மலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூன் 2016

மலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி


சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மலாயாவுக்கு வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவு. அப்படி வந்த வணிகர்களில் மலாக்கா செட்டிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 1400-ஆம் ஆண்டுகளிலேயே... பரமேஸ்வரா காலத்திலேயே மலாக்காவில் வணிகம் செய்து இருக்கிறார்கள்.
 

மலாக்கா செட்டிகள் இப்போதைய மலாயாத் தமிழர்களின் தலைமுறைக் காலங்களுக்கு முந்தியவர்கள். பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சி செய்த போது அவருடைய அரண்மனையில் மலாக்கா செட்டிகள் நல்ல நல்ல பதவிகளில் இருந்து இருக்கின்றனர். தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் தளபதிகள், படைத் தளபதிகள் போன்ற பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். (சான்று: Shiv Shanker Tiwary & P.S. Choudhary (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.)
 

மலாக்கா செட்டிகள் தங்களின் அடையாளத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். 1414 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே, மலாக்கா மாநிலத்தில் வாணிகம் செய்ய வந்தவர்கள் இங்குள்ள மலாய் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டனர். தனி அடையாளத்துடன் வாழ்ந்தும் வருகின்றனர். பார்ப்பதற்கு மலாய் இனத்தவரைப் போன்று காட்சியளிக்கும் செட்டி மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர்.



தங்களுக்கு என்று தனி அடையாளத்தைக் கொண்டுள்ள இவர்கள் அதே பாரம்பரியத்துடன் கலைகளை வளர்த்து வருகின்றனர். போர்த்துகீசியர், டச்சு, பிரிடிஷ், ஜப்பான் ஆகியவர்களால் இந்த நாடு ஆளப்பட்டாலும் இன்னும் தங்களின் அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 

பரமேஸ்வரா காலத்தில் மலாக்கா செட்டிகள் தங்களுக்கு என்று ஒரு சிறிய கோயிலை மலாக்கா புறநகர்ப் பகுதியில் கட்டிக் கொண்டார்கள். அதற்கு கஜபதி அம்மான் கோயில் என்று பெயரும் வைத்தார்கள். கஜபதி என்பதை கஜபேரம் என்றும் அழைத்தார்கள். கஜம் என்றால் யானை. கஜம் எனும் சொல்லில் இருந்துதான் Gajah எனும் சொல்லே உருவானது.

கஜ புரம் எனும் சொற்கள் மருவி காஜா பூராங் ஆனது. பின்னர் மலாக்கா காஜா பேராங் ஆனது. இப்போது சொல்கிறார்களே காஜா பேராங் அது கஜபதி எனும் சொல் தொடரில் இருந்து உருவானது. புரியுதுங்களா. (சான்று: Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas—Chitty ... By Samuel S. Dhoraisingam)
 

வரலாற்றை எப்படித் திருப்பிப் போட்டு எழுதினாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது. நம்மிடம் சரியான வலுவான சான்றுகள் இருக்கின்றன. எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஆதாரங்களைத் தூக்கிப் போட முடியும். லண்டன் வரலாற்றுப் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் சீனா பெய்ஜிங் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் அந்தச் சான்றுகள் பத்திரமாக இருக்கின்றன. அந்தக் காப்பங்களில் டிஜிட்டல் முறையில் அந்தச் சான்றுகளைப் பத்திரப் படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

எனக்குள் ஓர் ஆதங்கம். பரமேஸ்வரா காலத்திலேயே கடல்படை தளபதிகளாகவும், நிதி அமைச்சர்களாகவும் இருந்த மலாக்கா செட்டிகளுக்கு ஏன் பூமிபுத்ரா தகுதி இன்னும் வழங்கப்படவில்லை. மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். மலாக்கா செட்டிகளுக்கு கொடுக்கவில்லை.
 

மலாக்கா செட்டிகளுக்குப் பூமி புத்திரா தகுதி இல்லையா. இல்லை... கொடுக்கத் தான் மனசு இல்லையா. புரியவில்லை. மலேசியாவின் அரசியல் கட்சிகள் என்ன தான் செய்து கொண்டு இருக்கின்றன. நம் தலைவர்கள் ஏன் கேட்கவில்லை. பயமா இல்லை பதவி மேல் இருக்கிற பக்தியா? பாவம் அவர்கள். ஆயிரத்தெட்டு சமாசாரங்கள்.

மலாக்கா செட்டிகள் மாநில முதல் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஏன் என்பது மலாக்காவில் நடக்கும் மாபெரும் Who wants to be a Millionaire எனும் பெருவிழா.