தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூலை 2016

தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1

தினத்தந்தி - மலேசியா – 18.03.2016

வெள்ளைக்காரர்கள் என்றைக்கு தமிழ்நாட்டில் காலடிகள் எடுத்து வைத்தார்களோ அன்றைக்குப் பிடித்தது தமிழர்களுக்கு ஏழரை நாட்டுக் கஷ்ட காலம்.  தமிழ் நாட்டிலும் சரி... மலேசியாவிலும் சரி... இலங்கையிலும் சரி... சகட்டு மேனிக்குச் சனி பகவானின் அஷ்டமக் கோலங்கள். ஏழு தலைமுறைகளுக்கும் அட்டகாசமான சனீஸ்வர மந்திரங்கள். 


அந்த மந்திரங்களில் தமிழ்மொழியும் பேஷாராகிப் போனது. போயி பாருங்க அண்ணாத்தே… இன்னாம சைட்டு கட்டி உடுரானுங்கோ.... தோடா ராசா கணக்கா இங்கிலீஸ்ல எழுதுறானுங்கோ… பேட் வேர்ட்ஸ் கூட உட்டுக்கிறானுங்கோ...  பேஜாருங்க… எனக்கும் மெர்சலா ஆச்சுங்கோ…

புரியுதுங்களா... புரியாவிட்டால் பரவாயில்லை. சென்னையில் இரண்டு வாரம் தங்கிவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும். சரி. தமிழர்களின் கதைக்கு வருவோம்.


தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. இடையில் வெள்ளைக்கார நாரதர்கள் வந்தார்கள். நேருவிற்கு ரோஜாப்பூ குத்தி நன்றாகவே அழகு பார்த்தார்கள். 



அழகு அழகாய் ஆடிப் பாடினார்கள். அட்டகாசமாய் அமர்க்களம் செய்தார்கள். ஆனால் பாவம் தமிழ்நாட்டுத் தமிழர்கள். பாவப்பட்ட ஜென்மங்களாகிப் போனார்கள். இப்போது பரிதவிக்கிறார்கள்.

இருந்ததும் சரி இல்லை. இருப்பதும் சரி இல்லை. என்னை ஏசினாலும் பரவாயில்லை. சரி. நம்ப கதைக்கு வருவோம்.

சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனி

1639-ஆம் ஆண்டில் சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். அதன் பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் பற்பல மாற்றங்கள். பற்பல திருப்பங்கள். அந்த மாற்றங்களில் புதிய ஒரு சகாப்தம். அந்தத் திருப்பங்களில் புதிய ஒரு பரிமாணம்.

ஆங்கிலேயர்கள் வலதுகாலை எடுத்து வைக்கவும் இல்லை. இடது காலை எடுத்து வைக்கவும் இல்லை. இரண்டு காலையும் சேர்த்து வைத்து தமிழ்மண்ணில் குதித்து இருக்கிறார்கள். அப்படித்தான் தமிழ் நாட்டில் இப்போதும்கூட நையாண்டியாகப் பேசிக் கொள்வார்கள்.

ஆங்கிலேயர்கள் கால் பதிக்கும் போது தமிழ் நாட்டில் மூலைக்கு மூலை சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள், நவாப்புகள், மேட்டுக்குடி பஞ்சாயத்துகள். இவர்களுக்குள் எக்கச் சக்கமான கருத்து வேறுபாடுகள். சண்டைச் சச்சரவுகள். ஆக அவர்களின் பலகீனங்களை ஆங்கிலேயர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் எனும் பழமொழியை மனப்பாடம் செய்து கொண்டு வந்து இருக்கிறார்கள்.

எங்கே அடித்தால் எப்படி வலிக்கும்


ஆங்கிலேயர்களிடம் எப்போதுமே ஒரு தாரக மந்திரம் இருந்தது. அதன் பெயர் என்ன தெரியுமா. பிரித்துவிடு வரித்துவிடு (Divide and Rule). உலகம் முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல ஒரு வாசகம். எங்கே அடித்தால் எப்படி வலிக்கும் என்பதற்கு இலக்கணம் எழுதியவர்களே சாட்சாத்… ஆங்கிலேயர்கள் தான். 




அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணக்கியர் இருக்கிறாரே அவரே தோற்றுப் போவார்... போங்கள். ஒருக்கால் அந்தச் சாத்திரத்தை ஆங்கிலேயர்கள் நன்றாகவே படித்துக் கரைத்துக் குடித்து இருக்கலாம். சொல்ல முடியாது.

நவீன காலத்துச் சாணக்கியவாதி மாக்கியவெல்லி. அவரின் கருத்துகளில் நையாண்டி, கேலி, பரிகாசம், கிண்டல், ஏளனம் என்று எல்லாமே இருக்கும். சாகசமான மாக்கியவெல்லிசம் என்று சொல்லலாம். அதைச் சார்க்கஸம் (Sarcasm) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அந்தச் சாகசத்தின் மொத்தச் சாகுபடியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இருக்கிறதை எல்லாம் அடித்துப் பிடித்தார்கள். பிழிந்து எடுத்தார்கள். இப்போது இருக்கும் தலைவர்களில் சிலர் மிச்சம் மீதியை உறிஞ்சி உறிஞ்சி எடுத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பெயர்கள் வேண்டாமே!

அந்தக் காலத்து தமிழ்ச் சிற்றரசர்கள் தொட்டதற்கு எல்லாம் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சொன்னேன். உண்மைதான். அந்த வகையில் தமிழர்களின் பலகீனத்தை ஆங்கிலேயர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு காய்களை நன்றாகவே நகர்த்தினார்கள். தமிழர்களின் எதார்த்த வெள்ளந்தித் தனத்தின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள். 




முதலில் தமிழ்நாடு விழுந்தது. அடுத்து தென் இந்திய மாநிலங்கள் விழுந்தன. அப்புறம் ஒட்டு மொத்த இந்தியத் துணைக் கண்டமே சரிந்து விழுந்து அதோகதியானது. அப்புறம் என்ன அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்கள் பலரின் முகவரிகளும் தொலைந்து போயின.

மெட்ராஸ் நிலப்பகுதி மெட்ராஸ் மாநிலம் ஆனது

அனந்த பத்மநாபன் நாடார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன், மருதநாயகம், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றவர்களைத் தெரியுமா. இவர்கள் தான் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டனர். இருந்தாலும் இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர். தப்பு. தூக்கிலிடப் பட்டனர்.

இவர்களில் மருது பாண்டியரின் மகன் துரைசாமி என்பவர் நம் பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அந்திம காலத்தில் அனாதையாக அரிச்சுவடி இல்லாமல் மறைந்தும்  போனார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். 1947-ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மெட்ராஸ் நிலப்பகுதி (The Madras Province) என்பது மெட்ராஸ் மாநிலம் ஆனது. இருந்தாலும் 1948-ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் தான் இந்தியாவுடன் இணைந்த கடைசி சமஸ்தானம் ஆகும்.




தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை முன்பு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்தன.

மொழிவாரியாக மாநிலங்கள்

இருந்தாலும், 1953-இல் மெட்ராஸ் மாநிலத்தின் வட பகுதிகள் தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திர மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. தமிழ் பேசும் தென் பகுதிகள் மெட்ராஸ் மாநிலத்தில் சேர்க்கப் பட்டது.

1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில் மெட்ராஸ் மாநிலமும் பிரிக்கப்பட்டது. மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இங்கு இருந்துதான் பிரச்சினைகள் தொடங்கின. அவை என்ன என்று பார்ப்போம். அதுதான் நம்முடைய இந்தக் கட்டுரையின் நோக்கமும் ஆகும். சரி.

நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அப்படிப் பிரிக்கப்படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். இதை யாராலும் மறுக்க முடியாது. மறுத்துப் பேசவும் முடியாது. மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலங்கள் யாருக்கு அதிகம் உரிமையாக உள்ளன. அதை வைத்துத்தான் சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்தார்கள்.




அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப் பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா? அந்தச் சமயத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர்.

ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் கால நேரத்திற்கு ஏற்றவாறு தலைகீழாய் மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப் பட்டன.

இந்தச் சமயத்தில் படாஸ்கர் கமிஷன் எனும் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலங்கள் யாரிடம் அதிகமாக உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை.

ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

தமிழகத்துக்கு திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்கள். ராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும் தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள் இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

இதில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்குத் திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.




1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி... புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்கள். அந்த மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப் பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது.

ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி பறிபோனது. நந்தி மலையும் பறிபோனது. நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்து ஆடுகிறதே பாலாற்றுப் பிரச்சினை. அந்தப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரமும் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதன் காரணமாகப் பல நிலப் பகுதிகளைத் தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது.

திருப்பதியைக் கொடுக்கிறோம்… அதற்குப் பதிலாக எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர்.

திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இல்லை என்றால் சென்னை நகரமும் கனவு நகரமாக மாறிப் போய் இருக்கும். அப்போதைய தலைவர்கள் உருப்படியாகச் செய்த ஒரு காரியம். நல்லதா கெட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள்

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று இங்கே எவரையும் நாம் பிரித்துப் பேசவில்லை. எல்லோருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அண்ணன் தம்பி உறவுகள். எவரையும் உயர்வு தாழ்வுடன் நாம் பார்க்கவும் இல்லை. 




மலாயாவுக்கு இங்கே வந்தவர்கள் கூட ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். ஒரே படுக்கையில் படுத்துப் புரண்டவர்கள் தானே. மாமன் மச்சான் என்று சொல்லி ரஜுலா கப்பலில் துருப்புச் சீட்டு விளையாடியவர்கள் தானே. 

ஆக, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தான் வரலாற்று ரீதியில் பார்க்கிறோம். மற்றபடி தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை.  பிரித்துப் பேசவும் இல்லை. சரிங்களா.

தமிழ்நாட்டைப் பிரிக்கும் போது ஆளாளுக்குப் பெரிய பெரிய தொடைச் சப்பைகளாக வேண்டும் என்று அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். பிய்த்துக் கொண்டும் போனார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.

மற்றபடி இது ஒரு வரலாற்று ஆவணம். இந்திய வரலாற்றைப் படிப்பதற்கு மட்டும் பத்து ஆண்டுகள் பிடித்தன என்பதைச் சொல்லிக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.

சென்னை விவகாரத்தில் தமிழ்நாட்டு கட்சிகள் சில பல அரசியல் போராட்டங்களை நடத்தின. பரவாயில்லை. ஆனால் கர்நாடகா விஷயத்தில் உஹூம்... தூங்கி விட்டார்கள். செம தூக்கம் போங்கள். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப் பட்ட தூக்கம். 

வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று நான் சொல்லவில்லை. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். என்ன சொல்லி எங்கே அடித்து என்ன பயன். சொல்லுங்கள்.

தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும்

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளையைத் தத்து கொடுத்துவிட்டு அது நடந்து போகிற அழகைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது. கட்டுரை தொடரும்.