பாலி தீவின் இந்திய வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலி தீவின் இந்திய வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மே 2016

பாலி தீவின் இந்திய வரலாறு

பச்சைப் பசேல் வயல் காடுகள். பார்க்கும் பரவெளிக் காட்டில் பசுமைச் செல்வங்கள். பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்துக் கொள்ளும் பாமர மக்கள். பார்த்த பின்னும் பார்க்கச் சொல்லும் பாலியப் பெண்கள். நடையழகில் அழகின் அழகுகள். அத்தனையும் சொர்க்க வாசலின் சொப்பனச் செல்வங்கள். ஒய்யார ஒப்பனைகளில் ஓராயிரம் கவிதைகள். வண்ண வண்ணக் கலவைகளின் வானவில் கோலங்கள். 



எப்படி வர்ணிப்பது என்று எனக்கே தெரியவில்லை. அதுதான் உலகின் அதி அற்புதமான அழகிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவு. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா. சுந்தா தீவுகளுக்கு மேற்கிலும் ஜாவா லொம்பொக் தீவுகளுக்கு இடையிலும் அமைந்து உள்ளது. இந்தோனேசியா நாட்டின் 33 மாநிலங்கள் உள்ளன. அதில் பாலித் தீவு ஒரு சின்ன மாநிலம்.

அங்கே 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள். 42 இலட்சம் பேர். ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம். அதனை மௌனதினம் (Nyepi Day) எனச் சொல்கிறார்கள். அந்த நாளில் பாலித் தீவு முழுமைக்கும் விடுமுறை. யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள். 




பாலித் தீவில் இந்துக்களின் நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த உன்னதமான நிலையில் உள்ளன. அந்த வகையில் இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது. சரி.

பாலி தீவு வரலாற்றின் இந்தியப் பின்னணியைக் கொஞ்சம் மீள்பார்வை செய்து பார்க்கலாமே.

இந்தோனேசியாவை இந்தியர்கள் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அவர்கள் ஆட்சி செய்த நிலப்பகுதிகளில் பாலித் தீவும் ஒன்று. 




அதற்கு முன் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி அந்தப் பெயர்களைச் சொல்லி வந்தால் அந்தப் பெயர்கள் மனதில் நன்கு பதிந்துவிடும். மறக்க முடியாத மறக்கக் கூடாத பெயர்கள். தலைமுறை தலைமுறையாக நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர்கள்.


•    கி.பி. 358 இல் பூரணவர்மன்  உருவாக்கிய தர்மநகரப் பேரரசு.
•    கி.பி. 650 இல் ஸ்ரீ ஜெயாசேனா உருவாக்கிய ஸ்ரீ விஜய பேரரசு.
•    கி.பி. 650 இல் கலிங்கர்கள் உருவாக்கிய சைலேந்திரப் பேரரசு.
•    கி.பி. 915 இல் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு.
•    கி.பி. 732 இல் சஞ்சாயா உருவாக்கிய மத்தாராம் பேரரசு.
•    கி.பி. 1293 இல் ராடன் விஜயா உருவாக்கிய மஜபாகித் பேரரசு.
•    கி.பி. 1222 இல் ராஜாசா உருவாக்கிய சிங்காசாரி பேரரசு.


அதில் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு என்று ஒரு வாசகம் வருகிறதே அதைக் கவனியுங்கள். அந்த  ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) தான் பாலியில் ஓர் இந்தியப் பேரரசை உருவாக்கியவர். இவர் தான் வர்மதேவா அரச மரபையும் தோற்றுவித்தவர்.






இந்தோனேசியா பாலியில் சானூர் (Sanur) எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கே 1932ஆம் ஆண்டு ஒரு கல் தூணைக் கண்டு எடுத்தார்கள்.  அதன் பெயர் பெலாஞ்சோங் கல் தூண் (Belanjong pillar). சமஸ்கிருத மொழியிலும் பழைய பாலித் தீவு மொழியிலும் எழுதப்பட்டது.

பழைய பாலித் தீவு மொழி பல்லவ எழுத்து வடிவங்களைக் கொண்டது. (சான்று: A Short History of Bali: Indonesia's Hindu Realm - பக்கம்: 46). இந்தத் தூணில் உள்ள எழுத்துக்கள் கி.பி. 914 ஆம் ஆண்டில் வரிக்கப்பட்டவை ஆகும்.

அந்தக் கல் தூண், ஸ்ரீ கேசரி வர்மதேவா மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட படையெடுப்புகளை விவரிக்கின்றது. இப்போது பெலாஞ்சோங் ஆலயத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சந்தன மஞ்சள் பட்டுத் துணிகளைப் போர்த்தி ஒரு தெய்வப் பொருளாக அர்ச்சனை செய்து வருகின்றனர்.

மத்திய ஜாவாவை ஆட்சி செய்த சஞ்சாயா பேரரசிற்கும் (Sanjaya Dynasty) பாலித் தீவின் ஆட்சிக்கும் இடையே நிலவிய தொடர்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இன்னும் ஒரு விசயம். 




பேரரசு என்பது வேறு. அரச மரபு அல்லது வம்சாவளி என்பது வேறு. ஒரு பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கலாம். ஆனால் அது ஒரே பேரரசு தான். அந்த வகையில் வர்மதேவா பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள். சஞ்சாயா பேரரசையும் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பாலியில் வர்மதேவா பேரரசை உருவாக்கியவர் ஸ்ரீ கேசரி வர்மதேவா. கல் தூண் குறிப்புகளின் படி ஸ்ரீ கேசரி வர்மதேவா என்பவர் சைலேந்திரா பேரரசைச் சேர்ந்தவர். புத்த மதத்தைச் சார்ந்த மன்னர்.

சைலேந்திரா பேரரசு மத்திய ஜாவாவைச் சேர்ந்த ஒரு பேரரசு. மறந்துவிட வேண்டாம். ஸ்ரீ கேசரி வர்மதேவா புத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பாலித் தீவிற்குப் படையெடுத்துச் சென்றார். அப்படி படையெடுத்துச் சென்ற போது தொலை தூரத்தில் இருந்த மொலுக்கஸ் தீவுகளையும் கைப்பற்றி இருக்கிறார். ஆக அந்தப் பெலாஞ்சோங் கல் தூண் தான் இப்போதைக்குப் பாலித் தீவின் வரலாற்றைச் சொல்லும் முதல் வரலாற்றுப் படிவம் ஆகும்.




பாலியில் வர்மதேவா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa - கி.பி. 914)
•    ரத்து உக்ரசேனா (Ratu Ugrasena)
•    சந்திரபாயா சிங்க வர்மதேவா (Candra-bhaya-singha-Warmadewa - கி.பி. 962)
•    ஜனசாது வர்மதேவா (Janasadu Warmadewa - கி.பி. 975)
•    உதயனா வர்மதேவா (Udayana Warmadewa)
•    தர்மவங்சா வர்மதேவா (Dharmawangsa Warmadewa)
•    ஆயிர்லங்கா (Airlangga - கி.பி. 991-1049)
•    அனாக் உங்சு (Anak Wungsu - கி.பி. 1049)

பாலியில் ஜெயா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஜெயாசக்தி (Jayasakti - கி.பி. 1146-1151)
•    ஜெயா பாங்குஸ் (Jayapangus - கி.பி. 1178-81)

பெலாஞ்சோங் கல் தூண்ணைப் போல மேலும் ஒரு கண்டுபிடிப்பு. கற்களால் கட்டப்பட்ட ஆலயம். பாலித் தீவில் உபுட் எனும் இடத்தில் இந்தக் குகை கண்டுபிடிக்கப் பட்டது. 




அதன் பெயர் யானைக் குகை (Goa Gajah / Elephant Cave). குகைவாயிலில் யானையின் உருவம். புத்த மதமும் இந்து சமயமும் கலந்த சிற்ப வடிவங்களின் அலங்காரங்கள். தீய ஆவியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கோயில் கட்டப்பட்டது.

1365ஆம் ஆண்டு ஜாவாவில் ஒரு கவிதை எழுதப்பட்டது. கவிதையின் பெயர் தேசவர்ணனா (Desawarnana). அந்தக் கவிதையிலும் இந்தக் குகை ஆலயத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.

1950ஆம் ஆண்டில் இந்தக் குகைக் கோயிலை இந்தோனேசிய அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்தது. அதன் பின்னர் 1995 அக்டோபர் 19ஆம் தேதி அந்தக் கோயிலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.

ஜாவாவைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் பாலியைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. பாலியின் வர்மதேவா பரம்பரையைச் சேர்ந்த உதயானா வர்மதேவாவிற்கும் ஜாவாவைச் சேர்ந்த தர்மவங்சா பரம்பரையைச் சேர்ந்த ஓர் இளவரசிக்கும் கலப்புத் திருமணம்.

இவர்களுக்குப் பிறந்த மகன் ஆயிர்லங்கா. இந்த ஆயிர்லங்காதான் ஒரு காலத்தில் பாலியையும் ஜாவாவையும் ஒரு சேர ஆட்சி செய்தவர். பாலி வரலாற்றில் உச்சம் கண்டவர்.

இவரின் வழித்தோன்றல் தான் அதாவது ஆயிர்லங்காவின் வழித்தோன்றல் தான் பாலியின் ஜெயா வம்சாவளியினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் எனும் அரசர்கள்.

ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் அரசர்களின் அரசாட்சிக்குப் பின்னர் பாலியில் வர்மதேவா பேரரசு ஒரு முடிவிற்கு வந்தது.

1284ஆம் ஆண்டு ஜாவாவில் இருந்த சிங்காசாரி பேரரசின் கெர்த்தாநகரா (Kertanegara) எனும் அரசர் பாலியின் மீது படையெடுத்தார். வர்மதேவா அரசிற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார். அப்புறம் சில காலம் கழித்து கெர்த்தாநகராவும் மஜபாகித் பேரரசினால் தோற்கடிக்கப்பட்டார். இப்படித்தான் ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்கி இந்திய ஆளுமைகளுக்கு அஸ்திவாரமே இல்லாமல் செய்து விட்டார்கள்.

14ஆம் நூற்றாண்டில் சுமத்திராவில் மஜபாகித் பேரரசு தன்னிகரில்லாத அரசாக விளங்கியது. கடைசியில் பாலித் தீவும் மஜபாகித்தின் கரங்களில் வீழ்ந்தது. காஜா மாடா எனும் மஜபாகித் அரசர் பாலியின் மீது படையெடுத்துச் சென்று கெர்த்தாநகராவின் சிங்காசாரி அரசை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தார்.

பாலியில் சாம்பராங்கான் எனும் இடத்தில் மஜாபாகித்தின் தலைநகரம் உருவாக்கப்பட்டது. ஆக அதன் பின்னர் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மஜபாகித் பேரரசு பாலியை ஆட்சி செய்தது. அதாவது 17ஆம் நூற்றாண்டு வரை மஜபாகித் அரசர்கள் பாலியை ஆட்சி செய்தார்கள். அது ஒரு நீண்ட கால அரசாட்சியாகும். இந்த வரலாற்றுக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை இடம்பெறும்.

பாலியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:

பாலியில் இருக்கும் இந்துக் கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடம் இருந்து வந்தது. பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளைப் பற்றி இங்கே இருக்கும் நமக்கே தெரியாத நிலை. ஆனால் இந்த ரிஷிகளைப் பற்றி அங்கே பாலித் தீவில் சின்னக் குழந்தைகள்கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

திரிகால சந்தயம் (Trikala Sandhya) என்பது சூரிய நமஸ்காரம். அங்கே அனைத்துப் பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.அதே போல மூன்று வேளை காயத்ரி மந்திரத்தையும் சொல்ல வேண்டும். பாலி வானொலியில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தையும் அறிவிக்கிறார்கள்.

பாலி கோயில்களில் பணிபுரியும் இந்து பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. பாலித் தீவு முழுவதும் அரிசி வயல்கள். வயல்களில் விளைந்த அரிசியை ஸ்ரீ தேவி, பூ தேவி (Shri Devi / Bhu Devi) ஆகிய தெய்வங்களுக்குதான் முதலில் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் சிறு சிறு கோயில்கள் இருக்கும். இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாயிகள் தொழிலுக்குச் செல்கிறார்கள்.

அனைத்து திருவிழாக்களிலும் பாலி நடனம். அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களைக் கதைகளாகச் சொல்வார்கள். அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க  இந்துக் கலாச்சாரம், நடனம், இசை என இந்தத் தீவு உலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் வியப்பு எதுவும் இல்லை. ஆக இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்று சொல்வதிலும் தவறு இல்லை.