வி.ஜி.சந்தோஷம் - வள்ளுவம் போற்றும் வள்ளல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி.ஜி.சந்தோஷம் - வள்ளுவம் போற்றும் வள்ளல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 நவம்பர் 2019

வி.ஜி.சந்தோஷம் - வள்ளுவம் போற்றும் வள்ளல்

வரலாறு மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் தான் வரலாற்றைப் படைக்கிறான். வாழும் போதே ஒரு சிலர் தான் வரலாறு படைத்து, அந்த வரலாற்றிலேயே வரலாற்றுச் சித்தர்களாக வாழ்ந்தும் காட்டுகிறார்கள்.

ஓய்வு இல்லாத உழைப்பு. உறக்கம் இல்லாத விழிப்பு. இந்த இரு பூக்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உயர்ந்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒரு தமிழரின் விருச்சக வரலாறு வருகிறது. இதுவே சிலருக்கு வழிகாட்டியாக அமையலாம். பலருக்கு உந்து சக்தியாக அமையலாம். அதையும் தாண்டிய நிலையில் பலருக்கும் வியப்பாகவும் அமையலாம். அந்த வகையில் உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் ஒரு மனிதரை இன்று சந்திக்கிறோம். 



அவர்தான் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோஷம். திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் உலகம் முழுவதும் பரப்பி வருகிறவர். உலகின் பல நாடுகளில் 52 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியவர். நூற்றுக் கணக்கான திருக்குறள் மாநாடுகளை நடத்தி சாதனை படைத்தவர். ஒரு தமிழர்.

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர். வி.ஜி.பி. குழுமத்தின் நிறுவனர். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று வலியுறுத்தும் வி.ஜி.சந்தோஷம் மலேசியா வருகிறார். ஈப்போ மாநகரில் அவருக்குச் சிறப்புச் செய்யப் படுகிறது. கூடுதலான மகிழ்ச்சியே.



தமிழ்நாட்டில் 33 திருவள்ளூர்ச் சிலைகளை டாக்டர் வி.ஜி.சந்தோஷம் நிறுவி உள்ளார். தென்னாப்பிரிக்கா, கயானா, மலேசியா, தாய்லாந்து, தைவான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இலங்கை, அந்தமான் (இந்தியா) போன்ற வெளிநாடுகளில் 19 திருவள்ளூர் சிலைகளை நிறுவி உள்ளார்.

நம் மலேசியாவில் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் இவர் அமைத்த வள்ளுவர் சிலை அழகாய் இன்றும் காட்சி தருகிறது. 2016-ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்த போது அந்தச் சிலை அமைக்கப் பட்டது.



அமெரிக்கா சிக்காகோ 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 50-ஆவது திருவள்ளுவர் சிலையை நிறுவிச் சாதனை செய்து உள்ளார். ஆகக் கடைசியாக தைவான் நாட்டில் இரு திருவள்ளுவர்ச் சிலைகளை அமைத்து இருக்கிறார்.

போகிற நாடுகளில் எல்லாம் திருவள்ளுவர் சிலைகளை அமைத்து திருவள்ளுவத்திற்குப் பெருமை செய்யும் அவரை வாழ்த்துகிறோம். அந்த வகையில் அவரை அறிமுகம் செய்வதிலும் பெருமை கொள்கிறோம்.

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலர் சொல்வார்கள். மதுரையில் பிறந்தார் என்று சிலர் சொல்வார்கள். கன்னியாகுமரியில் பிறந்தார் என்றும் சிலர் சொல்வார்கள்.

சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். திருவள்ளுவர் எங்கு பிறந்தால் என்ன. எல்லா இடங்களிலும் அவரின் குறள் மணம் பரவ வேண்டும். அது தானே முக்கியம். அது தானே நம்முடைய தலையாய நோக்கம்.



ரிக் வேதம். கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையாக இருப்பவை நான்கு வேதங்கள். அதில் முதல் வேதம் தான் ரிக் வேதம். இந்த வேதம் 'அ' எனும் எழுத்தில் தொடங்குகிறது. அதே போல திருக்குறளும் 'அ' எனும் எழுத்தில் தானே தொடங்குகிறது. குழந்தையும் அம்மா என்று தானே முதலில் பேசத் தொடங்குகிறது.

அந்த வகையில் எல்லா மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும். மரியாதை வழங்க வேண்டும். திருக்குறளும் இதைத் தானே வலியுறுத்துகிறது. இப்படிச் சொல்லித் தான் திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கிறார் வி.ஜி.சந்தோஷம்.

யார் இந்த வி.ஜி.சந்தோஷம். ஏன் இவருக்கு திருவள்ளுவத்தின் மீது இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டது. இவருடைய வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

சின்ன வயதில் ரொம்பவும் சிரமப் பட்டவர் வி.ஜி.சந்தோஷம். தந்தையார் தொழில் காரணமாக வெளியூர் சென்று விடுகிறார். வருமானம் இல்லாமல் குடும்பத்தில் வறுமை. தாயார் மட்டும் வேலை செய்கிறார். பிள்ளைகளைக் காப்பாற்றுகிறார். 



வி.ஜி.சந்தோஷத்தின் படிப்பு தடை படுகிறது. இந்தக் கட்டத்தில் அண்ணன் வி.ஜி.பன்னீர்தாஸுக்கு சென்னையில் ஒரு மளிகைக் கடையில் வேலை. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னைக்கு வருகிறார்கள். வந்த சில நாட்களில் சின்னதாக ஒரு டீ கடையைத் திறக்கிறார்கள். வஞ்சகம் இல்லாமல் அனைவரும் உழைக்கிறார்கள்.

அதே சமயத்தில் வி.ஜி.சந்தோஷம் வீடு வீடாகச் சென்று செய்தித்தாட்கள் போடுகிறார். அதன் பின்னர் டீ கடையில் டீ போடும் வேலை.

பின்னர் சீட்டுப் பிடித்தல் தொழில். சீட்டுத் தொகைக்குப் பதிலாகப் பொருட்கள் வழங்கும் முறை. அதிலும் வெற்றி. வியாபாரத் துறையில் படிப்படியாக உயர்ந்தார்கள். இது ஒரு நீண்ட காலப் போராட்டம்.

முயற்சியில் வளர்ச்சி. அதே அந்த வளர்ச்சியிலும் முயற்சிகள் தொடர்ந்தன. சன்னம் சன்னமாகச் சேமித்து, சென்னையில் வி.ஜி.பி. கிளை நிறுவனங்களை உருவாக்கினார்கள்.

அப்படியே சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் தங்கக் கடற்கரையை உருவாக்கினார்கள். இது பெரிய விஷயம். பின்னர் தாயார் சந்தனம்மாள் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தோற்றுவித்தார்கள். 




கவிஞர்கள்; எழுத்தாளர்கள்; பத்திரிகையாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களுக்கு வி.ஜி.பி.விருது; பண முடிப்பு வழங்கி சிறப்பு செய்தார்கள்.

இன்றைக்கு வி.ஜி.பி. சகோதரர்கள் பல கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாகத் திகழ்கிறார்கள். சும்மா ஒன்றும் சொத்து வீடு தேடி வரவில்லை. உழைப்பு… உழைப்பு. அந்த உழைப்பு தான் அவர்களின் தாரக மந்திரம். அந்த உழைப்பின் ஜீவநாடியில் தான் புன்னகை செய்கிறார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
10.11.2019

1970-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இன்றைக்கு இருக்கிற மாதிரி பெரிய பெரிய தொழில் அதிபர்கள் அதிகம் இல்லை. பெரிய பெரிய வணிகர்களும் இல்லை. அப்போது அந்தக் காலக் கட்டத்தில் சென்னையில் முக்கியப் புள்ளிகளாக விளங்கியவர்கள் தான் இந்த வி.ஜி.பி. சகோதரர்கள்.

வி.ஜி. பன்னீர்தாஸ், வி.ஜி. சந்தோஷம், வி.ஜி. செல்வராஜ் ஆகிய மூவர் தான் அந்த வி.ஜி.பி. சகோதரர்கள். எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் இந்த மூன்று பேரும் ஒரே மாதிரியான கோட்டும் சூட்டும் அணிவார்கள். பார்ப்பதற்கு சற்றே வித்தியாசமாக இருக்கும்.

அப்போது சென்னை மவுண்ட் ரோட்டில் வி.ஜி. பன்னீர்தாஸ் அண்ட் கோ. எனும் நிறுவனம் இயங்கி வந்தது. இப்போது அண்ணா சாலை என்று சொல்கிறார்கள். வி.ஜி.பி. சகோதரர்களில் மூத்தவர் வி.ஜி. பன்னீர்தாஸ். பெரிய அண்ணாச்சி. இவருடைய பெயரில் தான் அந்த நிறுவனம் இயங்கி வந்தது. இன்றும் இயங்கி வருகிறது.



தன் தம்பிமார்களின் மீது வைத்த நம்பிக்கை; அதே மாதிரி தம்பிமார்கள் இருவரும் அண்ணன் மீது வைத்த நம்பிக்கை; அந்த நம்பிக்கை தான் இன்று உலக அளவில் புகழப்படும் வி.ஜி.பி. நிறுவனமாக விளங்கி வருகிறது. பல கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக விளங்கி வருகிறார்கள்.

அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் ஒருவர் கிழித்த கோட்டை மற்றவர்கள் தாண்டுவது இல்லை. தமிழகத்தின் கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறைக்கு வி.ஜி.பி. குடும்பம் மிகச் சரியான ஓர் எடுத்துக்காட்டு. தாராளமாகச் சொல்லலாம்.

’வியர்வையின் வெளிச்சம் - வெற்றி வாசலின் திறவு கோல்’ என்கிற நூலை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வி.ஜி.பி. நிறுவனங்களின் துணைத் தலைவர் வி.ஜி. செல்வராஜ் எழுதிய நூல். இவர் வி.ஜி.பி. சகோதரர்களில் இளையவர்.

இந்த நூலில் வி.ஜி. செல்வராஜ் தன்னுடைய இரு அண்ணன்களான வி.ஜி. பன்னீர்தாஸ்; வி.ஜி. சந்தோஷம் ஆகியோரைப் பற்றி தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

வி.ஜி.பி. நிறுவனம் எவ்வளவு சாதாரண நிலையில் இருந்து எப்படி இந்த அளவிற்கு உச்ச நிலைக்கு உயர்ந்தது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறார். அவர் எதையும் மறைக்கவில்லை. நான் அந்த நூலை படித்து முடிக்கவில்லை. ஆனால் அசந்து போனது தான் மிச்சம்.



பணக்காரக் குடும்பங்களில் பெரும்பாலும் ஆளாளுக்கு நாட்டாண்மை செய்வார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மற்றவர்களை அடக்கி ஆளப் பார்ப்பார்கள். கண் அசைவுக்கும் கை அசைவுக்கும், போகிறவர்கள் வருகிறவர்கள் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்பச் சொத்துகளுக்குத் தலைவராக இருக்க வேண்டும் என்றும் அடம் பிடிப்பார்கள்.

ஆனால் வி.ஜி.பி. குடும்பம் அப்படி அல்ல. மூத்தோர் சொல் கேட்கும் பண்பு தான் அவர்களின் தலைமைப் பண்பாக விளங்கி வந்து இருக்கிறது. வி.ஜி.பி. குடும்பத்தினரின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓரே இடத்தில் வாழ்ந்து வருவது வியப்பிலும் வியப்பான செய்தியே.

தவணை முறையில் பொருட்களை வாங்கும் பழக்கத்தைத் தமிழகத்தில் பிரபலப் படுத்தியது இவர்களின் இந்த வி.ஜி.பி. நிறுவனம் தான். வி.ஜி.பி. சகோதரர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னரே வி.ஜி.பி. தங்கக் கடற்கரை உருவாக்கினார்கள். நல்ல தூரநோக்குப் பார்வை.

தொடக்கக் காலத்தில் இருந்தே வி.ஜி.பி. சகோதரர்கள் மூவரும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து உற்சாகப் படுத்தி வந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் வி.ஜி. சந்தோஷம் அவர்களுக்கு இலக்கிய நாட்டம் சற்று அதிகம் என்று தாராளமாகச் சொல்லலாம். கவிஞர்களைப் பாராட்டுவது; எழுத்தாளர்களைப் பாராட்டுவது; அவர்களுக்கு விருது வழங்குவது; பணமுடிப்பு வழங்குவது போன்றவற்றில் தனி ஓர் ஆர்வம் காட்டி வந்தவர் வி.ஜி. சந்தோஷம். இன்றும் அந்த ஆர்வம் தொடர்கிறது.

வி.ஜி. சந்தோஷம் இப்போது செய்து வரும் மிகப் பெரிய தமிழ்ப்பணி என்ன தெரியுங்களா. 




உலக நாடுகள் முழுமைக்கும் வள்ளுவருக்குச் சிலைகள் வைப்பது. எப்பேர்ப்பட்ட நோக்கம். இந்த ஒரு தனித்துவமான நோக்கம்; இந்த ஒரு தனித்துவமான தமிழ்ப்பணி தான் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தக் கட்டுரையையும் எழுத வைத்தது.

பொதுவாகவே அடியேன் தனிநபர் விமர்சனக் கட்டுரைகளைத் தவிர்த்து விடுவது வழக்கம். எளிதில் புகழ்ந்து எழுதுவதும் குறைவு. அதையும் சொல்லி விடுகிறேன். சரி.

தென் ஆப்பிரிக்காவின் முக்கியமான நகரம் டர்பன். அதிகமாகத் தமிழர்கள் வாழும் நகரம். அங்கே ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் பெயர் மேரோபேங்க் தமிழ்ப்பள்ளி.

அங்கே தான் 2001-ஆம் ஆண்டில் வி.ஜி. சந்தோஷம், முதன்முறையாகத் திருவள்ளுவருக்குச் சிலை வைத்து இருக்கிறார். வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் அதுதான் முதன்முறை.

ஏற்கனவே 1993-ஆம் ஆண்டில் வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் முதன்முதலாகச் சிலை வைத்து விட்டார்கள். அடுத்து 1994-ஆம் ஆண்டில் வி.ஜி.பி.கிங்டம் பூங்காவில் இரண்டாவது சிலை வைக்கப் பட்டது. மூன்றாவதாக வருவது தான் தென் ஆப்பிரிக்காவின் மேரோபேங்க் தமிழ்ப்பள்ளி.

அதன் பின்னர் சிலைகள் வைக்கும் பணி தொடர்ந்தது. இன்னும் தொடர்கின்றன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இதுவரை 52 திருவள்ளுவர் சிலைகளை நிறுவி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் சிலை அமைக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்கள்.

உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் திருவள்ளுவருக்குச் சிலைகள் வைக்க வேண்டும். அந்த நாடுகளில் எல்லாம் தமிழ் மொழி கற்றுத் தரப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கித் தான் பயணித்துக் கொண்டு இருக்கிறார் வி.ஜி. சந்தோஷம்.

’தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' என்பது பாரதியின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி வரும் வி.ஜி. சந்தோஷம் அவர்களை வாழ்த்துகிறோம். அவரின் தலைமையில் இயங்கி வரும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தையும் வாழ்த்துகிறோம்.

உலக நாடுகளில் பல இடங்களில் வி.ஜி. சந்தோஷம் அவர்களுக்கு விருதுகள், பொற்கிழிகள் வழங்கிச் சிறப்பு செய்து இருக்கிறார்கள். மலேசியத் தமிழர்களாகிய நாம் மட்டும் விதிவிலக்கு அல்ல. அதைத் தான் நாம் இப்போது ஈப்போவில் செய்கிறோம்.

அன்பர்களே... இன்று 10.11.2019 ஞாயிற்றுக் கிழமை; மாலை மணி 6.00-க்கு; ஈப்போ லகாட் சாலை, அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் வி.ஜி. சந்தோஷம் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா செய்கிறார்கள்.



அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ”வள்ளுவம் போற்றும் வள்ளல்” எனும் விருது வழங்கப் படுகிறது. இது மலேசியத் தமிழர்கள் வழங்கும் ஒரு கௌரவிப்பு. உலகம் போற்றும் ஒரு தமிழருக்கு மலேசியத் தமிழர்கள் செய்யும் ஒரு மரியாதையாக அமையட்டும்.

ஈப்போ அருணகிரினாதர் மன்றம்; பேரா மாநில தமிழ் இலக்கிய மேம்பாட்டுக் கழகம்; ஈப்போ வட்டாரப் பொது இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவிற்கு மகப்பேறு மருத்துவரும்; சமயப் பற்றாளருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் தலைவராகச் செயல் படுகிறார். அவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்கிறோம்.

ஒரு தமிழருக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி. சிறப்பு செய்வோம். அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.