பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 நவம்பர் 2011

பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்

இணையக் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/ஜானகி_ஆதி_நாகப்பன்


பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்

இந்தியாவின் 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி. மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடி. தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர்.

பர்மா இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீரராகக் களம் கண்டவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்.

சுபாஷ் சந்திர போஸ், மலாயாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்கு தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே ஜானகி ஆதி நாகப்பன், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார்.

இந்தியத் தேசப் பற்று

சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவிற்கு வந்து பேருரைகள் ஆற்றிய போது தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர்.

நகையும் தமிழரும் பிரிக்க முடியாதவையாக இருந்த காலக் கட்டத்தில், இருந்ததை எல்லாம் மலாயாத் தமிழர்கள் சுபாஸ் சந்திரபோசிடம் அள்ளிக் கொடுத்தனர். அப்போது மலாயாத் தமிழர்களுக்கு இந்தியத் தேசப் பற்று மட்டுமே பிரதானமாக விளங்கியது.

இந்திய தேசிய இராணுவத்தில் மலாயா ஜான்சி ராணிப் படையினர்.

1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் தொடங்கி வைத்த கட்சியாகவே இருந்தது.

மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர்.

இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அவருடைய குடும்பத்தில் இருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி ஆதி நாகப்பனின் தந்தையாருக்கு இது பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

இந்திய தேசிய இராணுவத்தில் சேவை

மலாயாவில் சப்பானியர்கள் ஆட்சி செய்த போது, இந்தியாவைப் பிரித்தானியர்கள் தங்களின் இரும்புப் பிடியில் வைத்து இருந்தனர். அந்தப் பிரித்தானியர்களுக்கு எதிராக இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலாயா பெண்களில் ஜானகி ஆதி நாகப்பனும் ஒருவராவார்.

இராணுவ உடையில்  ஜானகி ஆதி நாகப்பன்
வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் ராணுவத்தில் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி ஆதி நாகப்பன் அழுததாகவும் சொல்லப்படுகின்றது.

ஆகவே, ஜானகி ஆதி நாகப்பனினால் இராணுவத்தின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடக்கக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டார்.

காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை அவருக்கு பழகிப் போனது. இராணுவ அதிகாரிகளுக்கான தேர்வில் ஜானகி ஆதி நாகப்பன் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார்.

பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

பத்மஸ்ரீ விருது

ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்கு துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற கேப்டன் ஜானகி ஆதி நாகப்பன், பர்மா இந்தியா போர் முனையில் வீரப் போராட்டம் நடத்தினார். காயம் அடைந்து சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் விடுதலையில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்து இருக்கிறது. 1977ஆம் ஆண்டு டில்லியில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விருதளிப்புச் சடங்கில், இந்திய அதிபர் கே. ஆர். நாராயணன், ஜானகி ஆதி நாகப்பனுக்கு அந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளில் தன்னை முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.காவை உருவாக்கினார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார்.

அந்தப் பதவியை 1986ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவர்தான்.

1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு 1949-இல் திருமணம் நடைபெற்றது.

டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்து பக்கபலமாக இருந்து வந்தார். 85 வயதைத் தாண்டிவிட்ட இவர் இப்போது கோலாலம்பூரில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப் படுகிறது.

ஆதி நாகப்பன் தமபதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடைய பெயர் ஈஸ்வர் நாகப்பன். அவர் சிங்கப்பூரில் வீடு விற்பனை தொழில்துறையில் ஈடுபட்டுள்ளார்.