ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 டிசம்பர் 2019

ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 2

தமிழ் மலர் - 21.12.2019

பேராக் மாநிலத்தின் கிந்தா சமவெளியில் நூற்றுக் கணக்கான சுண்ணாம்பு மலைக் குன்றுகள். சுற்றிலும் சூழ்ந்து நிற்கும் மழைக்காடுகள். நிறைந்து வழியும் தாமரைக் குளங்கள். நிறைந்து நிற்கும் பழைய ஈயக் குட்டைகள். 



சுண்ணாம்பு மலைக் குன்றுகளைச் சுற்றிலும் மாசு மருவற்றக் குகை வாசல்கள். இருள் கோலத்தில் அங்கே மாட்சிகள் மறையா அழகுச் சுவர் ஓவியங்கள். அந்தக் குகை ஓவியங்களின் பின்னணியில் மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.

ஆதிகாலத்தில் அந்தக் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் தோற்றங்களைக் குகைச் சுவர்களில் ஓவியங்களாகத் தீட்டி இருக்கிறார்கள். பன்னெடும் காலமாக ஓவியக் காவியங்களைப் படைத்து இருக்கிறார்கள். இவையே வரலாற்று ஆசிரியர்களின் இறுதியான தீர்க்கமான முடிவு.

ஈப்போ கல்லுமலைக் கோயிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில், தம்பூன் குகைகள் (Gua Tambun) உள்ளன. இந்தக் குகைகளில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியங்கள் சிதந்த நிலையில் இருக்கின்றன. இவை 1959-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. 



1959-ஆம் ஆண்டில் லெப்டினெண்ட் ராவ்லிங்ஸ் (Lt. RL Rawlings) எனும் ஆங்கிலேய இராணுவ அதிகாரி ஈப்போவில் பணியாற்றினார். இவரின் கீழ் ஒரு கூர்கா படையினர் (6th QEO Gurkha Rifles). வழக்கமாக தம்பூன் பகுதிகளில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் போது அந்தக் குகை ஓவியங்களைத் தற்செயலாகக் கண்டுபிடித்தார்கள்.

நியோலிதிக் காலம் (Neolithic) என்று சொல்லப்படும் புதிய கற்காலத்தில் அந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. நியோலிதிக் காலம் என்பது இன்றைய காலத்தில் இருந்து 4500 - 6000 ஆண்டுகள் பழமையானவை.

இதே போல கல்லுமலைக் கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் குகைகளிலும் சிதைந்து போன சுவர் ஓவியங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார்கள். 



மலேசியாவில் உள்ள குகை ஓவியங்களில் தம்பூன் குகை ஓவியங்கள் தான் மிக மிகப் பழமையானவை. அந்த வகையில் தம்பூன் குகைகள் 2010-ஆம் ஆண்டு மலேசியத் தேசியப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டது. ஈப்போ நகராண்மைக் கழகத்தின் நேரடிப் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மலேசியத் தேசியப் பாரம்பரியச் சின்னம் என்று சொல்லும் போது அந்தச் சின்னம் ஐக்கிய நாட்டுப் பாரம்பரியக் கலைச் சின்னங்களில் ஒன்றாகவும் பதிவு பெறுகிறது. அதையும் நாம் நினைவில் கொள்வோம்.

(This cave paintings was gazetted by Ipoh City Council in 1986 and was declared a national heritage by the Department of National Heritage on January 10, 2010.)



இந்தக் குகைகளைப் பற்றி நிறைய பேர் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜே.எம். மேத்தியூஸ் (Matthews, J.M.). 1959-ஆம் ஆண்டில் இருந்து 1961-ஆம் ஆண்டு வரை ஆய்வுகள் செய்தார். இவர் மலேசிய அரும்காட்சியகத்தின் மேற்பார்வையாளராக இருந்தவர். அவருக்கு அடுத்து பாவ்ல்டிச் (Faulstich, P.) என்பவர் 1984-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை ஈராண்டுகள் ஆய்வுகள் செய்தார்.

அங்கே 80 குகைச் சுவர் ஓவியங்கள்; 48 கற்கள் ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்த ஓவியங்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வியட்நாமில் செதுக்கப்பட்ட ஓவியங்களைப் போல இருக்கின்றன. இந்த ஓவியங்களை ஹோபின்னியான் (Hoabihnian) ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். 



2010-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு ஆய்வாளர்கள் இருவர் ஆய்வுகள் செய்தார்கள். ஒருவர் ஹிடால்கோ டான் (Noel Hidalgo Tan); மற்றொருவர் ஸ்டீபன் சியா (Stephen Chia). இவர்கள் இருவரும் கிந்தா குகைகளில் மேலும் 600-க்கும் மேற்பட்ட ஓவியங்களைக் கண்டுபிடித்தார்கள்.

ஆக இங்கே நாம் ஒரு முடிவிற்கு வரலாம். ஏறக்குறைய 5000 - 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஈப்போ வட்டாரத்தில் உள்ள குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் இருக்கும் குகைகளிலும்; அதைச் சுற்றி இருக்கும் குகைகளிலும் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். திட்டவட்டமாகச் சொல்லலாம்.



ஆதிகால மனிதர்கள் எப்படி இங்கே வந்தார்கள். எப்படி வந்து இருப்பார்கள். மனிதவியல் ஆய்வாளர்கள் அதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ஆதிக்குடிகளில் ஒரு பிரிவினர் இந்தியாவின் அசாம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.

பர்மா வழியாக வந்து சயாமிய நிலப் பகுதியில் கால் பதித்து; அதன் பின்னர் தீபகற்ப மலேசியாவிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள். அப்படி இறங்கி வந்த பாதையில் தென்பட்ட குகைகளில் புகலிடம் அடைந்து இருக்கிறார்கள்.

மலாயாவின் சில பல குகைகளில் வாழ்ந்த அந்த ஆதிகால இனத்தவரில் ஒரு பகுதியினர் அப்படியே அங்கேயே அழிந்து போய் இருக்கலாம். அந்த ஆதிகால இனத்தில் எஞ்சியவர்கள் தான் செமாங். செனோய், செக்காய், செக்கூன், செமலாய், பங்கான், பத்தேக், தெமியார், தெமுவான் எனும் இப்போதைய மலேசியப் பழங்குடியினர்.

அந்த ஆதிகால மனிதர்கள் சிலர் படகுகள் மூலமாகக் கடல் கடந்து பசிபிக் தீவுகளுக்குப் போய் இருக்கலாம். நான் சொல்லவில்லை. வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. 



சரி. அங்கே கோலாகங்சார் லெங்கோங்கில் (Lenggong Valley) இருக்கும் பழங்காலத்து மனித எலும்புக் கூடுகளுக்கும்; இங்கே ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கும் என்னங்க சம்பந்தம் என்று கேட்கத் தோன்றலாம். இருக்கிறது. பொறுமையாகப் படியுங்கள். விசயத்திற்கு வருகிறேன்.

இந்தப் பேராக் மனிதனின் சந்ததியினர்தான் குனோங் சேரோ குன்றுக் குகைகளிலும் வாழ்ந்து இருக்கிறார்கள். இப்போதைய நவீன காலத்து மனிதர்கள் எனும் பெயரில் ஈப்போ நிலப் பகுதிக்குள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இருக்கிறார்கள்.

இவர்கள் வருவதற்குப் பற்பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆதிகால மனிதர்கள் அங்கே ஆரத்தி எடுத்து பூமாலை போட்டு சால்வை போர்த்தி கொலு வைத்து  விட்டார்கள். இன்னும் என்ன இருக்கு. ஆக அந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்தக் கட்டுரை தொடர்பாக முரண்பாடான கருத்துகள் எதுவும் வரக் கூடாது என்பதற்காகச் சான்றுகளை நேற்றைய கட்டுரையிலேயே முன்வைத்து விட்டேன்.



இன்னும் ஒரு விசயம். கல்லுமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் கிந்தா ஆறு ஓடுகிறது. தெரியும் தானே. இப்போது பார்ப்பதற்குச் சின்னதாக இருக்கலாம். ஆனால் 1850-ஆம் ஆண்டுகளில் அது ஒரு பெரிய ஆறு. பெரிய பெரிய படகுகள் எல்லாம் வந்து போய் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகப் போக்குவரத்து நெரிசல் இருந்து இருக்காது.

போக்குவரத்து நெரிசல் என்று சொன்னதும் ஒரு சின்ன இடைச் செருகல். மனதிற்குள் அசை போடுகிறது. நானும் என் நண்பர் நரேந்திரன் என்பவரும் கல்லுமலை கோயிலுக்குப் போய் இந்தக் கட்டுரைக்காகச் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு ஈப்போ புந்தோங் வீட்டிற்குத் திரும்பினோம்.

அமைதியின் சின்னமான ஈப்போ நகரில் செம நெரிசல். நகர முடியவில்லை. ஆட்சிகள் மாறினாலும் அரசியல்வாதிகள் மாறினாலும் வாகன நெரிசல் மட்டும் மாறவே இல்லை. 



இதை ஏன் சொல்கிறேன் என்றால் 1800-ஆம் ஆண்டுகளில் யானைகளும் புலிகளும் கரடிகளும் குரங்குகளும் ஓடிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடிய இடத்தில் இன்றைக்கு இப்படி ஒரு திக்குமுக்கு நெரிசல். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

1830 – 1840-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் ஈய உற்பத்தி அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வந்தது. அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் தெலுக் இந்தானில் இருந்து படகுகள் மூலமாகக் கொண்டு வரப்பட்டன.

அந்தக் காலக் கட்டங்களில் ஈப்போவுக்குச் செல்வது என்றால் மாட்டுவண்டிகள்; குதிரை வண்டிகள் போகிற மண் சடக்குப் பாதைகள் தான். சமயங்களில் அந்தப் பாதைகளை யானைகளும் புலிகளும் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு.

தெலுக் இந்தானில் இருந்து ஈப்போவுக்குப் போக விரும்பினால் பேராக் ஆற்று வழியாக கிந்தா ஆற்றுக்கு வர வேண்டும். அப்புறம் ஈப்போவுக்குப் போய்ச் சேர வேண்டும்.

முன்பு காலத்தில் ஊர்ப் பயணம் போகிறவர்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போவார்களாம். அந்த மாதிரி இவர்கள் என்ன சோற்றைக் கட்டிக் கொண்டு போனார்களோ. தெரியவில்லை.

உந்துப் படகுகளில்தான் தெலுக் இந்தான் - ஈப்போ பயணம். தெலுக் இந்தானில் இருந்து ஈப்போவுக்குப் போய்ச் சேர ஒரு வாரக் காலம் பிடிக்கும்.

அந்தக் காலத்தில் அதாவது 1830-களில் கோலாலம்பூரில் இருந்து ஈப்போவுக்கு இப்போது மாதிரி விரைவுச் சாலை எதுவும் இல்லை. எல்லாமே நடடா ராஜா தான். பாதை இருந்து இருக்கிறது. எல்லாம் காட்டுப் பாதைகள். யானைகள் மூலமாகவும் சவாரி செய்து இருக்கிறார்கள்.

படகு மூலமாக ஈப்போவுக்கு வந்ததும் கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் நங்கூரம் கட்டுவார்கள். அதற்கு மேல் படகு போகாது. அந்த இடத்தில் பெரிய பெரிய ஆற்றுப் பாறைகள். அந்தப் பாறைகள் இன்றும் கல்லுமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.

அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை யானைகள் அல்லது எருமைகள் மீது ஏற்றி உட்புற ஈயச் சுரங்கங்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் ஈப்போ பகுதிகளில் ஐந்து இடங்களில் ஒரே சமயத்தில் ஈயம் விளையாடி இருக்கிறார்கள். முதலாவது புந்தோங். இரண்டாவது தாசேக். மூன்றாவது குனோங் ராப்பாட். நான்காவது கோப்பேங். ஐந்தாவது லகாட் பாப்பான்.

ஆக ஒரு 150 வருடங்களுக்கு முன்பு கல்லுமலைக் கோயிலின் ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு வியாபார மையமே களை கட்டி இருந்து இருக்கிறது. அந்த வகையில் கல்லுமலைக் கோயிலுக்கும் பெரிய ஒரு வரலாற்றுப் பெருமை சேர்கிறது.

சரி. இந்தக் கல்லுமலை கோயில் எப்படி உருவானது. கல்லுமலைக் கோயிலின் வரலாறு 1880-களில் தொடங்குகிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதனால் மலேசியாவில் உள்ள தமிழர் கோயில்களில் மிகப் பழமையானவற்றில் கல்லுமலை கோயிலும் ஒன்று எனும் பெருமை இதற்குச் சேர்கிறது. மலேசியாவில் மிகப் பழமையான கோயில் எது தெரியுங்களா. பின்னர் சொல்கிறேன்.

1880-ஆம் ஆண்டுகளில் பாரிட் முனுசாமி என்பவர் ஒரு குத்தகையாளர். கல்லுமலைக்கு அருகில் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். சீனர்களுக்கு இணையாக ஒரு குத்தகைத் தொழில்.

அவரிடம் இருபத்தைந்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் ஒருவர் மாரிமுத்து. நடுத்தர வயது.

ஒருநாள் பொழுது சாயும் நேரத்தில் கல்லுமலையின் குகை பக்கமாகத் தன் மாடுகளை மேய்க்கப் போய் இருக்கிறார். அப்போது ஓர் அசரீரியான குரலொளி. மலைப் பகுதியின் குகைக்குள் இருந்து கேட்டு இருக்கிறது. இங்கே வா என்று யாரோ அழைக்கின்ற குரல்.

அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து பயந்து போய், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஒரே ஓட்டமாய் ஓடி வந்துவிட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் இருக்கிறார்.

அங்கே நிறைய குகைகள். ஒரு குகையில் பயங்கரமான இருள். அங்கே இருந்து சாம்பிராணி, ஊதுபத்தி வாசனைகள் வந்து இருக்கின்றன. தீப்பந்தங்களுடன் உள்ளே போய் இருக்கிறார்கள். என்ன ஆச்சு என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Faulstich, P. (1984). Preliminary report on the rock art of Ipoh, Malaysia. Rock Art Research 1, 141-142.

2. Matthews, J.M. (1959). Rock paintings near Ipoh. Malaya in History 52: 22-25. Matthews, J.M. (1960). A note on rock paintings recently discovered near Ipoh, Perak, Federation of Malaya, Man, Vol.60. pp.1-3.