அகிலன் தணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகிலன் தணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன் 2019

அகிலன் தணி

தற்காப்புக் கலை ஆதித் தமிழர்களின் அற்புதமான கலை. தனித்து நிற்கும் தனிப் பெரும் தத்துவக் கலை. சிலம்பத்தில் சீர் செய்து வீறு வரிசை பார்த்த வீரக் கலை. வர்மத்தில் வேதங்களைக் கரைத்து அகத்தியம் வளர்த்த கலை. குத்து வரிசையில் குச்சி இல்லாமல் கரத்தாண்டவம் வார்த்த கலை. 



தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள் நயன் மிகுந்தவை. தமிழர்களின் அனைத்துக் கலைகளுமே தனித்துவம் வாய்ந்தவை. அதே அந்தத் தமிழர்களின் தலை வாசலில் தமிழர் ஒருவர் சாதனை படைத்து இருக்கிறார். அழகிய தமிழ் மைந்தன். அகிலன் தணி எனும் அகிலன் தணிகாசலம்.

கலப்புத் தற்காப்புக் கலையில் ஒரு கலக்கு கலக்கி, ஒட்டு மொத்த மலேசியர்களையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர். சரித்திரம் படைத்து சாதனை செய்து இருக்கிறார். தன் அபாரமான போட்டித் திறமையால் ஒட்டு மொத்த மலேசியர்களுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.




சில தினங்களுக்கு முன்னர் வரையில் “அகிலன் தணி” என்கிற ஒரு தனி மனிதர் யார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று அவர் புகழ்பெற்றவர். மலேசியாவில் மட்டும் அல்ல; உலக அளவில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகப் புகழ் பெற்று விளங்குகின்றார்.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் ஒருவரின் உடல் வாகு; உடல் அமைப்பு; அல்லது உடல் பருமன்; அது ஒரு தடை அல்ல என்பதற்கு அகிலன் தணிகாசலம் என்பவர் தனித்து நிற்கும் ஒரு முன்னோடிச் சான்று.



மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) என்பது கலப்புத் தற்காப்புக் கலை. தாய்லாந்துத் தற்காப்புக் கலையைப் பின்னணியாகக் கொண்டது. முவாய் தாய் (Muay Thai); உதைக் குத்துதல் (kickboxing); குத்துச் சண்டை (boxing); மல்லுக் கட்டுதல் (grappling); ஆகிய நான்கும் கலந்ததே கலப்புத் தற்காப்புக் கலை ஆகும்.

இந்தக் கலையில் உச்சம் பார்த்தவர் உலக ஜாம்பவான் அகியாமா. இவருக்கு செக்ஸியாமா எனும் புனைப்பெயரும் உண்டு. ஜப்பானில் புகழ்பெற்ற தற்காப்புக் கலை வீரர். அவரையே வீழ்த்திச் சாதனை படைத்து இருக்கிறார் நம் நாட்டு அகிலன் தணி.




கலப்பு தற்காப்புக் கலை வீரர்களுக்கான ‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டி நான்கு நாட்களுக்கு முன்னர் சீனா, ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  அகிலன் தணியும் ஜப்பானின் அகியாமாவும் மோதினார்கள்.

அகியாமாவிற்கு வயது 43. அகிலன் தணிக்கு வயது 23. பொது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த போட்டி. ஏன் என்றால் தற்காப்பு கலையில் அகியாமா ஒரு ஜாம்பவான். அசைக்க முடியாத அசாத்திய மனிதர். நீண்ட காலமாக அனுபவம். தற்காப்புக் கலையின் நெழிவு சுழிவுகளை நெட்டிச் சொடுக்கு எடுத்தவர்.

அகியாமாவை அகிலனால் சமாளிக்க முடியுமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஏன் என்றால் அகியாமா பல ஆண்டுகளாக உலகச் சாம்பியன் விருதைத் தக்க வைத்தவர். அகியாமாவை வீழ்த்த முடியாது என்பதே பலரின் கருத்துக் கணிப்பு. 




முதல் சுற்றின் முப்பதாவது விநாடியில் அகியாமாவின் தாகுதலில் அகிலன் நிலைகுலைந்து போனார். மேடையில் சரிந்து விழுந்தார். தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலரும் யோசித்தார்கள்.

ஆனால் நடந்ததே வேறு. இரண்டாவது சுற்றில் அகிலன் தணி, தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினார். மூன்றாவது சுற்றில் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அகியாமாவை வீழ்த்தினார். அந்த மூன்றாவது சுற்றே அகிலன் தணியின்  விளையாட்டு வீரத்தில் அரும் பெரும் சாதனையாகக் கருதப் படுகின்றது. சரி.

அகிலன் கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பலருக்கும் அழுகை வரும். அவரின் பாதையில் வேதனை கலந்த சோதனைகள். பாசத்திற்காக ஏங்கிய தவிப்புகள். தனிமையில் தவித்து நின்ற இறுக்கங்கள். அம்மா இல்லையே என்கிற ஏக்கங்கள். தொடர்ந்து படியுங்கள்.

அகிலனுக்குப் பருமான உடல். அதைப் பார்த்து பலரும் கேலி செய்தார்கள். மனம் உடைந்து போய் பல நாட்கள் தனிமையில் உடகார்ந்து அழுது இருக்கிறார்.

அவருக்கு 15 - 16 வயதாகும் போது விரக்தியின் அடிமட்டத்திற்கே போய் விட்டார். அதில் இருந்து விடுபட முடியாது என்கிற ஒரு முடிவிற்கும் வந்து விட்டார். அப்போது அவருடைய உடல் எடை 139 கிலோ. மிகவும் பருத்த உடல். 




அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சரி; பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களும் சரி; அவருடைய உடல் பருமனைப் பார்த்து ஏளனம், பகடி செய்தார்கள். தடியன் என்றும் சமயங்களில் எருமை மாடு என்றும் கேலி செய்து இருக்கிறார்கள். அப்போது அவருக்கு பதின்ம வயது. தாயாரும் அவரை விட்டுப் போய் விட்டார்.

அந்தச் சமயத்தில் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக ஒரு திரைப்படம் வந்து படம் காட்டி விட்டுச் சென்றது. அந்தப் படத்தின் பெயர் எஸ்.பி.எல். ஷா போ லாங் (SPL: Sha Po Lang). உலகப் புகழ் சீன நடிகர் டோனி யென் நடித்த படம்.

அந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி. அகிலனின் கவனத்தை ஈர்த்தது. அந்தக் காட்சிதான் அவரைத் தற்காப்புக் கலையின் வலைக்குள் இழுத்துப் போட்டது.

நடிகர் டோனி யென் பயின்ற பயிற்சிகள்; அவரின் அந்தத் தற்காப்புக் கலையைப் பற்றிய செயல்பாடுகள்; அவற்றைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்தார். அப்படியே அதிலேயே மூழ்கியும் போனார். 




இப்போது அகிலனுக்கு வயது 22. பழைய வேதனைகளை எல்லாம் கடந்து வந்து விட்டார். ஒரே வார்த்தையில் சொன்னால் பழையதை நினைக்க நேரம் இல்லை. அதாவது நண்பர்களின் கேலிக் கிண்டல்களை அசை போட்டுப் பார்க்க நேரம் இல்லை. மறந்து விட்டார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஜியூ ஜிட்சு (jiu-jitsu) தற்காப்புக் கலை வகுப்பில் சேர்ந்தார். அது ஒரு பிரேசிலியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம். அப்போது அவருக்கு வயது 16.

வகுப்பில் சேர்ந்த மூன்றே மாதங்களில் அவருடைய உடல் எடை 10 கிலோ குறைந்தது. 139-லிருந்து 129-ஆகக் குறைந்தது. அந்த ஒரு திருப்பமே; அந்த ஒரு மாற்றமே அவரின் உடல் எடை மேலும் மேலும் குறைவதற்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது.

அவருக்கு 18 வயதாக இருக்கும் போது கோலாலம்பூர் ராஜா சூலானில் இருக்கும் மொனார்க்கி உடல் பயிற்சிக் கூடத்தில் (Monarchy MMA gym) துப்புரவு செய்யும் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 1000 ரிங்கிட். அதே சமயத்தில் பயிற்சிக் கூடத்தில் எந்த ஒரு பயிற்சியிலும் கலந்து கொண்டு பயிற்சி பெற அனுமதியும் கிடைத்தது.




கலப்பு தற்காப்புக் கலையில் தீவிரமான ஈடுபாடு கொண்டார். அதில் முழுமையாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மல்யுத்தப் பிடிகள்; தாக்குதல் கலை போன்றவற்றின் பயிற்சி முறைகளைத் தெரிந்து கொண்டார்.

பிரேசிலியத் தற்காப்புக் கலையில் தீவிரமான பயிற்சிகள். அதற்குப் பொருத்தமாக நல்ல ஆரோக்கியமான உணவு முறை. அப்புறம் என்ன. ஆறே மாதத்தில் அகிலம் தணிகாசலத்தின் உடல் எடை 129 கிலோவில் இருந்து 93-ஆகக் குறைந்தது.

இப்போது அவருடைய எடை 77 கிலோ. சமயங்களில் 85 வரை போகும்.

பதினெட்டு வயதில் தனிமையாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து பயிற்சிகளில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். வீட்டை விட்டு வெளியேறினார். பயிற்சி முகாமிலேயே தங்கினார்.

பயிற்சி முகாமைக் கவனித்துக் கொள்வது; சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்து கொண்டே பயிற்சிகளிலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார். 




இரவு நேரத்தில் பயிற்சி முகாமின் தரையில் பிலாஸ்டிக் விரிப்பில் படுத்துத் தூங்கினார். ஒரு வருட காலம் அப்படி தூங்கி இருக்கிறார். அப்படிக் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்ததின் பிரதிபலன்களைத் தான் இப்போது வெற்றிக் கனிகளாகச் சுவைத்துப் பார்க்கிறார்.

இப்போது அகிலன் தணி எனும் அகிலன் தணிகாசலம் என்கிற ஒரு சின்னப் பையன் நாட்டின் தலை சிறந்த தற்காப்புக் கலை வீரராகவும் திகழ்கிறார். வாழ்த்துவோம்.

அகிலனுக்கு உற்றத் தோழனாகவும் உந்து சக்தியாகவும் இருந்தவர் அவருடைய தந்தையார் தணிகாசலம். ஆரம்பத்தில் மகனின் தற்காப்புக் கலை அவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் காலப் போக்கில் மனம் மாறி மகனுக்கு ஒத்துழைப்பை வழங்கினார். பயிற்சிகளுக்கான செலவுகளில் ஒரு பகுதியை வழங்கியும் வந்தார்.

அகிலனுக்கு அலிகேட்டர் எனும் ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. அலிகேட்டர் என்பது முதலை இனத்தைச் சேர்ந்த நீள்மூக்கு முதலை.

அகிலன் கைக்குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அவருடைய தந்தையார் தான், தனி ஆளாக இருந்து அகிலனை வளர்த்து எடுத்தார்.




அகிலனின் பால்ய வயது. தொடக்கப் பள்ளியில் பயிலும் போது கோலாலம்பூரில் ஒரே ஓர் அறை கொண்ட வீடு. அதில் ஐந்து பேர் தங்கினார்கள். அவருடைய தந்தையார்; இரு சித்தப்பாக்கள்; சின்னம்மா ஒருவர். நெருக்கி அடித்துப் படுத்துத் தூங்க வேண்டிய நிலைமை. அகிலனே சொல்கிறார்.

தன்னுடைய அம்மாவைப் பற்றி அகிலனின் நண்பர்கள் கேட்பார்கள். அவர் குடும்பத்தை விட்டுச் சென்றதைச் சொல்ல மாட்டார். அதற்குப் பதிலாக என் அம்மா ஒலிம்பிக் போட்டிக்குப் போனார். திரும்பி வரவே இல்லை என்று சொல்வாராம்.

அகிலன் மேலும் சொல்கிறார். என் அம்மாவைப் பற்றி நான் கவலைப் படுவதே இல்லை. ஏன் என்றால் என் அம்மாவின் முகத்தை நான் பார்த்ததே இல்லை. அதனால் அம்மா - மகன் உறவு முறை எதுவுமே இல்லை. அம்மா பாசம் கொஞ்சமும் இல்லை. எல்லாமே என் அப்பா தான். அவர் தான் என் தெய்வம்.

அவருடைய தந்தையாருக்கு ஓர் உணவு விடுதியில் மேற்பார்வையாளர் வேலை. அந்த விடுதியின் மற்ற மற்ற துணை விடுதிகளுக்கும் சென்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு. அதனால் நள்ளிரவில் தான் வீட்டிற்கு வருவார். 




அகிலனுக்கு எட்டு வயதாக இருக்கும் போதே தன்னுடைய துணிமணிகளைச் சொந்தமாகத் துவைத்துக் கொள்ள கற்றுக் கொண்டார். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வார். அப்பா கொடுத்த காசைக் கொண்டு வீட்டிற்கு வேண்டிய மளிகைச் சாமான்களை வாங்கி வருவார். சொந்தமாகவே சமைத்தும் கொள்வார். குண்டர்கள் நிறைந்த செந்தூல் பகுதியில் வீடு. இருந்தாலும் தனி ஆளாக ஆறு கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குப் போய் வருவார்.

நான் சுதந்திரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டேன். அதனால் அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயதில் செய்த ஒரே தவறு. என்ன தெரியுங்களா. ரொம்ப சாப்பிட்டேன். அளவுக்கு மீறி சாப்பிட்டேன்.

அது தான் என் உடலை பெரிதாகப் பருக்க வைத்து விட்டது என்று சொல்லிவிட்டு சின்னதாகச் சிரிக்கிறார். அண்மையில் அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி நிறுவனம் அவரைப் பேட்டி கண்டது. மனம் விட்டுப் பேசினார்.

நாங்கள் இருந்த பகுதியில் நிறைய குண்டர்களின் நடமாட்டம். அதனால் தான் தற்காப்புக் கலையில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது. என்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தான் தற்காப்புக் கலையில் இறங்கினேன் என்று அகிலன் சொல்கிறார்.




ஆரம்பத்தில் என்னுடைய தற்காப்புக் கலைக்கு அப்பா முழுமையான ஆதரவு வழங்க மறுத்து விட்டார். நான் பிடிவாதமாக இருந்தேன். போகப் போக அவர் இறங்கி வந்தார். பயிற்சிகளுக்குக் காசு கொடுத்தார். பயிற்சிகள் செய்வதற்கு கையுறைகள் வேண்டும். அதிக விலை. வாங்குவதற்கு காசு கொடுத்தார். எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்தார். இப்போது நான் சுதந்திரமாக வாழ்கிறேன். எல்லாச் செல்வுகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன். அப்பாவுக்கும் உதவி செய்கிறேன்.

எனக்கு அம்மா எனும் நினைப்பே வராது. அவர் கறுப்பா சிவப்பா என்று தெரியாது. அவர் முகத்தை நான் பார்த்ததே இல்லை. அவருடைய படமும் வீட்டில் இல்லை. அவர் எப்படி இருப்பார் என்பதும் எனக்குத் தெரியாது. அப்பாவிடம் கேட்பதும் இல்லை என்று சொல்லும் போது அகிலனின் முகத்தில் சன்னமான இறுக்கம். சன்னமான வேதனைக் கீற்றுகள். ஆனால் சிரித்துக் கொள்கிறார்.

அகிலனின் எல்லா போட்டிகளுக்கும் அவருடைய தந்தையார் முதல் ஆளாகப் போய் ஆஜராகி விடுகிறார். அகிலனை உற்சாகப் படுத்துகிறார். புருஸ் லீ போல சண்டை போட வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

2017 மே 26-ஆம் தேதி கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் 15 முறை உலகச் சாம்பியன் விருதை வென்ற பென் அஸ்க்ரென் (வயது 32) என்பவருடன் மோதி வரலாற்றில் இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 21. பென் அஸ்க்ரென் அமெரிக்காவைச் சேர்ந்தவர். 


இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அகிலனை ஊக்குவிக்க ம.இ.கா. விரும்பியது. அகிலனுக்கு தங்கப் பதக்கமும் 10,000 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கிச் சிறப்பு செய்தது. 2017-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

ம.இ.கா. தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தலைமையில் அகிலனுக்கு அந்தப் பாராட்டு விழா நடந்தது.

அகிலன் தணி எனும் தமிழ் இளைஞர் மலேசிய வரலாற்றில் இடம் பிடித்தது ஒரு காலச் சுவடு. நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஒரு சாதனைச் சுவடு. வாழ்த்துகிறோம் மகனே.

சான்றுகள்:

1. https://www.onefc.com/articles/title-challenger-agilan-thani-is-inspired-every-day-by-the-single-father-who-raised-him/

2. https://www.columnlife.com/index.php/biographies/item/395-agilan-thani

3. https://sukan.my/agilan-thani-budak-dari-sentul/

4. https://www.mmafighting.com/2019/6/15/18680072/one-championship-results-yoshihiro-akiyama-suffers-debut-defeat-agilan-thani-after-four-year-layoff