தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் பிறப்பு உரிமை அவரின் தாய்மொழி. அதே போல உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் உயிர் உரிமை அவரின் தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை. 



அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.

ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.




2019-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2018-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.

ஆனால் இந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 6485 மொழிகளாகக் குறைந்து விட்டது.

அதாவது ஒரே வருடத்தில் பதினைந்து மொழிகள் காணாமல் போய் விட்டன. 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 6000 மொழிகள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.



கிரேக்க மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகப் பழைமையான மொழி. ஆனால் அந்த மொழியைப் பேச ஓர் இனம் இல்லாது போனதால் தான் அந்த மொழி இப்போது இருந்தும் இல்லாமல் மறைந்து போய் கிடக்கிறது.

அதே போலத் தான்  சமஸ்கிருத மொழியும் ஓர் இறந்த மொழியாக மாறிப் போய் இருக்கிறது. ஆக ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அதற்கு ஓர் இனம் தேவை.

உலகில் 6485 மொழிகள் இருந்தும் பெரும்பான்மை மொழிகள் சிறுபான்மை இனத்தவரின் மொழிகள்.

வட தென் அமெரிக்கா கண்டங்களில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் ஆயிரக் கணக்கான மொழிகள் பேசப்பட்டன. ஐரோப்பியர்கள் வந்தார்கள். சிறுபான்மை இனத்தவரின் நூற்றுக் கணக்கான மொழிகள் அழிந்து போயின.

2010-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.




அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள். 




கி.பி.454-ஆம் ஆண்டு சுமத்திராவை ஈஸ்வர நரேந்திரன் என்பவர் ஆட்சி செய்தார். அவர் காலத்தில் இருந்து தமிழர்களின் தென்கிழக்காசியப் புலம்பெயர்வுகள் தொடர்கின்றன.

1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது அங்கு வாழ்ந்த தமிழர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை.

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்றார். அதை நினைவு படுத்துகிறேன். மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் அந்த மண் ஏற்றம் பெற்றது.

15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா ஒரு பெரிய வாணிக மையமாக விளங்கியது. தமிழ்நாட்டில் இருந்து துணிமணிகள், யானைத் தந்தங்கள் மலாக்காவிற்கு கொண்டு வந்த தமிழர்கள் மிளகு, வாசனைத் திரவியங்கள், பீங்கான் மங்குகளை வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.




இந்தக் கட்டத்தில் முன்ஷி அப்துல்லா எனும் இலக்கியவாதியை மறந்துவிட முடியாது. இவர் 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர்.

1843-ஆம் ஆண்டு அவர் தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா. தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் தமிழ்மொழியை மணலில் எழுதிப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். 




முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் தேயிலை, கரும்புத் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அதுவே இந்த நாட்டில் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும்.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.




அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சிங்கப்பூர் பிரீ ஸ்கூல். அதற்கும் ஆதரவு கிடைக்காததால் 1839-ஆம் ஆண்டு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கு; மலாக்கா; சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1859-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலபார் பள்ளி தொடங்கப் பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது.

1900-ஆம் ஆண்டில் பேராக் பகான் செராய் நகரில் ஆங்கிலேய அரசாங்கம் முதல் தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது. 




1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்கலாம் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன். ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கலாம் என்கிற ஒரு சட்டம்.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள். 




பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள்.

படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள். 



கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருந்து இருக்கும். ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது. 




வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

தமிழர்கள் படித்து இருந்தால் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் அதுவே பெரிய விசயம். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள்.

ஆக தமிழ்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது.

வெளியே போனால் அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும். அப்புறம் பின்நாட்களில் தங்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.




ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். அவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை அறிவு போதும். அதற்கு மேல் படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் எசமானர்களுக்கு ஆபத்து.

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசை நாற்பது காசாகப் பார்க்க வேண்டும். கல்லா கட்ட வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும்.

அதுதான் வெள்ளைக்காரர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

(தொடரும்)