மலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஜூன் 2017

மலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள்


கோத்தா கெலாங்கி பாறைகளில் சோழர் காலத்து கல்வெட்டுகள்
ஜொகூர் மாநிலத்தின் கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து உள்ளன. இந்தத் தடயங்கள் ஜொகூர் மாநிலச் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம் என்று பெரிதும் நம்பப் படுகிறது.


அண்மையில் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ (Linggiu) காட்டுப் பகுதியில் தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள் கிடைத்து உள்ளன.

கி.பி. 650ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ விஜய பேரரசு கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ பகுதியில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டி உள்ளது.

அங்கே சிதைந்து போன பல பாறைப் படிக்கட்டுகளும் பாறைக் கோபுரங்களும் பாறைப் படிவங்களும் ஆழமான வரலாற்றுச் சான்றுகளை வெளிப் படுத்துகின்றன.


தாமரை வடிவத்திலான பெரும் கற்பாறைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அனைத்தும் பெரும் பாறைகளில் இருந்து செதுக்கப் பட்ட தாமரை வடிவக் கற்பாறைகள். கலைநுட்பம் கொண்ட வரலாற்றுப் படிவங்கள்.

சுங்கை லிங்க்யூ காட்டுப் பகுதியின் உட்புறங்களில் மட்டுமே இந்தத் தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. காட்டுப் பகுதியின் உட்புறங்களுக்குச் செல்வது மிகவும் சிரமமான காரியம்.

போலீஸார் அனுமதியும் மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அனுமதியும் தேவை. அரச மலேசிய இராணுவப் படையினர் அந்தப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர்.


தாமரைப் பூக்கள் பாறைத் தடயங்கள் பற்றிய செய்தியை ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் உறுதி படுத்துகிறார்.

தவிர இந்த வரலாற்றுச் சான்றுகள் வழியாக ஜொகூர் மாநிலத்திற்ன் சுற்றுலாத் துறைக்குப் புதிய பரிமாணம் ஏற்படும். அதனால் நிறைய சுற்றுப் பயணிகள் வருவார்கள். அதன் மூலம் ஜொகூர் மாநிலத்திற்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் நம்புகிறார்.

ஆற்று நீர் அரிப்புகளில் காட்சியாகும் கல்வெட்டுகள்

அனைத்துலக ரீதியில் வரலாற்றுச் சுற்றுலா என்பது ஒரு வணிகத் துறையாக மாறி வருகிறது. இந்தக் கட்டத்தில் கோத்தா கெலாங்கியில் கிடைக்கப் பெற்றுள்ள இந்த வரலாற்றுத் தடயங்கள் அந்த மாநிலத்தின் வருமானத் துறைக்குப் புத்துணர்வு கொடுப்பதாகவும் அமைகின்றது.


ஸ்ரீ விஜய பேரரசின் அரசார்ந்த மலர் தாமரை மலராகும். அதாவது ஸ்ரீ விஜய பேரரசினரின் தேசிய மலர் தாமரை மலராகும். ஸ்ரீ விஜய பேரரசினர் எங்கே எல்லாம் அரசாட்சி செய்து இருக்கிறார்களோ அங்கே எல்லாம் இந்தத் தாமரைப் படிவங்களைக் காண முடியும்.
(சான்று: Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. p. 171)


2017 மே மாதம் 20ஆம் தேதி ஓர் ஆய்வுக் குழுவினர் கோத்தா கெலாங்கி சுங்கை அம்பாட் (Sg Ambat) காட்டுப் பகுதியில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வு முயற்சியில்

  • ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக் 
  • (Drs Kamaruddin  Abd Razak - Timbalan Pengarah Yayasan Warisan), 
  • வரலாற்றுத் துறை இயக்குநர் ஹாஜி காம்டி காமில் (Hj Kamdi Kamil), 
  • தொல்பொருள் ஆய்வாளர் மஸ்லான் கெலிங் (Mazlan Keling),
  • ஜொகூர் சுற்றுலாத் துறை இயக்குனர் (En Mohd Shukri Masbah - Pengarah Jabatan Pelancongan Negeri Johor)

ஆகியோருடன் மேலும் சில அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


இந்த ஆய்வுப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன். மிகத் துடிப்புடன் பவனி வருகிறார். தன்னலமற்ற சேவைகள். மெய்சிலிர்க்க வைக்கின்றன.

எங்களின் சொந்தப் பணத்தில் தான் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரையில் யாரும் எங்களுக்குப் பண உதவி செய்யவில்லை.

இந்த ஆய்வுகளுக்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வரலாற்று ஆலோசகராகச் சேவை செய்கிறார்.

பல நாட்கள் காடுகளில் தங்கி ஆய்வுப் பணிகள் மேற்கொண்டோம். பூச்சிக்கடி கொசுக்கடி எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டன. பலமுறை குளவிகள் கொட்டி கைகால்கள் முகம் எல்லாம் வீங்கிப் போயின. 
எந்த நேரத்தில் மழை வரும் என்று தெரியாது. வெயில் அடித்துக் கொண்டே இருக்கும் மழை வந்து அடித்துக் கொட்டும்.

பல முறை எங்களுடைய கேமராக்களையும் கைப்பேசிகளையும் பயன்படுத்த முடியாமல் போனது. எங்களுடைய முகாமிற்கு வந்து கைபேசிகளைக் கழற்றி காய வைத்த கொஞ்ச நேரத்தில் மழை அடித்து ஒரு வழி பண்ணிவிடும்.

பாம்புகளுக்குப் பயந்து ஒதுங்கிய இடங்களில் பூரான் தேள்களின் கடிகளையும் வாங்கி இருக்கிறோம்.

ஆனால் இந்த இரத்தம் குடிக்கும் அட்டைகள் இருக்கின்றனவே... ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. அப்படியே உடல் முழுமையும் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்.

எப்படித் தான் தட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் தேடி வந்து ஒட்டிக் கொள்ளும். புதிதாகச் சில பல அட்டைகளும் சேர்ந்து கொள்ளும். நம் உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை உடலில் இருந்து சட்டென்று பிடுங்கக் கூடாது.

பிடுங்கினால் இரத்தம் ஒழுகிக் கொண்டே இருக்கும். அப்புறம் காயம் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும். அட்டைக் கடித்த இடத்தில் உப்பைக் கரைத்து தடவுவோம். சில பயங்கரமான விடாக்கண்டன் அட்டைகளும் இருக்கின்றன. வேறு வழி இல்லை.

ஓர் ஒதுக்குப் புறமான இடத்திற்குப் போய்... நம் சிறுநீரையே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். அப்படியே அந்த அட்டைகள் கீழே விழுந்து விடும். அப்புறம் பயணத்தைத் தொடருவோம்.

குனோங் கொர்பு, குனோங் தகான் மலைகளில் ஏறும் போது இந்த மாதிரி வேதனைகளைப் பட்டு இருக்கிறோம். அதே மாதிரியான கறுப்பு சிவப்பு அட்டைக் கடிகளையும் இங்கே கோத்தா கெலாங்கியிலும் பார்க்க முடிகிறது.

கோத்தா கெலாங்கியில் பிடித்த ஆய்வாளர்களின் படங்களைப் பதிவு செய்வதால் தாக்கங்கள் வேறு மாதிரியாக அமையலாம். தொடரும் அனுமதி மறுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரு சிறுபான்மை இனத்தின் வரலாற்றுப் பின்னணி என்பது ஒரு பெரும்பான்மை இனத்தின் சிறப்புத் தன்மைகளைக் குறைக்கச் செய்யும் என்பது வரலாற்று உண்மை. வீண் பிரச்சினைகள் நமக்கு வேண்டாமே. வரலாற்றைப் பார்ப்போம். அதனால் வருத்தங்கள் வேண்டாமே.

சரி. விசயத்திற்கு வருகிறேன். கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது உண்மையாக இருக்கலாம்.

மேலும் கூடுதலான ஆய்வுகள் செய்த பின்னரே உறுதிபடுத்த முடியும் என்பது ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக்கின் முடிவு.

கோத்தா திங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் ஆய்வுகள் செய்ய மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன.


ஏறகனவே கோத்தா திங்கி மலைக்காட்டுப் பகுதியில் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கே பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள் உள்ளன.

அவை ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுப் படிவங்கள் ஆகும்.


அதைத் தவிர சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள் ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரியான கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன என்று கணேசன் கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் துணை அரசு இயங்கி வந்துள்ளது. புத்த மதம் வேரூன்றி இருந்துள்ளது.


அந்தச் சமயத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு இராஜேந்திர சோழனின் கடல் படைகளினால் தாக்கப்பட்டு அந்தப் பேரரசு நிர்மூலமானது.

ஸ்ரீ விஜய பேரரசைத் தாக்கிய இராஜேந்திர சோழன் அடுத்ததாக கோத்தா கெலாங்கியில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கோட்டைகளையும் பொதுமக்கள் குடியிருப்புகளையும் தாக்கித் தவிடு பொடியாக்கி விட்டான்.

பின்னர் மலாயா தீபகற்பத்தின் வடக்கே இருந்த கடாரத்தையும் தாக்கினான்.

ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை வடிவக் கற்படிவங்கள்

ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழு 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டது. இது ஒரு தன்னார்வ வரலாற்று ஆய்வுக் குழுவாகும்.

தமிழ் மலர் நாளிதழில் வெளிவந்த மலாயா தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் கோத்தா கெலாங்கி எனும் கட்டுரைப் படித்த கணேசன் அந்த வரலாற்று மீட்புக் குழுவை உருவாக்கினார்.

அதன் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தேடலில் தீவிரமாகவும் களம் இறங்கி உள்ளார்.

வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் 
ஸ்ரீ விஜய பேரரு காலத்ுப் ப

கோத்தா திங்கி, உலு திராம், ஜொகூர் பாரு நகரங்களில் வாழும் நண்பர்களின் தூண்டுதலால் கணேசன் அந்த வரலாற்றுத் தன்னார்வக் குழுவைத் தோற்றுவித்தார். தற்சமயம் அந்தக் குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அண்மைய காலங்களில் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல நாட்கள் மழையில் நனைந்து கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தடயங்களைத் தேடி வருகின்றனர். அதே சமயத்தில் ஜொகூர் வனக் காப்பக அதிகாரிகளின் உதவிகளையும் பெற்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி இந்திய கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது மலேசியர்கள் பலருக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன அவர்களில் சிலருக்குப் பழம் காலத்துக் கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன.


அவற்றை அவர்கள் எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்தப் பொருட்கள் அனைத்தும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைப் பொருட்கள். என்பது அந்த பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியாது என்று கணேசன் கூறினார்.

இருந்தாலும் அவர் கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளுக்குள் சென்று பூர்வீகக் குடிமக்களைச் சந்தித்துப் பேசுகிறார். நேரடியாகப் பார்த்த கோட்டைச் சுவடுகளை ஆவணப் படுத்தியும் வருகிறார்.

அந்த வகையில் கணேசனின் அரிய முயற்சிகளினால் அங்கே அடர்ந்த காட்டிற்குள் புராதன கருங்கல் கோட்டை இருப்பதும் தெரிய வந்தது.


உயரமான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட பெரும் பெரும் தூண்கள், சிதறிய சின்ன பெரிய கற்பாறைகள், செங்குத்தான ராட்சச உயர்ப் பாறைகள் போன்றவற்றைக் கண்டு பிரமித்துப் போய் இருக்கிறார்.

செஜாரா மலாயு (Sejarah Melayu) என்பது பழம் பெரும் மலாய் இலக்கிய மரபு நூல். மலாயாவின் 1500 ஆண்டு காலச் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம்.

1511-இல் மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள. அப்போது அசல் செஜாரா மெலாயு சுல்தான் மகமுட் ஷாவிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் அவர் பகாங்கிற்குத் தப்பிச் சென்றார்.

அதே அந்த அசல் செஜாரா மெலாயு 1528-இல் ஜொகூரில் இருக்கும் கம்பார் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஜொகூரின் அரசப் பிரதிநிதியான ஓராங் காயா சாகோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுதான் அசல் பிரதி. ஆனால் பழுதடைந்து போய் இருந்தது.
(சான்று: http://www.nhb.gov.sg/collections/artefactually-speaking/artefactually-speaking---tamil-language/the-sejarah-melayu-malay-annals)

அதன் பிறகு ஜொகூர் சுல்தான்கள் அந்த வரலாற்று நூலைச் செப்பனிட்டு, சில மாற்றங்களையும் செய்தனர். ஜொகூர் சுல்தான்கள் மட்டும் இல்லை என்றால் செஜாரா மெலாயுவும் இல்லாமல் போய் இருக்கும்.

அந்த செஜாரா மெலாயுவின் அசல் பிரதியில் கோத்தா கெலாங்கியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோத்தா கெலாங்கி என்பது புஜநகரம் (Bijnagar) என்று அழைக்கப் படுகிறது. சயாமிய மொழியில் கெலாங்கி (Gelanggi). சீன மொழியில் கெலாங் கியா (Khlang Khiaw அல்லது Glang Kiu)

அடுத்து இன்னும் ஒரு முக்கியமான செய்தி. 2005-ஆம் ஆண்டில் கோத்தா கெலாங்கி பற்றிய செய்திகளை உள்நாட்டு ‘தி ஸ்டார்’ ஆங்கில நாளிதழில் வெளியிட்டது.

கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். இந்தோனேசியா சுமத்திராவில் கி.பி. 650-இல் இருந்து கி.பி. 1377 வரை செல்வச் செழிப்புடன் களை கட்டி இருந்த மாபெரும் பேரரசு.

சீனா நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். அராபிய வணிகர்களும் தொடர்புகளை வைத்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உள்ளன.

பேராக் புருவாஸ் கங்கா நகரம், கெடாவில் பூஜாங் பள்ளத்தாக்கு, ஜொகூர் கோத்தா கெலாங்கி போன்ற நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து இருக்கின்றன.
(சான்று: Coedès, George (1968). Walter F. Vella, ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press)

ஒரு செருகல். இப்போது இந்தோனேசியக் கல்வியாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதாவது இந்தோனேசியாவிற்கு ஒரு தேசிய அடையாளம் வேண்டும். அது ஒரு வரலாற்று அடையாளமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விவாதம்.

அப்படி என்றால் ஸ்ரீ விஜய பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா அல்லது மஜாபாகித் பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா. எந்த அடையாளம் இந்தோனேசியாவிற்குச் சரியாகப் பொருந்தி வரும் என்று இந்தோனேசியக் கல்வியாளர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீ விஜய மஜாபாகித் இந்த இரண்டுமே இந்தோனேசியாவின் அடையாளமாக இருக்கட்டும் என்று இந்தோனேசியத் தேசியவாதிகள் பலர் முன்மொழிகின்றனர். ஸ்ரீ விஜய - மஜாபாகித் எனும் அந்த இரு பெயர்களுமே தங்களின் பழைமையான மகத்துவத்திற்கும் பழமையான மேன்மைக்கும் பெருமை சேர்ப்பதாகப் பெருமை படுகின்றனர்.

இருந்தாலும் பொதுவாக ஸ்ரீ விஜய எனும் பெயரே அவர்களின் தேசியப் பெருமையின் அடையாளமாகக் கருதப் படுகிறது. பலேம்பாங் வாழ் மக்கள் ஸ்ரீ விஜய எனும் பெயர் தான் தேசிய அடையாளம் என்று போராடி வருகின்றனர்.

அந்தத் தாக்கத்தில் கெண்டிங் ஸ்ரீ விஜயா (Gending Sriwijaya) எனும் பாடலை உருவாக்கி அதனை இந்தோனேசியப் பாரம்பரிய நடனங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஜொகூர் மாநிலத்தில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து இருப்பது இந்தோனேசியா மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் அல்ல.

ஸ்ரீ விஜய பேரரசு தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்து இருக்கிறது என்பது உலக வரலாற்று அறிஞர்களுக்கு தெரிந்த விசயம். வரலாற்று ஆசிரியர்களுக்கு அது ஒன்றும் அதிசயம் அல்ல.
(சான்று: Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja p.305)