மலேசியா 1MBD மோசடி - 12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 12

தமிழ்மலர் - 29.11.2018 - வியாழக்கிழமை

1எம்.டி.பி. பிரச்சினையில் ஒவ்வொரு மலேசியரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவே முடியாது. விவரம் புரியாதவர்கள் வேண்டும் என்றால் தெரியாமல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஏமாந்து போன வெள்ளந்திகளாக மட்டும் வாழவே கூடாது. ஏன் என்றால் இந்த நாடு உங்களுக்குச் சோறு போட்டு வளர்த்த ஒரு புண்ணிய பூமி. ஆகவே அந்தப் புண்ணிய பூமியின் சுகதுக்கங்களில் உங்களுக்கும் பங்கு உண்டு.




ஒரு நாட்டில் நடந்து உள்ள ஒரு பெரிய மோசடியைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்வதும் ஒன்றுதான்; அந்த நாட்டுக் குடியுரிமையை வேண்டாம் என்று சொல்வதும் ஒன்றுதான். வாயில்லாப்பூச்சி போல வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று சொல்வதும் தப்பு தான்.

தான் உண்டு தன் வேலை உண்டு எனும் தன்மைக்கு ஓர் உவமானம் தேவைப்பட்டது. பாவம் வாயில்லாப் பிள்ளைப்பூச்சி. இடம் தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டது. இப்போது அவஸ்தை படுகிறது. கொட்டக் கொட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனியக் கொட்டுபவனும் மடையன் என்று சொல்லாமல் சொல்லிக் கொள்கிறது.

ஒரு நாட்டின் குடிமகன் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அந்த நாட்டு அரசியல் புள்ளிகளில் சிலர் அந்த நாட்டு மக்களை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாகத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.




என்னவோ பண்ணி எதையோ பண்ணி எடுத்துக் கொண்டு போனார்கள். எடுத்துக் கொண்டு போகட்டும். அதை ஏன் பெரிதுபடுத்தி அலட்டிக் கொள்ள வேண்டும். என் வீட்டிற்கு வந்து என் வீட்டுப் பணத்தை கொள்ளை அடிக்கவில்லையே என்று சிலர் சொல்லலாம். ஏன் சொல்லலாம். சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டும் வருகிறார்கள். ஆனால் அதையே இப்படி திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தக் காசு பணம் இந்த 1எம்.டி.பி.க்குப் போய் இருக்கிறது. அந்த 1எம்.டி.பி.யில் கொட்டப்பட்ட 40 – 50 பில்லியன் ரிங்கிட் பணத்தில் உங்களுடைய காசு பணமும் இருக்கிறது. அப்படிப் பாருங்கள். மேம்போக்காகப் போக வேண்டாம். இந்த 1எம்.டி.பி. வாங்கிய கடனுக்கு நீங்களும் நானும்; மலேசியாவில் வாழும் ஒவ்வொருவரும் கடன்பட்டு இருக்கிறோம்.

மலேசியாவில் இன்று பிறந்த குழந்தையில் இருந்து; நேற்று மறைந்து போனவர் வரை ஒவ்வொருவரும் இந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் கடனுக்கு மட்டும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டும். அது தெரியுமா உங்களுக்கு?




அந்த ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே நீங்களும் நானும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் பட்டு இருக்கிறோம். அதற்கான வட்டிப்பணம் அதாவது 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய வட்டித்தொகை ஓர் ஆண்டுக்கு 80 ரிங்கிட். இந்த வட்டியை இன்னும் 20 ஆண்டுகளுக்குக் கட்ட வேண்டும். இந்தக் கணக்கு 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு மட்டும் நீங்கள் பட்ட கடனுக்கான கணக்கு.

ஏன் என்றால் மலேசியர்களின் பெயரைச் சொல்லித்தான் கடன் வாங்கப் பட்டது. அதைத் தெரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கி பத்து வருடம் ஆகிறது. இதுவரை 2 பில்லியன் ரிங்கிடிற்கு மேல் வட்டி கட்டியாகி விட்டது. அந்த வட்டிக் காசு சும்மா ஒன்றும் வானத்தில் இருந்து கொட்டவில்லை. மலேசியர்கள் சம்பாதித்த காசு.

ஆகவே அந்தக் காசு எப்படி செலவு செய்யப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மலேசியர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பு. வாங்கும் ஒரு கட்டி உப்பில் இருந்து ஒரு கிலோ கோதுமை மாவு வரை ஐந்து காசு பத்து காசு என்று வரி கட்டுகிறீர்கள். 




அந்த ஐந்து காசும் அந்தப் பத்து காசும் நீங்கள் சம்பாதித்த காசு. அந்த காசு தான் ஒரு ரிங்கிட்டாக மாறி; பத்து ரிங்கிட்டாக மாறி; நூறு; ஆயிரம்; இலட்சம்; கோடி; மில்லியன்; பில்லியன்; டிரில்லியன் என்று போய்க் கொண்டு இருக்கிறது. சின்ன ஒரு விளக்கம்.

ஓர் இலட்சம் = 100,000 (5 சுழியங்கள்)

ஒரு மில்லியன் = 1,000,000 (6 சுழியங்கள்)

ஒரு கோடி = 10,000,000 (7 சுழியங்கள்) = 10 மில்லியன்கள்

ஒரு பில்லியன் = 1000,000,000 (9 சுழியங்கள்) = 1000 மில்லியன்கள் = 100 கோடி

 

மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, லக்சம்பெர்க், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஹாங்காங், சீஷெல்ஸ், கேய்மன் தீவுகள், வெர்ஜின் தீவுகள் போன்ற நாடுகளில் 1எம்.டி.பி. முறைகேடுகள் நடந்துள்ளன.

1எம்.டி.பி. பண மோசடிகள் பல நாடுகளின் தோற்றத்தை உடைத்து சந்தேகத்தை உண்டுபண்ணி விட்டன. அந்த நாடுகள் மீது மலேசியர்கள் வைத்து இருந்த நம்பிக்கையையும் சிதைத்து விட்டன. அந்த வகையில் அந்த நாடுகளின் நேர்மைத் தன்மையையும் கேள்விக் குறியாக மாறிப் போயின.

1எம்.டி.பி. களேபரத்தில் முதன்முதலில் களம் இறங்கிய நாடு அமெரிக்கா. 1எம்.டி.பி. நிறுவனத்தில் மோசம் செய்யப்பட்ட பணத்தில் பெரும் அளவு அமெரிக்காவில் தான் புழங்கி உள்ளது. 




தவறாகக் கொண்டு வந்த பணத்தில் தவறுகள் நடந்து வருகின்றன என்று அமெரிக்க நீதித்துறை தீவிரமாக புலன் விசாரணைகள் செய்தது. இங்கே மலேசியாவில் மூடி மறைக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும் போது அங்கே அமெரிக்காவில் தீவிரமாக விசாரணை நடந்து இருக்கிறது. ஒரு பக்கம் மோடி மஸ்தான் வேலை. இன்னொரு பக்கம் அலிபாபாவின் நாற்பது திருடர்களையும் விரட்டிப் பிடிக்கிற வேலை.

அமெரிக்கா நீதித்துறை இதுவரையில் 231 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைத் தயார் செய்து உள்ளது. இது அமெரிக்கத் தரப்பு விசாரணையின் முடிவு.

அந்த 231 பக்க விசாரணை அறிக்கையில் முதன்மைக் குற்றவாளியாக வந்து நிற்பவர் ஜோக்கர் ஜோலோ. அடுத்து வருபவர் நஜிப்பின் மாற்றான் மகன் ரீஷா அசீஸ். அதாவது ரோசாப்பூ ரோசம்மாமாவின் முதல் கணவருக்குப் பிறந்தவர். 




அடுத்து வருபவர் மலேசிய அரசாங்கத்தின் முதல் நிலை அதிகாரி. பெயரைச் சொல்லாமலேயே ‘நம்பர் ஓன்’ அதிகாரி என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு வந்தார்.

இந்த ‘நம்பர் ஓன்’ அதிகாரி யாராக இருக்கும் என்று அப்போதைக்கே பெரிய ஒரு விவாதம் நடந்தது. மலேசியப் பிரதமரைச் சுட்டிக் காட்டுவதாகப் பலரும் சந்தேகப் பட்டார்கள். சில வெளிநாட்டு ஊடகங்களும் சாடை மாடையாகச் சொல்லி வந்தன.

இங்கே மலேசியாவில் தான் மூடுமந்திர வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. அப்புறம் எப்படி உண்மை தெரிய வரும். மலேசிய ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு இருந்தது. அதனால் இங்கே உள்ள ஊடகங்களும் அதிகமாக எதையும் வாசிக்க முடியவில்லை.

சில வெளிநாட்டு ஊடகங்கள் அவரின் பெயரைப் பதிவு செய்து வந்தன. இருந்தாலும் இங்கே அந்தப் பெயர் பயன்படுத்தப் படவில்லை. வெளிநாட்டுச் செய்திகளை இங்கே பிரசுரித்தாலும் அந்தத் தலைவரின் பெயரை மறைத்து ‘நம்பர் ஓன்’ அதிகாரி என்றே பிரசுரித்து வந்தார்கள்.

அமெரிக்காவில் மட்டும் சிக்கிக் கொண்ட 1எம்.டி.பி. பணத்தின் மொத்த தொகை 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 1எம்.டி.பி. பணத்தில் கொள்ளை அடிக்கப்பட்டு அமெரிக்காவில் வாங்கப்பட்ட பல சொத்துகளின் விபரங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.




அமெரிக்க முதலீட்டு வங்கிகளான ஜே.பி.மோர்கன் சேஸ்; டச்சு வங்கி; வெல்ஸ் பார்கோ வங்கிகளில் போடப்பட்ட 1எம்.டி.பி. பணத்தை முடக்கி வைக்குமாறு கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன. அந்த வங்கிகளில் பல கோடிகள் சிக்கிக் கொண்டன. ஏறக்குறைய 35 கோடிகள்.

வழக்கு எல்லாம் முடிந்த பின்னர் அந்தப் பணம் வட்டியும் முதலுமாய்ப் பத்திரமாக மலேசியாவிற்கு வந்து சேரும். கடலில் கரைத்த பெருங்காயத்தில் ஒரு துண்டு என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் செலவழிக்கப்பட்ட 1எம்.டி.பி. பணத்தின் இதர விவரங்கள்: 

 

* 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - ரெட் கிரைனைட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ’தி ஊல்ப் அப் வால் ஸ்டீரிட்’ எனும் ஹாலிவூட் படம் (2013). டைட்டானிக் புகழ் டி காப்ரியோ நடித்த படம். இந்த நிறுவனம் ரோஸ்மாவின் மகன் ரீஷா அசீஸுக்குச் சொந்தமானது.

* 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் பெவர்லி ஹில்ஸ் ஆடம்பர வீட்டு மனைப் பகுதியில் ஒரு சொகுசு மாளிகை. 34 மில்லியன் டாலர்களில் நியூயார்க்கில் ஒரு சொகுசு மாளிகை.

* 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நியூயார்க் நகரில் சோகோ சொகுசு மாளிகை. (2014)

* 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - லாஸ் ஏஞ்சலஸ் பெவர்லி ஹில்ஸ் சொகுசு மாளிகை. (2010)




* 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - லாவ்ரெல் பெவர்லி ஹில்ஸ் சொகுசு மாளிகை. (2014)

* 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - ஓரியோல் பெவர்லி ஹில்ஸ் சொகுசு மாளிகை. (2013)

* 36 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - பொம்பார்டியர் ஜெட் விமானம். (2010)

* 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - கிளாவுடே மேனேட்; வின்செண்ட் வான் கோவ் ஓவியங்கள்.

* 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நடிகர் டி காப்ரியோவிற்கு அன்பளிப்பு. பிக்காசோ ஓவியம் 




* 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நியூயார்க் பார்க் லேன் ஓட்டல் (2013)

* 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - இக்குவானிமிட்டி ஆடம்பர கப்பல். (2014)

* 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - பார்க் லாவ்ரெல் சொகுசு மாளிகை. (2010)

* 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - நியூயார்க் கிரீன் சொகுசு மாளிகை. (2010) 




இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சுருக்கி விட்டேன். இது அமெரிக்காவில் செலவழிக்கப் பட்ட பணம். மலேசிய மக்களின் பணத்தில் வாங்கப்பட்டு பின்னர் தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்ட சொத்துகளைப் பற்றிய புள்ளீவிவரங்கள்.

தனிப்பட்ட ஒரு சின்ன செருகல். 1எம்.டி.பி. பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஆறு மணி நேரம் செலவு செய்கிறேன். தாராளமாக ஒரு புத்தகம் எழுதி முடித்து விடலாம். அவ்வளவு மர்மமான விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம்ப முடியாத ரகசியங்கள். ஒரு கட்டத்தில் மயக்கமே மரி... மன்னிக்கவும் மலாய் மொழியில் வந்துவிட்டது. மயக்கமே வந்துவிட்டது.

எப்படித்தான் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் மக்களின் பணத்தை இப்படி செல்வு செய்தார்களோ. அமெரிக்காவில் வாங்கப்பட்ட அனைத்துச் சொத்துகளும் ஜொல்லுவாய் ஜோலோவால் வாங்கப் பட்டவை.




அமெரிக்க நீதித்துறை இதுவரை ரொக்கமாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கைப்பற்றி உள்ளது. (565 கோடி ரிங்கிட்). இறைவா. இந்தப் பணம் மலேசியாவுக்கு வந்து சேர்ந்தால் மலேசிய மக்களின் சுமை கொஞ்சம் குறையுமே.

1எம்.டி.பி. பணத்தின் பல கோடி ரிங்கிட் எப்படி சிங்கப்பூர் பால்கன் வங்கிக்கு வந்தது; அப்படியே கோலாலம்பூர் ஆம் வங்கிக்கு வந்தது; அப்படியே மலேசியாவின் முன்னாள் மூத்த அரசியல் தலைவரின்  கணக்கில் வரவு வைக்கப்பட்டது; அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)


மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 10
மலேசியா 1MBD மோசடி - 11
மலேசியா 1MBD மோசடி - 12

சான்றுகள்

1. Hope, Bradley; Fritz, John R. Emshwiller And Ben (1 April 2016). The Secret Money Behind - The Wolf of Wall Street – Wall Street Journal.

2. These are traitors to the people, God and the country - Former Malaysian official asks Hong Kong police to investigate 1MDB scandal - https://www.scmp.com/news/hong-kong/law-crime/article/1854950/these-are-traitors-people-god-and-country-former-malaysian

3. Malaysia Leader Najib Razak’s Assets Probed by U.S.  - https://www.wsj.com/articles/malaysia-leader-najib-razaks-assets-probed-by-us-1442844760?tesla=y

4. U.S. lawsuits link Malaysian leader to stolen money from 1MDB fund - https://www.reuters.com/article/us-malaysia-scandal-usa/u-s-lawsuits-link-malaysian-leader-to-stolen-money-from-1mdb-fund-idUSKCN10009X