மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஏப்ரல் 2020

மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 3

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்களின் வரலாறு ஒரு நீண்ட நெடிய வரலாறு. அந்த வரலாற்றில் பற்பல அதிசயமான நிகழ்வுகள். பற்பல ஆச்சரியமான விளைவுகள். அந்த நிகழ்வுகளில் ஒன்றுதான் பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமனின் சிங்கப்பூர் புலம் பெயர்வு. 

Nila Utama (Credit: Singapore Bicentennial Office)

சிங்கப்பூரை நீல உத்தமன் தோற்றுவித்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. நீல உத்தமன் தான் சிங்கப்பூருக்குச் சிங்க ஊர் என்று பெயரையும் வைத்தவர். சிங்கப்பூர் வரலாறும் சிதைவு படாமல் அவரைப் பற்றி இப்போதும் பெருமை பேசுகிறது.

சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாசிக் என்றும் அழைப்பது உண்டு. தெமாகி எனும் ஒரு சிற்றரசர் துமாசிக்கை ஆட்சி செய்து வந்தார். 1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதன் பின்னர் சிங்கப்பூரில் நீல உத்தமனின் ஆட்சி.

 


Tamil Malar - 17.04.2020

சிங்கப்பூரில் ஓர் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் தான் பரமேஸ்வரா எனும் பெயரும் வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. அதற்கு முன்னர் சின்ன ஓர் இடைத் தகவல்.

பரமேஸ்வரா என்பவர் இந்தோனேசியா பலேம்பாங் எனும் இடத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். தவறு. பரமேஸ்வரா சிங்கப்பூரில் பிறந்தவர்.

சிங்கப்பூரை ஆட்சி செய்த தெமாகி (Temagi) என்பவரைக் கொலை செய்தததாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. தெமாகியை பரமேஸ்வரா கொலை செய்யவில்லை.
 
1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தான் தெமாகி  கொல்லப் பட்டார். பரமேஸ்வரா தெமாகியைக் கொலை செய்யவில்லை.

பரமேஸ்வராவைப் பழி வாங்க சயாமியர்கள் படை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. நீல உத்தமன் மீது தான் சயாமியர்கள் படை எடுத்தார்கள். நீல உத்தமனின் நான்காவது தலைமுறை தான் பரமேஸ்வரா.


SingPost Releases Bicentennial Stamps Featuring Sang Nila Utama 22 Jun 2019

சிங்கப்பூரை ஆட்சி செய்த நீல உத்தமனின் வாரிசுகளும் அவர்கள் ஆட்சி செய்த காலக் கட்டங்களும்:

1. நீல உத்தமன் (ஸ்ரீ திரி புவனன்) - Nila Utama (Sri Tri Buana) - (1299 – 1347)
   
2. ஸ்ரீ விக்ரம வீரா - Sri Wikrama Wira - (1347 – 1362)
   
3. ஸ்ரீ ராணா விக்ரமா - Sri Rana Wikrama - (1362 – 1375)
   
4. ஸ்ரீ மகா ராஜா - Sri Maharaja - (1375 – 1389)
   
5. பரமேஸ்வரா - Parameswara - (1389 – 1398)

சயாமிய முற்றுகை நடந்த போது நீல உத்தமனின் ஆட்சிக்கு ஆதரவாக சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கியது. அதனால் சயாமியர்கள் பின்வாங்கினார்கள். 



SingPost Releases Bicentennial Stamps Featuring Sang Nila Utama 22 Jun 2019

சில வரலாற்றுக் கற்றுக் குட்டிகள் கதை சொல்வது உண்டு. முற்றிலும் தவறான கதைகள். வரலாற்றை ஒழுங்காகத் தெரிந்து கொள்ள வேண்டும். வாய்க்கு வந்தபடி கதை திரிப்பது சில அரைகுறைகளின் அரைவேக்காட்டு ராகங்கள். அந்த மாதிரியான ராகங்கள் வரலாற்றுக்குத் தேவை இல்லை.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்களின் வரலாற்றில் இந்தியர் பேரரசுகளின் பட்டியல் வருகிறது. கவனியுங்கள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்; எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்; எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.



Sri Vijaya Empire

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500



Sang Nila Utama - Wikipedia

அந்தப் பேரரசுகளில் சில முக்கியமான பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:

1. பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு (Tarumanagara) (கி.பி.358 - கி.பி.669 ஜாகர்த்தா)

2. ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya) (கி.பி.650 - கி.பி.1377 சுமத்திரா)

3. கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு (Shailendra) (கி.பி.650 - கி.பி.1025 மத்திய ஜாவா)

4. ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு (Warmadewa) (கி.பி.914 - கி.பி.1181 பாலி)

5. சஞ்சாயா (Sanjaya Rakai) - மத்தாராம் பேரரசு (Medang Mataram Kingdom) (கி.பி.732 - கி.பி.1006 கிழக்கு ஜாவா)

6. ராடன் விஜயா (Raden Wijaya) - மஜபாகித் பேரரசு (கி.பி.1293 - கி.பி.1527 ஜாவா)

7. ராஜாசா (Rajasa) - சிங்காசாரி (Singasari)  பேரரசு; (கி.பி1222 - கி.பி.1292 கிழக்கு ஜாவா) 

 
Seated female ascetic, Eastern Javanese period,
15th–16th century Indonesia (Java),
Majapahit kingdom Bronze; H. 6 5/8 in. (16.8 cm)

இந்தப் பேரரசுகள் எல்லாம் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். மேலே சொன்ன சக்தி வாய்ந்த சில முக்கியமான பேரரசுகள் மட்டுமே காட்சிப் படுத்தப் படுகின்றன.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஒவ்வோர் இந்தியர் அரசையும் அடையாளப் படுத்துகிறேன். பரமேஸ்வரா கட்டுரைத் தொடருக்கு அந்த இணைப்புகள் வலு சேர்க்கும் என்று நம்புகிறேன்.

அந்தப் பேரரசுகளில் மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப் படுவது மஜபாகித் (Majapahit) பேரரசு. ஒரு கட்டத்தில் மட்டும் அதாவது கி.பி.1350-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரையில் மஜபாகித் பேரரசின் கீழ் 9 பேரரசுகள் 8 சிற்றரசுகள் இயங்கி வந்து உள்ளன.

நன்றாகக் கவனியுங்கள். மஜபாகித் பேரரசின் கீழ் ஒன்பது பேரரசுகள் இருந்து இருக்கின்றன.



15th–16th century Indonesia (Java),
Majapahit kingdom Bronze

சுமத்திரா, நியூகினி, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, சூலு தீவுக் கூட்டங்கள், பிலிப்பைன்ஸ், கிழக்கு தீமோர் நாடுகள் என ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கீழ் தாழ் பணிந்து தலை வணங்கி நின்றன.

கி.பி. 1350 – 1389-ஆம் ஆண்டுகளில் மஜபாகித் பேரரசை ஹாயாம் வூரூக் (Hayam Wuruk) எனும் ராஜா ஜனகரன் (Rajasanagara) ஆட்சி செய்த போது, அந்தப் பேரரசு 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்து.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அந்த மாவட்டங்களை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்தச் சொந்தங்கள் யார் என்பதையும் பார்ப்போம்.

1. கஹுரிபான் (Kahuripan) - திரிபுவன துங்காதேவி (Tribhuwanatunggadewi) - ராஜா ஜனகரனின் தாயார்.

2. கெடிரி (Kediri) - ராஜா தேவி மகாராஜாசா (Rajadewi Maharajasa) - ராஜா ஜனகரனின் மாமியார்.

3. துமாபெல் (Tumapel - Singhasari) - கர்த்தாவரதனா (Kertawardhana) - ராஜா ஜனகரனின் தந்தையார்    

4. வெங்கர் (Wengker - Ponorogo)  - விஜயராஜாசா (Wijayarajasa) - ராஜா ஜனகரனின் மாமனார்

5. மத்தாஹுன் (Matahun - Bojonegoro) - ராஜாசாவர்தனா (Rajasawardhana) - ராஜா ஜனகரனின் சகோதரர்

6. வீரபூமி (Wirabhumi - Blambangan) - பெரி வீரபூமி (Bhre Wirabhumi) - ராஜா ஜனகரனின் மகன்.

7. பாகுஹான் (Paguhan) - சிங்கவர்தனா (Singhawardhana) - ராஜா ஜனகரனின் மைத்துனர்

8. கபாலம் (Kabalam) - குசுமாவர்த்தனி (Kusumawardhani) - ராஜா ஜனகரனின் மகள்.    

9. பவனுவான் (Pawanuan) - சூரவர்த்தினி (Surawardhani) - ராஜா ஜனகரனின் மருமகள்.

10. லாசம் (Lasem - Central Java) - ராஜாசாதுதிதா இந்துதேவி (Rajasaduhita Indudewi) - ராஜா ஜனகரனின் சித்தப்பா மகள்    

11. பாஜாங் (Pajang - Surakarta) - ராஜாசாதுதிதா ஈஸ்வரி (Rajasaduhita Iswari) - ராஜா ஜனகரனின் சகோதரி

12. மத்தாராம் (Mataram - Yogyakarta)- விக்கிரமவர்தனா (Wikramawardhana) -     ராஜா ஜனகரனின் சகோதரர்.




ஆக ஒரு பேரரசை ஒரு குடும்பத்தார் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

(3.Majapahit Overseas Empire)

மேலே சொன்ன அந்தப் பேரரசுகளைத் தவிர மேலும் பற்பல சிற்றரசுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. இன்னும் ஒரு விசயம்.

பாலி தீவில் முதன்முதலில் ஒரு சிற்றரசை உருவாக்கியது ஓர் இந்திய மன்னர். அவருடைய பெயர் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesarivarma). இவர் பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல். அந்தச் சிற்றரசின் பெயர் வர்மதேவா சிற்றரசு. கி.பி.914-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

அப்போது அங்கே சைவமும் புத்தமும் சமகாலத்தில் பின்பற்றப் பட்டன. வர்மதேவா சிற்றரசு முதலில் அது ஒரு சிற்றரசு தான். காலப் போக்கில் அதுவே ஒரு பேரரசாக உருமாற்றம் கண்டது.

(4.Debbie Guthrie Haer, Juliette Morillot and Irene Toh);

(5.Andy Barski, Albert Beaucort and Bruce Carpenter)



15th–16th century Indonesia (Java),
Majapahit kingdom Bronze

பாலி தீவில் வர்மதேவா சிற்றரசு உருவான காலக் கட்டத்தில் ஜாவாவில் மத்தாரம் பேரரசு (Mataram Kingdom) எனும் ஓர் அரசு இருந்தது. இந்தப் பேரரசை சஞ்சாயா (Sanjaya Dynasty) பரம்பரையினர் ஆட்சி செய்து வந்தனர்.

இந்த மத்தாரம் பேரரசை கி.பி. 929-ஆம் ஆண்டு ஸ்ரீ இசயானா விக்ரமதாம துங்கா தேவா (Sri Isyana Vikrama Dhamma Tungga Deva) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். இவருடைய இன்னொரு பெயர் மாப்பு சிந்தோக் (Mpu Sindok). 

மாப்பு சிந்தோக் காலத்தில் தான் ஜாவா தீவில் இருக்கும் மெராப்பி (Merapi) எரிமலை வெடித்தது. உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் அதிகம் ஏற்பட்டன.

விக்ரமதாம துங்கா தேவாவிற்குப் பின்னர் அவருடைய மகள் இசானாதுங்க விஜயா (Isana Tunga Vijaya) என்பவர் ஆட்சிக்கு வந்தார்.

மெராப்பி எரிமலை வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தியதும், மத்தாரம் பேரரசு தன் நிர்வாகத்தைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியது. மேற்கு ஜாவாவில் ஜொம்பாங் எனும் ஒரு மாவட்டம் (Jombang Regency) இருந்தது. இப்போதும் இருக்கிறது. 



Singapore 14th Century

இந்த மாவட்டத்தில் பிராந்தாஸ் ஆறு (Brantas River) சிறப்புமிக்கது. இந்த ஆற்றின் இருமருங்கிலும் தான் அப்போதைய புதிய மத்தாரம் பேரரசு அமைக்கப் பட்டது.

அந்தப் புதிய மத்தாரம் பேரரசிற்கு மேடாங் (Medang) அரசு என்று பெயர் வைக்கப்பட்டது. இருப்பினும் மேடாங் எனும் சொல்லை விட மத்தாரம் எனும் சொல்லே நிலைத்து விட்டது. இந்தோனேசிய வரலாற்றில் மத்தாரம் எனும் சொல்லே நிலையான அடைமொழியாகவும் வலம் வருகிறது.

இந்த விக்ரமதாம துங்கா தேவா தான் பின்னர் காலத்தில் இசாயனா எனும் அரச பரம்பரையை உருவாக்கினார். பழைய மத்தாரம் பேரரசில் இவர் சஞ்சாயா அரச பரம்பரையைச் சார்ந்தவர். புதிய அரசு உருவானதும் தன்னுடைய அரசப் பரம்பரைப் பெயரை இசாயனா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இவரின் சந்ததியினரை இசாயனா பரம்பரையினர் (Isayana Dynasty) என்று சொல்வதும் உண்டு.



Singapore Bicentennial Film

மத்தாரம் பேரரசு தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியதற்கு மூன்று காரணங்கள் சொல்லப் படுகின்றன.

முதல் காரணம்: மெராப்பி எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள். அதனால் ஏற்பட்ட எரிமலைப் புகை மண்டலத்தின் நச்சுக் காற்றுகள்;

இரண்டாவது காரணம்: அரச அதிகாரப் போராட்டம்.

மூன்றாவது காரணம்: சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு, ஜாவாவில் இருந்த மத்தாரம் பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது.

அந்த நிர்வாக மாற்றத்தில் சஞ்சாயா (Sanjaya) எனும் மற்றொரு சிற்றரசும் ஜாவாவில் உருவானது. ஓர் இடைச் செருகல்.

Prambanan, the Most Beautiful and Graceful Hindu Temple in Indonesia

சஞ்சாயா எனும் பெயரில் இரு அரசுகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று சஞ்சாயா சிற்றரசு. மற்றொன்று சஞ்சாயா பேரரசு.

கிழக்கு ஜாவாவிற்கு மாறிய சஞ்சாயா பேரரசு அப்படியே தன் அதிகார வலிமையைப் பாலி தீவிலும் களம் இறக்கியது. அந்த வகையில் தான் பாலி தீவில் முதன்முதலாக ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவானது. இந்து சமயம் அங்கே நிலைத்துப் போனது.

அதனால் பாலி தீவு மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்போது பாலி தீவில் வாழ்பவர்களில் 83 புள்ளி 5 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகும்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Singapore. Ministry of Culture, Singapore. Ministry of Communications and Information. Information Division (1973). Singapore facts and pictures. Singapore: Ministry of Culture.

2. Sang Nila Utama, pioneers join Stamford Raffles along Singapore River". Channel NewsAsia.

3. Marwati Djoened Poesponegoro; Soejono (R. P.); Richard Z. Leirissa (2008). Sejarah nasional Indonesia: Zaman kuno – Volume 2. PT Balai Pustaka.

4. Groeneveldt, W.P. (1877). Notes on the Malay Archipelago and Malacca, Compiled from Chinese Sources.