கெடா வரலாறு - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெடா வரலாறு - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 2

தென்கிழக்கு ஆசியாவின் அத்தனை இந்து இந்திய சாம்ராஜ்யங்களுக்கும் கெடாவின் வரலாறு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. இருந்தும் வருகிறது. ஆங்கிலத்தில் forerunner என்று சொல்வார்கள். 



பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னதாகவே கெடாவில் லங்காசுகம் (Langkasuka) தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அல்லது இரண்டுமே சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம்.

(சான்று: Guy, John (2014). Lost Kingdoms: Hindu-Buddhist Sculpture of Early Southeast Asia. Yale University Press. pp. 28–29.)

ஒன்றை இங்கே மறந்துவிட வேண்டாம். மாறன் மகாவம்சன் கெடாவில் கால் பதித்த காலத்தில் லங்காசுகம் இருந்ததற்கான சான்றுகள் நமக்கு கிடைக்கவில்லை. 




ஆனால் லங்காசுகம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னதாக பூஜாங் சமவெளியில் இந்தியர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது. அது மட்டும் உண்மை. இந்த வரலாற்று நிகழ்வுகள் எல்லாமே கொஞ்சம் முன்னும் பின்னும் இருந்து இருக்க வேண்டும். மிகச் சரியான காலக் கட்டத்தை யாராலும் மிகச் சரியாக வரையறுத்துச் சொல்ல முடியாது.

இதைப் பற்றி நிறைய பேர் ஆய்வு செய்து இருக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள்.

கடாரம் வென்ற சோழன் எனும் ஆவண நூலை எழுதிய டத்தோ நடராஜாவும் ஆழமான ஆய்வுகள் செய்து இருக்கிறார். அவருக்குத் துணையாக நானும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளேன். 




இன்னும் சில வாரங்களில் நாங்கள் இருவரும் தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் செய்கிறோம்.

இருப்பினும் கோத்தா கெலாங்கி வரலாறு தான் என்னுடைய தலையாய ஆய்வுக் களமாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கோத்தா திங்கி காடுகளில் குடிசை போட்டுத் தங்கி ஆய்வுகள் செய்தோம். எனக்கு உதவியாக ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் இருந்தார். தன்னலம் பாராமல் அல்லும் பகலும் உழைத்து வருகிறார். மலேசியத் தமிழர்கள் என்றைக்கும் இவரை மறந்துவிடக் கூடாது.

கோத்தா கெலாங்கியில் அனுபவித்த வேதனைகளை நினைத்துப் பார்க்கிறோம். சில உண்மைகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. தப்பாக நினைக்க வேண்டாம். இது தனிப்பட்ட பதிவு. ஒரு வரலாற்றுப் பின்னூட்டம்.




காட்டுக்குள் சரியான சாப்பாடு இல்லை. சரியான தூக்கம் கிடைக்காது. இதில் அட்டைக்கடி; தேள்கடி; பூரான் கடி வேறு. கைகால்களில் ரோத்தான் முட்கள் குத்திய காயங்கள். கற்பாறைகளில் விழுந்து எழுந்து உடம்பில் உள்ள ஒரு சில எலும்புகளும் நகர்ந்தும் போயின.

எந்த நேரத்தில் புலி வந்து கடிக்குமோ இல்லை யானை வந்து மிதிக்குமோ இல்லை கரடி வந்து சுரண்டி விட்டுப் போகுமோ என்கிற பயம் வேறு. ஏன் என்றால் கோத்தா திங்கி காடுகள் மிக அடர்த்தியான மழைக் காடுகள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் எங்களின் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.

தவிர இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுப் பணிகள். அரசாங்கத்தையோ அரசு சாரா இயக்கங்களின் உதவிகளோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். 




ஏன் என்றால் இந்த ஆய்வுப் பணி மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்கும் பணி. அதனால் சிலருக்குச் சாதகங்கள். பலருக்குப் பாதகங்கள். எங்களின் சொந்தப் பணத்தைப் போட்டுத் தான் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறோம்.

நம் மலேசிய இந்தியர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டும். மலேசியத் தமிழர்களுக்கும் இந்த மண்ணில் உரிமை இருக்கிறது. வருங்காலத்தில் நம் சந்ததியினர் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். அதுவே எங்களின் இலட்சியம்.

இந்த நல்ல காரியத்தை விரவிலேயே செய்து முடிக்க வேண்டும். ஆனால் மிகச் சரியான சான்றுகளுடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தான் ஆபத்து. புரியும் என்று நினைக்கிறேன். சரி.




ஒரு தப்பான கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்தக் கருத்து ஒரு மாயைக் கருத்தாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. அந்தக் கருத்து அப்படியே நிலைத்துப் போவதும் உண்டு. அதை நாம் மறந்துவிடக் கூடாது.

எடுத்துக் காட்டாக நம் தமிழ்ப் பழமொழிகளைச் சொல்லலாம். ஒரு சில பழமொழிகள் தவறாக விமர்சனம் செய்யப் படுகின்றன. அப்படி இருந்தும் அவற்றுக்கு நியாயம் கற்பிக்கிறோம். அப்படித் தவறாகக் கற்பிக்கப்படும் நியாயங்கள் காலப் போக்கில் உண்மையான நியாயங்களாக மாறிப் போகின்றன.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பது ஒரு பழமொழி. இது தவறான பழமொழி. அடிமேல் அடிவைத்தால் அம்மி நகராது. தகரும். அதாவது உடையும். ஆக அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும் என்பதே சரியான பழமொழி. நகரும் நகரும் என்று சொல்லிச் சொல்லியே தகரும் எனும் உண்மையானச் சொல் அடிபட்டுப் போய் விட்டது.

இன்னொரு பழமொழி. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன். இந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம் சொல்கிறார்கள் தெரியுமா. ஒரு புருசன்காரன் கல் மாதிரி இருந்தாலும் சரி. அவன் தான் புருசன். புல் மாதிரி இருந்தாலும் சரி. அவன் தான் புருசன். இது என்னங்க புருசனைப் போய் கல்லுக்கும் புல்லுக்கும் உவமானம் செய்வது.

உண்மையான பழமொழி என்ன தெரியுங்களா. நன்றாகக் கேளுங்கள். கல்லான் ஆனாலும் கணவன்; புல்லான் ஆனாலும் புருஷன். 




கல்வி அறிவு இல்லாத ஒருவன் (கல்லான்) கணவனாக இருந்தால் அவன் கணவனே. அதே சமயத்தில் அன்பு இல்லாதவனாக (புல்லான்) இருந்தாலும் அவன் கணவனே என்பது தான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள்.

ஆக இப்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் எனும் பழமொழி ஒரு தவறான பழமொழி. நினைவில் கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு பழமொழி. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை. அப்படினு ஒரு பழமொழி. அதாவது ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள் என்கிற அந்தப் பழமொழி. ஏங்க நான் தெரியாமல் தான் கேட்கிறேன் தப்பாக நினைக்க வேண்டாம்.

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கிறீர்கள். என்ன செய்து வைக்கிறீர்கள். செய்து வச்சிட்டீங்க. சரி. அப்புறம் உண்மை தெரிந்த பிறகு என்னவாகும். 




கல்யாணம் பண்ணிய இரண்டு பேரும் தலைமயிரை இறுக்கிப் பிடித்து இழுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வரமாட்டார்களா. சிரிப்பாய்ச் சிரிக்க மாட்டார்களா. சொல்லுங்கள்.

உண்மையான பழமொழி என்ன தெரியுங்களா. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள். இதுதான் அசல் பழமொழி. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி என்பது ஆயிரம் பொய்யைச் சொல்லி என்று மாறிப் போனது.

இந்த மாதிரி ஆயிரம் பொய்யைச் சொல்லி எத்தனைக் குடும்பங்கள் பொய்க்காரக் குடும்பங்கள் ஆனதோ. யாம் அறியேன் பராபரமே.

இப்படித்தாங்க வரலாற்றையும் அவரவர் இஷ்டத்திற்கு அங்கட்டு இங்கட்டு வெட்டிப் போட்டு ஒட்டி வைத்து பட்டம் விட்டுப் படகோட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாவம் பால் மனம் மாறா பச்சை சிசுக்களும் படித்து மனப்பாடம் செய்து கடுதாசிக் கப்பல் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சரிங்க. நமக்கு ஏன் ஊர் பொல்லாப்பு. நம்ப மகாவம்சன் கதைக்கு வருவோம்.

கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). 




அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் கெடாவின் வரலாறே மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது.

கி.பி. 1821-ஆம் ஆண்டில் தான் நீராவிக் கப்பல்கள் புழக்கத்திற்கு வந்தன. அதற்கு முன்னர் அனைத்துக் கடல் பயணங்களும் பாய்மரக் கப்பல்களின் வழியாகத் தான் நடந்து இருக்கிறது. ஆழ்கடல்களில் உயிர்களைப் பணயம் வைத்து வணிகம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் மாறன் மகாவம்சன் எனும் அரச நாயகர் ஈரானில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டியர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் உருவாக்கி இருக்கிறார். மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய நாயகன். வேறு யாரும் அல்ல. 




பூஜாங் சமவெளி எனும் இந்து சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் இதே இந்த மாறன் மகாவம்சன் என்பவர் தான்.

(சான்று: http://www.freemalaysiatoday.com/category/nation/2011/09/10/kedah-not-malacca-the-oldest-kingdom/ - B Nantha Kumar (10 September 2011). "Kedah, not Malacca, the oldest kingdom")

மகா என்பது சமஸ்கிருதப் புறமொழிச் சொல். உயர்ந்த அல்லது உன்னதம் என்பதைக் குறிக்கிறது. வம்சம் என்றால் ஒரே குடும்பத்தின் தொடர்ச்சியான பல தலைமுறைகள். அல்லது பாரம்பரியம் என்றும் சொல்லலாம்.

ஆக மாறன் மகாவம்சன் எனும் சொல் ஒரு தமிழர்ச் சொல். அல்லது இந்தியச் சொல். அது ரோமாபுரிச் சொல்லும் அல்ல. மாசிடோனியாச் சொல்லும் அல்ல.

தமிழ்நாட்டின் நாகப்பட்டனத்தில் இருந்து மாறன் மகாவம்சன் கெடாவிற்கு வந்து இருக்கிறார். சொல்லி இருக்கிறேன். அப்படியே கெடாவில் ஒரு மன்னர் ஆட்சியையும் உருவாக்கி இருக்கிறார். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.




அந்த வகையில் மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய தலைமகன். அவர் கெடாவிற்கு வந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. இருந்தாலும் வியாபார நோக்கம் தான் முக்கியமாகக் கருதப் படுகிறது.

ஒரு காலக் கட்டத்தில் இந்தியக் கண்டத்தின் ஒரு துணை நிலமாகக் கெடா விளங்கி இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் அப்போது பர்மா, தாய்லாந்து, மலாயா, ஜாவா, சுமத்திரா, வியட்நாம், கம்போடியா நாடுகள் உள்ளடக்கி இருந்து உள்ளன.

(சான்று: Arokiaswamy, Celine W.M. (2000). Tamil Influences in Malaysia, Indonesia, and the Philippines. Manila s.n. p. 41.)

சேர சோழ பாண்டியர்களைத் தமிழகத்தின் மூவேந்தர்கள் என்று சொல்வார்கள். இவர்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு தமிழ்கப் பகுதிகளை ஆட்சி செய்து இருக்கிறார்கள். 

அந்த வகையில் தமிழகத்தின் பல பகுதிகளைப் பாண்டியர்களும் ஆட்சி செய்து வந்து இருக்கிறார்கள்.

தொடக்கக் காலங்களில் பாண்டியர்களின் தலைநகரமாகக் கொற்கை விளங்கி இருக்கிறது. கி.மு. 600-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி தலைநகரமாக விளங்கி இருக்கிறது. பின்னர் பாண்டிய நெடுஞ்செழியன் காலத்தில் இந்தத் தலைநகரம் மதுரைக்கு மாற்றிச் செல்லப் பட்டது.

பழம்பெரும் வரலாற்று ஆசிரியர்களான பிலினி (Pliny the Elder), ஸ்டிராபோ (Strabo), தோலமி (Ptolemy), பெரிபலஸ் (Periplus) போன்றவர்கள் பாண்டிய மன்னர்களைப் பற்றி நிறையவே ஆய்வுகள் செய்து இருக்கிறார்கள். பதிவுகளை விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதே போல இந்திய வரலாற்று ஆசிரியர் சீனிவாச ஐயங்கார் அவர்களும் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறார்.

(சான்று: Iyengar, Srinivasa P.T. (2001). History Of The Tamils: From the Earliest Times to 600 AD. Asian Educational Services.)

தவிர சீன வரலாற்று ஆசிரியர் யூ ஹுவான் (Yu Huan) என்பவரும் பாண்டியர்களைப் பற்றி சொல்லி இருக்கிறார். அவர் வேய்லூ (Weilüe) எனும் நூலை எழுதி இருக்கிறார். பாண்டியர்களை அவர் பான்யூ (Panyue) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

(சான்று: http://depts.washington.edu/silkroad/texts/weilue/weilue.html - A Third Century Chinese Account Composed between 239 and 265 CE.)

(தொடரும்)



கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3