எழில் கொஞ்சும் கேமரன் மலை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழில் கொஞ்சும் கேமரன் மலை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 நவம்பர் 2019

எழில் கொஞ்சும் கேமரன் மலை - 1

இயற்கை அன்னைக்கு நெஞ்சிலே வஞ்சகம் இல்லை. ஈராயிரம் இறக்கைகள் கட்டினாலும் இல்லை என்று சொல்லும் மனசும் இல்லை. அள்ளி அள்ளி வாரி இறைக்க மட்டுமே தெரியும். இயற்கை அழகு என்பது சொல்லாமல் கொள்ளாமல் இறைவன் தந்த ஓர் அட்சயப் பாத்திரம். அர்ப்பணிப்பு வளாகத்தில் மணிமுத்துகளின் சீதனத் தடாகம்.


மலேசிய நாட்டிலே பார்க்கும் இடம் எல்லாம் இயற்கை அன்னை சிந்தாமல் சிதறாமல் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். அத்தனையும் பச்சைப் பசேல் சீதனக் கொலுசுகள். அந்த இயற்கை அன்னைக்கு முதல் மரியாதை.

அந்தச் சீதனப் பொற் கலசங்களில் ஓர் அழகியச் சீர்வரிசை தான் கேமரன் மலை. இயற்கை அன்னையின் படைப்புகளில் அவளையே பிரமிக்கச் செய்த பச்சை மாணிக்கத்தின் பச்சைப் பெரும் வாசல்.

பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல். ஒரே வார்த்தையில் சொன்னால் வந்தாரை வாழ வைக்கும் புண்ணியமான பச்சை மலை. அது ஒரு பச்சைப் பொக்கிஷம்.

1885-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது மலாயாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். 



மலாயாவின் தித்திவாங்சா மத்தியமலைத் தொடரை நிலஆய்வு செய்ய வேண்டும். மலையின் எல்லைகளை அங்குலம் தவறாமல் அளந்து பார்க்க வேண்டும். அது அவர்களின் ஒரு நீண்ட நாள் திட்டம்.

அந்தக் காலக் கட்டத்தில் தான் இந்தியாவின் இமயமலையிலும் நில ஆய்வுகள் செய்து கொண்டு இருந்தார்கள்.

கேமரன் மலையில் ஆய்வுகள் செய்வதற்காக வில்லியம் கார்டன் கேமரன் (Sir William Gordon Cameron) என்பவரை அனுப்பி வைத்தார்கள். அவருக்குத் துணையாக குலோப் ரியாவ் (Kulop Riau) என்பவர். இவர்களைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொல்கிறேன்.

இந்தத் தித்திவாங்சா மத்தியமலைத் தொடர்தான் மலாயாத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கிறது. அந்தப் பக்கம் கிழக்குக் கரை. தென்சீனக் கடல் உரசிப் பார்க்கும் மணல் காட்டுத் தரைகள். இந்தப் பக்கம் மேற்குக் கரை. மலாக்கா நீரிணை ஐலசா பாடும் மலைக்காட்டுக் கரைகள்.

மத்திய மலைப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் 1200 - 1800 மீட்டர் உயரத்தில் உள்ளன. குனோங் தகானில் இருந்து குனோங் லேடாங் வரை நூற்றுக் கணக்கான மலைகள்.

ஆக வில்லியம் கேமரனின் ஆய்வுக்குத் தடபுடலான ஏற்பாடுகள். மூட்டை மூட்டையாக உணவுப் பொருட்கள்; பெட்டி பெட்டியாக நில ஆய்வுப் பொருட்கள்; குவியல் குவியலாகக் கூடாரங்கள். இப்படி எக்கச்சக்கமான சாதனங்கள். தளவாடங்கள். சுமைகளைத் தூக்கிச் செல்ல முப்பது நாற்பது கூலியாட்கள்.

வழிகாட்டிகளாக இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் பதினைந்து யானைகள். இருபது குதிரைகள். முப்பது கேவேறு கழுதைகள். டசன் கணக்கில் வேட்டை நாய்கள். கூடவே சாப்பாட்டுச் சாங்கிய சம்பிரதாயங்களுக்கு ஆடுகள் மாடுகள். இப்படி ஒரு பெரிய பட்டாளமே நில ஆய்வுக் களத்தில் இறங்கியது.

அவர்கள் முதலில் ஈப்போவில் கூடாரம் போட்டு இருக்கிறார்கள். இரு குழுக்களுக்காகப் பிரிக்கப் பட்டார்கள். ஒரு குழுவினர் சிம்மோர் - தானா ஈத்தாம் வழியாகத் தஞ்சோங் ரம்புத்தான் போய் இருக்கிறார்கள். மற்றும் ஒரு குழுவினர் ஈப்போவில் இருந்து தம்பூன் வழியாக போய் இருக்கிறார்கள்.  பின்னர் தஞ்சோங் ரம்புத்தானில் இருந்து மேற்கு மலைத் தொடரில் ஏறி இருக்கிறார்கள்.

தஞ்சோங் ரம்புத்தான் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அங்கே மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்ற ஒரு புனர்வாழ்வு மையம் உள்ளது. இப்போதும் இருக்கின்றது. தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

கேமரன் மலையில் ஏறுவதற்கு ஏன் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகப் போக வேண்டும். இப்படியும் சிலர் கேட்கலாம். நீங்கள் நினைக்கிற மாதிரி அப்போது தாப்பா பாதையும் இல்லை. சிம்பாங் பூலாய் பாதையும் இல்லை.

ஒரே ஒரு காட்டுப் பாதை மட்டுமே இருந்தது. அதுவும் ஒற்றையடிப் பாதை. ஏறினாலும் வழுக்கும். இறங்கினாலும் வழுக்கும். அப்படி ஒரு நெரிசலான பாதை. காட்டு யானைகள் கர்ஜனை செய்த பாதை.

ஏன் என்றால் அந்தப் பாதையைப் பெரும்பாலும் காட்டு யானைகள் பயன்படுத்தி வந்து இருக்கின்றன. இதில் விழுந்து எழுந்து நடப்பதற்கு நன்றாகவே காட்டு மரங்களின் இடக்கு முடக்கு வேர்கள். இருந்தாலும் ‘டிராபிக் ஜேம்’ இல்லாத பாதை. ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அது தான் தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை. வேறு எந்தப் பாதையும் அப்போது இல்லை. 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

சில மாதங்கள் பயணம் செய்து இருக்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்கள் பிடித்து இருக்கலாம். போகும் வழியில் பற்பல நில ஆய்வுகள். பற்பல வரைபடப் பதிவுகள். சரி.

அப்படி ஏறிக் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் ஓர் அதிசயம். பச்சை மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய பச்சை பிருந்தாவனம். பச்சை நீலப் போர்வையை விரித்துப் படர்ந்து விரிந்து படுத்துக் கிடப்பதைப் பார்த்து எல்லோரும் அதிசயித்துப் போனார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இயற்கை அன்னை நடனம் ஆடி இருக்கிறாள். கண்கள் அசந்து போய் இருக்கலாம். சின்ன ஒரு கற்பனைச் செருகல்.

அதைப் பார்த்த வில்லியம் கேமரன், ‘இங்கேதான் உலகின் எட்டாவது அதிசயம் மறைந்து கிடக்கிறது’ என்று சொன்னாராம். எப்படிங்க. உண்மையிலேயே கேமரன் மலை ஓர் அதிசயம் தாங்க.

என்னைக் கேட்டால் கேமரன் மலை என்பது ஒரு பச்சை அழகு ஓவியம். கேமரன் மலையை மிஞ்சும் அளவிற்கு மலேசியாவில் வேறு எந்த மலையும் இல்லை. ஒன் மினிட் பிளீஸ்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த கேமரன் மலை வேறு. இப்போது நான் பார்க்கின்ற கேமரன் மலை வேறு. அது ஒரு சோகக் கதை. இப்போது இந்த நேரத்தில் வேண்டாமே.

அந்தக் காலக் கட்டத்தில் வில்லியம் கேமரன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இயற்கை அன்னை நடனம் ஆடிய பசும் புல்வெளி. பின்னே இருக்காதா... மனித வாடையைச் சுவாசிக்காத மலையாச்சே... அதனால் தான் பார்த்து மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.

வில்லியம் கேமரனின் இரு முக்கிய ஆய்வுப் பணிகள். முதலாவது ஆய்வு: கிந்தா ஆறு எங்கே உற்பத்தி ஆகிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது ஆய்வு: பேராக் - பகாங் மாநிலங்களின் எல்லைகளைப் பிரிக்க வேண்டும். மாநிலங்களின் எல்லைகோடு வரைய வேண்டும்.

இந்த இரண்டும்தான் அவர்களின் முக்கியப் பணிகள். கடைசியில் கிந்தா ஆற்றின் நதிமூலத்தையும் கண்டுபிடித்தார்கள்.

தித்திவாங்சா மலைத் தொடரில் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி மலைகள். அவற்றில் ஒன்றுதான் குனோங் சாபாங். சின்ன அழகிய மலை. இந்த மலையில் தான் கிந்தா ஆற்றின் ஊற்றுக் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

வீட்டில் குளிக்கப் பயன்படுத்துவோமே நீர்த்தொட்டி. அவ்வளவு பெரியது தான் அந்த ஊற்றுக் கிணறு. அங்கு இருந்துதான் கிந்தா ஆறு உற்பத்தியாகிறது.

பெரும்பாலும் ஒரு சின்ன ஊற்றுக் கிணற்றில் இருந்துதான் பெரிய பெரிய நதிகள் எல்லாம் உருவாகின்றன. பகாங் ஆறு உற்பத்தியாகும் இடத்தை நான் பார்த்து இருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் குனோங் தகான் மலையில் ஏறிய அனுபவம். ஏறி இறங்க ஒன்பது நாட்கள் பிடிக்கும். ஏறுவதற்கு ஐந்து நாட்கள். இறங்குவதற்கு நான்கு நாட்கள். அப்படி ஏறும் போது இந்த ஊற்று நீர் இடத்தைக் கடந்து தான் போக வேண்டும். மூன்றாவது நாள் இந்த இடத்தைப் பிடித்து விடலாம். இந்த நீர் ஊற்று குனோங் ராஜா எனும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.

அங்கே ஒரு பிருமாண்டமான பெரிய பாறை. முப்பது அடி உயரம். நாற்பது அடி அகலம். அந்தப் பாறையில் இருந்து நீர் கசிகிறது. கீழே ஒரு சிறிய குட்டை. இரண்டு அடி அகலத்தில் இருக்கும். அதில் தான் முதலில் பாறையின் கசிவு நீர் தேங்குகிறது. அப்புறம் தான் ஓடையாக கீழே வழிந்து ஓடுகிறது.

அந்த நீரைக் குடித்துப் பார்த்தால் அப்படித் தான் இருக்கும். சுத்தமான மினரல் நீர் (கனிம நீர்). எத்தனை ஆயிரம் வெள்ளி கொடுத்தாலும் அப்படிப்பட்ட அசல் சுத்தமான மினரல் நீர் கிடைக்கவே கிடைக்காதுங்க.

குனோங் தகான் உச்சிக்கு ஏறும் போது ஆளுக்கு நான்கு ஐந்து பாட்டில் நீர் பிடித்துக் கொள்வோம். அதன் பின்னர் மேலே மலை உச்சியில் நீர் கிடைக்காது. மழை நீரைப் பிலாஸ்டிக் போட்டு பிடித்துக் கொள்ள வேண்டும். அடடடா... கதையை எங்கேயோ கொண்டு போய் விட்டேன். பிரச்சினை இல்லை. குனோங் தகான் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

கிந்தா ஆறு ஈப்போ வழியாக வந்து, பின்னர் பேராக் ஆற்றுடன் கலக்கின்றது. மலேசியாவில் பெரிய ஆறுகளில் பேராக் ஆறு முக்கியமானது. நிறையவே வரலாறுச் சுவடுகளைத் தாங்கிய வண்ணம் ஓடுகிறது.

வில்லியம் கேமரன் நில ஆய்வுக் குறிப்புகள் எழுதும் போது 1800 மீட்டர் உயரத்தில் சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருக்கின்றன. பல பகுதிகளில் மென்மையான மலைச் சரிவுகள் உள்ளன என்றும் எழுதி இருக்கிறார். இடத்தின் பெயரைச் சொல்லவில்லை.

இருந்தாலும் வில்லியம் கேமரன் முதன் முதலில் பார்த்தது ‘புளு வேலி’ பகுதி என்பதை நினைவு படுத்துகிறேன். இது நடந்தது 1885-ஆம் ஆண்டு.

இந்தக் கட்டத்தில் அதிக நாட்கள் மலைகளின் உச்சியிலேயே இருந்ததால் வில்லியம் கேமரனுக்கு ஒரு வகையான மறதி நோய் ஏற்பட்டு இருக்கிறது.  அவருக்கும் வயது ஆகிவிட்டது. இருந்தாலும் பூர்வீகக் குடிமக்கள் வழங்கிய ’தொங்காட் அலி’ வேர்களை அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறார். அதுவும் ஒரு பிரச்சினை.

தொங்காட் அலி என்பது ஒரு வகையான வலி நிவாரணி. ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு அதிகமாகச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். ஒரு செருகல்.

நாங்கள் மலை ஏறும் போது எங்களுடன் வந்த அஸ்லி வழிகாட்டி, தொங்காட் அலியைப் பிடுங்கிச் சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடல் சூடாகிப் போகும். மூட்டு வலிகள் பறந்து போகும். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி போகக் கூடாது. கல்லீரலைப் பாதிக்கும்.

ஆக வில்லியம் கேமரன், தொங்காட் அலியை அதிகமாகச் சாப்பிட்டு அதனால் பிரச்னைகள் ஏற்பட்டு இருக்கிறது. மலை உச்சியிலேயே அவருக்கு நினைவு இழந்து போனது. அவரைத் தூக்கி வந்து இருக்கிறார்கள்.

கீழே இறங்கி வந்த சில நாட்களிலேயே இறந்தும் போனார். அவர் இறந்த தேதி 2 மார்ச் 1913. அப்போது அவருக்கு வயது 85. அந்த வயதிலும் அப்பேர்ப்பட்ட தித்திவாங்சா மலையில் ஏறி சாதனை படைத்து இருக்கிறாரே. நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.

ஆனால் வில்லியம் கேமரன் கண்டுபிடித்த கேமரன் மலைப் பிருந்தாவனத் தகவல்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் கிடைக்கவே இல்லை. அந்தத் தகவல்கள் ஈப்போ அல்லது கோலாகங்சாரில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இன்னும் ஒரு விஷயம். அவர் கண்டுபிடித்த அந்தப் பச்சைப் பள்ளத்தாக்கைப் பற்றி வரைபடத்திலும் அவர் சரியாகக் குறித்து வைக்கவும் இல்லை. ஒருக்கால் மறதி நோய் ஏற்பட்டதால் குறித்து வைக்க தவறி இருக்கலாம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று நமக்கும் தெரியவில்லை.

ஆனால் ஓர் அழகிய பச்சைப் பிருந்தாவனம் இருக்கிறது என்று உலகத்திற்கு முதன் முதலில் சொன்னவர் சர் வில்லியம் கேமரன் தான். அதனால் அவரை மலேசியர்கள் மறக்கவில்லை. அவருடைய பெயரையே அந்த மலைக்கு வைத்து இன்று வரை அழகு பார்க்கிறார்கள்.

அப்புறம் அதோடு கேமரன் மலையை ஆங்கிலேயர்களும் மறந்து விட்டார்கள். ரொம்ப நாட்களாகக் கேமரன் மலையைப் பற்றி எவருமே கண்டு கொள்ளவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மலாயா நாட்டில் தலை போகிற வேலைகள். ஆட்டைப் பார்ப்பார்களா நாட்டைப் பார்ப்பார்களா. பாவம் அவர்கள்.

உள்நாட்டில் மலாயா மாநிலங்களை வளைத்துப் போட வேண்டும். கிடைத்ததைச் சுரண்டிக் கப்பல் கப்பலாய் ஏற்ற வேண்டும். லண்டனில் இருக்கும் முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அப்புறம் எப்படி…

அதற்கே அவர்களுக்கு நேரம் இல்லை. அப்புறம் எப்படிங்க அவர்களுக்கு கேமரன் மலை நினைவுக்கு வந்து இருக்கும். சொல்லுங்கள்.

(தொடரும்)