பினாங்கு தமிழர்களின் பொம்மலாட்டம் 1886 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பினாங்கு தமிழர்களின் பொம்மலாட்டம் 1886 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மே 2020

பினாங்கு தமிழர்களின் பொம்மலாட்டம் 1886

ஆலயம் தொழுவது சாலவும் நன்று; ஆலயம் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என ஆலயப் பழமொழிகள் நிறையவே உள்ளன. அந்த வகையில் ஆலயம் இல்லாமல் ஊர் இல்லை. ஓவியம் இல்லாமல் ஆலயம் இல்லை என்றும் சொல்லலாம். 


தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஆலய வழிபாடுகள் முதன்மை வகிக்கின்றன. அந்தக் கூறுகளில் ஆலயப் பொம்மை ஆட்டங்களும் ஒன்றாக பெருமை சேர்க்கின்றன. தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றாக உச்சம் பார்க்கின்றன.

தோல் பொம்மலாட்டம், மரப் பொம்மலாட்டம் என இரு வகையில் நிகழ்த்தப் படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இந்தக் கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette) என்று அழைக்கிறார்கள்.

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளைக் கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை மரங்களில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின்னர் வெட்டிச் செதுக்குவார்கள். 



நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வரலாற்றிலும் பொம்மலாட்டம் வரலாறு பேசுகிறது.

பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நகரத்தார்கள் வியாபாரம் செய்வதற்காக உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்து இருக்கிறார்கள். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பர்மா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்து இருக்கிறார்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாய்மரக் கப்பல்களின் மூலமாக நகரத்தார்கள் மலாயாவுக்கு வந்தார்கள். மிகச் சரியாகச் சொன்னால் 1816-ஆம் ஆண்டு. ஏறக்குறைய 80 நகரத்தார்கள் பாய்மரக் கப்பலில் பினாங்குத் தீவிற்கு வந்து இருக்கிறார்கள். வணிகம் செய்யத் தொடங்கினார்கள். 



அதன் பின்னர் பினாங்கில் இருந்து வியட்நாம், தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளுக்குப் பயணித்து இருக்கிறார்கள். வியட்நாமில் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் தான் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் மலாயாவுக்கு மீண்டும் வந்தார்கள்.

மலேசியாவின் முத்து நகரம் என பினாங்குத் தீவைத் சிறப்பித்துக் கூறுவார்கள். 1830-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் ஒரு கோயிலைக் கட்டுவதற்கு நகரத்தார்கள் விருப்பம் கொண்டார்கள்.

1850-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி பினாங்கு சாலையில் 138 எனும் எண் கொண்ட வீட்டை வாங்கினார்கள். சின்னதாக ஒரு கோயிலைக் கட்டி வழிபட்டு வந்தார்கள். 



அதன் பின்னர் பினாங்கு வாட்டர் பால் சாலையில் (Waterfall Road) ஐந்து (5) ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை 1854-ஆம் ஆண்டு வாங்கினார்கள்.

மூன்று ஆண்டுகள் கழித்து 1857-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி தண்ணீர்மலை தண்டாயுதபாணி கோயிலைக் கட்டினார்கள் (Nattukottai Chettiar’s Sri Thandayuthapani Temple). குடமுழுக்குச் செய்தார்கள். வரலாற்றுச் சான்றுகளின் வழி அறிகிறோம்.

தண்ணீர்மலைக் கோயில் (Thanneermalai Temple) என்று பொதுவாக அழைக்கப் படுகிறது. பர்மாவில் இருந்து வரப்பட்ட தேக்கு மரங்களைக் கொண்டு சொக்கட்டான் வடிவத்தில் (chokkattan-style) ஆலயம் கட்டப் பட்டது. ஆலயத்தில் சுவர்களில் நூற்றுக் கணக்கான சமய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

அந்தக் கட்டத்தில் 1860-ஆம் ஆண்டுகளில் தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றான பொம்மலாட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். திருவிழாக் காலங்களில் பொம்மலாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளன.

நீங்கள் பார்க்கும் இந்தப் பொம்மலாட்ட வடிவங்களின் புகைப்படம் பினாங்கு, வாட்டர்பால் சாலை, நாட்டுக் கோட்டையார் ஆலயத்தில் 1886-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

ஆனால் அந்தப் புகைப்படத்திற்கு circa 1890-ஆண்டுகளில் (circa 1890) எடுக்கப்பட்டது என்று விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆக 150 ஆண்டுகளுக்கு முன்னால் மலாயாவில் தமிழர்களின் பொம்மலாட்டங்கள் அறிமுகமாகி உள்ளன.

அந்தப் புகைப்படம் 1886-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவும் எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் 1890-ஆண்டுக்குள் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

அந்தப் புகைப்படத்தைச் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஆர். லாம்பர்ட் (G. R. Lambert & Co.,) புகைப்பட நிறுவனம் எடுத்து இருக்கிறது. குஸ்தாவ் லாம்பர்ட் (Gustave Richard Lambert) என்பவரால் 1867-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது.

19-ஆம் நூற்றாண்டில் நூற்றுக் கணக்கான மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா படங்களை எடுத்துச் சாதனை செய்து இருக்கிறது. அனைத்தும் அரிதிலும் அரிதான வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

(G. R. Lambert & Co., photographic studio was established by Gustave Richard Lambert on 10 April 1867 at 1 High Street. Singapore.)

புகைப்படத்தின் விவரங்கள்:
பெயர்: Puppetry at the Nattukottai Chettiar Temple, Waterfall Road in Penang

அடையாள எண்:  KITLV 3654

காப்பகம்: Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies and Leiden University. Netherlands

உரிமை: Lambert & Co., G.R. / Singapore

பினாங்கு தண்ணீர்மலைக் கோயிலின் மலைக் குன்றும் மலைப் பூங்காவும் பழநி மலையை நினைவு படுத்துகின்றன. அதே போல தண்ணீர்மலைக் கோயிலின் அடிவாரத்தில் இருக்கும் முதற்கோயில் குறிஞ்சி நிலக் குமரனை நினைவுப் படுத்துகின்றன.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(26.05.2020)

சான்றுகள்:

1. Falconer, J. (1987). A vision of the past: A history of early photography in Singapore and Malaya: The photographs of G. R. Lambert & Co., 1880–1910 (p. 30). Liu, G. (Ed.). Singapore: Times Editions.

2. KITLV - 3654 - Lambert & Co., G.R. - Singapore - Klingalese puppetry at the Nattukottai Chettiar Temple, Waterfall Road in Penang - circa 1890

3. Leiden University Library, KITLV, image 3654 Collection page Southeast Asian & Caribbean Images (KITLV)