மலேசியப் போலீஸ் இந்திரா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியப் போலீஸ் இந்திரா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூலை 2014

இந்திரா காந்தி நீதி கேட்கிறார்



மலேசியாவின் போலீஸ் படைத் தலைவர் ஐ.ஜி.பி. காலிட் அபு பாக்கார். இவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடரப் போவதாக ஒரு சாமான்ய தமிழ்ப் பெண்மணி அறிவித்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் இந்திரா காந்தி. வயது 40. 

பேராக் மாநிலத்தின் ஈப்போ மாநகரில் ஒரு பாலர் பள்ளி ஆசிரியையாகப் பணி புரிகிறார். இந்தச் செய்தி மலேசிய மக்களை மட்டும் அல்ல. உலகத்தின் பார்வையையே ஈர்த்து வருகிறது.

இந்திரா காந்தியின் கணவர் பெயர் கே. பத்மநாதன். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். ஓர் ஆண். கரன் தினேஷ் (வயது 15). இரு பெண் பிள்ளைகள். தேவி தர்ஷினி (வயது 16). விரசன்னா டிக்சா (வயது ஐந்து). மனைவி இந்திரா காந்திக்குத் தெரியாமல் கணவர் பத்மநாதன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாத்துக்கு மதம் மாறினார். 

தன் பெயரை ரிட்ஸ்வான் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். கணவர் மதம் மாறினாலும், பிள்ளைகள் மூவரும் தாயின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்கள். 

ஒரு நாள் இந்திரா காந்திக்குத் தெரியாமல், பிள்ளைகளின் பிறப்பு பத்திரங்களை எடுத்துக் கொண்டு போய், இஸ்லாமிய இலாக்காவில் கொடுத்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி விட்டார். பிள்ளைகளையும் தன்னுடம் அழைத்துச் சென்று விட்டார். 

ஒரு தாய்க்குத் தெரியாமல் ஒரு தகப்பன், தம் பிள்ளைகளை மதம் மாற்றியது செல்லுபடி ஆகாது என்று இந்திரா காந்தி வழக்கு தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளாக அந்த வழக்கு நீதிமன்றத்தில் இழுபறியில் இருந்து வந்தது. 

அண்மையில் ஈப்போ உயர்நீதிமன்றம், இந்திரா காந்திக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இந்திரா காந்திக்குத் தெரியாமல் பிள்ளைகளை மதம் மாற்றியது செல்லாது என்று ஈப்போ உயர் நீதிமன்றம் அறிவித்தது. 

(Judicial Commissioner Lee Swee Seng ruled that, the conversion was unconstitutional because, under Articles 3, 5 and 11 of the Federal Constitution, the mother has equal right to raise her children in her own religion.) 

பிள்ளைகள் மீது Dua Kalimah Syahadah  (இஸ்லாத்தைத் தழுவுவதற்கான அறிவிப்பு) செய்யப் படாததால் அந்தப் பிள்ளைகள் மதம் மாற்றப்பட வில்லை என நீதிபதி லீ  ஸ்வீ செங் கூறினார். அந்தத் தீர்ப்பு வரலாற்றுப் பூர்வமானதாகக் கருதப் படுகிறது.

 அத்துடன் மதம் மாற்ற நடவடிக்கை என்பது, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐநா ஒப்பந்தத்திற்கு முரணாக அமைந்து இருக்கிறது என்றும் நீதிபதி சொன்னார். 

(Malaysian Government is a signatory to the Convention on the Elimination of all Forms of Discrimination Against Women and Convention on the Rights of the Child.) 


பிரச்சினை அதன் பின்னர்தான் ஆரம்பம் ஆனது. கணவர் பத்மநாதன் எனும் ரிட்ஸ்வான் அப்துல்லாவைக் கைது செய்து, பிள்ளைகளை தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கட்டளை. அந்தக் கட்டளையைப் போலீசார் நிறைவேற்ற வேண்டும். 

ஆனால், போலீசார் சுணக்கம் காட்டினர். போலீஸ் படைத் தலைவர் ஐ.ஜி.பி. காலிட் அபு பாக்கார் மௌனம் சாதிக்கின்றார். நீதிமன்றத்தின் ஆணையை ஐ.ஜி.பி. நிறைவேற்றத் தவறி விட்டார். அவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்து இருக்கிறேன் என்று இந்திரா காந்தி அறிவித்து இருக்கிறார். 

பிள்ளைகளின் பிறப்பு பத்திரங்களை எடுத்துக் கொண்டு போய், தாய்க்குத் தெரியாமல் மதம் மாற்றினால், சாதாரண ஒரு தாய் தான் என்ன செய்வாள்? மதம் மாறிய கணவனுக்கு அரசு இலாகாக்களின் துணையும் காவல் துறையினரின் துணையும் இருக்கின்றன. என்ன செய்வது என்று தெரியாமல் அந்தத் தாய் இப்போது தவிக்கின்றாள். 

கடைசிப் பெண் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே கட்டளையிட்டு விட்டது. இருந்தாலும், அந்தக் குழந்தையைத் தேடிக் கொடுக்க மனம் இல்லாதவர்களை என்ன செய்வது. அரசாங்க இயந்திரம் அமைதி காப்பது நியாயமா?


போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடரப் போவதாக, இந்திரா காந்தியின் வழக்குரைஞர் எம். குலசேகரன் கூறி இருக்கிறார். குலசேகரனுக்குத் துணையாக கே. சண்முகா, என். செல்வம் எனும் இரு வழக்குரைஞர்களும் உதவி செய்கின்றனர்.

சமயம் சம்பந்தப்பட்ட பராமரிப்பு வழக்கில், ஈப்போ உயர்நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை அமல்படுத்தத் தவறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது என்றார்.

இந்த உத்தரவுகளில் இந்திராவின் முன்னாள் கணவர் கே. பத்மநாதன் என்ற ரிட்ஸ்வான் அப்துல்லாவை கைது செய்தல்; இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்டு வருதல் ஆகியவையும் அடங்கும்.

இந்த உலகத்தில், நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணையை அமலாக்க மறுக்கும் ஒரே ஐ.ஜி.பி. மலேசிய ஐ.ஜி.பி.யாகத் தான் இருக்க வேண்டும் என்று, செய்தியாளர் கூட்டத்தில் வழக்குரைஞர் குலசேகரன் ஐ.ஜி.பி.யைச் சாடினார். அந்தச் சமயத்தில், குலசேகரனுடன் அவருடைய கட்சிக்காரர் இந்திரா காந்தியும் உடன் இருந்தார்.



நீதிமன்ற உத்தரவை ஐ.ஜி.பி. காலிட் அமல்படுத்தி இருந்தால், இந்திரா காந்தியின் இக்கட்டான நிலையைச் சுலபமாக தீர்த்து இருக்க முடியும் என்று வழக்குரைஞர்குலசேகரன் மேலும் கூறினார். நீதிமன்ற உத்தரவுகளை ஐ.ஜி.பி. அமல்படுத்தி இருந்தால், சட்டத் துறை தலைவர் குறுக்கிட வேண்டிய அவசியமே வந்து இருக்காது. 

ஐந்து ஆண்டுகால நீண்ட போராட்ட போராட்டத்தின் விளைவால் மன வேதனைக்கும், இன்னல்களுக்கும் ஆளான இந்திரா காந்தி, தன்னுடைய குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையும் பெற்று இருக்கிறார். 

இருந்தாலும், ஐ.ஜி.பி. நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் நஜிப்பின் தவறான ஆலோசனையாலும், சட்டத்துறை தலைவர் மேற்கொண்டுள்ள தவறான நடவடிக்கையாலும் இந்திரா காந்தி மனக் காயமும் பெரும் மன வேதனையும் அடைந்துள்ளார் என்று குலா மேலும் கூறினார்.

இப்படி வெளிப்படையாக தீர்ப்பு சொல்ல நீதிபதிகளுக்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும். அதை நீதிபதி லீ அவர்களிடம் பார்க்கின்றோம். இறுதியாக இந்திரா காந்தி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை.


 மலேசியா நாட்டில் ஒரு குழந்தையை மத மாற்றம் செய்யும் விவகாரம், இந்திய குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. பல இந்திய தாய்மார்கள் நட்டாற்றில் விடப்பட்ட பிணங்களாக மாற்றப் பட்டுள்ளனர். அந்த வகையில் பாலர் பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தி இந்தச் சிக்கலில் அகப்பட்டு இன்று வரையில் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

இது போன்ற பிர்ச்னைகளுக்கு ஒரு தீர்வாகக் குழந்தைகளின் இரகசிய மத மாற்றத்திற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்து உள்ளதாக ஏப்ரல் 2009 இல் அறிவிக்கப் பட்டது. பிரதமர் நஜிப் ரசாக்கின் அமைச்சரவை அந்த முடிவை எடுத்தது. மலேசியச் சட்டத் துறைக்கு அப்போது பொறுப்பு வகித்தவர் அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ். 


“தம்பதிகளுக்கு இடையில் மத மாற்றம் சம்பந்தமாகப் பிரச்னைகள் வரும் போது, பெற்றோர்கள் தங்களுடைய திருமணத்தின் போது பின்பற்றிய பொதுவான மதத்தின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு எடுத்து உள்ளது’ என்று அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறினார். 

(The cabinet decided that when it comes to issues of conversion of the spouse… the religion in which the children should be brought up must be in accordance to the common religion at the time of marriage.)

 “சட்டத்தில் மாற்றம் செய்யப்படும். அப்போது இரு பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்படுவது அனுமதிக்கப்படாது”, என்று அமைச்சர் நஸ்ரி கூறினார். 


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஏப்ரல் 2009 இல் அந்த அறிவிப்பு செய்யப் பட்டது. இன்று ஜூலை 1, 2014. இந்த நாள் வரையில், அப்படி ஒரு சட்டம் இயற்றப் பட்டதாகத் தெரியவில்லை.

இருந்தாலும், ஒரு பெற்றோருக்குத் தெரியாமல் இரகசியமாக இன்னொரு பெற்றோர் குழந்தையை மத மாற்றம் செய்வது, மலேசியாவில் பகிரங்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை.


மேல் விவரங்கள்