மாணிக்கக்_கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணிக்கக்_கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 அக்டோபர் 2012

நாகப் பாம்புகளிடம் மாணிக்கக் கல் இருக்கிறதா?

மலேசியாவில்  ’மயில்’ மாத இதழில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடரை எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரை ஜனவரி 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அம்பிகா சீனிவாசன் அவர்களை பற்றி விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளது.


மயில் தாளிகை மலேசியா

அது ஒரு டுரியான் தோப்பு. நள்ளிரவு நேரம். பற்றாக்குறைக்கு அன்று அமாவாசை. கண்களுக்கு எட்டிய தூரம் வரையில் இருட்டு. ஆனால், வானத்தில் லேசாக வெளிர் பட்டிருந்தது. அந்த டுரியான் தோப்பின் நட்ட நடுவில் ஓர் அத்தாப்புக் குடிசை. விளக்குகளை அணைத்துவிட்டு திருப்பதி கண்களை மூடினார்.


இரவு நேரங்களில் டுரியான் பழங்களைத் திருடிச் செல்லும் கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அதற்காக விளக்குகளை அணைத்து வைத்து இருந்தார். அப்போது குடிசைக்கு மிக அருகில், அதாவது பரணுக்கு கீழே உஷ்ஷ்... உஷ்ஷ்... எனும் ஒரு நீண்ட நெடிய சீறல் ஒலி. கண்களைத் திறந்து பார்த்தார்.



அங்கே அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது. ஒரு பெரிய நாகப்பாம்பு. வளைந்து வளைந்து ஊர்ந்து சென்றது. தொடர்ந்தால் போல இரத்தத்தை உறைய வைக்கும் சீறல் சத்தம்.

மூச்சை ‘தம்’ கட்டிப் பிடித்துக் கொண்டார். அப்போது அந்தப் பாம்பு தன் வாயில் வைத்து இருந்த மாணிக்கக் கல்லை கீழே உமிழ்ந்து போட்டது. அந்த மாணிக்கக் கல்லின் வெளிச்சத்தில் இரையைத் தேடத் தொடங்கியது. 

அசல் மாணிக்கக் கல்

பாம்பு கொஞ்ச தூரம் போய்விட்டது. குடிசையில் இருந்து மெதுவாகக் கீழே இறங்கிய திருப்பதி அருகில் கிடந்த மணலை அள்ளி மாணிக்கக் கல்லின் மீது போட்டு அதை மறைத்து விட்டார்.

வேகம் வேகமாக குடிசை மேல் ஏறி மறைந்து கொண்டார். வெளிச்சம் இல்லாததால் பழைய இடத்திற்குத் திரும்பிய நாகப்பாம்பு, உமிழ்ந்து போட்ட மாணிக்கக் கல்லைத் தேடத் தொடங்கியது. வெகு நேரம் தேடியது. மாணிக்கக் கல் கிடைக்கவில்லை.

பூனையின் பார்வையில் ஐஸ்வர்யா ராய்
பூனையின் பார்வையில் ஐஸ்வர்யா ராய்

வேதனை அடைந்த நாகப்பாம்பு, நிலத்தை மூன்று முறை ஆக்ரோஷமாகக் கொத்தியது. அதன் பின்னர் அது இறந்து போனது. கீழே நடந்த அனைத்தையும் திருப்பதி பார்த்துக் கொண்டிருந்தார்.  

பாம்பு இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட அவர் மேலே இருந்து கீழே இறங்கி வந்தார். மணலை அப்புறப் படுத்தி விட்டு, மாணிக்கக் கல்லை மட்டும் எடுத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர் அவருக்கு இலட்சக் கணக்கில் லாட்டரி அடித்தது. பெரிய பணக்காரன் ஆனார். அப்புறம் என்ன. ஊரில் இருந்தவர்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு அவருக்கு பெண் கொடுக்க முன் வந்தார்கள். ஏக போக வாழ்க்கை வாழ்ந்தார்.

மனிதப் பார்வையில் ஐஸ்வர்யா ராய்
மனிதப் பார்வையில் ஐஸ்வர்யா ராய்

திருப்பதி என்பவர் திருப்பதி மலைக்கு திரும்பத் திரும்பப் போய் வந்தார். ஆனால் என்ன, அவரைப் பற்றி யாரும் இன்னும் வரலாற்றில் எழுதவில்லை. ஆக, உங்களுக்கும் பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசை வந்து இருக்கும்.  

அதனால், இரவு நேரத்தில் நீங்களும் நாகப் பாம்புகளைத் தேடி காடு மலைகளுக்குப் போய் வாருங்கள். இன்னும் ஒன்று. நீங்கள் தனந்தனி ஆளாகத் தான் போக வேண்டும். துணைக்கு யாரையும் கூட்டிக் கொண்டு போக முடியாது. சரியா. அப்புறம் காட்டிலேயே படுத்துத் தூங்க வேண்டும்.

காளை மாட்டின் கண்களில் ஐஸ்வர்யா ராய்
காளை மாட்டின் கண்களில் ஐஸ்வர்யா ராய்

புலி, யானை, கரடி இவற்றுக்கு எல்லாம் நீங்கள் பயப்படக் கூடாது. மாணிக்கக் கல் என்கின்ற மந்திரச் சொல்லைச் சொல்லி கொண்டே இருங்கள். உங்களுக்கும் மாணிக்கக் கல் கிடைக்கலாம். வைரம் வைடூரியம், கோமேதக கற்களும் கிடைக்கலாம். அப்புறம் என்ன. பில் கேட்ஸ் அவர்களுடன் கோடிகளில் கூட மோதிப் பார்க்கலாம்.

அண்மையில் ஒரு நண்பர் இப்படி ஒரு கதையை ஏற்ற இறக்கத் தொனிகளில் படு சுவாரஸ்யமாக என்னிடம் சொன்னார். சொன்னவர் பல்கலைக்கழ்கத்திற்குப் போய் பட்டம் வாங்கி வந்தவர். நன்றாகப் படித்தவர். 

மனிதக் கண்களில் சிநேகா
மனிதக் கண்களில் சிநேகா
இவர் மட்டும் அல்ல. இவரைப் போல பலர் இந்த மாதிரியான கதைகளைச் சொல்லி வருகிறார்கள். சின்ன வயதில் தோட்டப் புறத்தில் வாழ்ந்த போது இந்த மாதிரி கதைகளை நிறைய கேட்டு இருக்கிறேன்.

உண்மையிலேயே நாகப்பாம்பு அமாவாசை இரவு நேரத்தில் மாணிக்கக் கல்லைக் கீழே கழற்றி வைக்குமா? இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது. சரி. அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

காளை மாட்டின் கண்களில் கண்னன் ராதை
காளை மாட்டின் கண்களில் கண்ணன் ராதை

ஒரு நாகப்பாம்பு 100 வருடம் உயிர்வாழும் என்று சொல்கிறார்கள். அந்தப் பாம்பு தன் வாழ் நாளில் யாரையும் தீண்டாமல் இருந்தால் அதன் விஷம் இறுகிப் போய் ஒரு மாணிக்கக் கல்லாக மாறும். அந்த மாணிக்கக் கல்லை இரவு நேரங்களில் பாம்பு உமிழ்ந்துவிட்டு அதன் வெளிச்சத்தில் இரை தேடப் போகும் என்பது எல்லாம் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளே.  

அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. உண்மையில் மாணிக்கக் கல் என்பது ‘அலுமினியம் ஆக்சைடு’ Aluminum Oxide (Al 2 O3). மற்றும் குரோமியம் கலந்த ஒரு கனிமப்பொருள் ஆகும்.

மனிதக் கண்களில் கண்னன் ராதை
 மனிதக் கண்களில் கண்ணன் ராதை

மாணிக்கக் கல்லை ஆங்கிலத்தில் Ruby என்று அழைக்கிறார்கள். இந்த மாணிக்கக் கல் இளம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு படிக்கக்கல் ஆகும். இயற்கையாக கிடைக்கும் மாணிக்கம் மிகத் தூய்மையாக இருக்காது.

வைரத்தை போலவே இதுவும் பட்டை தீட்டப்பட வேண்டும். கல்லின் நிறம், அமைப்பு, ஒளிரும் தன்மை, எடை ஆகியவற்றை கொண்டே அதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.

மாணிக்கம் 2050 செண்டிகிரேட் வெப்பத்தில் உருகக்கூடியது. பர்மா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, கென்யா, நேபாளம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

வைரம் (Diamond), மாணிக்கம் (Ruby), மரகதம் (Emerald), வைடூரியம் (Cat’s eye), கோமேதகம் (Hessonite), முத்து (Pearl), பவளம் (Coral), புஷ்பராகம் (Topaz), நீலம் (Sapphire) ஆகிய இந்த ஒன்பது கற்களும் சேர்ந்துதான் நவரத்தினம் என்று அழைக்கப்படுகிறது. பாம்புகளுக்கு இந்த நவரத்தினக் கற்களைப் பற்றி எதுவுமே தெரியாது. பாவம் அந்தப் பாம்புகள்.

உண்மையில் பாம்புகளைப் பற்றி பல தவறான கருத்துகள் சொல்லப் படுகின்றன. பழிவாங்கும் குணம் பாம்புகளுக்கு உண்டு என்று தமிழ்ப் படங்களில் சித்தரிக்கப் படுகின்றது. சிவப்பு சேலை கட்டிய பெண்களை மாடுகள் விரட்டுவது போலத்தான் பாம்புகளுக்கும் கெட்ட பெயர்.  

உண்மையில் மாடுகளுக்கு கறுப்பு வெள்ளையைத் தவிர வேறு எந்தக் கலருமே தெரியாது. அந்த மாதிரி பாம்புகளுக்கு எந்த பொருளையும் தெளிவாகப் பார்க்க இயலாது. அதாவது அதற்கு எல்லாமே சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு மங்கலான பொருளாகத்தான் தெரியும்.

பொருட்களின் அசைவுகளைக் கொண்டுதான் மரம், செடி, ஊர்வன, பறப்பன என்று அறிந்து கொள்கிறது. ஆக, எந்தப் பொருளையும் தெளிவாகப் பார்க்க இயலாத ஓர் ஐந்தறிவு உயிரினத்திற்கு எப்படி குறிப்பிட்ட ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

எல்லா பாம்புகளும் அசைவம் தான். ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். பாம்பு பால் குடிக்கவே குடிக்காது. தமிழ் சினிமாக்களிலும் சீரியசான சீரியல்களிலும் தான் பாம்பு பால் குடிப்பதைப் பார்க்கலாம்.  

உண்மையில் எந்தப் பாம்பும் பால் குடிக்காது. மேலும் பாலைக் குடிப்பதற்க்கான எந்த ஒரு வசதியான உறுப்பு அமைப்பும் அதன் வாயில் இல்லை. அதற்கு காரணம் பாம்புக்கு நாக்கு கிடையாது.

நாக்கை போல பாம்பு வெளியே நீட்டுவது அதனுடைய மூக்கைதான். அதன் மூக்கை வைத்துதான் தன் அருகில் இருக்கும் இரையின் வாசனையை உணர்ந்து கொள்கிறது. அந்தப் பொருளின் அசைவுகளை வைத்து அது என்ன பொருள் என்பதையும் அனுமானிக்கிறது. இன்னும் ஒன்று.

பாம்பு செத்த உயிரினம் எதையுமே சாப்பிடாது. அது தவளையாக இருந்தாலும் சரி இல்லை தண்டூரிச் சிக்கனாக இருந்தாலும் சரி சாப்பிடவே சாப்பிடாது. தனக்குரிய இரை எதுவாக இருந்தாலும் அது உயிருடன் இருந்தால் மட்டுமே பாம்பு அதை விழுங்கும்.

பாம்புக்கு காது கிடையாது. ஆகையால் பாம்பு மகுடியின் இசைக்கு ஏற்ப குச்சுப்புடி ஆடுகிறது பரதநாட்டியம் ஆடுகிறது என்பது எல்லாம் சும்மா பேச்சு. 

பாம்பினால் தனது வயிற்றுத் தசை மூலம் நிலத்தில் ஏற்படும் எந்த ஒரு சின்ன அதிர்வையும் உணர்ந்து கொள்ள முடியும். 100 அடி தூரத்தில் நடந்து வரும் ஒரு மனிதனின் காலடி சத்தத்தைக் கேட்ட அந்த வினாடியே அந்த இடத்தை விட்டு ஊர்ந்து சென்று விடும்.

ஆக, இனி எதிர்காலத்தில் யாராவது பாம்பு பால் குடிக்கிறது, பரதநாட்டியம் ஆடுகிறது, மாணிக்கக் கல்லைக் கழற்றிப் போடுகிறது, பழி வாங்க வாசல் கதவைத் தட்டுகிறது என்று சொன்னால்... 

தயவு செய்து இங்கே நான் சொன்னதைச் சொல்லுங்கள். மீறிப் போனால் ஐயா சாலமன் பாப்பையாவைக் கூட்டி வந்து ’ஒரு பாம்பு பரநாட்டியம் ஆடுமா ஆடாதா’ என்று ஒரு பட்டி மன்றத்தை நடத்தி விடுவோம்!