இந்தியப் பிரதமரும் இனிய குறளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியப் பிரதமரும் இனிய குறளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜூலை 2020

இந்தியப் பிரதமரும் இனிய குறளும்



மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு


(அதிகாரம்: படைமாட்சி குறள் எண்: 766)

இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய திருக்குறள்.

*மு வரதராசன் உரை*
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.

*மணக்குடவர் உரை*
மறமும், மானமும், நல்லவழிச் சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம்.

நல்லவழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.

*பரிமேலழகர் உரை*
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது.

*சி இலக்குவனார் உரை*
வீரமும், மானமும், மாட்சிமைப்பட்ட நடைப்போக்கும், தெளிவும் என்று சொல்லப்பட்ட நான்கே படைக்குக் காவல் ஆகும். (படை அழியாமல் காக்கக் கூடியன.)

*பதவுரை* மறம் - வீரம்; மானம் - தாழ்வின்மை; மாண்ட - மாட்சிமைப்பட்ட; வழி - நன்னெறி; செலவு - செல்லுதல்; தேற்றம் - தெளியப்படுதல், தெளிவு, நம்பிக்கை; என - என்பது பற்றி; நான்கே - நான்குதாம்; ஏமம் - அரண்; படைக்கு - படைக்கு.

*நிறையுரை* வீரம் மானம் சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர் நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவலாகும்.