குனோங் தகான் அனுபவங்கள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குனோங் தகான் அனுபவங்கள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 நவம்பர் 2019

குனோங் தகான் அனுபவங்கள் - 1

தமிழ் மலர் - 25.11.2019

இயற்கை அன்னையின் அருட்கொடையில் மலேசியா ஓர் அழகிய அவதாரம். அங்கே இறைந்து கிடக்கும் அலை அலையான மழைக் காடுகள். ஆனந்தமாய்ச் சஞ்சரிக்கும் மலைக் காட்டுப் பனி மேகங்கள்.

பச்சைப் பசும் வெளியில் பெயர்ந்து போகும் அடைமழைத் தூரல்கள். அந்தப் போர்வையில் அவதானித்துச் சிலிர்க்கும் உச்சி மலைச் சிகரங்கள். அவை அனைத்திலும் உச்சம் பார்க்கும் ஓர் இமயம். அதுதான் குனோங் தகான்.

தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலை. 7,175 அடி உயரம். தகான் மலை என்று தமிழில் செல்லமாய் அழைக்கிறோம். இந்த மலையில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். 

குனோங் தகான் உச்சியை அடையும் போது

பல மலைகளை ஏறிய அனுபவம். அதைப் பற்றித் தான் இன்றைய பகிர்வு. இது சுயபுராணம் அல்ல. கல்விசார் தகவல். பலருக்கும் பயன் உள்ளதாய் இருக்கும்.

தீபகற்ப மலேசியாவில் ஆயிரம் ஆயிரம் மலைகள் காவியங்கள் படைக்கின்றன. அவற்றில் ஆக உயர்ந்த மலை தான் இந்தக் குனோங் தகான். பெயரைக் கேட்டதுமே கொஞ்சம் பயமும் வருகிறது. கொஞ்சம் பக்தியும் வருகிறது.

மலேசியர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்ற இந்த மலை, ஏறுபவர்களுக்குப் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் கொடுக்கும்.  இமயமலையில் ஏறிச் சாதனை செய்த மோகனதாஸ்; மகேந்திரன் இருவரும் முதலில் இந்த மலையில் ஏறித் தான் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றார்கள். அதன் பின்னர் பேராக் தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில் இருக்கும் கொர்பு மலையில் தீவிரப் பயிற்சிகள் எடுத்தார்கள்.


குனோங் தகான் மலையின் உச்சியை அடைவதற்கு வேறு ஐந்து பெரிய பெரிய மலைகளில் ஏறி இறங்க வேண்டும். அது மட்டும் அல்ல. இருபது முப்பது குட்டி குட்டி மலைகளையும் ஏறி இறங்க வேண்டி வரும். கணக்குத் தெரியவில்லை.

குட்டி மலைகள் என்றால் குட்டிக் குன்றுகள் என்று நினைத்துவிட வேண்டாம். அவை எல்லாம்  2000 - 3000 அடிகளுக்கும் மேல் உயரமானவை. நிறைய அனுபவங்கள். உயிர் போய் உயிர் வந்த அனுபவங்கள் எல்லாம் உள்ளன. முடிந்த வரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

தகான் மலையை, குனோங் தகான் மலை என்றுதான் பலரும் அழைக்கிறார்கள். ஆக நாமும் அப்படியே அழைப்போமே.

குனோங் தகான் மலையின் அடிவாரத்தில் பாடாங் என்கிற ஓர் இடம். பாலைவனம் போன்று பச்சைப் பசேல் என்று பாசிகள் நிறைந்த ஓர் அழகிய அற்புதமான இடம் இருக்கிறது. காஷ்மீர் தோற்றது போங்கள். 

குனோங் தகான் ஆற்றின் ஒரு பகுதியைக் கடக்கும் போது...
முதுகில் இருபத்து ஐந்து கிலோ சுமையுடன்...

விதம் விதமான பச்சைத் தாவரங்கள். விநோதமான பூக்கள். முன்பின் பார்த்து இருக்க முடியாத தாவரங்கள். பச்சைப் பாசிகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நிறைந்து வழியும்.

வெள்ளைப் பனி அப்படியே உரசிக் கொண்டு போகும். மேகத்தைக் கையில் பிடிக்கலாம். நான் பிடித்துப் பார்த்து இருக்கிறேன். சும்மா சொல்லவில்லை. உண்மை. ஈரப் பசையாக இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு விமானத்தின் சிதைந்த பாகங்களைப் பார்க்கலாம். இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஒரு சின்ன விமானம். மலை உச்சிக்குப் போகிறவர்கள் இந்த இடத்தைக் கடந்து தான் போக வேண்டும்.

குனோங் தகான் மலை பகாங், திரங்கானு, கிளந்தான் மூன்று மாநிலங்களின் எல்லையில் நடுநாயக மைந்தனாகத் துறவறம் பூண்டு நிற்கிறது. இந்த மலையில் ஏறி இறங்க குறைந்தது ஒன்பது நாட்கள் பிடிக்கும்.

இரண்டாவது நாள்...

அதே சமயத்தில் 110 கி.மீ. தூரம் ஏறி இறங்க வேண்டும். மறுபடியும் சொல்கிறேன். 110 கிலோ மீட்டர்கள்.

போகப் போக உயரம் உயர்ந்து கூடிக் கொண்டே போகும். சும்மா சொல்லக் கூடாது. மூச்சு வாங்கும். தொண்டை அடைக்கும். தலை கிறுகிறுக்கும். சமயங்களில் உடல் நடுங்க ஆரம்பிக்கும். குளிரினால் அல்ல. உடல் பலம் குறையக் குறைய உடல் நடுங்கத் தொடங்கி விடும். என் அனுபவங்கள்.

மலை ஏறுவது என்பது துணிச்சல் கலந்த பொழுது போக்கு. ஆனால் உயரமான மலைகளில் ஏறுவது என்றால் ரொம்பவும் துணிச்சல் வேண்டும்.

மலை ஏறுவதற்கு உடல் வலிமையும் தேவை. மனவலிமையும் தேவை. உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். இதய நோய், நீரிழிவு நோய், மற்றும் சற்றுக் கடுமையான நோய் உள்ளவர்கள் இந்த மாதிரியான விசப் பரீட்சையைத் தவிர்ப்பது நல்லது.

அப்படிப் பட்டவர்கள் ஆகக் கீழே அடிவாரத்தில் சுற்றி வரலாம். மேலே ஏறுவதை மட்டும் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும். ஒரு நேரம் போல இருக்காது.
பதினைந்தாவது அடுக்கு மலை நீர்வீழ்ச்சிகள்

மலை ஏறுபவர்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. ஆபத்து அவசர நேரத்தில் உயிரே போகும் நிலை ஏற்பட்டாலும்கூட மன வலிமையை மட்டும் இழந்துவிடக் கூடாது. இழக்கவே கூடாது.

உங்கள் முன்னால் ஒரு புலி வந்தால்கூட பயப்படக் கூடாது. சாகப் போகிறோம் என்று தெரிந்த பின்னர் ஓடி ஒளியலாமா. சொல்லுங்கள். அந்த மாதிரியான நிலை ஏற்படலாம். ஆனால் தைரியம் இருக்க வேண்டும்.

என்னுடைய காட்டு அனுபவத்தில் இரண்டு முறை புலிகளை நேருக்கு நேர் காட்டில் சந்தித்து இருக்கிறேன். தனியாக அல்ல. நண்பர்கள் கூட்டமாக இருக்கும் போது தான். தனியாக இருந்து இருந்தால் அம்புட்டுத்தான். அந்தப் புலிகளுக்குத் அன்றைக்குத் திருப்பதி லட்டு கிடைத்த மாதிரி.

யானைகள் இரு தடவைகள். கரடிகளை மூன்று முறை பார்த்து இருக்கிறேன். காட்டுப் பன்றிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல தடவைகள். மூன்று முறை இராட்சச மலைப் பாம்புகளைக் கடந்து போய் இருக்கிறோம். இந்த அனுபவங்கலைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம். ஒரு செருகல்.

குனோங் கெடோங் சமவெளியில்... 
இதைத் தாண்டிய பின்னர் குனோங் தகான்...

மலைகள் ஏறுவதற்கு முதன்முதலில் குனோங் லேடாங் மலையில் தான் பயிற்சிகள் எடுத்தேன்.

மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில் இருந்து குனோங் லேடாங் மலை 45 கி.மீ. தொலைவு. நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் இதே இந்த காடிங் தோட்டத்தில் தான்.

அதன் பின்னர் ஜாசின் தமிழ்ப்பள்ளியில் பணி. சாரணர் இயக்கத்தின் ஆசிரியர். பள்ளி விடுமுறை வந்தால் மாணவர்களை அழைத்துக் கொண்டு குனோங் லேடாங் மலைக்குப் போய் விடுவேன்.

அதன் பின்னர் தொடர்ந்து தொடர்ச்சியாகப் பல மலைகள் ஏறிய அனுபவம்.

தித்திவாங்சா மலைத்தொடரில் பிரிஞ்சாங் மலை (பகாங்), குனோங் தகான் மலை, திரிங்காப் மலை (பகாங், கேமரன் மலை), தம்பின் மலை (நெ.செ.), ஜெமிந்தா மலை (ஜொகூர்), சிகாமட் மலை (ஜொகூர்), யோங் பெலார் மலை (பேராக் - கிளந்தான்), காயோங் மலை (Gayong - பேராக்), யோங் யாப் மலை (பேராக் - கிளந்தான்), கெடோங் மலை (Gedung - பகாங்), ராஜா மலை (பேராக் - பகாங்), தாங்கா 15 அடுக்கு மலை (Tangga 15 - பகாங்). கெடாவில் குனோங் ஜெராய் மலை.

ஆறாவது நாள் இறங்கி வரும் போது
கிளந்தான் குவா மூசாங் மலைப்
பகுதியில் இருந்து குனோங் தகான்

பிரேசர் மலை (சிலாங்கூர்), மெக்சுவல் மலை (பேராக்), கொர்பு மலை (பேராக்),  உலு காலி மலை (சிலாங்கூர்),  பெலுமுட் மலை (ஜொகூர்), புரோகா மலை (சிலாங்கூர்), லம்பாக் மலை (ஜொகூர்). இவை அனைத்தும் 5000 - 10,000 அடி உயரம். இன்னும் சில மலைகள் மேலே உள்ள பட்டியலில் இல்லை. பெயர்கள் மறதி.

2006-ஆம் ஆண்டில் குனோங் தகான் மலையில் முதன் முதலாக கால் வைத்த போது பெரும் சிலிர்ப்புகள். பயமாக இருந்தது. ஏற முடியுமா என்கிற பயம் தான்.

இவற்றில் மிகவும் சிரமப் பட்டது இரு மலைகள். முதலாவது குனோங் தகான் மலை; இரண்டாவது குனோங் ஜெராய் மலை. அவற்றுள் குனோங் தகான் மலையில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தான் ‘தேன் சிந்துதே வானம்’ எனும் நாவலை எழுதினேன். குனோங் லேடாங் மலையில் 8 முறை ஏறிய அனுபவம்.

குனோங் தகான் மலை, தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலை. 7,175 அடி உயரம். ஏறுவதற்கு 5 நாட்கள். இறங்குவதற்கு 4 நாட்கள். ஆக மொத்தம் 9 நாட்கள் பிடிக்கும். மிக மிக வேதனையான அனுபவங்கள்.

குனோங் தகான் மலைக்கு பகாங், கோலா தகான் வழியாக ஏறினோம். திரும்பவும் அதே பாதையில் இறங்க முடியவில்லை. நிலச்சரிவு என்று எங்களுக்கு அலைபேசி வழியாகச் செய்தி வந்தது.

குனோங் தகான் மலை உச்சியில் நான்காவது நாள்...
எல்லோருக்குமே உடல் காயங்கள்...
என் முட்டிக்கால்களைக் கவனியுங்கள்

அதனால் கிளந்தான் குவா மூசாங் காட்டு வழியாக இறங்க வேண்டிய நிலை. ரொம்பவும் சிரமப் பட்டுப் போனோம்.

கால் முட்டிகள் நகர்ந்து உயிர் போகிற வலி. ரொம்பவும் இடுப்பு வலி. உடம்பு பூராவும் வலிக்கும். பற்றாக் குறைக்கு முதுகுப் பையில் 15 - 25 கிலோ சுமை. உடம்பு பூராவும் சிராய்ப்புக் காயங்கள்.

இதில் அட்டைகளின் தொல்லைகள். கறுப்பு சிகப்பு மஞ்சள் பச்சை என கலர் கலரான அட்டைகள். இரத்தம் குடித்து ஆள்காட்டி விரல் அளவுக்கு தடித்துப் போய் இருக்கும்.

அவற்றைப் பிடுங்க முடியாது. பிடுங்கினால் இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். உப்பு போட்டு அகற்றலாம். அல்லது சிறுநீர். மற்ற எதற்கும் அவை அசையா. சுனைப்புக் கத்தியால் வழித்து எடுக்கலாம்.

ஆனால் அட்டைகளின் பற்கள் நம்முடைய தோலில் அறுபட்டு விடும். பின்னர் சில நாட்களில் அந்த இடத்தில் சலம் வைத்து விடும். ஆகவே அவற்றிற்கு ராஜ மரியாதை கொடுத்து அகற்ற வேண்டும்.

ஏறும் போது நின்று அட்டைகளை அகற்ற முடியாது. ஏன் என்றால் பொழுது சாய்வதற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட வேண்டும். அதனால் கடித்தால் கடிக்கட்டும் என்று கண்டு கொள்ள மாட்டோம்.

அப்படியே இரத்தத்தை உறிஞ்ச விட்டு மலையில் ஏறிக் கொண்டே இருப்போம். அப்புறம் அந்த அட்டைகள் போதுமான இரத்தம் குடித்து முடிந்ததும் அவையே தானாக கீழே விழுந்து விடும். இது எல்லாம் காட்டு அனுபவங்களில் சர்வ சாதாரணம்.


நடுவழியில் முகாம் போட்டால் சமயங்களில் காட்டு யானைகள் மிதித்துக் கொன்று விடலாம். ஆகவே இரவு நேரத்தில் பாதுகாப்பான இடத்தில் கூடாரம் போட வேண்டும். யானைகள் புதிதாகச் சாணம் போட்டு இருந்தால் அந்த இடத்தில் கூடாரம் அமைக்கலாம். இப்படி நிறைய அனுபவப் பூர்வமான விசயங்கள்.

எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் எச்சரிக்கையாக வைக்க வேண்டும். ஒரு சின்ன தவறு. அவ்வளவுதான். அதல பாதாளத்தில் உடல் நொறுங்கிப் போகும். சமயங்களில் யானைகள் ஏறிச் சென்ற பாதையிலேயே நாங்களும் ஏறிச் செல்வோம்.

தொலைவில் காட்டு யானைகள் பிளிறும் சத்தம் கேட்கும். இதில் புலிகளின் பயம் வேறு. எந்த நேரத்திலும் தாக்கலாம். அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

மலை அடிவாரத்தில் மலைப்பாம்புகள், காட்டுப் பன்றிகளின் தொல்லைகள். மிகவும் கவனமாகக் கூடாரங்களை அமைக்க வேண்டும். சமயங்களில் காட்டு வெள்ளம். ஆற்றைக் கடக்க முடியாது. வெள்ளம் வடியும் வரையில் காத்து இருக்க வேண்டும்.

குனோங் தகான் மலை ஏறும் போது குறைந்த பட்சம் முப்பது முறைகளாவது ஆற்றைக் கடக்க வேண்டும். பெரும்பாலும் கழுத்து அளவு நீர்.

உச்சியில் நீர் கிடைப்பது சிரமம். மழை பெய்தால் அந்த நீரைப் பிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை என்றால் மலை உச்சியின் பஞ்சு பாசிகளைப் பிழிந்து நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவிர சமயங்களில் தொடர்ச்சியாக அடை மழை. முழுக்க முழுக்க நனைந்து கொண்டே ஏற வேண்டும். நின்று ஓய்வு எடுக்க எல்லாம் முடியாது. இதில் பயங்கரமான கடும் காட்டுக் குளிர்.

மலேசியாவில் பல உயரமான மலைகளை ஏறிய அனுபவம் நிறையவே உள்ளது. இப்போது முடியவில்லை. வயதாகி விட்டது என்று சொல்ல முடியாது. உடல் வலிமை இடம் கொடுக்க வில்லை. மனவலிமை இருந்தாலும் மலை ஏறுவதற்கு உடல் வலிமை முக்கியம். நாளைய கட்டுரையில் காட்டு யானைகளின் கதை வருகிறது.

(தொடரும்)