பரமேஸ்வரா தங்க ஆபரணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா தங்க ஆபரணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஜூலை 2020

பரமேஸ்வரா தங்க ஆபரணங்கள்

தமிழ் மலர் - 06.07.2020

சிங்கப்பூரின் அழகிய சின்னம் கென்னிங் மலை. இயற்கை அன்னை கொஞ்சி விளையாடும் வசந்த கோலம். அதன் உச்சியில் ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் வளாகத்தில் ஒரு வரலாற்றுக் கண்டுபிடிப்பு. 1926-ஆம் ஆண்டில் மலையின் உச்சியில் ஒரு நீர் தேக்கம் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டிய போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.


சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அதிசயமான சில தங்க ஆபரணங்களைக் கட்டுமானத் தொழிலாளர்கள் கண்டு எடுத்தார்கள். கிடைத்த தங்க நகைகள்; நவரத்தின ஆபரணங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல.

அனைத்துமே 14-ஆம் நூற்றாண்டின் கலைநய எழில் வடிவங்கள். இந்திய ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்கள். அந்த நகைகள் 700 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதையுண்டு போய் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டது. 


தங்க நகைகளில் ஒளி வீசும் மோதிரங்கள்; பளிச்சிடும் காதணிகள். உடைகள் மீது பயன்படுத்தப்படும் தங்கச் சங்கிலிகள். சிறிய இரத்தினங்களைக் கொண்ட வளையல்கள். கால் கொலுசுகள். சீனா நாட்டுப் பீங்கான் களையங்கள், மண் பாண்டங்கள் மற்றும் அழகிய கண்ணாடித் துண்டுகள்.

மிக மிக அழகான நகைகள். அவற்றில் ஒரு நகை, காளி துர்கா தேவியின் தலை வடிவத்தைக் கொண்ட ஆயுதச் சங்கிலி. பொதுவாக அத்தகைய சிற்பக் கலை ஆபரணங்களைச் சுமத்திரா; ஜாவா தீவுகளில் தோண்டி எடுத்து இருக்கிறார்கள்.


1984-ஆம் ஆண்டில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் கென்னிங் மலையின் (Fort Canning Hill) ரகசியங்களைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கென்னிங் மலையின் உச்சியிலும் அதன் சரிவுப் பகுதிகளிலும் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் ஆய்வுகள் செய்தது.

ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பெரிய பெரிய ஆச்சரியத்தை அளித்தன. அந்த ஆய்வுகள் சிங்கப்பூர் கென்னிங் மலை உச்சியில் ஓர் அரண்மனை இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஓர் அரசப் பரம்பரையினர் வாழ்ந்ததற்கான தடயங்களையும் உறுதி செய்தன. ஐந்து சந்ததிகளைச் சார்ந்த அரசர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளையும் முன் வைத்தன. வேறு என்னங்க சொல்ல முடியும்.

(Records indicate that this may have been the home of a Palembang prince named Parameswara, who fled Temasek (Singapore) after a Javanese attack.)


இந்தக் கென்னிங் மலையை மகா மேரு மலை என்று முன்பு அழைத்தார்கள். அங்கேதான் இப்போதைய சிங்கப்பூரின் கென்னிங் மலை கோட்டை உள்ளது. மலாய் மொழியில் புக்கிட் லாராங்கான் (Bukit Larangan).

பழங்காலத்தில் இருந்தே இந்த மலையைப் புக்கிட் லாராங்கான் அல்லது தடைசெய்யப்பட்ட மலை என்று மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். பண்டைய காலத்து சிங்கப்பூரின் மன்னர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்கிற நம்பிக்கை. அத்துடன் அங்கு ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக நம்பப் பட்டது

சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) இங்குதான் தன் மாளிகையைக் கட்டினார். பின்னர் மற்ற ஆளுநர்களும் அந்த மாளிகையைப் பயன்படுத்தினார்கள். 


1861 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இதற்கு கென்னிங் கோட்டை என மறு பெயர் வழங்கப்படும் வரை இது அரசு மலை என்று அழைக்கப் பட்டது. இப்போது கென்னிங் கோட்டை நீர்த் தேக்கம் மற்றும் கென்னிங் கோட்டை பூங்காவின் இருப்பிடமாகும்.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமன் இதற்கு வைத்த பெயர் மேரு மலை. இந்தப் பெயர் பண்டைய தென்கிழக்கு ஆசிய கலாச்சாரத்தில் தெய்வீகத் தன்மையுடன் தொடர்பு கொண்டது.

மேரு மலை எனும் பெயரில் ஜாவா, சுமத்திரா, கலிமந்தான், போர்னியோ தீவுகளில் சில பல மேரு மலைகள் உள்ளன. கெடாவில் உள்ள குனோங் ஜெராய் மலையின் பெயரும் மேரு மலை தான்.


இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, மியன்மார், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் மேரு மலை எனும் பெயரில் மலைகள் உள்ளன.

கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்திற்கு மேருமலைக் கோட்டை என்று சூரியவர்மன் பெயர் வைத்து இருக்கிறார்.

அந்த வகையில் சிங்கப்பூர் மலைக்கு மேரு மலை என பெயர் வைக்கப் பட்டது. அங்கே தான் நீல உத்தமன் தன் அரண்மனையை முதன்முதலில் கட்டி இருக்கிறார். அங்கே இருந்து தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இடத்தை மாற்றி விட்டார்.

(Fort Canning hill itself represented Mount Meru, the seat of the gods in Hindu-Buddhist mythology, which was associated with kingship and divinity in ancient Southeast Asian culture. Building a palace on a hill would have helped Nila Utama to assert his role as a semi-divine ruler.)


அதன் பிறகு அந்த இடம் அரசப் பரம்பரையினரின் கல்லறைகள் இடமாக மாறி இருக்கிறது.

சிங்கப்பூர் மேரு மலை 14-ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த பண்டைய சிங்கப்பூராவின் மையமாக இருந்து உள்ளது. அரசியல், மதம், வணிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது.

1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்களை விவரித்து இருக்கிறார்.


முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பான் ஜூ மக்கள் நேர்மையானவர்கள் என்று வர்ணிக்கப்பட்டனர்.

அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தலைமுடியை கட்டையாக வைத்து இருந்தார்கள். தங்கம் கலந்த சந்தன தலைப்பாகையை அணிந்து இருந்தார்கள்.  அவர்கள் சிவப்பு நிற துணிமணிகளை அணிந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார். 


அந்த நேரத்தில் தான், சிங்கப்பூர் மேரு மலையில் மனிதர்களின் குடியேற்றம் கைவிடப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

அந்தப் புலம்பெயர்வு காலத்தில் தான் அந்த நகைகளையும் அங்கேயே விட்டுச் சென்று இருக்கிறார்கள். இந்த நகைகள் தான் பரமேஸ்வரா சிங்கப்பூரை ஆட்சி செய்த வரலாற்றை உறுதி படுத்துகின்றன.

கென்னிங் மலை குடியேற்றத்தின் இடிபாடுகள் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டன.

1823-ஆம் ஆண்டில் ஜான் கிராபர்ட் (John Crawfurd) என்பவர் சிங்கப்பூரின் ஆளுநராக இருந்தார். அவர் இந்திய தீவுக் கூட்டத்தின் வரலாறு (History of the Indian Archipelago) எனும் வரலாற்று நூலை எழுதி இருக்கிறார். அதில் கென்னிங் மலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்.

இடிபாடுகளுக்கு இடையில் ஒரு பழங்கால பழத்தோட்டம். அங்கே மண்பாண்டங்கள் மற்றும் சீன நாணயங்களின் துண்டுகள் கிடைத்தன. அவற்றில் 10-ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்த சோங் வம்சாவளியினரின் (Song Dynasty) நாணயங்களும் கிடைத்தன என எழுதி இருக்கிறார்.


கென்னிங் மலையின் உச்சியில் ஒரு கோயில் இருந்து இருக்கலாம். வாய்ப்புகள் உள்ளன. 40 சதுர அடி பரப்பளவில் கோயில் போன்ற ஓர் அமைப்பின் இடிபாடுகள் இருந்தன. அங்கு ஒரு கல்லறை இருந்து இருக்கலாம். இருந்தாலும் பரமேஸ்வரா அங்கு அடக்கம் செய்யப் பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார்.

கென்னிங் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சூர் லாரங்கன் அல்லது "தடை செய்யப்பட்ட நீரூற்று" (pancur larangan) என்று அழைக்கப்படும் ஒரு நீரூற்று இருந்தது. அங்கு பண்டைய காலத்து மன்னர்களின் வீட்டுப் பெண்கள் நீராடி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தப்படும் அனைத்து கப்பல்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க இந்த நீரூற்று பயன்படுத்தப் பட்டு உள்ளது. குடிநீர் தேவை அதிகமானதால் நீரூற்றும் வறண்டு போனது. அப்புறம் என்ன வருகிற கப்பல்களுக்கு எல்லாம் சுத்தமான குடிநீர் வழங்குவது என்றால் சாதாரண விசயமா?


அதனால் மலையைச் சுற்றி கிணறுகளைத் தோண்டி இருக்கிறார்கள். அந்தக் கிணறுகளின் சிதைவுகள் இன்றும் உள்ளன.

1819 பிப்ரவரி 6-ஆம் தேதி ஜொகூர் - சிங்கப்பூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேஜர் வில்லியம் பர்குவர் (Major William Farquhar), கென்னிங் மலையின் உச்சியில் யூனியன் ஜாக் எனும் பிரிட்டிஷ் கொடியை ஏற்றினார்.

அதே நாளில் சிங்கப்பூரின் முதல் தளபதியாக வில்லியம் பர்குவர் நியமிக்கப் பட்டார். அன்றைய தினம் தான் கென்னிங் மலை எனும் பெயர் சிங்கப்பூர் மலை என மாற்றம் கண்டது.

1822-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் தாவரவியல் பூங்காவையும் ராபிள்ஸ் இங்கு தான் நிறுவினார். 48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சிங்கப்பூரில் சோதனை பயிர் சாகுபடிக்கு (experimental crop cultivation) ஒதுக்கப்பட்டது. ஆனால் சோதனை தோல்வி அடைந்தது. பின்னர் அந்தத் தோட்டம் 1829-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.


கென்னிங் மலையில் ஒரு கிறிஸ்தவ கல்லறை இருந்தது, இது சிங்கப்பூரின் ஆரம்பகால ஐரோப்பியர்களின் இடுகாடாக இருந்தது. 1822-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இப்போது இல்லை.

1927-ஆம் ஆண்டில் அங்கே நீர்த்தேக்கக் கட்டுமானம் (Fort Canning Service Reservoir) தொடங்கியது. 1929-ஆம் ஆண்டில் நிறைவு அடைந்தது. அப்போது தான் பரமேஸ்வரா அல்லது அவர் சார்ந்த மூதாதையர்களின் ஆபரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்தக் கென்னிங் மலையில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப் பட்டது. 14-ஆம் நூற்றாண்டின் சிங்கப்பூரின் கடைசி ஆட்சியாளராக இருந்தவர் பரமேஸ்வரா.  அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான இடமாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

இருந்தாலும் அந்தக் கல்லறை பரமேஸ்வராவின் கல்லறையாக இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. என்னுடைய கருத்தும் அதுவே.

ஏன் என்றால் பரமேஸ்வரா மலாக்காவில் இறந்து போனார். போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். வாய்ப்புகள் அதிகம். கென்னிங் மலையில் அடக்கம் செய்யப் பட்டதற்கான எந்த ஆதாரமும் இது வரையிலும் கிடைக்கவில்லை.

மலாக்காவில் இறந்து போனவரின் உடலைச் சிங்கப்பூர் கென்னிங் மலைக்கு கொண்டு வந்து இருப்பார்களா? அந்தக் காலத்தில் மலாக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு ஓர் உடலைச் சுமந்து வர 20 நாட்கள் பிடித்து இருக்கலாம். சாலை வசதிகளும் இல்லை. எல்லாமே காட்டுப் பாதைகள். ஒற்றையடிப் பாதைகள்.

ஆகவே கென்னிங் மலையில் உள்ள கல்லறைக்கும் பரமேஸ்வராவுக்கும் எவ்வாறு தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பரமேஸ்வரா என்கிற மன்னர் தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். அவர் தான் சிங்கப்பூரின் கடைசி மன்னர். அவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த முதல் மன்னர். வரலாறு என்றைக்கும் பொய் பேசாது என்று பரமேஸ்வரா ராகம் பூபாளம் பாடுகின்றது.

சான்றுகள்:

1. https://www.roots.sg/Content/Places/surveyed-sites/Archaeological-Excavation-Site-at-Fort-Canning-Park

2. https://eresources.nlb.gov.sg/history/events/2ebfebad-a4d5-4bbb-bf43-c7db6e30eb7d

3. R.O. Winstedt (November 1928). "Gold Ornaments Dug Up at Fort Canning, Singapore'". J.M.B.R.A.S. [Journal of the Malayan Branch of the Royal Asiatic Society]. 6 (4): 1–4.

4. C.M. Turnbull (30 October 2009). A History of Modern Singapore, 1819–2005. NUS Press. pp. 21–22. ISBN 978-9971694302.