பத்துமலை வரலாறு - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை வரலாறு - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 2

தமிழ் மலர் - 07.02.2020

1875-ஆம் ஆண்டு வாக்கில் கோலாலம்பூர் ஆற்றோரத்தில் தம்புசாமி பிள்ளை ஒரு மாரியம்மன் வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அது ஒரு சின்னக் கோயில். அந்தச் சமயத்தில், அந்த இடத்திலேயே மலாயன் இரயில்வே (Malayan Railway) நிறுவனத்திற்கும் நிலம் தேவைப்பட்டு இருக்கிறது. மதுரைக்கு வந்த சோதனையைப் பாருங்கள்.



ஏன் என்றால் அந்த இடம் ஒரு சரக்குக் கிடங்கு அமைக்கப் பொருத்தமாக இருந்து இருக்கிறது. அந்த இடத்திற்குப் பதிலாக வேறு ஓர் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிக் கொள்ள நிலம் வழங்க மலாயன் இரயில்வே நிர்வாகம் வாக்குறுதி அளித்தது.

அந்த வகையில் 1875-ஆம் ஆண்டு, கோலாலம்பூர் ஜாலான் பண்டாரில் (Jalan Bandar) ஒரு குடிசைக் கோயில் கட்டப் பட்டது. அத்தாப்புக் கூரைகள் வேய்ந்த குடிசைக் கோயில் தான்.

அப்போது சிலாங்கூர் ஆட்சியாளராகச் சுல்தான் அப்துல் சமாட் ராஜா அப்துல்லா (Sultan Abdul Samad ibni Almarhum Raja Abdullah) என்பவர் இருந்தார். அவர் தான் குடிசைக் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கினார். 



அந்தக் கோயில் குடிசைக்கு இந்தியச் சமூகத்தின் நிலம் (Land for the Indian Community) என்று சுல்தான் அப்துல் சமாட் அடிக்கல் நாட்டினார்.

அந்தக் கட்டத்தில், சிலாங்கூர் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக (British Resident) ஜேம்ஸ் கத்தரி டேவிட்சன் (James Guthrie Davidson) என்பவர் இருந்தார்.

குடிசைக் கோயில் கட்டப்பட்ட அந்த ஜாலான் பண்டார் தான் இப்போது ஜாலான் துன் எச்.எஸ்.லீ (Jalan Tun H.S. Lee).

தம்புசாமி பிள்ளை எப்போதுமே முன்னோக்குப் பார்வையும் வியூகத் தன்மையும்  கொண்டவர். 1888-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்த இந்தியச் சமூகத்தின் ஆதரவுடன் அந்த அத்தாப்புக் குடிசைக் கோயிலைச் செங்கல் கட்டிடமாக மாற்றினார். 



கோயில் கட்டிடம் கட்டப் படுவதற்கு கோலாலம்பூர் வாழ் மக்கள் தாராளமாக நன்கொடைகளை வழங்கினார்கள். கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் முதல் நிறுவனர் தம்புசாமி பிள்ளை ஆகும். மறந்துவிட வேண்டாம்.

அந்தச் சமயத்தில் மலாயன் இரயில்வே சேவையிலும்; மலாயா பொதுப்பணித் துறையிலும் வேலைகள் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் ஆட்களைக் கொண்டு வருவதற்கு தம்புசாமி பிள்ளை தமிழகத்திற்கு அனுப்பப் பட்டார்.

மலாயாவின் ஆங்கிலேய அரசாங்கம் தான் அவரைக் கப்பல் மூலமாக அனுப்பி வைத்தது. தம்புசாமி பிள்ளை தென்னிந்தியாவிற்குப் பலமுறைகள் சென்று வந்தார். பல ஆயிரம் தென்னிந்தியர்களை வேலையாட்களாகக் கொண்டு வந்து சேர்த்தார்.



அப்போது பத்துமலைப் பகுதியின் சுற்று வட்டாரத்தில் நிறையவே தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். பத்துமலையில் ஒரு முருகன் கோயிலை அமைக்கலாம் என்று அவர்கள் விரும்பினார்கள்.

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க குகைக்குக் கீழே பத்துமலை ஆலயம் கட்டப் பட்டது. தம்புசாமி பிள்ளை தான் தன் சொந்தச் செலவில் கோயிலைக் கட்டிக் கொடுத்தார்.

புதிதாகக் கட்டப்பட்ட பத்துமலைக் கோயில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்யப் பட்டது. இந்தப் பத்துமலைக் கோயில் கட்டப் படுவற்கு முன்னரே 1890-ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஜாலான் பண்டாரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்தக் கோயிலையும் தம்புசாமிப் பிள்ளை தான் கட்டிக் கொடுத்தார்.



1891-ஆம் ஆண்டு பத்துமலைக் குகைக் கோயிலில் முருகப் பெருமானின் சிலை நிலை நிறுத்தப் பட்டது. 1892-ஆம் ஆண்டில் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920-ஆம் ஆண்டில் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப் பட்டன.

மறுபடியும் பத்துமலையின் தொடக்கக் கால வரலாற்றிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

இப்போதைய பத்துமலை இருக்கிறதே அது ஒரே ஒரு சுண்ணாம்புப் பாறை தான். அதாவது ஒரே ஒரு கற்பாறை தான். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான சுண்ணாம்புப் பாறை. 385 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

பத்துமலையின் சுண்ணாம்புப் பாறைகளைத் தொல்லுயிர் காலப் பாறைகள் (Palaeozoic era) என்று அழைக்கிறார்கள். அதாவது முதல் ஊழிக் காலத்தில் தோன்றியவை. பூமியின் மேல்படிவம் உருவான காலத்தில் உருவான பாறைகள். 



உலகில் பலவிதமான சுண்ணாம்புப் பாறைகள் இருந்தாலும் பத்துமலையில் உள்ள சுண்ணாம்புப் பாறைகளைச் சிலுரியன் சுண்ணாம்புப் பாறை (Silurian limestone) இனத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சான்று: Peter H. Stauffer, Journal of Paleontology, Vol. 53, No. 6 (Nov., 1979), pp. 1416-1421; A Fossilized Honeybee Comb from Late Cenozoic Cave Deposits at Batu Caves, Malay Peninsula.

பத்துமலை என்பது ஒரே ஒரு சுண்ணாம்புக் கற்பாறையால் உருவானது என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் கற்பாறையின் உயரம் 304 மீட்டர். தடிமன் 1950 மீட்டர். அந்தப் பாறையின் உள்ளே இருப்பது எல்லாம் கால்சைட் (Calcite) எனும் சுண்ணாம்புப் படிமங்கள்.

பத்துமலையின் அகழாய்வுகள் 1886-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டன. அதாவது தொல்பொருள் ஆராய்ச்சிகள். அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவின் அரும்பொருள் காட்சியகங்களின் பேராக் மாநில இயக்குநராக லியோனர்ட் விரேய் (Leonard Wray) என்பவர் இருந்தார். அவர் தான் பத்துமலையில் முதன் முதலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியவர். 



பத்துமலையின் பாறைகளில் பத்து மீட்டர் ஆழத்திற்குத் துளைகள் போட்டு உள்ளே என்ன என்ன பாறைப் படிமங்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தார்கள். எல்லாமே சுண்ணாம்புக் கற்படிமங்கள் தான். வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

உலகில் வேறு பல இடங்களில் வேறு பல மாதிரியான படிமங்கள் கிடைத்து இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக இமயமலையை எடுத்துக் கொள்வோம். இமயமலையின் அடிவாரத்தில் அகழாய்வுகள் செய்யும் போது இந்திய மாக்கடலில் நீந்தி விளையாடிய சுறா மீன்கள், டொல்பின் மீன்கள், நண்டுகள், சிங்க இறால்கள் போன்றவற்றின் எலும்புச் சிதைவுகளைக் கண்டு எடுத்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம்.

இமயமலை எங்கே இருக்கிறது. இந்திய மாக்கடல் எங்கே இருக்கிறது. இரண்டிற்கும் 2500 கிலோமீட்டர் இடைவெளி. அப்படி இருக்கும் போது  எப்படி இந்திய மாக்கடலில் ஓடி விளையாடிய உயிரினங்களின் எலும்புகள் இமயமலைக்கு வந்து சேர்ந்தன. 



உலகத்திலேயே மிக மிகப் பழமையான திமிங்கில எலும்புக் கூட்டையும் இமயமலை அடிவாரத்தில் 1998-ஆம் ஆண்டு கண்டு எடுத்து இருக்கிறார்கள். 53 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதற்கு Himalayacetus subathuensis என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

சான்று: https://www.independent.co.uk/news/worlds-oldest-whale-is-found-in-the-himalayas-1193848.html

ஆச்சரியமாக இருக்கிறதா. விளக்கம் கொடுக்கிறேன். உலகில் இப்போது இருக்கும் ஐந்து கண்டங்களும் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாகப் பிணைந்து ஒன்றாகவே இணைந்து இருந்தன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா எல்லாமே ஒரே ஒரு சூப்பர் கண்டமாக இருந்து இருக்கின்றன. அதற்கு கொண்ட்வானா (Gondwana) என்று பெயர்.

பின்னர் பூமியின் மேல்தட்டுப் பாறை அடுக்குகள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் சென்று இருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளகாக இந்த விலகிச் செல்லும் பரிணாமம் நடந்து இருக்கிறது. அப்புறம் பற்பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தச் சூப்பர் கண்டம் தனித் தனிக் கண்டங்களாகப் பிரிந்து போனது. 



அப்படி பிரியும் போது தான் வட துருவப் பகுதியுடன் இந்தியத் துணைக் கண்டம் போய் இணைந்து இருக்கிறது. இந்திய மாக்கடலில் இருந்த உயிரினங்களும் இமயமலையுடன் போய் இணைந்து இருக்கின்றன. அவற்றின் எலும்புக் கூடுகளைத் தான் இப்போது இமயமலையின் அடிவாரத்தில் கண்டு எடுத்து இருக்கிறார்கள். புரியுதுங்களா.

அந்த மாதிரிதான் பத்துமலையிலும் நடந்து இருக்கலாம் எனும் ஒரு வியூகம் இருந்தது. பத்துமலை வளாகத்தில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை. ஆனால் 500,000 ஆண்டுகள் பழமையான ஓராங் ஊத்தான் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சான்று: Studies on cave paleontology had unearthed orang utan (now extinct in the peninsula) fossils in Batu Caves dating back between 33,000 and 500,000 years - ttps://www.nst.com.my/news/exclusive/2020/01/553666/experts-artefacts-fossils-may-be-lost



1886-இல் தொடங்கிய பத்துமலை அகழாய்வுகள் 1891-ஆம் ஆண்டு வரை நீடித்தன. அதன் பிறகு அப்படியே அமைதியாகிப் போயின. அதன் பின்னர் 1917-ஆம் ஆண்டு ஐ.எச்.என். இவான்ஸ் (I.H.N. Evans) என்பவர் மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். 1931-ஆம் ஆண்டு வரை அகழாய்வுகள் தொடர்ந்தன.

சான்று: Peter Carey, 1986, "Maritime Southeast Asian Studies in the United Kingdom: A Survey of their Development, 1945–85

அவருக்கு உதவியாக டாக்டர் வான் கால்ன்பெல்ஸ் இருந்தார் (Dr. P.V. Van Stein Callenfels). இவருடைய ஆய்வுகள் 1926-ஆம் ஆண்டு வரை நீடித்தது. இவருக்குப் பின்னர் எச்.டி. நூன் (H.D. Noone); எம். கார்டன் (W.M. Gordon) போன்றவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு அமைதி.

1935-ஆம் ஆண்டில் மறுபடியும் ஆய்வுப் பணிகள் தொடங்கப் பட்டன. துவீடி (M.W.F. Tweedie); கொலிங்ஸ் (H.D. Collings) போன்ற அகழாய்வுத் துறை வல்லுநர்கள் அயராத சேவைகளை வழங்கி உள்ளனர்.

சான்று: Tweedie MWF (1953). "The Stone Age in Malaya". Journal of the Malayan Branch Royal Asiatic Society 26 (2)



ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். பத்துமைலையைப் பற்றி நாம் எவ்வளவு தான் பெருமைப்பட்டுக் கொண்டாலும் ஆரம்ப காலங்களில் அதன் சிறப்புகளை; அதன் இரகசியங்களை வெளியுலகத்திற்குச் சொன்னவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.

பத்துமலையின் இரகசியங்களை வெளியுலக மக்களுக்குத் தெரியபடுத்தி அதே அந்தப் பத்துமலையைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர்களும் அதே அந்த ஆங்கிலேயர்கள் தான். அந்த வகையில் ஆங்கிலேயர்களுக்கு நாம் நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம்.

1942 - 1945-ஆம் ஆண்டுகளில் ஜப்பானியர் காலத்தில் பத்துமலை ஆய்வுப் பணிகள் முற்றாக நிறுத்தப் பட்டன.

பத்துமலையின் சுற்று வட்டாரங்களில் சீனர்கள் நிறைய காய்கறித் தோட்டங்களைப் போட்டு இருந்தார்கள். அந்தத் தோட்டங்களுக்கான உரத்தைப் பத்துமலைக் குகைகளின் உட்பாகங்களில் இருந்து எடுத்து வந்தார்கள்.

பத்துமலைக் குகைகளில் மில்லியன் கணக்கில் வௌவால்கள். அவற்றின் சாணம் தான் சீனர்களின் காய்கறித் தோட்டங்களுக்கு உரமாகப் பயன்படுத்தப் பட்டன.

பத்துமலையில் உள்ள வௌவால்கள் Eonycteris spelaea எனும் இனத்தைச் சேர்ந்தவை. இவை கொரோனா வைரஸ் (Coronavirus) கிருமிகளுடன் தொடர்பு உள்ளவை அல்ல. Chrysanthemum Bat எனும் வௌவால்கள் தான் கொரோனா கிருமிகளைப் பரப்பியவை. ஆக கவலை வேண்டாமே.



பத்துமலைக் குகைகளில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பூர்வீகக் குடிமக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். முதன்முதலில் வாழ்ந்த ஆதிவாசிகள் ஆஸ்திரேலியாவின் பெசிசி (Besisi) பூர்வீக இனத்தைச் சேர்ந்தவர்கள். பெசிசி மக்களின் வாரிசுகள் ஆஸ்திரேலியாவில் இன்னும் வாழ்கிறார்கள்.

பெசிசி பூர்வீக மக்கள் முன்பு காலத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளில் வாழ்ந்தவர்கள். அங்கே இருந்து தான் கட்டுமரங்களின் வழியாக மலாயா தீபகற்பகத்திற்குள் வந்து இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றார்கள்.

இந்த பெசிசி பூர்வீக மக்கள் தான் முதன்முதலில் பத்துமலைக் குகைகளுக்குள் அடைக்கலம் அடைந்தவர்கள்.

பெசிசி மக்களின் குடியேற்றத்திற்குப் பின்னர் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து தான் மலாயாவின் இப்போதைய பூர்வீகக் குடிமக்களான தெமுவான் (Temuan) பூர்வீக இனத்தவர் பத்துமலைக்கு வந்து இருக்கிறார்கள்.

தெமுவான் பூர்வீக மக்கள் பர்மாவில் இருக்கும் யூனான் (Yunnan) காடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.

சான்று: Steven L. Danver (2015). Native Peoples of the World: An Encyclopedia of Groups, Cultures and Contemporary Issues.

மனசில் ஒரு விசயம் பட்டது. சொல்கிறேன். அப்பேர்ப்பட்ட குமரிக் கண்டமே தங்களுக்குச் சொந்தம் என்று சம்பந்தமே இல்லாமல் சிலர் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது பத்துமலை என்பது அவர்களின் வாரிசு என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதற்கு ரொம்ப நேரம் பிடிக்காது. சொல்ல முடியாதுங்க.

எதிர்காலத்தில் பத்துமலையில் என்ன நடந்தது என்று நம் பேரப் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அதே சமயத்தில் மலேசிய இந்தியர்களின் வரலாற்றுச் சுவடுகளும் காப்பாற்றப்பட வேண்டும்..

மேலும் சுவையான ஆனால் அதிசயமான பத்துமலை செய்திகளுடன் நாளை சந்திக்கிறேன்.

(தொடரும்)