இணையத்தைக் கண்டுபிடித்தது யார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையத்தைக் கண்டுபிடித்தது யார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜனவரி 2014

இணையத்தைக் கண்டுபிடித்தது யார்

கணினியும் நீங்களும் - மலேசியா தினக்குரல் நாளிதழ்
19.01.2014 ஞாயிறு மலர்

..................................................................................................................................................................

எஸ்.பாலசேகரன் சுப்பையா, ஜெலாப்பாங், ஈப்போ
கே: இணையத்தைக் கண்டுபிடித்தது யார்?


ப: இணையம் (Internet) என்பதைத் தனிநபர் யாரும் கண்டுபிடிக்கவில்லை. கணினி மேதைகள் பலரின் சிந்தனையில் உருவானது. 1961-ஆம் ஆண்டில், லியானர்ட் கிளேன்ராக் என்பவர்தான் இணையத்தைப் பற்றி ஒரு வியூகம் செய்தார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு Tim Berners Lee என்பவர் World Wide Web எனும் வையக விரிவு வலையை உருவாக்கினார். அதன் பிறகு இணையம் இமயமலை உயரத்திற்குப் போய்விட்டது. இப்போது இருக்கும் இணையத்திற்கு ஓர் உண்மையான வடிவத்தைக் கொடுத்தவர் திம் பெர்னர்ஸ் லீ தான்.

அவர் நினத்து இருந்தால், உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் போல வியாபாரம் பண்ணி இருக்கலாம். கோடிக் கோடியாகப் பார்த்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. தான் உருவாக்கிய இணையத்தை, உலக மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து விட்டார்.

பல உலகக் கணினி நிறுவனங்கள் அவருக்கு உதவிகள் செய்ய முன் வந்தன. பல நாடுகள் உயரிய விருதுகள் வழங்கி இருக்கின்றன. எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ரொம்ப தன்னடக்கமான மனிதர்.

கடைசியில் இங்கிலாந்து அரசாங்கம் வழங்கிய ‘சர்’ எனும் உயரிய விருதை ஏற்றுக் கொண்டார். உலகப் பல்கலைக்கழகங்கள் இதுவரையில் 26 டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், அனைத்துலக் கணினிச் சம்மேளனம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது.

உலகக் கணினி அறிஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி இருந்தனர். அவர் அரங்கத்திகுள் நுழைந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று, Standing Ovation  என்று சொல்லப்படும் ராஜமரியாதை செய்தார்கள். ஒன்றரை கோடி ரிங்கிட் அன்பளிப்பும் செய்தார்கள். அந்தப் பணத்தையும்கூட அவர் ஓர் அறவாரியத்திற்கு அப்படியே எழுதிக் கொடுத்து விட்டார்.

என்னே மனிதத் தன்மை. இன்று கணினி உலகின் அன்பிற்குரிய மாமனிதராக வாழ்ந்து வருகிறார். அவருடைய நல்ல மனம் வாழ வேண்டும். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். வாழ்த்துவோம். இவரைப் பற்றிய மேல் விவரங்களை http://en.wikipedia.org/wiki/Tim_Berners-Lee  எனும் இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

..................................................................................................................................................................

திவ்யா கன்னியப்பன், <thivya_sega@gmail.com>
கே: HTML என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?


ப: Hyper Text Markup Language என்பதின் சுருக்கம். இணையப் பக்கங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் இணைய மொழி. 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவரும் திம் பெர்னர்ஸ் லீ தான். ஒரு சின்ன எடுத்துக்காட்டு:

<HTML>
<HEAD>
<!-- created 2014-01-19 -->
<TITLE>Thinakkural Sunday</TITLE>
</HEAD>
<BODY>
நான் நலம். நீங்கள் நலமா?
 <!-- Save the file as .html -->
</BODY>
</HTML>

உங்களுடைய கணினி ‘நோட் பேட்’டில் (Notepad), மேலே இருக்கிற மாதிரி தட்டச்சு செய்யுங்கள். சேமிக்கும் போது .html என்று சேமித்து வையுங்கள். பிறகு திறந்து பாருங்கள். நான் நலம். நீங்கள் நலமா?  என்று ஓர் இணையப் பக்கம் உருவாகி இருக்கும். அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில்.

..................................................................................................................................................................

திருவே பாலசேனா, பத்து தீகா, ஷா ஆலாம்.
கே: என்னுடைய சில ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?


ப: Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். இவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. அந்த கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Hidden என்று இருக்கும். அதைச் 'சரி' என்று சொடுக்கி விடுங்கள். அதே கோப்பைத் திறக்கவும். அதாவது (Double Click).

கணினித் திரையின்ல் ஆக மேலே Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான்.

உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாதுகாப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன்.

..................................................................................................................................................................

எஸ். தம்பிராஜா, லுக்குட், நெகிரி செம்பிலான்.
கே: Fonts அதிகம் இருந்தால் கணினி மெதுவாக வேலை செய்யுமா?


ப: Fonts என்பதை எழுத்துருகள் என்று தமிழில் அழைக்கிறோம். இந்த எழுத்துருகள் அதிகமாக இருந்தால் கணினி மெதுவாக ஆரம்பிக்கும். அதாவது Startup எனும் கணினித் தொடக்கம். கணினியைத் தொடக்கியதும், நத்தை மாதிரி போல நகரும். ஆனால் ஆரம்பித்த பிறகு, வேலை தாமதம் ஆகாது. இருந்தாலும் தேவை இல்லாத எழுத்துருகளை நீக்கி விடுவதுதான் நல்லது.

சிலர் உலகத்தில் உள்ள எல்லாமே தங்கள் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது தப்பு. கணினி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண்ட கண்ட குப்பைகளைக் கணினிக்குள் சேர்த்து வைக்காதீர்கள்.

கணினியை இலகுவாகச் செயல்பட வழி செய்யுங்கள். Control Panel க்குப் போய் Font எனும் கோப்புக்குள் போய் தேவைப்படாத எழுத்துருகளை நீக்கிவிடலாம். பத்திரம்!

Arial, Century Gothic, Lucida Console, Sans Serif, Tahoma, Trebuchet, Verdana போன்ற எழுத்துருகள் கணினியின் உயிர் எழுத்துகள். (System Fonts) என்று சொல்வார்கள். அவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படியே அழிக்க முயற்சி செய்தாலும், கணினி அவற்றை அழிக்க விடாது. குறைவான எழுத்துருகள் இருந்தால், கணினி கொஞ்சம் வேகமாக வேலை செய்யும்.

..................................................................................................................................................................

சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: ’பேஸ்புக்’ போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?


ப: ’பேஸ்புக்’ மாதிரி ஏறக்குறைய நூறு சமூகத் தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சமூக வளைத்தளம் பிரபலம். இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆர்குட். சீனாவை எடுத்துக் கொண்டால் வெய்போ. மலேசியாவை எடுத்துக் கொண்டால் பேஸ்புக். உலகில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட 20 சமூகத் தளங்களின் பட்டியலைத் தருகிறேன். அடைப்புக் குறியில் அனைத்தும் மில்லியன்கள்.

1. Facebook (ஒரு பில்லியன்)
2.Twitter (500)
3. Google+ (500)
4. Qzone (480)
5. Weibo (300)
6. Formspring (290)
7. Habbo (268)
8.  Linkedin (200)
9. Renren (160)
10. Instagram (150)
11. Vkontakte (123)
12. Bebo (117)
13. Tagged (100)
14. Orkut (100)
15. Netlog (95)
16. Friendster (90)
17. hi5 (80)
18. Fixster (63)
19. MyLife  (51)
20. Plaxco (50)

..................................................................................................................................................................

கலை மாறன்  kalai07@live.co.uk
கே: குழந்தைகள், வயதிற்கு வந்த பிள்ளைகள் Facebook, Friendster, Twitter, போன்ற சமூகத் தளங்களில் அவர்கள் பயன்படுத்தும் ’பாஸ்வோர்ட்’ சொல்லை நாம் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எச்சரிக்கை ஏற்கனவே செய்து இருக்கிறீர்கள். குழந்தைகள் என்றால் எத்தனை வயது? வயதிற்கு வந்த பிள்ளைகள் என்றால் எத்தனை வயது?


ப: மின்னஞ்சல் வழியாக ஐந்து கேள்விகளைக் கேட்டு இருக்கிறீர்கள். ஆர்வத்திற்குப் பாராட்டுகள். முக்கியமான ஒரு கேள்விக்கு வருகிறேன். இணையச் சதிவலைகளில் குழந்தைகளும் பெண்களும் எளிதாகச் சிக்கிக் கொள்கிறார்கள் என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகிறேன்.

நாம் நம்முடைய பிள்ளைகளை முழுக்க முழுக்க நம்பித் தான் அவர்களுக்கு இணையத்தைத் திறந்து விடுகிறோம். ஆனால், Facebook, Friendster, Twitter, Hi5 போன்ற தளங்களின் வசீகரமான அம்சங்கள்; அவற்றின்  கவர்ச்சித் தன்மைகள்; சின்னச் சின்ன பிஞ்சு மனங்களைச் சிதற வைத்து விடுகின்றன. அவர்களின் உணர்வுகளைப் பேதலிக்கச் செய்து விடுகின்றன. அவர்களுடைய பதின்ம வயது எண்ணங்களைத் தடுமாற வைத்து விடுகின்றன என்றுதான் சொல்ல வருகிறேன்.

பேஸ்புக்கில் ஒருவர் கணக்குத் திறக்க வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தது 13 வயது  முடிந்து இருக்க வேண்டும். சரியா. ஆனால், ஒரு 10 வயதுப் பெண் பிள்ளை, அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தனக்கு 14 வயது ஆகிவிட்டது என்று சொல்லி  கணக்குத் திறந்தால் யாருக்கு என்னத் தெரியும். சொல்லுங்கள்.

பேஸ்புக் நடத்துபவர்கள் என்ன... அமெரிக்காவில் இருந்து இங்கே மலேசியாவுக்குப் பறந்து வந்து... அந்தப் பிள்ளையின் ஐ.சி. அடையாள கார்டை வாங்கிப் பார்த்து... ஓ.கே. சொல்லப் போகிறார்களா என்ன.

பேஸ்புக்கில் யார் வேண்டும் என்றாலும் கணக்குத் திறந்து கொள்ளட்டும். அப்புறம் சோறு தண்ணி இல்லாமல் அதிலேயே உருண்டு புரண்டு கிடக்கட்டும்.  யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், நான் கவலைப் படுவது எல்லாம் இந்த பி.எம்.ஆர், எஸ்.பி.எம் தேர்வுகள் எழுதும் வயதுகளில் இருக்கும் 15, 16, 17 வயது பிள்ளைகளைப் பற்றித் தான். எஸ்.பி.எம் தாண்டிவிட்டால் எதையாவது செய்து போகட்டும் என்று ஒரு கண்ணை ஒரு பக்கமாக மூடிக் கொள்ளலாம்.

அதுவரையில் பெற்றோர்கள் இந்த இணைய விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

சரி. அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1.    முதலில் பதின்ம வயது மாணவர்களின் Password எனும் கடவுச் சொல்லைக் கண்டிப்பாகப் பெற்றோர் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

2.    அந்தக் கடவுச் சொல் மாற்றம் செய்யப் படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3.    பிள்ளைகள் பேஸ்புக்கில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்து இருக்க வேண்டும்.

4.    அவர்களுடைய நண்பர்களில் யார் மீதாவது சந்தேகம் வந்தால், பேஸ்புக்கில் அனைவரும் பார்க்கும்படி ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

5.    அந்த நண்பரை உடனடியாகப் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

6.    பதின்ம வயது பிள்ளைகள், இனிப்பான வார்த்தைகளுக்கு சீக்கிரம் மயங்கிவிடுவார்கள். விஷமதாரிகளின் முதல் ஆயுதம் இனிப்பான சொற்கள் தான்.

7.    அவர்களுக்கு நண்பர்கள் இருந்தால் இணையத்திலேயே இருக்கட்டும். தயவு செய்து வீட்டுக்கு வரச் சொல்லி அழைக்க வேண்டாம்.

8.    அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

9.    உங்களின் உடல் தோற்றம் எப்படி. ஒல்லியா, நெட்டையா, என்று விசாரிப்பவர்களை உடனடியாக ஒதுக்கி விடுங்கள். அவர்கலை நம்ப வேண்டாம்.

10.    குடும்ப விஷயங்கள், வீட்டு முகவரிகளைத் தெரியப் படுத்தவே கூட்டாது. இன்றைக்கு என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் லடாய் என்று சொன்னால், நாளைக்கு  இணைய நண்பர் வீட்டுக் கதவைத் தட்டுவான்.

11.    அப்படியே நம்பகரமான பேஸ்புக் நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால், பெற்றோர் அல்லது மிகவும் நம்பிக்கையான உறவினர் யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள்.

12.    சில சமயங்களில் இணையத்தில் ஆபாசமான உரையாடல்கள் வரும். அதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கலந்து கொள்ள வேண்டாம். முற்றாகத் தவிர்த்து விடுங்கள்.

இணையம் என்பது ஒரு மாயை உலகம். அதில் நமக்கு புதுமையான வாய்ப்புகள், அனுபவங்கள் கிடைக்கின்றன. உண்மைதான். ஆனால், அதுவே நமக்கு ஒரு நரக உலகமாக மாறி விடக் கூடாது. குழந்தைகள் என்றால் 15 வயதிற்கும் குறைந்த வயதுடையவர்கள். 16 வயதிற்கு மேல் போனால் வயதிற்கு வந்தவர்கள்.

[Google தேடல் இயந்திரத்தில் ksmuthukrishnan என்று தட்டச்சு செய்யுங்கள். என்னுடைய வலைப்பதிவுகள் இருக்கும். ஏதாவது ஒரு பதிவைச் சொடுக்கினால், அங்கே என் மின்னஞ்சல் இருக்கும். உங்கள் கேள்வியை எழுதி அனுப்புங்கள்.]