கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 டிசம்பர் 2019

கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 2

தமிழ் மலர் - 31.12.2019

கேமரன் மலையில் பல நகரங்கள் உள்ளன. ரிங்லெட் (Ringlet), தானா ராத்தா (Tanah Rata), பிரிஞ்சாங் (Brinchang), திரிங்காப் (Tringkap), கோலா தெர்லா (Kuala Terla), கம்போங் ராஜா (Kampung Raja). அவற்றுள் கோலா தெர்லா என்பது ஒரு கிராமப்புற நகரம். 



அங்கு இருந்து இரண்டரை கி.மீ. உட்பாகத்தில் இச்சாட் எனும் ஆறு (Sungei Ichat) ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையில் 63 தமிழர்க் குடும்பங்களின் விவசாயப் பண்ணைகள். கடந்த ஐம்பது ஆண்டு காலமாக காய்கறிகள், பூந்தோட்டங்கள் அமைத்து தங்களின் வாழ்வாதாரத்தைப் பார்த்து வந்தார்கள். அதுவே அவர்களின் வாழ்வாதாரக் கலசம்.

இந்தத் தமிழர்க் குடும்பங்கள் அனைவரும் கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் இருந்து தற்காலிக நில உரிமத்தைப் பெற்று (Temporary Occupation Licence - TOL) விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் நில உரிமத்தை முறையாக, ஒரு சீரான அமைப்பில் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பித்து வந்து உள்ளனர். நில உரிமத்திற்கான கட்டணத்தையும் தவறாமல் கட்டி வந்து இருக்கின்றனர். 



விவசாயத்தில் காசு பார்க்கிறார்களோ இல்லையோ தங்களின் நில உரிமத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருந்து இருக்கின்றனர்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். கடந்த 2018 ஆண்டு வரை அவர்களின் நிலத்திற்கான நிலவரியை முறையாகக் கட்டி வந்து இருக்கிறார்கள். நிலவரியைக் கட்டியதற்கான அதிகாரப்பூர்வ ரசீதுகளும் அவர்களிடம் உள்ளன.

இருந்தும் விவசாய நடவடிக்கையால் கோல தெர்லா ஆற்றுக்குப் பக்கத்தில் ஓடும் சுங்கை இச்சாட் எனும் ஆற்றில் தூய்மைக் கேடுகள் ஏற்படுகின்றன என்று சொல்லி அந்தத் தமிழர்களின் பண்ணைகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்கி இருக்கிறார்கள். 



சில தினங்களுக்கு முன்னர் பகாங் மாநிலத்தின் நிலச் சுரங்க அமலாக்க அதிகாரிகள் அந்தத் தமிழர்களின் பண்ணைகளை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டுச் சென்று விட்டார்கள்.

சுருங்கச் சொன்னால், கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்து பண்ணைக் கூடாரங்களையும் பண்ணைத் தளவாடப் பொருட்களையும் இடித்துத் தள்ளி, அட்டகாசம் செய்துவிட்டுப் போய் விட்டார்கள்.

அவர்களுடன் கூட்டரசு எப்.ஆர்.யூ. கலகத் தடுப்புப் போலீசாரும் இணைந்து கொண்டனர். இந்த விவகாரம் நாடு தழுவிய நிலையில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 



சட்ட விரோதமாகப் பயிர் செய்தார்கள் என்பதே அமலாக்க அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

மறியல் செய்த தமிழர்களில் ஏழு பேரைப் பிடித்துக் கொண்டு போய் காவலில் வைத்தனர். பின்னர் அன்றைய தினமே ஜாமீனில் விடுவித்தனர்.

ஒரு கேள்வி. கேமரன் மலையில் பெர்த்தாம், திரிங்காப், பிரிஞ்சாங், கம்போங் ராஜா போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான பண்ணைகள் உள்ளன. அவற்றில் சில சட்ட விரோதமான பண்ணைகளும் உள்ளன. இல்லை என்று சொல்ல முடியாது. இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தம் இல்லாத சில பல பண்ணைகள்.



நேற்று வந்த நேபாள் வாசிகளும் வறுமையில் வந்த வங்காளதேசிகளும் கள்ளத் தனமாகப் பயிர் செய்து வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்களின் சின்னச் சின்னப் பண்ணைகள். இவர்களும் கார், பங்களா என்று வாங்கி அசத்திக் கொண்டு வருகின்றனர். அது அவர்களின் வாழ்வாதாரம். கேமரன் மலையில் பலருக்கும் தெரிந்த விசயம்.

எவரையும் எந்த விவசாயியையும் நாம் குறை சொல்லவில்லை. ஓர் ஓப்பீட்டிற்காகத் தான் அவர்களைப் பற்றி சொல்ல வருகிறேன். மறுபடியும் சொல்கிறேன். அது அவர்களின் வாழ்வாதாரம். எப்படியாவது வாழட்டும். பத்தில் பதினொன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அதில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை.

வெளிநாட்டுக்காரர்களின் சின்னச் சின்னப் பண்ணைகள் என்பது கேமரன்மலை வாழ் இந்தியர்களுக்குச் சம்பந்தம் இல்லாத பண்ணைகள். இருந்தாலும் பாருங்கள். வெளிநாட்டுக்காரர்களின் பண்ணைகளை இடித்துத் தள்ளியதாக அண்மையச் செய்திகள் எதுவும் இல்லையே. 



அவ்வப்போது அந்த வெளிநாட்டுக்காரர்களைப் பிடித்துக் கொண்டு போவதும் விட்டு விடுவதும் ஒரு வழக்கமான நிகழ்ச்சி. சென்ற 2018 ஆண்டு வெளிநாட்டுக்காரர்கள் சிலரின் பண்ணைகள் உடைக்கப் பட்டன. உண்மை. ஆனாலும் சேதம் சில ஆயிரங்கள் மட்டுமே.

கோலா தெர்லாவில் தான் தமிழர்கள் கொஞ்சம் கூடுதலாகப் பண்ணைகள் வைத்து பயிர் செய்து வருகிறார்கள். இவர்கள் தான் சட்ட விரோதமான விவசாயிகளா? உண்மையிலேயே மற்ற சட்ட விரோதமான விவசாயிகளை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம்.

கோலா தெர்லா இந்திய விவசாயிகள் மட்டும் ஏன் பழி வாங்கப் பட்டார்கள். அதற்குத் தான் நியாயம் கேட்கிறோம்.

தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் சியோங் யோக் காங் (Chiong Yoke Kong). அவர் சொல்கிறார். பாரிசான் தலைமையிலான பகாங் நிர்வாகம் வேண்டும் என்றே தேவையற்ற மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. உண்மையிலேயே கோலா தெர்லாவில் நடந்து வரும் மாற்றங்களை அந்த அறிக்கைகள் பிரதிபலிப்பதாக இல்லை என்று சொல்கிறார்.



கேமரன்மலை நாடாமன்ற உறுப்பினர் ராம்லி முகமட் நூர் (Ramli Mohd Noor); சிலிம் ரிவர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் (Mohd Khusairi Abd Talib); ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட இந்திய விவசாயிகளைச் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் (illegal encroachers) என்று முத்திரை குத்தி அவதூறு செய்து வருகிறார்கள் என்றும் சொல்கிறார்.

அத்தகைய அவதூறானப் பேச்சுகள் அந்த இருவரின் பொறுப்பற்ற தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

நாடாமன்ற உறுப்பினர் ராம்லி முகமட் நூர்; சிலிம் ரிவர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப்;  இருவரும் அந்தத் தொகுதியில் உள்ள விவசாயிகளைப் பற்றி குறைந்த அளவிலான அறிவையும் புரிதலையும் மட்டுமே கொண்டு இருக்கிறார்கள் என்பதை அது நிரூபிக்கிறது.

கோலா தெர்லா விவசாயிகளை அவதூறு செய்யும் மாநில அரசின் கண்மூடித்தனமான அறிக்கைகள் மட்டுமே அந்த இருவரின் பார்வையில் படுகின்றன. மற்றபடி உண்மையான நிலவரம் அவர்களுக்குத் தெரியவில்லை.



கோலா தெர்லா விவசாயிகளின் தற்காலிக நில உரிமம் (Temporary Occupation Licence - TOL) 2009-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டதாக பகாங் மாநில அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது.

அதே சமயத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் இருந்து வெளியேறும்படி கோலா தெர்லா விவசாயிகளுக்கு 2009-ஆம் ஆண்டிலேயே அறிவிப்பு வழங்கப்பட்டு விட்டது. எனவே அந்த விவசாயிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் மாநில அரசாங்கம் கூறியது.

ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் கோலா தெர்லா விவசாயிகளின் தற்காலிக நில உரிமம் 2018-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்டு வந்து உள்ளது. அங்குள்ள விவசாயிகள் போதுமான ரசீதுகளையும் போதுமான சான்றுகளையும் தூக்கிப் போட்டு நம்மையே திணற வைக்கின்றனர். ஆக எங்கே கோளாறு நடந்து இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன். 



கோலா தெர்லா விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக அங்கே பயிர் செய்வதாகப் பத்திரிகையில் செய்திகள் வந்ததும் மாநில அரசாங்கம் திணறிப் போனது. மறுபடியும் வடிவேலு கணக்கில் ஒரு பல்டி. 1993-ஆம் ஆண்டு தான் முதன்முதலில் தற்காலிக நில உரிமம் வழங்கப் பட்டது என்று அட்டகாசமான அந்தர் பல்டி.

மறுபடியும் நன்றாக அலசிப் பார்த்ததில், கோலா தெர்லா, சுங்கை இச்சாட் விவசாயிகளுக்கு 1969-ஆம் ஆண்டிலேயே தற்காலிக நில உரிமம் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பலரிடம் 1969-ஆம் ஆண்டு நில உரிமச் சான்றுகள் உள்ளன. சிலரிடம் 1970, 1971-ஆம் ஆண்டுகளுக்கான நில உரிம ரசீதுகளும் உள்ளன. என்னங்க சொல்லப் போகிறீர்கள்.

(In 1969-1971 or about 50 years ago, many farmers had received TOL. Pahang state government had mislead the public and defame the farmers based on lies)

ஆக கோலா தெர்லா, சுங்கை இச்சாட் விவசாயிகளின் மீது பகாங் மாநில அரசாங்கம் பொய்யான செய்திகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை அவமானப் படுத்தி அவதூறு செய்து வருகிறது. வெள்ளிடைமலை.



கோலா தெர்லாவில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று கோலா தெர்லா ஆறு. இந்த ஆற்றின் நீரைத் தான் சுத்தம் செய்து (Kuala Terla Water Treatment Plant) கேமரன் மலை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.

மற்றொன்று இச்சாட் ஆறு (Sungai Ichat). சின்ன ஆறு. இந்த ஆறு கோலா தெர்லா ஆற்றில் கலக்கிறது. இந்த இச்சாட் ஆறு, கோலா தெர்லா ஆற்றில் கலப்பதற்கு முன்னதாகவே நீர்ப்பிடிப்பு இடம் உள்ளது. இச்சாட் ஆற்றுக்கும் நீர்ப்பிடிப்பு இடத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அதிகத் தூய்மைக் கேட்டைக் கொண்டு இருக்கும் கோலா தெர்லா ஆற்றைக் கவனிக்க வேண்டும். சுங்கை இச்சாட் ஆற்றை அல்ல.

நீர்ப்பிடிப்பு இடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் கடந்த 50 ஆண்டு காலமாகப் தமிழர்கள் பயிர் செய்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைக் கேட்டை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி அவர்களின் பண்ணைகளை இப்போது அழித்து இருக்கிறார்கள். நியாயமே இல்லை. பாகுபாடு கொண்ட அமலாக்கம் போலவே பரிணமிக்கிறது.

பகாங் மாநில அரசாங்கத்தின் மீது தான் தப்பு. அவர்கள் தான் தப்பு செய்து இருக்க்கிறார்கள். விவசாயிகளின் தற்காலிக நில உரிமத்தை 2018-ஆம் ஆண்டு வரை புதுப்பித்து விட்டு மறு ஆண்டே (2019) அந்த நில உரிமத்தைத் தூக்கிப் போட்டு மிதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. சொல்லுங்கள்.

நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. 1969, 1970, 1971-ஆம் ஆண்டுகளுக்கான நில உரிம ரசீதுகள் உள்ளன. கட்டுரையாளர் மீது வழக்குத் தொடரப் படலாம். கவலை இல்லை.

கோலா தெர்லா, சுங்கை இச்சாட் விவசாயிகளின் நில உரிமை ரசீதுகளை நீதிமன்றத்தில் சாட்சிப் பொருட்களாக ஆவணப் படுத்தத் தயாராக இருக்கின்றோம். தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் சியோங் யோக் காங் அவர்களும் தக்க சான்றுகளை வைத்து இருக்கிறார்.

ஒரு செருகல். இனவாத அரசியல்வாதிகள் சிலர் எப்படியாவது இனவாத அனலைக் கிளறிக் கொண்டு தான் இருப்பார்கள். தங்களின் சுயநலத்திற்காக அடுத்த இனத்தைக் குறை காண்பதிலேயே சுகம் காண்பார்கள். காலத்தையும் கழிப்பார்கள்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உள்ளன. அதை எல்லாம் செய்ய மாட்டார்கள். சிறுபான்மை இனத்தவரை இளிச்சவாய இனத்தவர் என்று சொல்வார்கள். அப்படியே அவர்களின் வயிற்றை அடித்து; பாவம் அவர்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்வவார்கள்.

கோலா தெர்லா தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் போராட்ட நகர்வுகள் தொடரும்.