கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 நவம்பர் 2017

கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள்

ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ காட்டுப் பகுதிகளில் ஸ்ரீ விஜய பேரரசின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள். 


இந்தக் கற்பாறைகள் காட்டின் பல இடங்களில் ஆங்காங்கே காணப் படுகின்றன. அனைத்தும் பெரும் பாறைகளில் செதுக்கப் பட்ட தாமரை வடிவங்களிலான கற்பாறைகள் ஆகும்.

ஸ்ரீ விஜய பேரரசு கி.பி. 650-ஆம் ஆண்டுகளில் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ பகுதியில் பிருமாண்டமான கோட்டைகளைக் கட்டி உள்ளது. பின்னர் கி.பி.1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் படையெடுத்து வந்து அந்தக் கோட்டைகளைச் சின்னா பின்னாமாக்கிவிட்டுச் சென்று விட்டான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராஜா ராஜா சோழனின் மகன் தான் இராஜேந்திர சோழன்.


ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன்

சுங்கை லிங்கியூ காடுகளில் சிதைந்து போன பாறைப் படிக்கட்டுகளும் பாறைக் கோபுரங்களும் பாறைப் படிவங்களும் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சியின் வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் என்று நம்பப் படுகிறது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரசார்ந்த தேசிய மலர் தாமரை மலராகும். ஸ்ரீ விஜய பேரரசு அரசாட்சி செய்த இடங்களில் எல்லாம் இந்தத் தாமரைப் படிவங்களைக் காண முடியும்.


தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள்

சுங்கை லிங்க்யூ காட்டுப் பகுதியின் உட்புறங்களில் மட்டுமே இந்தத் தாமரைப் பூக்கள் வடிவத்திலான கற்பாறைகள் கண்டுபிடிக்கப் பட்டன. காட்டுப் பகுதியின் உட்புறங்களுக்குச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

காட்டுப் பகுதிக்குள் செல்ல போலீஸார் அனுமதியும் ஜொகூர் மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அனுமதியும் தேவை. அரச மலேசிய இராணுவப் படையினர் அந்தப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனர்.



2017 மே மாதம் 20-ஆம் தேதி ஓர் ஆய்வுக் குழுவினர் கோத்தா கெலாங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டனர். ஜொகூர் மாநில பாரம்பரிய அறக்கட்டளையின் துணை இயக்குநர் டாக்டர் கமாருடின் அப்துல் ரசாக், வரலாற்றுத் துறை இயக்குநர் ஹாஜி காம்டி காமில், தொல்பொருள் ஆய்வாளர் மஸ்லான் கெலிங், ஜொகூர் சுற்றுலாத் துறை இயக்குனர் ஆகியோருடன் மேலும் சில அதிகாரிகளும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.


இந்த ஆய்வுப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன். மிகத் துடிப்புடன் தன்னலமற்ற சேவைகள் செய்து வருகிறார்.

மேலும் வரலாற்று ஆய்வாளர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஆலோசகராகச் சேவை செய்கிறார். மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு வரலாற்று வழிகாட்டியாகவும் விளங்குகிறார். வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அகழாய்வுப் பணிகளுக்குச் சேவையாளராகவும் விளங்குகிறார்.  



கோத்தா திங்கி சுங்கை அம்பாட் காட்டுப் பகுதியில் ஆய்வுகள் செய்ய மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் - மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் புவியியல், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன. இப்போது மழைக்காலம். அதனால் ஆய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.