கருக்கொலை சிசுக்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருக்கொலை சிசுக்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 அக்டோபர் 2014

கருக்கொலை சிசுக்கொலை

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 02.07.2014 நாளிதழில் வெளியான கட்டுரை]


குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். ஆனால், இப்போது குழந்தையும் குண்டுமணியும் குப்பைத் தொட்டியிலே என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. படிக்கப் போகிற பதின்ம வயதுப் பெண்கள் குழந்தையைப் பெற்று கழிவறையில் எறிந்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு கலாசாரம் சாதாரணமாகி வருகிறது. மலேசியாவில் மட்டும் அல்ல. உலகத்தில் பல இடங்களில் அந்த மாதிரியான உண்மைகள் பரவலாகி வருகின்றன.



உங்களுக்கு ஒன்று தெரியுமா. இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அந்தப் பச்சை சிசுக்களின் தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே விஷம் கொடுத்துக் கொன்று விடுகின்றனர். முன்புதான் அப்படி என்றால் இப்போதும் அந்தச் சறுக்கல்களில் சனி பகவானுக்குச் சங்கு ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



ஒரு சில கிராமத்து எல்லைகளில் மாட்டுச் சாணம் போட்டு கள்ளிச் செடிகளை வளர்த்து வருகிறார்களாம்.  பத்திரிகைச் செய்தியில் படித்த நினைவு. கள்ளிப் பாலைக் கொடுத்து சிசுக்களைக் கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். பிறந்த மறுநாளே கழுத்தை நெரித்துக் கொள்ளும் அளவுக்கு மனித மனம் மிருகமாகிப் போகிறதே! ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாத சில தாய்மைகளை என்னவென்று சொல்வது. மனசிற்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது!

சிசுவைப் புதைத்த இடத்தில்
கண்ணீர் வடிக்கிறது பனித்துளி
பாலூட்ட வழி தெரியாமல்
பதறித் துடிக்கிறது கள்ளிச் செடி



கவிதையைப் பாருங்கள். ஆக, அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று யோசித்துப் பார்க்கின்ற விஷயம் இல்லை. எப்படி எல்லாம் குறுக்கு புத்தி கோணலாகிப் போகிறது என்று யோசிக்கின்ற விஷயம். இப்படியே பெண் பிள்ளைகளை அழித்துக் கொண்டு போனால் அப்புறம் பெண்களே இல்லாமல் போய்விடுவார்களே. அழகிற்கும் வேண்டும் ஆசைக்கும் வேண்டும். ஆனால், பெண் குழந்தைகள் என்றால் அது மட்டும் வேண்டாம். என்னய்யா அக்கிரமம்.



பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஓர் அணு அளவுகூட அசைய முடியாது. ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். அது சத்தியமான உண்மை. சிசுக்கொலைகளைப் பார்த்து பார்த்து பூமாதேவிக்கே பொறுக்காமல் போய்விட்டது போலும். அதனால்தானோ என்னவோ அடிக்கடி காட்டு வெள்ளங்களும் கடல் சுனாமிகளும் ஆர்ப்பரித்துப் போகின்றன.

பெண்பிள்ளைகளைக் கொன்றுவிடும் பாவச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டம்தான் தமிழ்நாட்டின் தொட்டில் குழந்தை திட்டம்.



இந்தத் திட்டம் 1992-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கிய பெருமை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். அவருக்கு நன்றி சொல்வோம். சேலம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது.



பின்னர் 2001-ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. இப்போது குடலூர், அரியலூர், பெரம்பலூர், வில்லிபுரம் போன்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுமையும் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திற்கும் ஆண்டுக்கு 60 - 80 இலட்சம் ரூபாய் செலவாகிறது.  இதுவரை 3,800 பெண் குழந்தைகள் 662 ஆண் குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இவர்களில் 3,200 குழந்தைகள் தத்து கொடுக்கப் பட்டுள்ளனர். தவிர 260 பெண் குழந்தைகள் 44 ஆண்குழந்தைகளை வெளிநாட்டவர் தத்து எடுத்துள்ளனர்.



தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் அதாவது 2001-இல் 1000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த விகிதம் 2011-இல் 1000 க்கு 946 ஆக உயர்ந்து உள்ளது. சந்தோஷமான செய்தி.

பெண் பாவம் பொல்லாதது

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளை ஒரு பெரிய சுமையாகவே நினைக்கின்றனர். அதாவது பரவாயில்லைங்க. அதையும் தாண்டிப் போய், ஐரோப்பிய நாடுகளில் பிறந்த குழந்தையே பெற்றவர்களுக்கு ஒரு சுமையாகிப் போகின்றது. அப்படி ஒரு நவீனக் கலாசாரம். 


அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள். வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் என்பதை எல்லாம் வேண்டும் என்றால் வரலாற்றில் படிக்கலாம். இப்போதைக்கு அப்படி இல்லை. வந்தார்கள் பார்த்தார்கள் படுத்தார்கள் என்பதுதான் அங்கே நடக்கிற கசுமாலக் கூத்துகள்.  காடு மேடு தெரியாமல் சகட்டு மேனிக்கு வீடு கட்டி வாழ்கிறார்களாம். செய்திகள் வருகின்றன. அதைப் பற்றி கருத்து சொல்ல மனதில் பலம் இல்லை.

இந்தியாவின் சில இடங்களில், பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பிறந்த தளும்பு ஆறுவதற்குள் அரிச்சுவடி தெரியாமல் அதன் முகவரியைச் சுத்தமாக அழித்து விடுகின்றார்கள். இங்கே மலேசியாவில் கொஞ்சம் வேறு மாதிரி. வந்ததும் தெரியாமல் போட்டதும் தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இங்கே ஆண்குழந்தை பெண் குழந்தை என்கிற பேதம் இல்லை. அது ஒன்றுதான் பாக்கி.



ஆக, இங்கே மட்டும் என்ன ஒசத்தி என்று கேட்க வேண்டாம். குழந்தைகளைப் பெற்று வீசி எறியும் கலாசாரத்திற்கு மலேசியா மட்டும் விதிவிலக்கு அல்ல. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒன்றாக ஊறிய மட்டைகள் ஒன்றாகத்தான் ஊறிப் போய் இருக்கும். குப்பைத் தொட்டிகளில், பேரங்காடிகள், கோயில் குளங்களில் இருந்து சிசுக்கள் மீட்கப் படும் அவல நிலைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். எல்லாரையும் சொல்லவில்லை. ஈவு இரக்கத்தில் ஈரப் பசை இல்லாமல் போகும் ஒரு சில மனிதப் பிண்டங்களைத்தான் சொல்கின்றேன்.



அண்மையில் மலேசிய தேசிய சேவைக்கு போன ஒரு பதின்ம வயதுப் பெண், குளியறையிலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த விஷயம் ஒட்டு மொத்த மலேசியர்களையே பிரமிக்கச் செய்தது. தெரியும்தானே.

அதற்கு எல்லாம் காரணம் என்ன. கணவனை விட்டுப் பிரிந்த பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள்; திருமணம் செய்யாமலே பிறந்த குழந்தைகள்; கணவன் இருந்தும் அவனுக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள்; கருவைக் கலைத்த பின்னர் பிறந்த குழந்தைகள்; பதின்ம வயதில் பக்குவப் படாத ஆசைகள்; வயதுக்கு மீறிய வரைமுறையற்ற வாலிபக் கோளாறுகள். 
அப்புறம் இதை எல்லாம் தாண்டி, கல்யாணம் ஆகாமலேயே பிறந்த குழந்தைகள். ஆக, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குழந்தையைப் பெற்று எடுத்தவர்களுக்கு அந்தக் குழந்தை வேண்டாம் என்கிற ஓர் இக்கட்டான நிலைமை எப்படியோ வந்துவிடலாம். அல்லது அவர்களுடைய ஆசாபாசங்களுக்கு அந்தக் குழந்தை இடைஞ்சலாகியும் போகலாம்.

அந்த மாதிரியான இரக்கமற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் குழந்தைத் தொட்டில்கள் வைக்கப் படுகின்றன.



ஒரு குழந்தையின் உயிர்க் காற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக, அப்படியே அந்தக் குழந்தையைக் குழந்தைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் அந்த உயிர் காப்பாற்றப்படும் இல்லையா. அப்படி விட்டுச் செல்லப் படும்  குழந்தைகள் தான், பின்னர் தொட்டில் குழந்தை மையங்களில் சேர்க்கப் பட்டு முறையாக வளர்க்கப் படுகின்றன. முறையாக யாரிடமாவது சேர்க்கப் படுகின்றன.

குறைந்து வரும் பெண் இனம்

இந்த  2011-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்தக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக மிக மோசமாகக் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தார்கள்


அதனால் அந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் உடனடியாக விரிவாக்கம் செய்யப்பட  வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பெண் சிசுக்கொலை

தமிழகத்தில் பெண் சிசுக்கொலை தொடக்கக் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் கொஞ்சம் பரவலாக இருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி,  தேனி போன்ற பகுதிகளுக்கும் தொற்றிக் கொண்டது.



அடுத்து 1990-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தக் கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது. மனிதம் இல்லாத இந்தச் செயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே ஈடுபட்டு வருவது சமூக ஆய்வின் மூலமாகக் கண்டு அறியப்பட்டது. எந்தச் சமூகத்தவர் என்று கேட்க வேண்டாம்.

அதன் பின்னர், பெண்களுக்காக, பெண்களின் விழிப்புணர்வுகளுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப் பட்டன. இருந்தாலும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவே இல்லை. தொடர்ந்தன.



தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் 1991-ம் ஆண்டில் தொட்டில் குழந்தை திட்டம் பல மாவட்டங்களில் துரிதப்படுத்தப் பட்டது. தர்மபுரியில் இந்தத் திட்டத்துக்கு பெரும் அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி மீண்டும் இந்தத் திட்டம் இன்னும் கூடுதலாகத் தீவிரப் படுத்தப் பட்டது.

இரு நாட்களுக்கு ஒரு குழந்தை

தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல் படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது சிசுக் கொலைக்கு எதிரான திட்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும்  தர்மபுரி மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு ஏப்ரல் வரை 89 குழந்தைகள் மட்டுமே தொட்டில் மையங்களில் ஒப்படைக்கப்பட்டன.


இப்போது நிலைமை மாறி வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு குழந்தை எனும் விகிதத்தில் தொட்டில் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருகிறது. மறுபடியும் சொல்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒரு குழந்தை. அப்படி என்றால் என்ன வேகத்தில் கலாசாரம் ரவிக் கொண்டு இருக்கிது என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

குழந்தை என்றால் அதில் ஆண் குழந்தை பெண் குழந்தை என்கின்ற பேதம் வேண்டாம். பெண் குழந்தை வேண்டாம் என்றால், கடைசியில் கலயாணம் பண்ணும் போது ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தானே தேட வேண்டி இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே எனும் பழமொழி ஒரு தெய்வ மொழியாக மாற வேண்டும். அதுவே நம் ஆசையும் கூட!



கடைசியாக, ஒரு கள்ளிச் செடியின் பக்கத்தில், மண்ணுக்குள் இருந்து அம்மா என்ற ஓர் அழுகைச் சத்தம் கேட்கிறது. உங்களுக்கு கேட்கிறதா? இந்த மாதிரி எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் இன்னும் மண்ணுக்குள் அழுது கொண்டே இருக்கின்றனர். அவர்களுடன் அந்த ஆண்டவனும் அழுகின்றார்.