சென்னைச் சிப்பாய்களின் பிலிப்பைன்ஸ் வாரிசுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னைச் சிப்பாய்களின் பிலிப்பைன்ஸ் வாரிசுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே 2020

சென்னைச் சிப்பாய்களின் பிலிப்பைன்ஸ் வாரிசுகள்

தமிழ் மலர் - 27.05.2020

மணிலாவிற்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் இருந்து சென்ற சென்னைச் சிப்பாய்கள் (Indian Sepoy) அங்கே ஒரு தமிழர் வம்சாவழியினரை உருவாக்கி இருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் பலரும் அறிந்திராத செய்தி. ஆனாலும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் செய்தி. அதுவே உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்தி.
 

இருக்கு ஆனால் இல்லை என்று சொல்வார்கள். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போல பிலிப்பைன்ஸ் நாட்டில் பழமையான ஒரு தமிழர்ச் சமுதாயம் இன்றும் இருக்கிறது. ஆனால் இல்லாமலும் தெரியாமலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதுதான் மனதை ரொம்பவுமே சங்கடப் படுத்தும் விசயம்.

சென்னைச் சிப்பாய் தலைமுறை வாரிசுகளைப் பிபிங்கா தமிழர்கள் என்று அழைக்கிறார்கள். இந்தப் பிபிங்கா தமிழர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிற்கு அருகில் வாழ்கிறார்கள். பிலிப்பினோ கலப்புச் சமூகத்தவர்.

அதாவது தமிழர் பிலிப்பினோ கலப்பு இரத்தம் கொண்ட ஒரு சமூகத்தவர். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
 

ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள். கூடுதலாகவும் இருக்கலாம். துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.

இட்லி, தோசை, இடியப்பம் போன்ற அரிசி மாவு உணவுப் பொருள்களைப் பிபிங்கா (bibingka) என்று பிலிப்பைன்ஸ் நாட்டில் அழைக்கிறார்கள். இந்த உணவுப் பொருள்கள் பிலிப்பைன்ஸில் மிகவும் புகழ்பெற்றவை.

பிபிங்கா என்று ஒரு கிராமமே மணிலாவில் இருக்கிறது. அந்தப் பெயரைச் சொல்லி மணிலாவில் பல உணவுக் கடைகள் கல்லா கட்டுகின்றன. மணிலாவில் பிபிங்கா எனும் பெயரில் சில சாலைகளும் உள்ளன.

250 ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த கதை. கொஞ்சம் சுவராசியமான கதைதான். ஆனாலும் உலகத் தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுக் கதை. இப்படி ஒரு தமிழர்ச் சமுதாயம் இருக்கிறதே என்று பெருமைப் படுவோம். அதற்கு முன்னர்...
 

இதே மாதிரி 1940-ஆம் ஆண்டுகளில் மலாயாவிலும் ஒரு கதை நடந்து இருக்கிறது. தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்குச் சாலை அமைக்கும் போது நூற்றுக் கணக்கான தமிழர்கள் பல்வேறு சாலைப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காட்டுக்குள் தப்பித்து ஓடிப் போனார்கள்.

அப்படிப் போன தமிழர்கள் காட்டுக்குள் ஓடி ஆடித் திரிந்த ஓராங் அஸ்லி பருவப் பெண்களைப் பார்த்ததும் ஏழு சுவரங்களில்...

யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி
அஞ்சிடாமலே நீ
ஆட ஓடி வா காமினி

என்று ஆனந்த ராகங்களில் எட்டுத் தாளக் கட்டில் பாடி இருக்கிறார்கள்.
 

அப்புறம் என்ன... அந்தப் பெண்களும் அசந்து மயங்கிப் போய் விட்டார்கள். நம்ப மன்மத ராசாக்களும் அப்படியே காதல் பண்ணி அப்படியே அத்தாப்புக் குடிசைகளைக் கட்டி; அந்தக் குடிசைகளுக்குள் தாலியைக் கட்டி; குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.

கொஞ்ச நாட்களில் பிள்ளைக் குட்டிகளைப் பெற்று, அப்படியே ஒரு புதிய தமிழர் சமுதாயத்தையும் உருவாக்கிச் சரித்திரம் படைத்து விட்டார்கள். அதன் பின்னர் கேமரன் மலையில் இருந்து அவர்கள் கீழே இறங்கி வரவே இல்லை. இறங்கு வந்தால் தான் தோலை உரித்து விடுவார்களே.

அந்தப் பாவனையில் தமிழர்களின் சாமுத்திரிகா இலட்சணத்துடன் ஓராங் அஸ்லி மக்களில் சிலர் கேமரன் மலையில் ஊர்க்கோலம் போவதை இன்றும் பார்க்கலாம்.

சந்தேகமாக இருந்தால் அருகில் போய் உற்றுப் பாருங்கள். ரொம்பவும் நெருங்கிப் போக வேண்டாம். பத்திரம். உடம்பு தாங்காது. உதவிக்கு என்னாலும் வர முடியாது. சரி. பிலிப்பைன்ஸ் சென்னை மன்மதராசாக்கள் கதைக்கு வருவோம்.
 

1762-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் மணிலாவில் ஸ்பானியர்களின் ஆட்சி காலம். உள்ளூர் மக்களின் உழைப்பில் நன்றாகவே ஸ்பானியர்கள் குளிர் காய்ந்து குதூகளித்துக் கொண்டு இருந்தார்கள். அதைப் பார்த்த வெள்ளைக்காரர்களுக்கு சும்மா இருக்க முடியுமா. சூரியனே அவர்களைக் கேட்டுத் தானே உதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் தானே. பாஞ்சாலங்குறிச்சி பேனர்மேன் நினைவுக்கு வருகிறார்.

வயிற்றெரிச்சல் தொண்டை வர எகிறிப் பாய்ந்தது. மணிலாவை அடித்துப் பிடிக்க ஆசைப் பட்டார்கள். ஏற்கனவே இருவருக்கும் ஏழாம் பொருத்தம். ஒத்துவராது.

ஆங்கிலேயர்களுக்கு உதவியாகத் தமிழ்நாட்டில் இருந்து மெட்ராஸ் சிப்பாய்களைப் போருக்கு அழைத்துப் போனார்கள். 610 தமிழர்ச் சிப்பாய்கள். எத்தனைச் சிப்பாய்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்ப சிப்பாய்கள் என்றால் சும்மாவா. சகலகலா மன்னவர்கள் ஆச்சே.
 

அந்தப் போருக்குப் பெயர் மணிலா போர் (Battle of Manila). ஆங்கிலேயப் படைகளுக்கு வில்லியன் டிரப்பர்  (Brigadier-General William Draper) என்பவர் தலைமை வகித்தார். ஸ்பானியர்களுக்கு சைமன் டி அண்டா (Simon de Anda) என்பவர் தலைமை வகித்தார். இவர் மணிலாவின் கவர்னராகவும் இருந்தார்.

இந்தக் கட்டத்தில் ஐரோப்பாவில் ஏழு ஆண்டுகள் போர் (Seven Years' War) நடந்து கொண்டு இருந்தது. அதனால் ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் உலகம் முழுமைக்கும் எலியும் பூனையும் போல பாய்ச்சல்கள்.

மணிலாவைப் பிடிப்பதற்கு ஒரு சின்னக் கப்பல் படையுடன் ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள். 1762 ஆகஸ்டு மாதம் முதல் தேதி. பதினைந்து கப்பல்கள் மணிலா கடல்கரையில் நங்கூரம் பாய்ச்சின.
 

பெரிய எதிர்ப்பு வரும் என்று ஆங்கிலேயர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தாலும் ஸ்பானியர்கள் பயங்கரமாக எதிர்த்துப் போரிட்டார்கள். ஆங்கிலேயத் தரப்பில் பெரும் சேதங்கள். ஒரு கட்டத்தில் பின்வாங்கும் நிலைமை. 12 நாட்களில் போர் முடிந்தது. மணிலா ஆங்கிலேயர்களின் கைகளில் வீழ்ந்தது.

அதன் பின்னர் பத்து பதினெட்டு மாதங்களுக்கு கொஞ்சம் ஓய்வு.

இது இப்படி இருக்க அங்கு போன நம்முடைய தமிழ் நாட்டு மன்மதக் குஞ்சுகளால் சும்மா இருக்க முடியவில்லை. ஓய்வு நேரத்தில் பிலிப்பைன்ஸ் காடுகளில் வாழ்ந்த காயிந்தா பூர்வீகப் பெண்களுடன் (Cainta natives) பழக ஆரம்பித்தார்கள். பழக்கம் நெருக்கமாகிக் கல்யாணத்தில் போய் முடிந்தது.
 

திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவர் இருவர் அல்ல. ஆளாளுக்கு நீயா நானா போட்டிப் போட்டுக் கொண்டு காதலித்துக் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் காயிந்தா பூர்வீகப் பெண்கள் சற்று அழகானவர்கள். நம்ப தமிழர் மன்மதக் குஞ்சுகள் சொக்கிப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

எது எப்படியோ நூற்றுக் கணக்கான பிலிப்பைன்ஸ் பெண்களைக் காதலித்துக் கிராமத்துக் காட்டுக்குள்ளேயே செட்டில் ஆகி விட்டார்கள்.

இனிமெல் தான் இந்தக் கதையின் கிளைமாக்ஸ்...

இரண்டு வருடம் கழித்து ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையே ஒரு சமரச உடன்படிக்கை (Treaty of Paris - 1763). ஆங்கிலேயர்கள் மணிலாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டம். சென்னைச் சிப்பாய்களில் முக்கால்வாசி பேர் மீண்டும் சென்னைக்குத் திரும்பிப் போக மறுத்து விட்டார்கள்.
 

ஏன் என்றால் அவர்கள் மணிலாவில் தங்கி இருந்த அந்த இரண்டு ஆண்டு காலத்தில் முக்கால்வாசி சிப்பாய்களுக்குக் குடும்பம் குடித்தனமாகி விட்டன. பிள்ளைகளும் பிறந்து விட்டார்கள்.

அத்துடன் மெட்ராஸில் இருக்கும் போதே ஆங்கிலேயர்களின் கெடுபிடிகள் சென்னைச் சிப்பாய்களுக்குப் பிடிக்கவில்லை. இதுதான் சமயம் என்று காட்டுக்குள் ஓடி விட்டார்கள். ஆங்கிலேயர்களும் எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார்கள். உஹும்... ஒன்றும் நடக்கவில்லை.

அத்துடன் ஆங்கிலேயர்களின் கெடுபிடிகள் சென்னைச் சிப்பாய்களுக்குப் பிடிக்கவில்லை. இதுதான் சமயம் என்று காட்டுக்குள் ஓடி விட்டார்கள்.
 

இராணுவச் சட்டவிதிகளின்படி பெரிய குற்றம். இருந்தாலும் 610 சிப்பாய்களில் 550 பேர் புரட்சி செய்தால் என்ன செய்வதாம். எப்படியாவது தொலைந்து போங்கள் என்று அங்கேயே விட்டுவிட்டு ஆங்கிலேயர்களும் சென்று விட்டார்கள்.

சென்னைச் சிப்பாய்கள் தப்பித்து ஓடிய காட்டுப் பகுதியின் பெயர் மோரோங் (Morong) மாவட்டம். அங்கு இருந்த தாய்தாய் (Taytay); காயிந்தா (Cainta) எனும் இரு நகர்ப் புறங்களில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள். இந்த நகரங்கள் இப்போது மணிலா தலைநகரத்திற்குக் கிழக்குப் பகுதியில் உள்ளன.

(Sepoys mutinied and refused to leave. They settled in Cainta, Rizal, Metro Manila. The region around Cainta still has many Sepoy descendants.)

தமிழர்ச் சிப்பாய்களின் வாரிசுகள் பலரின் பெயருக்குப் பின்னால் இந்தியப் பெயர்கள் தொடர்கின்றன. சாமி; ராஜு; கண்ணா; கருணா; கிருஷ்ணா; ராஜா; பாலா; வாசு; ராமா எனும் பெயர்கள்.
 

250 ஆண்டுகள் ஆகிவிட்டன. அனைவரும் பிலிப்பைன்ஸ் மக்களுடன் ஒன்றாய்க் கலந்து விட்டனர். தமிழர் முகஜாடை கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது.

(This could possibly explain why there are few Cainta natives bearing Sepoy or Indian surnames.
Sepoys and their mixed-race families were assimilated into the mainstream Cainta community).

மணிலாவின் பாரியோ (Barrio Dayap) பகுதியிலும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களும் தமிழை மறந்து விட்டார்கள். பாதி பேர் மதம் மாறி விட்டார்கள். இருந்தாலும் ஆண்களில் சிலர் தலைப்பாகை கட்டுகிறார்கள். பெண்களில் சிலர் சேலை அணிவது வழக்கம். இந்து கோயில்கள் உள்ளன.
 

ஆனால் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறவில்லை. இடியப்பம்; இட்லி; தோசை; பூரி போன்ற தமிழர்களின் உணவு வகைகள் இன்றும் தொடர்கின்றன. புட்டு மாதிரி அவித்த உணவிற்கு பிபிங்கா (bibingka) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இதைப் பற்றி பேஸ்புக் ஊடக அன்பர் சத்தியா ராமன் தன் கருத்தை இப்படி முன் வைக்கிறார். என்னத்தைச் சொல்வது? சிப்பாய் வேலைக்குப் போனவர்கள் வேலை பார்த்தோமா; சென்னைக்குத் திரும்பினோமா என்று இல்லாமல் காதல், கல்யாணம், குடும்பம் என்று போனதும் இல்லாமல் மொழியை மறந்த விட்டார்களே. அது ஓர் அவலம்.

போகிற இடம் எல்லாம் வேற்று இனப் பெண்களிடம் மனதைப் பறிகொடுத்து மொழியையும் பறிகொடுத்த பெருமை தமிழர்கள் சிலரைச் சேரும். சிறிதும் தாய் மொழி பற்று இல்லாதவர்கள் கடல் கடந்து போய் பெண்களின் கரம் பற்றும் போதே அவர்களின் மொழியையும் பாதாளத்தில் தள்ளிக் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்கள்.
 

ஒரு மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். அதையே அடகு வைத்த பின் தமிழில் பெயர் வைத்தால் என்ன? இட்லி. தோசை, இடியப்பம் தின்றால் என்ன?

அவர்கள் நினைத்து இருந்தால்; மனம் வைத்து இருந்தால் தங்களின் அடையாளத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று இருக்கலாம். மொழியைத் தொலைக்காமல் தொடர்ந்து பேசி தன் மனைவி, குழந்தைகளுக்கும் கற்றுத் தந்து இருக்கலாம் என்கிறார்.

தமிழர்ச் சிப்பாய்கள் மணிலாவிற்குப் போகும் போது புது இடம். புதுச் சூழல். புது மனிதர்கள். அவர்கள் ஸ்பானியர்களுடன் சண்டை போட்டது என்றாலும் அந்த ஸ்பானியர்களுக்கு ஆதரவாக இருந்த பிலிப்பினோக்காரர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
 

அன்றையக் காலக் கட்டத்தில் இந்தப் பிலிப்பினோக்காரர்கள், மலைக் காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களை ஒதுக்கி வைத்து வாழ்ந்தார்கள்.

அந்தப் பூர்வீக மக்களின் பெண்களைத்தான் தான் அங்கே போன தமிழ்ச் சிப்பாய்கள் காதலித்து இருக்கிறார்கள். கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள். இதில் அந்தச் சிப்பாய்களுக்கு இரண்டு வருடங்கள் தனிமை வாழ்க்கை.

அவர்களில் சிலருக்கு தமிழ்நாட்டில் மனைவி மக்கள் இருந்து இருக்கிறார்கள். திரும்பிப் போனால் இங்குள்ள மனைவியின் உறவு விட்டுப் போகலாம் என்று திரும்பிப் போக மறுத்து விட்டார்களாம்.

என்னைக் கேட்டால் பலருக்கும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பச் சூழ்நிலைச் சிக்கல். மொழியை மறந்து விட்டார்கள். பாரம்பரியத்தையும் மறந்து விட்டார்கள். என்ன செய்வது. ஆனாலும் உணவுப் பழக்க முறைகளை மறக்கவில்லை.
 

அப்போது 250 ஆண்டுகளுக்கு முன்னால் என்னதான் நடந்தது என்று நமக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஆவணங்களில் இருந்து தான் வரலாற்றின் ஒரு பகுதியை மீட்டு எடுத்து வருகிறோம்.

சென்னைச் சிப்பாய்கள் போல இங்கே மலேசியாவிலும் பலர் இந்தியாவில் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு விட்டு இங்கே வந்து புதிதாய்த் திருமணம் செய்து வாழ்ந்து இருக்கிறார்கள். மூத்த மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்காமலேயே பலர் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

அவர்கள் நினைத்து இருந்தால் இந்தியாவில் இருந்த மனைவி பிள்ளைகளை எப்படியாவது இங்கே கொண்டு வந்து இருக்கலாம்.

தனிப்பட்ட சந்தோஷம் என்பது வேறு. மனைவி பிள்ளைகளுக்காக வாழும் சந்தோஷம் வேறு. 1985-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்துகளுக்கு இரு தாரம் அனுமதிக்கப் பட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இருக்கலாம்.

பாவங்களைச் சுமக்காமல் எதையாவது செய்து அவர்களை இங்கே கொண்டு வந்து இருக்கலாம். மறுதாரம் இருந்தாலும் முதல் தாரத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை கணவர்மார்களுக்கு உண்டு என்பதே பொதுவான கருத்து.
 

மலேசியாவில் கெலிங் எனும் சொல் இந்தியர்களைத் தாழ்மைப் படுத்தும் ஓர் அவச் சொல்லாகக் கருதுகிறோம். அது போல அங்கே வாழும் சிப்பாய் வாரிசுத் தமிழர்களும் பிபிங்கா எனும் சொல்லை அவச் சொல்லாகக் கருதினார்கள். ஆரம்பக் கட்டத்தில் அப்படித்தான் இருந்தது. காலப் போக்கில் மறைந்து விட்டது. அதை அவர்கள் இப்போது பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

மறக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றில் சென்னைச் சிப்பாய்களின் வாரிசுகளும் இடம் பெறுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பிலிப்பைன்ஸ் எனும் நான்கு சுவர்களுக்குள் இன்றுவரை அடக்கி வாசிக்கப் படுகிறது. வாழ்த்துவோம்.

சான்றுகள்:

1. https://filipiknow.net/dark-skinned-indian-looking-filipinos-cainta/

2. Documentary Sources of Philippine History - Draper’s Journal, p. 497.

3. The Philippine Islands 1493–1803, vol. 49, (Cleveland, OH: The A.H. Clark Company, 1907), p. 82.

4. The First ‘Rape of Manila’ That History Forgot. 10 August 2015, http://www.filipiknow.net/british-occupation-of-manila-1762/

5. Frederick, J. B. M. (1984). Lineage Book of British Land Forces 1660–1978, Volume II.