ரஜினி முதல்வரானால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி முதல்வரானால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மே 2017

ரஜினி முதல்வரானால்

'நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கு' என அதே பல நூற்றாண்டுக் காலத்து டயலாக்கை மீண்டும் சொல்லிப் பரபரப்பாக்கி உள்ளார் ரஜினி. 



தலைவா வா; தலைமை ஏற்க வா, உங்களைத் தான் நம்புது இந்த பூமி; எங்களுக்கு இனி நல்ல வழி காமி' என இவ்வளவு நாள் கை காசு போட்டு போஸ்டர் அடித்து ஆடு, மாடுகளைச் சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள், இப்போதுதான் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள்.
 
எத்தனை நாளைக்கோ...? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் அரசியலில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவார் என கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம்...

*ஒரு பவுன் தங்ககாசு திட்டம்*

அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது நாம் தானே. அதனால், அந்த ஒரு பவுனை மறுபடியும் அவரவர் அக்கவுன்ட்டுக்கே போட்டுவிடும் திட்டத்துக்குப் பெயர் தான் `ஒரு பவுன் தங்கக்காசு திட்டம்'. இது அந்த 15 லட்ச ரூபாய் மாதிரி எப்ப வரும்? எப்படி வரும்?னு பயப்பட தேவையில்லை. வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

*அண்டா சட்டி' அருணாச்சலம் திட்டம்*

'அருணாச்சலம்' படத்தின்  `அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...' பாடலில் அண்டாவை கவிழ்த்தி கறுப்பு பெயின்ட் அடித்திருப்பார்கள் அல்லவா. அது போன்ற ஒரு பல்வகைப் பயன் அண்டா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.

*மீசை வெச்ச குழந்தையப்பா திட்டம்*

பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பொறியியல் படித்து, வேலை கிடைக்காமல் அதே பெற்றோர்களிடம் தண்டச் சோறு என திட்டு வாங்கி கொண்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான திட்டம் இது. அத்தகைய வி.ஐ.பி-க்களின் சோகமான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த அரசு அவர்களை மீசை வெச்ச குழந்தைகளாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்தச் சமூகத்தில் கைக்குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனைச் சலுகைகளையும் இவர்கள் அனுபவிக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

*அலுவலக அறைத் திட்டம்*

காவல் நிலையம் இல்லாத ஊர்களில் எல்லாம் குட்டிக் குட்டியாக 'ஆபிஸ் அறைகள் அமைக்கப்படும். ஊருக்குள் அடாவடி செய்யும் ரவுடிகள் அந்த அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரி பிரி என பிரித்து அனுப்பப் படுவார்கள். இதற்காக, `பாட்ஷா' படத்தில் வரும் பஞ்சாப் சிங்கைப் போல் பஞ்சாபில் இருந்து பயில்வான்கள் இறக்குமதி செய்யப் படுவார்கள்.

*தனி வழி திட்டம்*

தமிழகத்துக்குள் புதுச்சாலைகள் பல‌ ஏற்படுத்தப்படும். மதுரையில் இருந்து சென்னைச் செல்வதற்குத் திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்  வழியாகச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்ல ராமநாதபுரம், விருதுநகர் வழியாகச் சாலைகள் அமைக்கப்படும்.

நன்றி: ஆனந்த விகடன்