ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மே 2016

ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி

ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி மலேசியா பேராக் மாநிலத்தின் ஈப்போ புறநகர்ப் பகுதியில், புந்தோங் எனும் இடத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி ஒரு நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. 


புந்தோங் வாழ் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு பள்ளிக்கூடம். ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி பல மருத்துவர்களையும், பல வழக்கறிஞர்களையும், பல எழுத்தாளர்களையும் உருவாக்கிய கலாசாலை ஆகும்.

ஜப்பானியர் ஆட்சி காலத்தில் பல ஜப்பானியர்களுக்கு இப்பள்ளியில் தமிழ்மொழி வகுப்புகள் நடத்தப் பட்டன. ஜப்பானியர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர். தமிழர்களைப் பார்த்து ‘காந்தி காந்தி’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்ப அந்த வகுப்புகள் வழி செய்து கொடுத்தன. 

 

முன்பு ஈப்போ ‘கவர்ண்ட்மெண்ட்’ பள்ளி என்று அழைக்கப் பட்ட அந்தப் பள்ளிதான் இப்போது ஈப்போ அரசினர் பள்ளி என்று அழைக்கப் படுகின்றது.

பலவேந்திரசாமி

இப்பள்ளி 1903ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. பலவேந்திரசாமி எனும் பெரியவர் முயற்சியால் அப்பள்ளி உருவானது. புந்தோங் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளை ஒன்று சேர்த்து ஒரு தமிழ் வகுப்பை முதன் முதலில் தொடங்கினார்.

அந்த வகுப்பிற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. பின்னர் இரண்டு வகுப்புகளாக மாறின. அவரே முதல் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்போது 32 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றனர்.


1905-ஆம் ஆண்டில் ஈப்போ நகரில் இருந்து துரோனோ நகருக்கு இரயில் பாதை போட வேண்டி வந்தது. அதன் காரணமாக இப்பள்ளி உடைக்கப்பட வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது. அருகில் இருந்த கொனாலி சாலையில் உள்ள ஓர் இடத்திற்கு அப்பள்ளி தற்காலிகமாக மாற்றம் செய்யப் பட்டது.

அது ஒரு சின்ன வீடு. அங்கே இப்பள்ளி செயல்படத் தொடங்கியது. முதலாம் உலகப் போர் நடக்கும் போது அப்பள்ளி அங்கேதான் செயல் பட்டது. 1926-ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு எஸ்.சவரிமுத்து என்பவர் தலைமை ஆசிரியர் ஆனார். அப்பொழுது 80 மாணவர்களும் நான்கு ஆசிரியர்களும் இருந்தனர்.


1927ஆம் ஆண்டு எஸ்.டி.செல்வராஜ் என்பவர் மூன்றாண்டு காலம் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு திரு சாமிதாஸ் என்பவர் தலைமை ஆசிரியர் ஆனார். 1931ஆம் ஆண்டு திரு.துரைராஜ் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினர்.

இரண்டாவது கட்டடம்

1939ஆம் ஆண்டு இப்பள்ளியின் இரண்டாவது கட்டடம் கட்டப் பட்டது. அப்போதைய மலாயா கூட்டரசு கல்வி அதிகாரியான ஹாட்ஜ் என்பவர் திறந்து வைத்தார். 1940ஆம் ஆண்டு டி.எஸ்.கணபதி, 1947ஆம் ஆண்டு ஜி.டி.போல் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.


இரண்டாவது உலகப் போருக்குப் பின் 1946ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தாய்ப் பள்ளியாக விளங்கியது. அதற்கு ஒரு காரணம் உண்டு. ஈப்போ சுற்று வட்டாரத் தமிழ்ப் பள்ளிகளில் அப்போது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் பயில முடியும். 

ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் அவர்கள் ஈப்போ அரசினர் பள்ளிக்கு வர வேண்டும். இப்பள்ளி பல நல்ல சமுதாய நல நடவடிக்கைகளுக்கு நடு நாயகமாகத் திகழ்ந்தது. பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது.


1980-ஆம் ஆண்டு இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 602 ஆக உயர்ந்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை 27. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒரு புதிய பள்ளி கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1982-ஆம் ஆண்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் பெரும் முயற்சியால் புதிய கட்டடம் 10.11.1984 ஆம் நாள் திறப்பு விழா கண்டது.

1990-ஆம் ஆண்டு இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 855 ஆக உயர்ந்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை 35. 14.02.1998ல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணையோடு ஒரு கணினி மையம் உருவாக்கப் பட்டது. 40 கணினிகளுடன் செயல்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்று வரலாறும் படைத்தது. 

 

2008 ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் பதினொரு மாணவர்கள் 7A பெற்றனர். 10 மாணவர்கள் 6A பெற்றனர். இப்பள்ளி 2008 ஆம் ஆண்டு பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளில் முதன்மையான தேர்ச்சி நிலையை அடைந்து புந்தோங் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது.

ஆர். முனுசாமி PJK

தற்சமயம் 2011 ஆம் ஆண்டில் 635 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 33 ஆசிரியர்கள்
ஆர். முனுசாமி PJK தலைமையின் கீழ் பணியாற்றி வருகின்றனர். நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட அரசினர் தமிழ்ப்பள்ளி, புந்தோங் வாழ் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்றப் பள்ளிக்கூடம்.

(இப்பள்ளியைப் பற்றி விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அதன் முகவரி: https://ta.wikipedia.org/s/19vd )