பத்துமலை வரலாறு - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை வரலாறு - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 3

தமிழ் மலர் - 08.02.2020

உலகிலேயே மிக நீளமான குகைகள்; மிக ஆழமான குகைகள்; மிக அதிசயமான குகைகள்; அத்தனையும் மலேசியாவில் தான் உள்ளன. அதே போல உலகிலேயே அதிகமான வௌவால் இனங்களும் மலேசியாவில் தான் உள்ளன. 


உலகில் ஏறக்குறைய 1200 வௌவால் இனங்கள் உள்ளன. அவற்றில் 12 விழுக்காட்டு இனங்கள் மலேசியக் குகைகளில் மட்டுமே வாழ்கின்றன. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

குகைகளில் ஸ்தலக்டிதைட் (Stalactites) என்று சொல்லப்படும் தொங்கு ஊசிப் பாறைகளும்; ஸ்தலக்மைட் (Stalagmites) என்று சொல்லப்படும் பொங்கு ஊசிப் பாறைகளும் இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

தொங்கு ஊசிப் பாறைகள் என்றால் குகைகளின் மேல் கூரையில் உருவாகி கீழ் நோக்கித் தொங்கும் கற்கள் ஆகும். நீர்த் துளிகளாகக் கசிந்து, பின்னர் இறுக்கம் அடைந்து தொங்கு ஊசிப் பாறைகளாக மாறுகின்றன.

பொங்கு ஊசிப் பாறைகள் என்றால் குகையின் தரையில் உருவாகி மேல் நோக்கி வளர்கின்ற சொட்டுக் கற்கள் ஆகும்.


Stalactites
தொங்கு ஊசிப் பாறைகள்

Stalagmites
பொங்கு ஊசிப் பாறைகள்

பத்துமலைக் குகைகளில் வௌவால்கள் (Eonycteris Spilla), மழைக் குருவிகள், குரங்குகள், பாம்புகள், முதுகெலும்பு இல்லா உயிர்கள் (invertebrates), பூச்சிகள், சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், பூரான்கள், மரவட்டைகள் (Diplopoda) என பல்வேறு உயிரினங்களும் பல இலட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வாழ்கின்றன.

இதில் பத்துமலையில் மட்டுமே காணப்படும் சிலந்திகளுக்கு லிபிஸ்தியஸ் பத்துன்சிஸ் (Liphistius Batuensis) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பத்துன்சிஸ் என்பதில் பத்து எனும் சொல் வருவதைக் கவனித்தீர்களா. இந்த வகைச் சிலந்திகள் உலகில் வேறு எங்கும் இல்லை.

Ridley, H.N. 1899. Caves in the Malay Peninsula: Appendix. Report of the British Association for the Advancement of Science 1898


ஆதிகால மனிதர்கள் வருவதற்கு முன்பு இருந்தே அவை அங்கே வாழ்ந்து வருகின்றன. ஏறக்குறைய 20 அல்லது 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதர்கள் பத்துமலைக் குகைகளில் குடியேறி இருக்கிறார்கள். ஆனால் இந்த உயிரினங்களோ பல இலட்சம் ஆண்டுகளாக அங்கே ராஜ தர்பார் நடத்தி இருக்கின்றன்.

பத்துமலையில் மொத்தம் ஐந்து குகைகள் உள்ளன. மூன்று பெரிய குகைகளும் இரு சிறு குகைகளும் உள்ளன. ஆகப் பெரியது ஆலயக் குகை (Cathedral Cave - Temple Cave). அதுதான் ஆக உச்சத்தில் இருக்கும் குகை.

பத்துமலையின் அடிவாரத்தில் மூன்று சிறிய குகைகள் உள்ளன. ஒன்று கலைக்கூடக் குகை அல்லது இராமாயணக் குகை (Ramayana Cave). இன்னொன்று அருங்காட்சியகக் குகை (Art Gallery Cave). 


மற்றும் ஒரு குகை. அதன் பெயர் கரும் குகை (Dark Cave). பிரதான ஆலயக் குகைக்குச் சற்று கீழே இடது புறத்தில் உள்ளது. இந்தக் குகையின் நீளம் 850 மீட்டர். குகைக்குள் செல்ல டிக்கெட்டின் விலை 35 ரிங்கிட். வழிகாட்டிகள் உள்ளனர். தற்சமயம் இந்தக் குகைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப் படுவது இல்லை.

1860-ஆம் ஆண்டுகளில் பத்துமலைச் சுற்று வட்டாரத்தில் சீனர்கள் நிறையவே காய்கறிகள் பயிர் செய்து வந்தனர். காய்கறிகளுக்கு உரம் தேவைப் பட்டது. பத்துமலைக் குகைகளில் இருந்த வௌவால் சாணத்தை உரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பத்துமலைக் குகைகளில் மில்லியன் கணக்கில் வௌவால்கள். எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. அவற்றின் சாணங்கள் பல அடி உயரத்திற்கு உயர்ந்து போய் இருந்தன. அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைத்து எடுத்து விட்டார்கள்.


அப்படி சாணத்தைத் தோண்டிக் கரைத்து எடுக்கும் போது, அங்கே இருந்த ஆதிவாசிகளின் பழம் பொருட்கள் எல்லாம் உடைபட்டு நொறுங்கிச் சேதம் அடைந்து விட்டன. பத்துமலையின் வரலாற்றைச் சொல்ல எந்த ஒரு முக்கியமான அரும் பொருட்களும் கிடைக்காமல் போய் விட்டன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெசிசி (Besisi) ஆதிவாசிகள் பயன்படுத்திய உலோகப் பொருட்கள், பண்டு பாத்திரங்கள், அணிகலன்கள் அனைத்துமே சிதைவுற்றுப் போயின. அப்படிச் சொல்வதை விட காணாமல் போய் விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

மலேசியாவில் உள்ள குகைகளின் பட்டியல் வருகிறது பாருங்கள்.

சபா - 10
சரவாக் - 239
கெடா- 1
கிளந்தான் - 3
பகாங் - 4
பேராக் 4
பெரிலிஸ் - 2
சிலாங்கூர் - 1
திரங்கானு - 1

(https://en.wikipedia.org/wiki/List_of_caves_in_Malaysia)

மலேசியக் குகைகளின் இரகசியங்கள் பலருக்கும் தெரியாது. சரவாக்கில் புகழ்பெற்ற ஒரு தேசிய வனப் பூங்கா உள்ளது. அதன் பெயர் முலு வனப் பூங்கா (Mulu National Park). இந்தப் பூங்காவை உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்து இருக்கிறார்கள். 


2001-ஆம் ஆண்டே அந்த அங்கீகாரம் கிடைத்து விட்டது. உலகின் மிக நீளமான குகை எனும் சிறப்புத் தகுதியையும் சரவாக் முலு குகை பெற்று விட்டது. சரி.

பத்துமலைக் குகைகளில் வாழ்ந்த பெசிசி ஆதிவாசிகள் ஆலயக் குகையின் மேல் பகுதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் புலிகளுக்கும் கரடிகளுக்கும் பஞ்சம் இல்லை. அதனால் தான் பெசிசி ஆதிவாசிகள் குகையின் மேலே இருந்த பகுதிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தப் பெசிசி ஆதிவாசிகளுக்குப் பின்னர் வந்தவர்கள் தான் தெமுவான் (Temuan) பூர்வீகக் குடிமக்கள். தெமுவான் மக்கள் வாழ்ந்த போது கீழே ஒரு கிராமம் இருந்து இருக்கிறது. அதன் பெயர் குவா பத்து.

அந்தக் கட்டத்தில் அங்கே ஈயம் விளையாடி இருக்கிறார்கள். நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்து இருக்கின்றன. இது 1824-ஆம் ஆண்டு வரலாற்றுப் பதிவு.


அது மட்டும் அல்ல. மேலே பெரிய குகையில் அதாவது ஆலயக் குகையில் கிடைத்த வௌவால் சாணத்தைப் பதப்படுத்த ஒரு தொழிற்சாலையையே கட்டி இருக்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை அடிவாரத்தில் இயங்கி இருக்கிறது.

வௌவால் சாணத்தை எடுத்து வர சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீனக் கொத்தடிமைகள் அல்லது ஒப்பந்தச் சீனக் கூலிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஏறிப் போவதற்குப் படிகள் இல்லை. இப்போது மாதிரி மேலே ஏறிப் போய் அழகு பார்க்கும் படங்களைச் செல்பிகளாக எடுத்து பேஸ்புக்; வாட்ஸ் அப்பில் போட்டு பெருமைபட்டுக் கொள்ளவும் சான்ஸ் இல்லை.

இப்போது சிலரின் செல்பி படங்களைப் பார்க்கும் போது என்னவோ இமயமலையில் ஏறி சாதனை செய்துவிட்டது போல போஸ் கொடுத்து இருப்பார்கள். விடுங்கள். வீண் பொல்லாப்பு வேண்டாமே.


ஆக அந்தக் காலத்துப் பத்துமலைச் சீனர்கள் காண்டா கம்பில் வாளிகளை மாட்டிக் கொண்டு ஏறி இறங்கி வந்து போய் இருக்கிறார்கள். காட்டுவழிப் பாதைகள். ஏறிப் போவதற்கு ஒரு பாதை. இறங்கி வருவதற்கு ஒரு பாதை.

இறங்கி வரும் பாதையில் மிதிப் பட்டைகளை வைத்து இருக்கிறார்கள். வௌவால் சாணம் ஈரப் பசை கொண்டது. ரொம்பவே கனமானது. நாற்பது ஐம்பது கிலோ என்றால் சாதாரண விசயமா.

அப்படி போய் வந்த சீனர்களில் பலர் புலிகளுக்கும், கரடிகளுக்கும், மலைப்பாம்புகளுக்கும் இரையாகிப் போய் இருக்கிறார்கள். இது எல்லாம் பத்துமலை வரலாற்றில் வரும் ஒவ்வொரு அத்தியாயங்கள். பலருக்கும் தெரியாத இரகசியங்கள்.

அந்தக் காலத்து ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த ஆவணங்கள். அவை இப்போது மலேசியாவில் அலைந்து தேடினாலும் கிடைக்கப் போவது இல்லை. எல்லாமே கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகங்களில் ஆவணங்களாகப் படிவங்களாக டிஜிட்டல் முறையில் இருக்கின்றன. அவற்றை இணையத்தில் அலசிப் பிரித்து எடுப்பதே பெரிய வேலை. பல மணி நேரங்கள் பிடிக்கும். சரி.


1830-ஆம் ஆண்டுகளில் குவா பத்து (Goa Batu) கிராமத்தில் மலேரியா நோய் பரவி சில நூறு பேர் இறந்து விட்டார்கள். மலேரியா ஒரு தொற்று நோய்; அது கொசுவினால் பரவுகிறது என்று நாலும் தெரிந்த நல்லவர்கள் சிலர் சொல்லப் போய், குவா பத்து கிராமத்தில் ஒரு பெரிய அமளி துமளியே நடந்து இருக்கிறது.

கீழே இருந்தவர்கள் பெரும்பாலோர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பத்துமலைப் பெரிய குகைக்குப் படை எடுத்துப் போய் டேரா அடித்து விட்டார்கள். அந்தச் சமயத்தில் தெமுவான் பூர்வீக மக்கள் அங்கே வாழ்ந்த காலக் கட்டம். அப்படி போனவர்கள் பெரும்பாலோர் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்த சீனர்கள்.

தமிழர்களும் போய் இருக்கிறார்கள். அவர்கள் தான் முருகன் சிலையை வைத்து முதன் முதலில் சாமி கும்பிட்டு இருக்கிறார்கள். பின்னர் காலத்தில் பத்துமலைக்குச் சென்ற தம்புசாமிப் பிள்ளையிடம் சொல்லப் போய் அதுவே இப்போதைக்கு உலகளவில் பெயர் பெற்று விளங்குகிறது.


சீனர்களும் தமிழர்களும் ஐரோப்பியர்களும்  வருவதற்கு முன்னரே பத்துமலைக் குகைகளில் தெமுவான் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அப்படிப் பார்க்கும் போது பத்துமலைக் குகையை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் தெமுவான் பழங்குடி மக்களே.

1878-ஆம் ஆண்டு பத்துமலைச் சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்தவர் அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே (William Hornaday). அவர் தான் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்குச் சொன்னவர்.

இவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருடைய பெயர் எச்.சி. செயர்ஸ் (H. C. Syers). 1890-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைப் போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.

இவர்கள் இருவரும் பத்துமலைப் பகுதிக்கு வேட்டையாட போய் இருக்கிறார்கள். என்ன வேட்டை என்று கேட்கிறீர்களா. சும்மா ஒரு யானை வேட்டை தான். 


இந்தியாவில் தான் யானைகளைச் சுட்டு வீழ்த்தி, அந்தர்ப்புர அம்ச ராணிகளிடம் அழகு காட்டினார்கள் என்றால் இங்கேயும் பழக்க தோசம் விடவில்லை. இருந்தாலும் நல்லதே நடந்து இருக்கிறது.

அப்போது பத்து குவா கிராமத்தில் வாழ்ந்தவர்கள் பத்துமலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

பத்துமலையின் ஆலயக் குகைக்கு குவா லாடா (Gua Lada) அல்லது மிளகாய்க் குகை என்று பெயர் வைத்ததும் வில்லியம் ஹோர்னடே தான். வௌவால்களின் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படி பெயர் வைத்து அழைத்து இருக்கிறார்.

ஒரு வௌவாலா இரண்டு வௌவாலா. மில்லியன் கணக்கில் வௌவால்கள். குகையில் நுழைந்த போது கணக்கு வழக்கு இல்லாத வௌவால்கள் கூட்டம். அவற்றின் பிழுக்கை நாற்றம். முகத்தில் துணியை வைத்துக் கட்டிக் கொண்டு சுற்றிப் பார்த்து பிரமித்துப் போய் விட்டார்கள். அங்கு வாழந்த பூர்வீக மக்களை சக்குன் என்று அழைத்து இருக்கிறார்கள். 


பத்துமலைக் குகையில் இருந்த வௌவால்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போனதற்கு இந்தப் பூர்வீக மக்களும் ஒரு காரணம் என்றும் வில்லியம் ஹோர்னடே சொல்லி இருக்கிறார். பூர்வீக மக்களின் வாழ்வதாரப் பொருளாக வௌவால்கள் விளங்கி இருக்கின்றன.

சான்று: Liz Price, History of Batu Caves; http://spaj.ukm.my/jurnalarkeologi/index.php/jurnalarkeologi/article/view/36

(தொடரும்)