ஆறிலும் சாவு நூறிலும் சாவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறிலும் சாவு நூறிலும் சாவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மே 2017

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

இந்தப் பழமொழி அனைவருக்கும் தெரியும். ஆறிலும் சாவு வரும். நூறிலும் சாவு வரும் என்று அனைவரும் அடிக்கடி சொல்லிக் கொள்வோம். இந்தப் பழமொழியை இரு வகையாகப் பிரித்து பார்க்கலாம். ஆறு (6) என்பது ஓர் எண்.

அதே போல நூறு (100) என்பதும் ஓர் எண். அந்த வகையில் இறப்பு என்பது ஆறு வயதிலும் வரலாம் நூறு வயதிலும் வரலாம் என்று பொருள் படுகிறது.


அடுத்து இந்த ஆறு என்பதில் இன்னொரு நெருடல். நதி அல்லது அருவி என்பதையும் ஆறு என்று சொல்கிறோம். அப்படி என்றால் ஆற்றில்கூட இறப்பு வரலாம் என்று பொருள் படுகிறது. சரி தானே. உண்மையான பொருள் அது அல்ல.

இந்தப் பழமொழி மகாபாரதத்திற்குப் போகிறது. குருசேத்திரப் போர். கேள்விப் பட்டு இருப்பீர்கள். மகாபாரதத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி.

அத்தினாபுரம் அரியணைக்காகக் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்கிற இடத்தில் நடைபெற்ற போர். கௌரவர்களும் பாண்டவர்களும் பங்காளிகள்.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். சரி. அது மகாபாரதம். அது தொடர்பான விளக்கம்.


குருசேத்திரப் போருக்கு முன்னதாகக் குந்தி தேவி தன்னுடைய மூத்த மகன் கர்ணனைச் சந்திக்கிறாள். பாண்டவர்கள் ஐவருடன் சேர்ந்து கொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறாள்.

அப்போது கர்ணன் கூறுகிறான்: நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி; கௌரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூற்று ஒருவராகப் போர் செய்தாலும் சரி; இறப்பது உறுதி. அது எனக்குத் தெரியும் .

ஆகவே ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு. அபப்டி இருக்கும் போது எப்படி செத்தால் என்ன? செய்நன்றி கடனைக் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே சேர்ந்து உயிரை விடுகிறேன்' என்கிறான்.

இங்கே கர்ணன் கூறிய *ஆறிலும் சாவு நூறிலும் சாவு* எனும் முதுமொழிதான் பின்னர் காலத்தில் பழமொழியாக மாறியது.

குருசேத்திரப் போரைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பற்பல கருத்துகளைச் சொல்கின்றனர். துவாரகை என்பது பழங்காலத்து நகர். கடலில் மூழ்கிய நகரம்.

அந்த நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், குருசேத்திரப் போர் கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் நடைபெற்று இருக்கலாம் என்று  சொல்கின்றனர். போர் நடந்த இடம் இப்போது இந்தியா, ஹரியானா மாநிலத்தில் உள்ளது.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
09.06.2020