கார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட் 2012

கார்ப்பரேட் சாமிகளின் கலிகாலச் சாதனைகள்

[இந்தக் கட்டுரை 23.08.2012 ’தினக்குரல்’ மலேசிய நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது]

கமலஹாசனின் ஒரு வசனம். ”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால், நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. இவை கற்பக விருட்சங்களாக வாழ்கின்ற தத்துவப் பாசுரங்கள். மனிதனில் எவனும் கடவுள் இல்லை. எந்த ஒரு மனிதன் தன்னை ஒரு கடவுள் என்று சொல்கிறானோ, அவன் மனிதனே இல்லை.



இப்போது கலியுகம் நடக்கிறது. அந்த யுகம் கண் சிமிட்டிய நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன். நல்ல சாமியார் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போகின்றார்கள். கையை நீட்டச் சொல்லி, நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்.



இங்கே ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். சாமியார்கள் யாரையும் நாம் குறை சொல்லவில்லை. உண்மையான, நல்ல சாமியார்கள் இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாணயமாக ஆன்மீகச் சேவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை நாம் மதிக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஆனால், அந்தச் சாமியார் கூட்டத்திலேயே பசுத் தோல் போர்த்திய புலிகளும் இருக்கின்றன. மான்தோல் போர்த்திய முதலைகளும் இருக்கின்றன. அந்தக் கார்ப்பரேட் புலிகளும், அந்தக் கார்ப்பரேட் முதலைகளும் எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கின்றன. எத்தனைப் பெண்களை நாசமாக்கி நடுத்தெருவில் விட்டு இருக்கின்றன. எத்தனை ஏழைகளின் வயிற்றில் அடித்து கருவை நசுக்கி இருக்கின்றன. எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் கழிசடை ஆக்கி இருக்கின்றன. எத்தனைப் பேரைக் கொலை செய்து மாலைகள் போட்டு இருக்கின்றன. அந்த ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை.


கார்ப்பரேட் சாமியார்கள் பிரம்ம மந்திரங்களைப் பாடினார்கள். மன்னிக்கவும். பிரம்ம மந்திரங்கள் என்பது புனிதமானச் சொற்கள். இருந்தாலும் அதைப் பாடித்தானே கார்ப்பரேட் சாமியார்கள் கோடிக் கோடியாய்ச் சுருட்டினார்கள். கதைக்கு வருகிறேன். ரமண ரிஷியை உங்களுக்குத் தெரியும் தானே. ஒருநாள் அவர் கையில் இருந்த சில சில்லறைக் காசுகளைக் குளத்தில் தூக்கி எறிந்துவிட்டு தபசில் ஆழ்ந்து போனார். ‘காசும் பணமும் நகையும் ஆட்கொல்லி’ என்று சொன்னவர், கடைசி வரையில் காசைக் கையில் தொடவே இல்லை. அவரைப் பின்பற்றி இன்னொரு யோகி வாழ்ந்தார். ‘நான் ஒரு பிச்சைக்காரன். உனக்கும் எனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சைக் கேட்கிறேன்’ என்றார். அவர் யோகி ராம் சுரத் குமார்.

ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்த ஆன்மீகவாதிகள். அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா போன்ற சாமியார்கள். அதற்கு முன், கார்ப்பிரேட் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


கார்ப்பிரேட் என்பது corporate எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்த ஒரு வாடிக்கைச் சொல். தமிழில் இது ஒரு வழக்குச் சொல்லாக மாறி வருகிறது. ஒரு நிறுவனத்தின் உச்ச மட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களைக்  கார்ப்பிரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றிச் சுற்றிதான் இருக்கும். அவர்களை மிஞ்சி எதுவும் நடக்க முடியாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவும் இல்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப் போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான்  கார்ப்பிரேட் அல்லது கார்ப்பரேட் தலைவர்கள் என்பார்கள்.


நித்தியானந்தா என்பவர் ஒரு கார்ப்பிரேட் சாமியார்தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி, ஞானி, இந்திய ஞான மரபில் வந்தவர் என்று சொல்லிக் கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற ஆன்மீகக் கர்த்தாக்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி இலட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்தார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வையும் மேற்கொண்டனர்.
சான்று: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1206/12/1120612015_1.htm

ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் ‘எனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம். எனக்கு நித்திதான் வேண்டும்’ என்று சொல்லி  அந்தப் பெண், நித்யானந்த ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்தாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது ‘போகட்டும்’ என்று சொன்னார் நித்யானந்தர். புத்தர் துறவியாக மாறவில்லையா என்று திருப்பிக் கேட்டாராம். சான்று: http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=77945


இந்தக் கட்டத்தில் எனக்குள் ஒரு கேள்வி. அந்தத் தெய்வ மகான் தன்னுடைய 29ஆவது வயதில் யசோதராவை  விட்டு விலகிச் சென்றார். லௌகிக வாழ்க்கையை மறுத்து துறவறம் பூண்டார். ஆனால், நித்யானந்தர் என்ன செய்தார். தன்னுடைய 32ஆவது வயதில் ரஞ்சிதாவை இல்லறத்தில் இணைத்துக் கொண்டார். துறவறத்தைத் துறந்து லௌகித்தில் லயித்துப் போனார்.
சான்று: http://www.manithan.com/news/20120517102697

நித்யானந்தரின் பக்த கோடிகள் எல்லாருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல அவர் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சுயமான சிந்தனை என்பதே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைத்தான் இவர்களும் கண்களை மூடிக் கொண்டு நம்புகிறார்கள், செய்கிறார்கள்’ என்று ஒரு தமிழகத் தாளிகை குற்றம் சொல்கிறது. ஆனால், அதே தாளிகைதான் “ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” எனும் தொடரை இரண்டு வருடங்களுக்கு கடுகு தாளிப்பு செய்தது. அதை உலக மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் துணுக்குகளைப் பாருங்கள்.


“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா அவன் மேல விழுற முதல் விளக்குமாறு நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”
சான்று: http://www.envazhi.com/நித்யானந்தா-மீது-அப்படிய/

“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியாரை பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…” என்று அந்தத் தாளிகையே நக்கல் செய்கிறது. வாழ்ந்தால் ஒரு பேச்சு. தாழ்ந்தால் ஒரு பேச்சு. நல்ல ஒரு ஜால்ரா.


உலகில் இரண்டு வகை சாமியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஒன்று பிடிபட்ட சாமியார். இன்னொன்று பிடிபடாத சாமியார். இதில் எந்தச் சாமியார் மரண அடி இல்லாமல் தப்பிக்கின்றாரோ, அந்தப் பக்கமாகச் சாய்வதற்கு ஒரு செம்மறியாட்டுக் கூட்டமே காத்து இருக்கும். இப்படி நான் சொல்லவில்லை. அமிழ்தா எனும் வலைப்பதிவில்  ’பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை’ எனும் கட்டுரையில் எழுதப்பட்டு இருக்கிறது.
சான்று: http://amizhtha.wordpress.com/2010/03/10/பிரேமானந்தா-முதல்-நித்யா/.

ஒரு காலத்தில் வயிற்றுக்குக் கிடைத்தால் போதும் என்று சாமியார்கள் சிலர் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தார்கள். எதற்கும் அதிகமாக ஆசைப்படவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எல்லா சாமியார்களையும் குறை சொல்லவில்லை. இப்போதைக்கு மாட்டிக் கொண்டு இருப்பது கார்ப்பரேட் சாமியார்கள்தான். கார்ப்பரேட் அல்லாத சாமியார்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சரி.

இப்போது நடப்பது என்ன. கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஆடம்பரமான விளம்பரங்கள். அவர்கள் நடக்கின்ற பாதையில் எல்லாம் பூமாலைகள். உடுத்துகின்ற காவி உடைகளில் எல்லாம் முழுக்க முழுக்க பன்னீர்ப் புஷ்பங்கள். சந்தனச் சவ்வாதுகள்.

காலையில் இந்தியா. மாலையில் மாலைத்தீவு. ராத்திரியில் அரபுகடல் அபிஷேகம். அவர்களின் கஜானாக்கள் கோடிக் கோடிகளில் நிறைகின்றன. தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்துப் பூஜிக்கச் சொல்கிறார்கள். சாமிகள் செய்ய முடியாததைச் சாமியார்கள் செய்ய முடியும் என்று பகதர்களையும் நம்ப வைக்கின்றனர். அது பெரிய பாவம். இப்போது தெரியாது.

யாரோ ஒருவருக்கு எப்போதோ ஒரு நல்லது நடந்து இருக்கும். அதை அவர் அடுத்தவரிடம் சொல்ல, அடுத்தவர் அதை மற்றவரிடம் சொல்ல, அது அப்படியே பரந்து விரிந்து பாய்மரக் கப்பலில் பயணம் செய்கிறது. இதை ஒரு Domino Effect என்றும் சொல்லலாம்.
சான்று: http://gilmaganesh.blogspot.com/2010/03/blog-post_3243.html

கடவுளை மிஞ்சி எதுவும் இல்லை. அவர் செய்யாததை எந்தச் சாமியாராலும் செய்ய முடியாது. ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” என்று தொடர் எழுதிய ஓர் ஆன்மீகவாதி, ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று தன்னுடைய ரஞ்சித பாசத்தால் நிரூபித்து இருக்கிறார். அவருடைய எழுத்துகளுக்கும், செயலுக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

கார்ப்பிரேட் சாமியார்களின் தோற்றம் இருக்கிறதே அது ஒரு மாயை. அதற்கு அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கும் அற்புதமான விளம்பர ஜோடனைதான் அதற்கு மூலகாரணம். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதிகார மையங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், ஆன்மீக வகுப்புகள் எல்லாம் கலந்த ஒரு கூட்டாஞ்சோறுதான் இன்றைய கார்ப்பிரேட் சாமியார்கள்.
சான்று: http://everyonelovesvj.blogspot.com/2010_03_13_archive.html

இந்தக் கார்ப்பிரேட் சாமியார்களின் குரு யார் தெரியுமா? அவர்தான் தீரேந்திர பிரம்மச்சாரி. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது தீரேந்திரரின் பயணம் தொடங்கியது. இந்திராகாந்திக்கு ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம் ஆகிய இருவரும் பக்கா எதிரிகள். இருந்தாலும் பிரம்மச்சாரியார் இரு தரப்பினருக்கும் நண்பர்களாக இருந்தார். தனக்கு வேண்டியதைச் சாணக்கியமாகச் சாதித்துக் கொண்டார். அந்தக் காலக் கட்டத்தில்தான் கார்ப்பிரேட் சாமியார்களின் மன்மத மந்திரங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது.

அதன் பின்னர் சந்திராசாமி வந்தார். இப்போது பெயர் போட்டுக் கொண்டு இருக்கும் கார்ப்பிரேட் சாமியார்களுக்கு அந்தச் சந்திராசாமிதான் நல்ல ஒரு ரோல் மோடல். இவர் நரசிம்ம ராவ், சந்திரசேகர் காலங்களில் கோடிக் கோடியாகப் பணம் சம்பாதித்தார். அடுத்து வந்த இந்திய அரசு இவர் மீது வழக்கு போட்டது. அவர் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவாறு அவரின் கடப்பிதழையும் முடக்கி வைத்தது. அது ஒரு பெரிய கதை. அப்புறம் ரஜ்னீஷ் வந்தார்.

இவர்  கொஞ்சம் வித்தியாசமானவர். சுதந்திரமான போக்கு கொண்டவர். இவரைச் ’செக்ஸ் குரு’ என்றும் சொல்வார்கள். இவர் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்.’

என்ன அபிரிதமான கண்டுபிடிப்பு. நோபல் பரிசு கொடுத்து இருக்கலாம். யாரும் சிபாரிசு செய்யவில்லை. இவர் அமெரிக்காவில் பெரிய பெரிய ஆசிரமங்களைக் கட்டினார். அவற்றை அமெரிக்க அரசு பறிமுதல் செயதது. அதுவும் ஒரு பெரிய நீண்ட கதை.

இந்தக் கட்டத்தில்தான் சாய்பாபா வந்தார். வெறும் கையில் விபூதி வரவழைப்பது. மோதிரத்தை வரவழைத்து பரிசாகக் கொடுப்பது. பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுப்பது. இவை அனைத்தும் சித்து வேலைகள் என்று லண்டன் பி.பி.சி.யும் நார்வே நாட்டு என்.ஆர்.கே. தொலைக்காட்சி நிலையமும் பிரபலப்படுத்தின. Seduced By Sai Baba எனும் நாடகம் சாய்பாபாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.  
சான்று: http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba#Criticism_and_controversy

தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும், அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார் பிரேமானந்தா. பாலியல் குற்றம், வெளிநாடுகளில் சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்துச் சிறையில் தள்ளியது. 14 ஆண்டுகள் சிரையில் இருந்தார்.

சென்ற ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சிறையிலேயே இறந்தும் போனார்.  ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகின்றன. கல்கி எனும் சாமியார் மீதும் ஏராளமான புகார்கள் இருக்கின்றன.
சான்று: http://ta.wikipedia.org/wiki/பிரேமானந்தா

ஆக, ரஜ்னீஷின் மெகா ஆசிரமங்கள், சந்திராசாமியின் அரசியல் அதிகாரப் பிடிகள், அடுத்து சாய்பாபாவின் சமூக நலச் சேவைகள். இந்த மூன்றையும் ஒன்றாகக் கூட்டிப் பாருங்கள். அதில் ஒரு கலவை வரும். அந்தக் கலவையில்தான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் வந்து நிற்கிறார்கள்.
சில கார்ப்பரேட் சாமியார்கள் அரசியல் தரகர்களாகவும் இருக்கிறார்கள்.

சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். சிலர் கருப்புப் பண வங்கிகளாக இருக்கிறார்கள். சிலர் போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சான்று: திகுதிகு திகம்பர சாமிகள். ப.திருமாவேலன். 17.03.2010 ஆனந்த விகடன்.

படு மோசமான தொழில்களைக் காவி உடையில் கார்ப்பரேட் செய்கிறார்கள். முதலீடு இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக ஒரு சமயம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நம்பும்படி  பல்வேறு மாஜிக் மாய்மாலங்களைச் செய்து வருகிறார்கள். கோடிக் கோடிகளாகக் குவிக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,

தேவநாதன் எனும் சாமியாரின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இருபது ஆண்டு கால வரலாறுகள் உள்ளன. இருந்தும் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் சர்வலோக குருவாக வலம் வர முடிகிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” கார்ப்பரேட் சாமியார்கள் பெரிய பெரிய தத்துவங்களைப் பற்றி மேடையில் பேசலாம். ஆனால், கடைசியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சிற்றின்பப் பிரியர்களாக இருக்கலாம். அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் அவர்களை ஆண்டவனாகப் பார்ப்பது பேதைமையிலும் பேதமை ஆகும்.

ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய ஆசையும்கூட!

சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.