ரஜுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூன் 2016

எஸ்.எஸ். ரஜுலா

ரஜுலா கப்ப… ரஜுலா கப்ப… ரஜுலா கப்ப… மூன்று முறை சொல்லிப் பாருங்களேன். ஏதோ ஒரு ரகசியமான சங்கீர்த்தனம் கசிவதை உங்களால் உணர முடியும். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. இருக்குதுங்க. ஏன் தெரியுங்களா. 


ரஜுலா கப்ப என்கிற சொல் அந்தக் காலத்தில் மலாயாவுக்கு வந்த தமிழர்களின் நாடி நரம்புகளில் வீணை வாசித்த சொல் இல்லையா. அவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துப் போன சொல் இல்லையா. ஆகவே, அந்த வகையில் அது ஒரு சாகாரவரம் பெற்ற சொல்லாகும். அதனால் கண்டிப்பாக அதற்கு உயிர்ப்புத் தன்மை இருக்கவே செய்யும்.

அந்தக் கப்பல் இல்லை என்றால் நானும் இல்லை நீங்களும் இல்லை. அதாவது இங்கே இப்போது இந்த மலேசிய மண்ணில் தடம் பதித்து இருக்க மாட்டோம் என்று சொல்ல வருகிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு கிராமத்துக் கரிசல் காட்டில் களை பிடுங்கிக் கொண்டு இருப்போம்.



என்னைக் கேட்டால்… தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பெட்டிப் படுக்கையோடு சென்னைக்கு வந்து இருப்பேன். பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் எல்லாம் எனக்கு கூட்டாளி ஆகி இருப்பாங்க... எனக்குள் சும்மா ஒரு ‘பீலிங்’. நடிகைகள் நளினி, நக்மா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் என்னுடன் டூயட் பாடி இருப்பார்கள். சொல்ல முடியாதுங்க.

இது எல்லாம் ஒரு கற்பனை. கோபித்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே, கட்டுரைகளில் பெரிய ரம்பத்தை போட்டு அறுக்கிறேனாம். ஒரு சிலர் குற்றப் பத்திரிக்கை வாசிக்கிறார்கள். ஆக இதோடு நிறுத்திக் கொள்கிறேன். 




எங்கே விட்டேன். ஆங்! ரஜுலா கப்பல். பார்த்தீங்களா… நடிகைகளைப் பற்றி சொல்ல வந்ததும் கட்டுரையே மறந்து போய் விட்டது. மன்னிக்கவும். இந்த ரஜுலா கப்பல் இருக்கிறதே… இது ஒரு காலத்தில் மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கடல்புறாவாக இறக்கை கட்டிப் பறந்து இருக்கிறது.

சரித்திரச் சாசனங்களில் ஊழியூழி காலத்திற்கும் மறக்க முடியாத காலச் சுவடுகளைப் பதித்து விட்டுப் போய் இருக்கிறது. செல்லமாக ரஜுலா கப்ப என்று அப்போது அழைத்தார்கள்.

ரஜூலா கப்பலுக்குப் பின்னால் இரண்டு பெரிய இரும்புத் திருகுகள் இருக்கும். அதாவது காற்றாடிகள். அவை சுற்றினால்தான் கப்பல் கடலில் முன்னுக்குப் போக முடியும். ரஜூலா கப்பல் டீசல் எண்ணெயினால் இயங்கியது. இந்த எண்ணெய் வாடைதான் தலை போகிற காரியம்.

கப்பலின் அடிப்பாகத்தில் ’டெக்’ என்று ஒரு பகுதி இருக்கும். அதற்கும் மேலே முதல் இரண்டாம் வகுப்புகள். வெள்ளையும் சொள்ளையுமாய் வெள்ளைக்காரர்கள்…  பணவசதி படைத்தவர்கள்… இந்த முதல் இரண்டாம் வகுப்புகளில் பயணம் செய்தனர். 




அந்த வகுப்புகளில் மட்டுமே எண்ணெய் வாடை இருக்காது ’டெக்’கிற்கு கீழே இருப்பது ’பங்க்’. இங்கேதான் எண்ணெயின் வாடை அலாதி. தாங்க முடியாது. மிக மிக மோசமாக இருக்கும். பயணம் செய்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

’பங்க்’ பகுதியில் இரும்பால் செய்யப்பட்ட அடுக்குக் கட்டில்கள் நூற்றுக் கணக்கில் இருக்கும். அவை அடுக்கு அடுக்காக இருக்கும். ’பங்க்’ பகுதி, ’டெக்’ பகுதிக்கும் கீழே இருக்கும். இந்த ‘பங்க்’ அல்லது ‘டெக்’ பகுதிகளில் பயணித்தவர்கள்தான் குடுமி குங்குமம் வைத்த நம்முடைய தாத்தா பாட்டிகள். அதாவது நம்முடைய மூதாதையர்கள். 




அப்போதைக்கு அதாவது 1940-களில் ஒரு பயண டிக்கெட் என்பது அறுபத்து நான்கு வெள்ளி. அதற்கு முன் 1930-களில் ரொம்பவுமே குறைவு. இருபத்து எட்டு வெள்ளிதான்.

மூதாதையர்களை நினைக்கும் போது நம் கண்கள் பனிக்கின்றன

டெக் பயணிகளுக்கு ஆறு அடிக்கு நான்கு அடி பரப்பளவு கொண்ட ஒரு குட்டி தரைப்பகுதி கொடுக்கப்படும். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அந்த இடம் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம். கொஞ்சம் தாமதமாக வந்தவர்களுக்கு, ஏதாவது ஒரு கழிவறைக்குப் பக்கத்தில் இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

உள்ளே கழிவறையில் கழுவி விடப்படும் அசிங்கமான நீர் எல்லாம் அந்தப் பக்கம்தான் வருமாம். அந்த நீரைத் துடைத்து விட்டுத்தான் அவர்கள் படுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இரண்டுக்குப் போன வாடைகளையும் சமாளித்துக் கொள்ள வேண்டும். பாவப் பட்ட அந்த மூதாதையர்களை நினைக்கும் போது நம் கண்கள் பனிக்கின்றன. எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்துப் பாருங்கள்.

எஸ்.எஸ். ரஜூலா கப்பல் இரவில் வேகமாகப் போகும். பகலில் வேகம் கொஞ்சம் குறைவு. எங்கேயும் நிற்காமல் போவது என்றால் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 360 மைல்களைக் கடந்துவிடும். அதாவது 24 மணி நேரத்தில் 360 மைல்கள். 



1970 - சென்னை

சென்னையில் மாலையில் புறப்பட்டு மறுநாள் விடிவதற்குள் நாகப்பட்டினத்தைப் பிடித்து விடும். நாகப்பட்டினத்தில் கப்பல் கரைக்கு வந்து அணையும் வசதிகள் இல்லை. ஆகவே பாய்மரப் படகுகள் மூலமாகப் பயணிகள் கப்பலுக்கு கொண்டு வரப் படுவார்கள். அந்தப் படகுகளில் சரக்குகளையும் கொண்டு வருவார்கள். நூற்றுக் கணக்கான மூட்டைகளைத் தூக்குத் தூக்கிகளின் மூலமாக கப்பலில் ஏற்றுவார்கள்.

தூக்குத் தூக்கி என்றதும் 1954-இல் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியானது. சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி, ராகினி நடித்து இருந்தார்கள். அந்தப் படத்திற்கும் நாடு விட்டு நாடு வந்த சஞ்சிக் கூலிகளுக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும் நினைத்துப் பார்க்கலாமே…
அந்தமான் தீவுகளில் ரஜுலாவின் சாதனைகள்

ரஜுலா கப்பலுக்கு வரும் பயணிகள் உயரமான ஏணிகளின் வழியாக கப்பலுக்குள் ஏறி வர வேண்டும். சமயங்களில் கடலின் அலைகள் வேகமாக இருக்கும். அந்தச் சமயங்களில் ஏணிக்கு அடியில் இரண்டு மூன்று ஆட்கள் உதவிக்கு நின்று கொண்டு இருப்பார்கள். அதே போல பயணிகளை ஏற்றிவரும் படகிலும் இரண்டு மூன்று ஆட்கள் இருப்பார்கள். இவர்கள் பயணிகளைத் தூக்கிக் கப்பலுக்குள் ஏற்றி விடுவார்கள்.

மாலையில் நாகப் பட்டினத்தில் இருந்து பினாங்கிற்குக் கப்பல் புறப்படும். நேராக கிழக்குத் திசைப் பக்கமாகச் செல்லும். அப்புறம் அந்தமான் தீவுகளின் பகுதிக்கு வந்து சேரும். அதன்பின் தென் கிழக்காகத் திரும்பி பினாங்கு வந்து சேரும். எட்டு நாட்கள் பயணம். இந்த மாதிரி அந்தமான் பந்து போகும் சேவை கொஞ்ச நாட்கள்தான் நீடித்தன.




அதன் பின்னர் சில மாதங்களுக்கு எஸ்.எஸ். ரஜூலா கப்பலின் பயணப் பாதையை மாற்றி அமைத்தார்கள். நாகப் பட்டினத்தில் புறப்பட்டு தென்கிழக்காக நிக்கோபார் தீவை நோக்கிச் செல்லும் பாதை.

நிக்கோபார் தீவு அந்தமான தீவிற்கு தெற்கே இருக்கிறது. நிக்கோபார் தீவு வழியாகச் சென்றால் 200 மைல்கள் மிச்சப் படுத்தலாம். நிக்கோபார் தீவைச் சுற்றிலும் பவளப் பாறைகள். ஆபத்து இருக்கும். அதைச் சமாளித்தால் அந்தப் பாதையைப் பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை இங்கேயும் தேடி இருக்கிறார்கள். நினைவு படுத்துகிறேன்.

அப்புறம் அங்கே இருந்து நேராகப் பினாங்கின் வடக்குப் பகுதியை நோக்கிப் பயணிக்கும். பினாங்கு துறைமுகத்தை வந்து அடைந்ததும் வழக்கம் போல பயணிகளும் சரக்குகளும் இறக்கப் படுவார்கள்.





சில ஆண்டுகளுக்கு ரஜுலாவின் பயணப் பாதை அந்த மாதிரியே இருந்தது. நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் எஸ்.எஸ். ரஜூலா ஐந்தே நாட்களில் பினாங்கைப் பிடித்து விடும். அங்கே பயணிகள் சரக்குகளை இறக்கிய பின்னர் 36 மணி நேரத்தில் சிங்கப்பூரைப் பிடித்துவிடும்.

அப்புறம் அங்கு இருந்து புறப்பட்டு பினாங்கு வந்து சேரும். பினாங்கில் இருந்து புறப்பட்டு ஐந்து நாட்களில் மறுபடியும் நாகப்பட்டினத்தைப் பிடிக்கும். அடுத்த நாள் சென்னைக்கு வரும். இப்படித்தான் அதன் பயணப் பட்டியல் அமைந்து இருந்தது.

தலைச் சுற்றல் மயக்கம் குமட்டல் சர்வ சாதாரணம்

இங்கே இன்னும் ஒரு தகவல். நாகப்பட்டினம் என்பது தான் சரியான பெயர்ச் சொல். நாகப்பட்டணம் என்று எழுதுவது தவறு. எந்த ஒரு பட்டணமும் கடற்கரை ஓரத்தில் இருந்தால் அதை பட்டினம் என்று அழைக்க வேண்டும். உட்புற நிலங்களில் இருந்தால் பட்டணம் என்று அழைக்க வேண்டும்.

எஸ்.எஸ். ரஜூலா கப்பலின் டெக் பகுதியில் ஏறக்குறைய 2000 பயணிகள் இருப்பார்கள். ஒரே கூட்டமாக இருக்கும். இட வசதி இல்லாமல், நெருக்கி அடித்துக் கொண்டு வசதிகளே இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்.




பங்க் பகுதியில் காற்றோட்டம் என்பதே இருக்காது. அதையும் தாண்டி எண்ணெயின் நெடி. உயிரை வாங்கிவிடும். வாந்தி குமட்டல் என்பது எல்லாம் சர்வ சாதாரணம். தலைச் சுற்றல் மயக்கம் என்று பலர் சுருண்டே கிடப்பார்கள்.

இதில் கழிவு நீர் பாய்க்கு அடியிலும் வந்து விடும். நாற்றம் வேறு. என்ன செய்வது. பிழைக்க வேண்டும் என்று கைநாட்டு போட்டாச்சே... எல்லா வேதனைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். சஞ்சிக்கூலிகளின் முதல்கட்ட பரிதாப வாழ்க்கை கப்பலிலேயே ஆரம்பிக்கிறது. அப்புறம்தான் கொத்தடிமை சமாசாரம்.

பெரும்பாலும்  பயணிகள் அரட்டை அடித்துக் கொண்டுதான் நேரத்தைக் கழிப்பார்கள். பாட்டுப் பாடத் தெரிந்தவர்கள் பாடிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. முதல் மரியாதை கிடைக்கும். தாளம் போடுபவர்களுக்குப் பஞ்சம் இருக்காது.

காலியான டின்களைத் தட்டி இல்லாத தாளங்களை எல்லாம் சேர்த்துக் கொள்வார்கள். நல்லவேளை இளையராஜா இல்லாமல் போனார். இருந்து இருந்தால் மலாயா கித்தா காடுகளில் நிறைய தியாகராஜ பாகவதர்களைப் பார்த்து இருக்கலாம்.

பினாங்கில் இருந்து கப்பல் புறப்பட்டு இரண்டு நாட்கள் வரை, டெக் பயணிகள் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். கப்பலின் டெக் பகுதியில், காற்றோட்டம் கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு நாட்களில், கப்பல் நடுக் கடலுக்கு வந்துவிடும்.

அதற்கு அப்புறம் மூன்று நான்கு நாட்களுக்குப் பயணிகளால் தலையைக்கூட தூக்க முடியாது. அந்த அளவுக்குத் தலைச் சுற்றல்… மயக்கம். இதை ஆங்கிலத்தில் ‘சி சீக்னஸ்’ என்று சொல்வார்கள். அப்புறம் அடுத்த ஒரே நாளில் கப்பல் நாகப்பட்டினத்தைப் பிடித்துவிடும். அடுத்த நாள் சென்னையைப் பிடித்துவிடும்.

ரோணா கப்பல் மத்திய தரைக் கடலில் மூழ்கியது

இரண்டாம் உலகப் போரில், ரோணாவும் ரஜூலாவும் இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களாக மாறின. ரோணா கப்பல் மத்திய தரைக் கடலில் சென்று கொண்டு இருக்கும் போது ஜெர்மன்காரர்கள் அதைத் தாக்கித் தகர்த்து விட்டார்கள் என்று சொல்லப் படுகிறது. ஏவுகணைகளைப் பயன் படுத்தினார்களாம். ரோணா கப்பல் மூழ்கும் போது அதில் ஆயிரம் பேர் இருந்து இருக்கின்றனர். எல்லாரும் இறந்து விட்டார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில், ரஜூலா பல முக்கியமான போர்த் துறைமுகங்களுக்கு துருப்புகளை ஏற்றிச் சென்று இருக்கிறது. பம்பாயில் இருந்து சூயஸ் கால்வாய்க்கு இந்தியப் படைகளைக் கொண்டு சென்று இருக்கிறது. பின்னர் இந்தியப் படைகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்று இருக்கிறது.

இரண்டாவது உலகப் போரில், நேதாஜியின் இந்திய விடுதலை இராணுவத்திற்கு எதிராக இதே இந்த ரஜுலா கப்பலைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்கிற விசயம் பலருக்குத் தெரியாது. பல ஆயிரம் இந்திய வீர்ர்களை மலாயாப் போர் முனைகளுக்கு கொண்டு சென்று ரஜுலா கப்பல் சரித்திரம் படைத்து இருக்கிறது.

அதன் பின்னர், போர்னியோ நியூ கினி காடுகளுக்கும் துருப்புகளைக் கொண்டு சென்றது. நியூ கினி எனும் நாடு அந்தக் காலத்தில் மனிதக் காட்டுவாசிகள் வாழ்ந்த புண்ணிய பூமி. ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே இருக்கிறது. அதையும் ஜப்பானியர்கள் விடவில்லை. அங்கேயும் அவர்களின் சூரியக் கொடியை ஏற்றிப் பறக்க விட்டார்கள்.

பர்மாவை ஜப்பானியர்களிடம் இருந்து மீட்டு எடுக்கவும், அதே சமயத்தில் இந்தியாவைப் பாதுகாக்கவும் ரஜூலா ஒரு ஆம்புலன்ஸ் கப்பலாகவும் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சி பின்னர் இடம்பெறும்.