை; தமிழர்களின் மொழி; தமிழர்களின் கலைப் பண்பாடு; இவற்றுக்குப் பற்பல நெருக்குத்தல்கள். ரௌத்திரம் பழக வேண்டிய காலச் சூழல்.

இருப்பினும் அந்த இடர்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மலேசியத் தமிழர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாம் என்றும் மறக்கவில்லை. பெயர்கள் வேண்டாம். நீண்டு போகும்.

அவர்களில் ஒருவர்தான் மஞ்சோங் கணேசன் சண்முகம். இவரைச் சித்தியவான் கணேசன் என்றும் அழைக்கலாம். அல்லது கேஷ்வுட் கணேசன் என்றும் அழைக்கலாம். அழகிற்கு அழகு சேர்த்தால் அழகிற்குத்தான் அழகு!


தமிழுக்காகப் போராடுவோம்; தமிழர் நலன் கருதும் நற்சேவைகளை முன்னெடுப்போம்; இவை தமிழர் உணர்வுகள் மேலோங்கும் ஒரு தமிழரின் உளப் பாங்கு. இதுவே கணேசன் சண்முகத்தின் சமூகப் பாங்கு.

மஞ்சோங் பகுதிகளில் பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் கணேசன் சண்முகம் சார்ந்துள்ள சமூகச் சேவைத் தளங்கள் முன்மாதிரியாய்த் தனித்து நிற்கின்றன; தார்மீகம் பேசுகின்றன.

கணேசன் சண்முகம் 15 வயதிலேயே கேஸ்வுட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளராகப் பரிணமித்தவர். சின்ன வயதில் பெரிய பொறுப்பு. இப்படித்தான் இவரின் கல்வி யாத்திரைகள் அவதானிக்கின்றன.


மஞ்சோங் மாவட்டத்தில் கம்போங் தெலுக், கம்போங் தெலாகா நெனாஸ் என இரு மலாய்க்கார மீன் பிடி கிராமங்கள் உள்ளன. அதே போல இந்தியர் சீனர்கள் வாழும் இடங்களாகக் கம்போங் சுங்கை பாசிர் மற்றும் கம்போங் சங்காட் ரெசாம் கிராமங்கள்.

நான்கு கிராமங்கள் அமைந்த அந்தப் பகுதியில் தான் கேஸ்வுட் தோட்டம் இருக்கிறது. மலாயா வரலாற்றில் தடம் பதிக்கும் மற்றும் ஒரு தமிழர்க் கூடம். அங்கே மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினத்தவரும் ஒன்றாய் வாழ்ந்தார்கள். இங்கு தான் கணேசனின் வாழ்க்கைப் பயணமும் தொடங்கியது. அவரின் பால்ய சிருங்காரங்களும் அங்கேதான் ஐக்கியமாகிப் போயின. அங்குதான் அவர் பிறந்தார்.


அப்பா சண்முகம் நாராயணசாமி; தோட்டத்தில் பால் மரம் சீவும் தொழிலாளி. அம்மா ரெங்கநாயகி அண்ணாமலை; தோட்டத்தில் அவருக்கும் சாதாரண வேலை. உடன் பிறந்தோர் ஓர் அண்ணன்; இரு அக்காள்கள்.

தோட்டத்து வாழ்க்கையில் கிராம மக்களோடு வாழ்ந்தது ஒரு வசந்த காலம். அவர்களுடன் பழகியது ஓர் இளவேனில் காலம். அவை அன்றைய ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடிய ஆனந்த ராகங்களின் ஆலாபனைகள்.

சிறு வயது முதலே, அவரின் தாத்தா மற்றவர்களுக்கு உதவிகள் செய்ததை, தான தர்மங்கள் செய்ததைப் பார்த்து பார்த்து வளர்ந்தவர் கணேசன். அதேபோல் அப்பாவின் கொடுக்கும் இயல்பும், உதவும் மனப்பான்மையும் கணேசனைப் பெரிதும் ஈர்த்துள்ளன.

அவரின் அண்ணன் முனியாண்டி சண்முகம் (முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்) அவர்களின் நல்பண்புக் கூறுகளையும்; பொது இயக்க ஈடுபாடுகளையும் ஆழமாய்க் கவனித்து வளர்ந்துள்ளார் கணேசன் சண்முகம்.


அண்ணனின் நல்ல பல குணங்களை அப்போதே தனக்குள் விதைத்துக் கொண்டார். அந்தப் பண்பு நலன்கள் தான் இன்றுவரை கணேசனைத் தொடர்கின்றன. மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னோடியாகவும் திகழ்கின்றன.

கணேசனின் தொடக்கக் கல்வி கேஸ்வுட் தோட்ட தமிழ்ப்பள்ளியில் தொடங்கியது. பிறகு ஆயர் தாவார் அம்புரோஸ் இடைநிலைப்பள்ளி; சித்தியவான் அமாட் போஸ்தாமாம் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம்; பினாங்கு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு; அதன் பிறகு சிரம்பான் இராஜா மெலாவார் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் ஆசிரியர்ப் பயிற்சி.

முதன்முதலாக பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்த் தொழிலைத் தொடங்கினார். அடுத்து சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை; அடுத்து லுமுட், முக்கிம் புண்டுட் தமிழ்ப் பள்ளி; தற்பொழுது சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புறப்பாடப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியராய்ப் பணிபுரிகிறார்.


பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் என்பது முக்கியம் அல்ல. வாழ்கின்ற காலக் கட்டத்தில் என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். அந்த வகையில், கடந்த காலங்களில் சில பல சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்ட பெருமை இவரையும் இவரின் நண்பரகளையும் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில், இவரும் இவரின் நண்பர்களும் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றனர்.

மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள். கணேசன் சண்முகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் மஞ்சோங்கில் காணலாம். சித்தியவான், ஆயர் தாவார், புருவாஸ், லூமுட் வட்டாரங்களில் காணலாம். பங்கோர் தீவில் காணலாம். ஏன் பேராக் வரையிலும் நீடித்துப் போகிறது. இப்போதைய ஆசிரியர்ப் பணிக் காலத்திலும் இவரின் பொது வாழ்க்கைப் பணிகள் தொடர்ந்து பனிக்கின்றன.

* 1992-ஆம் ஆண்டில் ஆயார் தாவார் துன் சம்பந்தன் கிராம மணி மன்றச் செயலாளராகப் பொதுச் சேவைகள்;


* அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ குமரனை அழைத்து, வட்டார போட்டி விளையாட்டுப் போட்டிகளை நடத்திய சுவடுகள்;

* ஆயார் தாவார் துன் சம்பந்தன் கிராமத்தில் குடியிருப்போர் சங்கம் அமைத்து  செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், புறநகர் மேம்பாட்டு அமைச்சு அதிகாரிகளைப் புத்ராஜெயாவில் நேரிடையாகச் சந்தித்துப் பேசி, மூன்று ஆண்டுகளில் கால்வாய், தார் சாலை அமைப்பதற்காக ஏறக்குறைய 8 லட்சம் வெள்ளி பெற்று தந்த நினைவுகள்;

* 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று இளைஞர்களை நேரிடையாக கோலாலம்பூர் புக்கிட் அமானுக்கு அழைத்துச் சென்று காவல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த நேரங்கள்;

* முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் மெட்ரிகுலேசனில் சிறப்பு அடைவுநிலைப் பெற்று; மருத்துவத் துறை கிடைக்காத நம் இன மாணவி ஒருவருக்காக, நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து; மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில இடம் பெற்றுத் தந்த தடங்கள்;

* அடையாள அட்டை பிரச்சனைகள்; நம் இன இளைஞர்களுக்கு ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருதல்; இயலாதவர்களுக்கு சமூக இலாகா, சொக்சோ போன்ற உதவிகளைப் பெற்றுத் தருதல்;


* செமாராக் இயக்கத்தை மஞ்சோங் மாவட்ட அளவில் தோற்றுவித்து; எண்ணற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பி.எஸ்.என். சேமிப்பு கணக்குத் திறந்து கொடுத்து உதவியது;

* பல தொடக்கப் பள்ளி மாணவர்கள்; மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு பட்டறைகள் நடத்தியது; இவை மஞ்சோங் கணேசன் சண்முகத்தின் சேவைப் பட்டியலில் சேர்கின்றது.
காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

தற்பொழுது:- 1. சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய செயலாளர்; 2. மஞ்சோங் மாவட்டப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இயக்கச்  செயலவை உறுப்பினர்; 3. மலேசிய என் குடும்பம் (My Family) இயக்கச் செயலவை உறுப்பினர்; 4. டிண்டிங்ஸ் இந்தியர் சங்கச் செயலவை உறுப்பினர்; 5. கம்போங் சித்தியவான் ருக்குன் தெத்தாங்கா செயலவை உறுப்பினர்.

அத்துடன், அப்துல் கலாம் செயற்குழுவினர் ஏற்பாட்டில், கடந்த 5 ஆண்டுகளாக மஞ்சோங் மாவட்டத்தின் 15 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கையடக்க தமிழ் மொழி, மலாய் மொழி, ஆங்கில மொழி வாசிப்பு நூல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியல் சரளமாய் நீள்கிறது.

இவரும் இவரின் நண்பர்களும்; மஞ்சோங் மாவட்ட மாணவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்கள் சிலர் பலருக்கும், தங்களின் கழகங்களின் வழியாக உதவிப் பொருட்களை வழங்கி பலரின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள். நினைவு கூர்வோம்.

கணேசன் சண்முகம் அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும். தமிழ் உலகில் இவர் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். இவரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு மென்மேலும் தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் நல்பணிகள், பிறர் வாழ வகை செய்யும் பெரும் முயற்சிகள். அவற்றில் சேவைக் கலசமாய்ப் பயணிக்கின்றார் கணேசன் சண்முகம். இவரைப் போன்ற சேவையாளர்களின் செயல்பாடுகள் நல்ல புண்ணியமான சேவைகள். இவரைப் போன்ற மாந்தர்கள் பலரால் தான் மழையும் பெய்கின்றது. பூமியும் செழிக்கின்றது. செய்த தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது நான்மறை தீர்ப்பு. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.12.2022



 

02 டிசம்பர் 2022

மலேசியத் தமிழர்களும் குண்டர் கலாசாரத் தாக்கங்களும்

ஒரு குடும்பத்தில் ஒரு தகப்பனார். அவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை மட்டும் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். அந்தப் பிள்ளை சாப்பிட்ட மிச்சம் மீதியைக் கீழே கொட்டுவதற்குக்கூட அழகியத் தட்டுகள். சிதறிக் கிடப்பதை சீண்டி எடுப்பதற்குகூட வெள்ளிக் கரண்டிகள்.


மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்; இப்போது செல்வச் செழிப்பின் சீமத்தில் உட்கார்ந்து உச்சம் பார்க்கிறது.

மற்றொரு பிள்ளையை அந்தத் தகப்பனார் கண்டு கொவதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார். அந்தப் பிள்ளை தட்டுத் தடுமாறி தன் வாழ்க்கையைச் சொந்தமாக அமைத்துக் கொண்டது.

ஆனாலும் இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிப் போய் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது. 


அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால், அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா.

அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் பிள்ளை. மலேசிய இந்தியர்களில் ஒரு பிரிவாகப் பயணிக்கும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அந்த மலேசியத் தமிழர்களில் ஒரு சிலர்; குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். சொல்ல வேதனையாக உள்ளது. சொல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது.

கலாசாரம் என்பது தமிழ் சொல் அல்ல. பண்பாடு என்பதே சரியான தமிழ்ச் சொல். இருப்பினும் நம் சமூகத்தில் கலாசாரம் எனும் சொல் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது.


பொதுவாகவே குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்தக் காளான்கள் அல்ல. இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் சில சமூகத் தலைகளும்; காலம் காலமாக கோலோச்சிக் கோலம் போட்டு வந்தன.

போட்ட கோலத்திற்குள் செடிகள் நட்டு; கொடிகள் வளர்த்து; அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சி; உரம் தெளித்துச் செழிக்க வைத்து விட்டன. வேறு எப்படி சொல்லுவதாம்.

சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய ஒரு சிலர்; இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்; இப்போதும் ஒரு சிலர் சொப்பனக் கனவுகளில் சுகமாய் வாழ்ந்தும் வருகிறார்கள். மன்னிக்கவும். இது சமுதாயம் சார்ந்த உண்மை.


சரி. தலைப்பிற்கு வருவோம். குண்டர் கும்பல் கலாசாரத் தாக்கங்கள்... இந்தச் சொற்கள் அதீதிய வேதனைச் சொற்கள். அந்தச் சொற்களை இப்போதைக்குச் சற்றே கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம். அதற்கு முன்…

ஒரு சர்ச்சை. மலேசியத் தமிழ் ஊடகங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சிக்கலான சர்ச்சை. மலேசியத் தமிழர்களைத் தற்காலிகமாகக் கிரங்கடிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய சிக்கல்.

அதாவது மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம். பழைய குண்டரியத்தின் புதிய நேரலைகள்.


அண்மைய காலங்களில் அதைப் பற்றி அநாகரிகமான சொல்லாடல்கள். விரசங்கள். தேவையற்ற சொல் சரசங்கள். கேட்கும் போது வேதனையாகவும் இருக்கிறது. அசை போடும் போது அசிங்கமாவும் இருக்கிறது. என்ன செய்வது. பொறுத்துக் கொள்வோம். வேறு வழி இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செய்தி. 2016-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். மலேசியாவில் ஒரு சில தமிழ்ப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம் உலவுகிறது எனும் செய்தி.

நாடறிந்த தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறியதாக ஊடகச் செய்திகள். அப்படிச் சொல்லவே இல்லை என்பது அவரின் மறுப்புச் செய்திகள்.

அவருக்கு எதிராகத் தமிழ் அமைப்புகளுடன் அரசு சாரா இயக்கங்களின் கண்டனக் கொந்தளிப்புகள். கிள்ளான் போலீஸ் நிலையத்தில் புகார்கள்.


இது எந்த அளவிற்கு உண்மை. எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது நம்முடைய நோக்கம் அல்ல. மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரத்தைப் பற்றித் தான் சொல்ல வருகிறோம். தொடர்ந்து படியுங்கள்.

நம் தமிழ்ப்பள்ளிகள் அப்படிப்பட்ட பள்ளிகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு கலாசாரத்தை அடியோடு மறுக்கும் தமிழ் அமைப்புகள். தமிழ்ப் பள்ளிகளில் சேவை செய்யும் ஆசிரியர்கள் தங்கமானவர்கள். ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு சம்பளத்திற்கு வேலை செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. தமிழ் மொழியையும் தமிழ்ப் பள்ளிகளையும் தற்காப்பத்தில்; தக்க வைத்துக் கொள்வதில்; ஊதியத்தைத் தாண்டிய நிலையில் ஊழியம் செய்து வருகிறார்கள். உண்மை.

தமிழ் மொழியைத் தங்களின் உயிராக நினைத்து அர்ப்பணிப்பு பரிமாணங்களில் பயணித்து வருகின்றார்கள்.



என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எத்தனையோ தமிழாசிரியர்த் திலகங்கள் எந்த அங்கீகாரமும் எதிர்ப்பார்க்காமல் சேவை செய்து வருகிறார்கள்.

இது எத்தனைப் பேருக்குத் தெரியும். பதவி பட்டத்திற்கு வாழ்ந்த ஆசிரியர்கள் கொஞ்ச காலத்திற்கு முன்னால் இருந்தார்கள். இப்போது இல்லை. ஒன்றிரண்டு எங்கோ இருக்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கே எடுபடாத வாதம்.

அதற்கு முன் இன்னும் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் சீனாவில் இருந்து கப்பலேறி வந்த கலாசாரம்.

அங்கே இருந்து இங்கே வந்து இங்கே இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் துணை போன கலாசாரம். அப்போது இந்திய இளைஞர்களை உருட்டி மிரட்டி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு வாலாட்டிய கலாசாரம்.

இப்போது ஒரு சில இந்தியர்களைத் தலைவர்களாகக் கொண்டு நம் சமுதாயத்தையே தூக்கிக் கனம் பார்க்கும் கலாசாரம். தந்தை பெரியரால் ஒழிக்கப் பட்ட சாதி சமயம் எப்படி உரம் போட்டு மீண்டும் வளர்க்கப் பட்டதோ அதே போல குண்டர் கலாசாரமும் வளர்ந்து விட்டது.

ஆழ விருச்சகம் போல வேர் ஊன்றி பயம் இன்றி வளர்ந்து இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. காலம் இன்னும் கரையவில்லை.

மலேசியத் தமிழர்களிடையே இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் வேகமாக உருவெடுத்து வருகிறது. அந்தப் பிரச்சினை இப்போதைக்கு தமிழர்ச் சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினை. இந்திய இளைஞர் சமுதாயத்தின் பெரும் பிரச்சினை என்றுகூட சொல்லலாம்.

1970 – 1980களில் இந்தியர்களிடம் அதிகம் காணப்படாத அந்தக் கலாசாரம் இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது? மற்ற மற்ற சகோதர இனத்தவர்கள் சற்றே ஒதுங்கிச் செல்லும் ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகிறது.

2014-ஆம் ஆண்டில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன. அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல் படுகின்றன என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ’ஓப்ஸ் சந்தாஸ் 1’ எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. அப்போது குண்டர் கும்பல் ஈடுபாடு புள்ளி விவரங்கள் வெளியிடப் பட்டன.

மலேசியா மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 65 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 5 விழுக்காடு.

சீனர்கள் - 27 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 20 விழுக்காடு.

இந்தியர்கள் 7 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 72 விழுக்காடு.

சபா மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 1 விழுக்காடு.

சரவாக் மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 2 விழுக்காடு.

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72 விழுக்காடு. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அவற்றை மறுக்க முடியுமா அல்லது மறைக்கத் தான் முடியுமா.

அண்மைய காலமாக நம் நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவங்கள். நினைவு கூர்வோம். அவற்றின் பின்னணியில் கூலிக் கொலையாளிக் கும்பல்கள் இருக்கலாம் எனும் சந்தேகங்கள் உள்ளன.
தனிப்பட்ட விவகாரங்களில் வஞ்சம் தீர்க்கும் நகர்வுகள் உள்ளன. கூலி கொலையாளிகள் ஏவப்பட்டு இருக்கலாம் எனும் சாத்தியங்கள் உள்ளன. இவற்றை மலேசிய போலீசார் மறுக்கவும் இல்லை.

ஒரு சின்னத் தொகைக்கு மற்றவர்களைச் சர்வ சாதாரணமாகச் சுட்டுக் கொல்லும் ஒரு கலாசாரம். எந்தப் பின்னணியையும் பார்க்காமல் பணத்திற்காகச் சுட்டுக் கொல்லும் ஈவு இரக்கமற்ற கலாசாரம். இதை எல்லாம் பார்க்கும் போது மனித உயிரின் விலை ரொம்பவுமே மலிந்து போய் விட்டதாகத் தெரிகின்றது.

இந்தக் கூலிக் கொலையாளிகள் குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வரலாம் என்று முன்னாள் மலேசியப் போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் ரஷீட் இப்ராகிம் கூறி இருக்கிறார்.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விசயம். கூலிக் கொலையாளிகளில் பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாகவே இருக்கின்றனர். அதுதான் வேதனையிலும் வேதனையான விசயம்.

இந்தியர்கள் தொடர்பான குண்டர் கும்பல்களின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக் கூடும். இது போலீசாரின் கணிப்பு. அதே சமயத்தில் ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கூறுவதும் சரி அல்ல. இது நம்முடைய கணிப்பு.

இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் 5000 - 6000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் கைது செய்யப் படுகின்றனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப் படுகின்றனர்.

இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு என்ன காரணம். அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஒரு காரணம் என்று சொல்ல முடியுமா? ஓர் எடுத்துக் காட்டு.

2010-ஆம் ஆண்டு பந்திங்கில் நடந்த டத்தோ சோசிலாவதி கொலை. அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள்.

அவர்களுக்குப் பணம் இல்லையா. படிப்பு இல்லையா. சிந்திக்கும் ஆற்றல் இல்லையா. அல்லது சீர்தூக்கிப் பார்க்கும் திறன் தான் இல்லையா. எல்லாமே இருந்தன. இத்தனை இருந்தும் கொலைகள் நடந்து இருக்கின்றன.

சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலைகள் நடந்தும் உள்ளன. இதற்குக் காரணம் தான் என்ன. பசியா... பட்டினியா... வேலை இல்லாமையா... அல்லது இனவாதமா...

இவற்றுள் எதுவுமே இல்லை. ஆனால் கொலைகள் நடந்து உள்ளன. ஏன். சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே இந்தியர்கள். எப்படி? இதுவும் ஒரு பில்லியன் டாலர் கேள்வி!

வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சான்றோர் வகுத்த ஒரு வாழ்வியல் கொள்கை. இருந்தாலும் செம்மையில் வறுமையின் மனதோடு வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்வது ஒரு சிலரின் வாழ்வியல் கொள்கை. அதுவே மலேசிய இந்தியகளுக்கு வலிமிக்க வேதனையான கொள்கை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.12.2022



 

18 அக்டோபர் 2022

கூச்சிங்

கூச்சிங் அல்லது கூச்சிங் நகரம் (City of Kuching) என்பது மலேசியா; சரவாக்; மாநிலத்தின் தலைநகரம். இந்த நகரம் போர்னியோ தீவில், சரவாக் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில், சரவாக் ஆற்றுக் கரைகளின் இரு மருங்கிலும் அமைந்து உள்ளது.


இந்த நகரத்தின் பரப்பளவு 431 சதுர கிலோமீட்டர்கள் (166 sq mi) ஆகும்.

* கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 165,642;
* கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 159,490;
* மொத்த மக்கள் தொகை 325,132.


வரலாறு

1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு பகுதி நிலப்பரப்பு கொடுக்கப்பட்டது.


அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. உள்துறை போர்னியோ காடுகளில் வாழ்ந்த டயாக் மக்களில் பெரும்பாலோர் ஜேம்சு புரூக்கினால் மன்னிக்கப் பட்டார்கள். பின்னர் அவரின் விசுவாசிகளானார்கள்.

பத்து லிந்தாங் தடுப்பு முகாம்

ஜேம்சு புரூக்கின் மைத்துனரான சார்லஸ் புரூக்கின் ஆட்சியின் போது கூச்சிங் நகரம் தொடர்ந்து கவனத்தையும் வளர்ச்சியையும் பெற்றது. துப்புரவு அமைப்பு, மருத்துவமனை, சிறை, கோட்டை மற்றும் சந்தை போன்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.


​​1942 முதல் 1945 வரை, இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் படைகளால் கூச்சிங் ஆக்கிரமிக்கப்பட்டது. போர்க் கைதிகள் மற்றும் பொது மக்கள் கைதிகளை அடைத்து வைக்க, கூச்சிங்கிற்கு அருகே பத்து லிந்தாங் (Batu Lintang) எனும் இடத்தில் ஓர் தடுப்பு முகாமை ஜப்பானிய அரசு அமைத்தது.

சர் சார்லஸ் வைனர் புரூக்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கூச்சிங் நகரம் அப்படியே இருந்தது. பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த ராஜா சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் ஒரு முடிவு எடுத்தார்.


சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுக்க முடிவு செய்தார். பிரித்தானியக் காலனித்துவக் காலத்திலும் கூச்சிங் தலைநகரமாகவே இருந்தது.

விஸ்மா பாப்பா மலேசியா

1963-இல் மலேசியா உருவான பிறகு, கூச்சிங் தன் மாநிலத் தலைநகர்த் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. 1988-ஆம் ஆண்டில் கூச்சிங்கிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர், இரண்டு தனித்தனி உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் இரண்டு நிர்வாகப் பகுதிகளாக கூச்சிங் நகரம் பிரிக்கப்பட்டது. சரவாக் மாநில அரசாங்கத்தின் நிர்வாக மையம் கூச்சிங் மாநகரில் உள்ள விஸ்மா பாப்பா மலேசியா (Wisma Bapa Malaysia) எனும் மையத்தில் அமைந்துள்ளது.

கூச்சிங் ஈர நிலங்கள் தேசியப் பூங்கா

கூச்சிங் மாநகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு முக்கிய உணவுத் தலமாகவும்; சரவாக் மற்றும் போர்னியோவிற்குச் செல்லும் பயணிகளுக்கான முக்கிய நுழைவாயிலாகவும் உள்ளது.


கூச்சிங் ஈர நிலங்கள் தேசியப் பூங்கா (Kuching Wetlands National Park) நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் கூச்சிங் நகரைச் சுற்றி பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

சுற்றுலாத் தளங்கள்

பாக்கோ தேசிய பூங்கா (Bako National Park),

செமெங்கோ வனவிலங்கு மையம் (Semenggoh Wildlife Centre),

மழைக்காடு உலக இசை விழா (Rainforest World Music Festival),

மாநில சட்டமன்றக் கட்டிடம், அஸ்தானா (The Astana),

போர்ட் மார்கெரிட்டா (Fort Margherita),

கூச்சிங் அரும்காட்சியகம் (Kuching Cat Museum)

மற்றும் சரவாக் மாநில அரும்காட்சியகம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[5]

அண்மைய காலங்களில் இந்த நகரம் கிழக்கின் முக்கியத் தொழில்துறை மற்றும் வணிக மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[6]

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் 25.10.2019-இல் பதிவு செய்யப்பட்டது.)


சான்றுகள்:

1. "Malaysia Population 2019". World Population Review. 4 February 2019.

2. "City of Kuching Ordinance" (PDF). Sarawak State Attorney-General's Chambers. 1988. p. 3 (Chapter 48).

3. Oxford Business Group. The Report: Sarawak 2011. Oxford Business Group. பக். 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907065-47-7.

4. Trudy Ring; Robert M. Salkin; Sharon La Boda (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. பக். 497–498. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-884964-04-6.

5. Raymond Frederick Watters; T. G. McGee (1997). Asia-Pacific: New Geographies of the Pacific Rim. Hurst & Company. பக். 311–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85065-321-9.

6. Oxford Business Group (2008). The Report: Sarawak 2008. Oxford Business Group. பக். 30, 56, 69 & 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-902339-95-5.


 

15 அக்டோபர் 2022

சரவாக் வெள்ளை இராஜாக்கள்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தயாரித்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை 22.05.2022-ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டது.)

(சரவாக் வெள்ளை இராஜா கட்டுரையின் முகவரி:
https://ta.wikipedia.org/s/b66m )

வெள்ளை இராஜா அல்லது சரவாக் வெள்ளை ராஜா (ஆங்கிலம்: White Rajahs; மலாய்: Raja Putih Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சியாகும்.


ஜேம்சு புரூக்

வெள்ளை இராஜாக்கள் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கிய வம்சாவழியினர்.

புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) பெற்ற சில நிலப் பகுதிகளைக் கொண்டு ஒரு சுதந்திர நாடு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் சரவாக் இராச்சியம். 

1840-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில், சரவாக்கை ஆட்சி செய்யத் தொடங்கிய புரூக் அரசக் குடும்பத் தலைவரையும்; சாதாரண புரூக் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும்; வேறுபடுத்திக் காட்டுவதற்காக வெள்ளை இராஜா எனும் அடைமொழி பயன்படுத்தப்பட்டது.

ஜேம்சு புரூக் என்பவர் அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தார். 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார்.[1]


கூச்சிங்கிற்கு அருகில் புரூக் நினைவகம்

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராஜாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.

ஜேம்சு புரூக் முதன்முதலில் போர்னியோ தீவிற்கு வந்தபோது, சரவாக் நிலப்பகுதி புருணை சுல்தானகத்தின் அடிமை மாநிலமாக இருந்தது. அரசாங்க அமைப்பு முறையில் புருணை அரசாங்க நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

பொதுச்சேவை சீர்த்திருத்தங்கள்

பிரித்தானிய அரசாங்க நிர்வாக அமைப்பைப் போல சரவாக் அரசாங்க நிர்வாகத்தையும் புரூக் மறுசீரமைத்தார். இறுதியில் சரவாக அரசாங்கத்தில் ஒரு பொதுச் சேவையையும் உருவாக்கினார்.

ஜேம்சு புரூக்

ஐரோப்பிய அதிகாரிகளை, குறிப்பாக பிரித்தானிய அதிகாரிகளை மாவட்டத்தின் வெளிமாநிலங்களை நிர்வகிப்பதற்கு நியமித்தார். ராஜா ஜேம்சு புரூக் மற்றும் அவரின் வாரிசுகளால், சரவாக் பொதுச் சேவைத் துறை தொடர்ந்து சீர்திருத்தம் செய்யப்பட்டது.

மலாய் முடியாட்சியின் பழக்க வழக்கங்கள்

கூச்சிங்கில் ராஜா புரூக் தன் மனைவியின் நினைவாக கட்டிய மார்கிரேட்டா கோட்டை

சார்ல்ஸ் புரூக்


ராஜா புரூக் அவர் காலத்தில் கட்டிய அஸ்தானா அரண்மனை


இராஜா ஜேம்சு புரூக், மலாய் முடியாட்சியின் பல பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுச் சின்னங்களைத் தக்க வைத்துக் கொண்டார். மேலும் அவற்றை தன்னுடைய முழுமையான ஆட்சி பாணியுடன் இணைத்துக் கொண்டார்.

சார்ல்ஸ் வைனர் புரூக்

இராஜா ஜேம்ஸ் புரூக்கிற்கு சட்டங்களை இயற்றவும்; சட்டங்களை அறிமுகப்படுத்தவும் அதிகாரம் இருந்தது. அதே சமயத்தில் தலைமை நீதிபதியாகச் செயல்படவும் அதிகாரம் இருந்தது. ஒரு நாட்டின் மன்னருக்கான அனைத்து உரிமைகளும் வெள்ளை ராஜா ஜேம்சு புரூக்கிடம் இருந்தது.

போர்னியோ நிறுவனம்

சரவாக்கின் பழங்குடி மக்கள் மேற்கத்திய வணிகர்களால் சுரண்டப் படுவதைத் தடுக்க வெள்ளை ராஜாக்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஜான் புரூக்

போர்னியோ கம்பெனி (போர்னியோ நிறுவனம்) எனும் நிறுவனம் சரவாக்கில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கினர். சீனத் தொழிலாளர்கள் கொடுத்த தொல்லைகளின் போது வெள்ளை ராஜாக்களுக்கு இந்த போர்னியோ நிறுவனம் இராணுவ ஆதரவை வழங்கி வந்தது.

இராஜா சார்லஸ் புரூக், சரவாக் ரேஞ்சர்ஸ் (Sarawak Rangers) எனும் ஒரு சிறிய துணை இராணுவப் படையை உருவாக்கினார். இந்தச் சிறிய இராணுவம், சரவாக் இராச்சியம் முழுவதும் இருந்த பல கோட்டைகளைப் பாதுகாத்தது. இராஜாவின் தனிப்பட்ட பாதுகாவல் படையாகவும் செயல்பட்டது.

சுவடுகள்

வெள்ளை இராஜா வம்சத்தின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை, இன்றும்கூட சரவாக்கில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு காலனித்துவப் பாரம்பரியக் கட்டிடங்களில் காணலாம். கூச்சிங் நகரில் உள்ள

ஆஸ்தானா சரவாக் எனும் ஆளுநரின் இல்லம்;

சரவாக் அருங்காட்சியகம் (Sarawak Museum);

கூச்சிங் பழைய நீதிமன்றம் (Old Courthouse);

மார்கெரிட்டா கோட்டை (Fort Margherita);

கூச்சிங் சதுரக் கோட்டை (Square Fort);

புரூக் நினைவுச் சின்னம் (Brooke Memorial)

போன்றவற்றில் அந்தக் கட்டிடக்கலை வடிவங்களைக் காணலாம்.

ராஜா சார்லஸ் காலத்தில் நிறுவப்பட்ட புரூக் கப்பல்துறை (The Brooke Dockyard) இன்றும் இயங்கி வருகிறது.

ஜேம்ஸ் புரூக்கின் கடைசி வாரிசு

வெள்ளை ராஜாக்களின் கடைசி வாரிசு ஜேசன் டெஸ்மண்ட் அந்தோனி புரூக்

சரவாக் மாநில அரசாங்கத்துடன் மற்றும் சரவாக் மக்களுடனும் புரூக் வம்சாவழியினர் (Brooke Dynasty) இன்றும் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றனர்.

வெள்ளை ராஜாக்களின் கடைசி வாரிசு
ஜேசன் டெஸ்மண்ட் அந்தோனி புரூக்

அந்தோனி புரூக்கின் பேரன் ஜேசன் டெஸ்மண்ட் அந்தோனி புரூக் (Jason Desmond Anthony Brooke), வயது 36, இன்றும் கூச்சிங்கில், பல அரசு விழாக்களுக்கு அழைக்கப் படுகிறார். சிறப்பு செய்யப் படுகிறார். இவர் இலண்டனில் தங்கி இருந்தாலும் சரவாக்கிற்கு அடிக்கடி வந்து போகிறார்.[2]

ஜேம்சு புரூக் அறக்கட்டளை

இவர் ஜேம்சு புரூக் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.[3] சரவாக் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொள்கிறார். சரவாக் கழகத்தின் (Sarawak Association) தலைவராகவும் உள்ளார்.[4]

2016 செப்டம்பர் மாதம் சரவாக் அரசாங்கம், கூச்சிங்கில் உள்ள சரவாக் மாநில நூலகம்; சரவாக் அருங்காட்சியகம் ஆகியவற்றின் முக்கியமான குறிப்புகளில் கையெழுத்திடுவதற்கான பொறுப்புகளையும் இவரிடம் வழங்கியது.[5][6]

சான்றுகள்:

1. James, Lawrence (1997). The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. பக். 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-16985-X.

2. "The Brooke Heritage Trust". Brooketrust.org.

3. "Ensuring the Brooke legacy lives on". The Borneo Post. 14 February 2016.

4. "Brooke records now available to public". New Sarawak Tribune.

5. "Fort Margherita to house historical artefacts – BorneoPost Online | Borneo , Malaysia, Sarawak Daily News | Largest English Daily In Borneo". Theborneopost.com. 2012-12-12