கொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியா மோதலா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியா மோதலா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஏப்ரல் 2020

கொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியா மோதலா?

தமிழ் மலர் - 09.04.2020

அமெரிக்கா. உலகப் பெருமைகளில் தனித்து நிற்கும் நாடு. உயரிய அறிவியல் நுட்பங்களில் உன்னதம் பேசும் நாடு. உலகப் போலீஸாரர் எனும் விருதைப் பெற்ற நாடு. உங்களையும் என்னையும் அண்ணாந்துப் பார்க்க வைக்கும் நாடு. ஆனாலும் இயற்கையிடம் மட்டும் சமாதானம் பேச முடியாது என்று இப்போது மண்டியிட்டுப் பேரம் பேசும் நாடு.




அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உயிர் இழப்புகளும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கொரோனா திருவிழாவிற்குச் சூடம் சாம்பிராணி போட்டு விளக்கு ஏற்றி வைத்த சீனாவையே மிஞ்சிப் போகிற அளவிற்கு வரலாறு அமெரிக்கா படைத்து வருகிறது.

அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு என்று ஆப்பிரிக்கா நாட்டு காங்கோ மக்கள் கேட்கிறார்கள். ஆர்க்டிக் பனிமலை இனியூட் மக்கள் கேட்கிறார்கள். அகில உலகமே அலறி அடித்துக் கேட்கும் அளவிற்கு நிலைமை மிக மிக மோசமாகி விட்டது.




அமெரிக்காவில் மட்டும் இது வரை 435,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழப்புகள் 14,800. இத்தாலியில் 17,600; ஸ்பெயின் 15,200; பிரான்ஸ் 10,800; இங்கிலாந்து 7,100. எல்லாமே ஆயிரக் கணக்கில் போகின்றன. 

அமெரிக்காவில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் உயிர் இழப்புகள் மேலும் உயரலாம். பாதிப்புகள் உச்ச நிலையை அடையலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்து உள்ளது.

கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவில் இரண்டு இலட்சம் மக்கள் வரை உயிர் இழக்கலாம் என பகீர் தகவலைச் சொல்லி பேதி மாத்திரைகளைக் கொடுக்கிறது வெள்ளை மாளிகை.




நியூயார்க் நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் இவ்வளவு மரணங்கள் ஒரே நாளில் பதிவானது இதுவே முதல்முறை. நியூயார்க் நகரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,500. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1800 பேர் இறந்து உள்ளனர்.

கொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியாவிற்கும் மோதலா எனும் தலைப்பைக் கொடுத்து விட்டு வேறு எங்கோ போவதாக நினைக்க வேண்டாம். கொஞ்சம் பொறுமை. அதற்கு முன்னர்...

ஏன் அமெரிக்காவில் இந்த அளவுக்குப் பாதிப்புகள். காரணம் என்ன. அதைப் பற்றி முதலில் பார்ப்போம்.




ஒரே ஒரு முக்கியக் காரணம். மக்களுக்குச் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை. அதுதான் முக்கியக் காரணம். பிரதான காரணம்.

கொரோனா தொடங்கிய தொடக்கக் காலத்தில் கொரோனாவைப் பற்றிய முழுமையான தகவல்கள் மக்களுக்குப் போய் சேர்ந்து இருந்தால், அமெரிக்காவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிப் போய் இருக்காது.

சீனாவின் ஹூபே மாநிலத்தின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்த காலக் கட்டம். 2020 ஜனவரி 15-ஆம் தேதி தான் ஐ.நா.விற்குச் சீனா அதைப் பற்றி எச்சரிக்கை செய்தது.

எச்சரிக்கைக்குப் பின்னர் சீனாவில் இருந்து அமெரிக்கர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு படை படையாக அமெரிக்காவிற்குக் கிளம்பி விட்டார்கள். 




437,000 பேர் விமானம் மூலம் போய்ச் சேர்ந்தார்கள். எண்ணிக்கையைப் பாருங்கள். 4 இலட்சத்து 37 ஆயிரம் பேர். ஆயிரக் கணக்கான விமானங்களில் பறந்து போய் இருக்கிறார்கள். போனவர்கள் சும்மா ஒன்றும் போகவில்லை. பெரும்பாலோர் கொரோனா கிருமிகளையும் தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

கொரோனாவின் கோட்டையாக விளங்கிய வுஹான் நகரில் இருந்து பல ஆயிரம் அமெரிக்கர்கள் நேரடி விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்கள்.

2020 ஜனவரி மாதம் 15-ஆம்தேதி வரையில் கொரோனா தீவிரம் குறித்து, உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை செய்யவில்லை. அதனால் மக்களும் பெரிது படுத்தவில்லை.

என்ன செய்வது. கொரோனா இப்படி இறக்கைக் கட்டி கோரத் தாண்டவம் ஆடும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். 




சீனாவில் இருந்து பல ஆயிரம் பேர் அமெரிக்காவின் பற்பல நகரங்களுக்குத் தங்கு தடை இல்லாமல் போய் இருக்கிறார்கள். அப்படிப் போனவர்கள் அமெரிக்கர்கள் மட்டும் அல்ல. பல நாட்டுக்காரர்களும் அவசரம் அவசரமாகப் போய் இருக்கிறார்கள். கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்கிற அவசரக் கோலம்.

2020 பிப்ரவரி மாதத்தில் சீனாவில் இருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 நகரங்களுக்குப் போய் இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, சியாட்டில், நெவார்க்; டெட்ராய்ட் போன்ற நகரங்கள்.

இந்த விமானங்கள் மூலம் தான் மக்கள் அமெரிக்காவிற்குப் போய் இருக்கிறார்கள். இந்த விமானங்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ்களும் அமெரிக்காவிற்குப் போய் இருக்கின்றன. மனிதர்களுக்கும் கொரோனாவிற்கும் விமானப் பயணங்கள். ஆனாலும் கொரோனா மட்டும் டிக்கெட் வாங்காமல் போய் இருக்கிறது.




கொரோனாவின் வீரியக் கொடுமைத் தன்மையைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்வதற்கு முன்பாகவே சீனாவில் இருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிற்குப் போய் விட்டார்கள்.

அப்போது அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனா குறித்த பரிசோதனைகளில் தீவிரம் இல்லை. மருத்துவ சோதனைகளில் தீவிரம் இல்லை. பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லை. வழக்கமான பயண விதி முறைகள் தான்.

அமெரிக்காவிற்குள் சென்ற பயணிகளில் எத்தனைப் பேர் கொரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் போனார்கள் என்கிற கணக்கும் தெரியவில்லை. அந்தக் கணக்கு விவரங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. உலகத்துப் போலீஸ்காரருக்கு இப்படி ஒரு நிலைமையா?




அதன் பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. ஆனாலும் அமெரிக்கர்கள் பலர் பொருட்படுத்தவில்லை. ஓர் அசட்டை தான். ஆகக் கடைசி நிமிடம் வரையிலும் சீனாவில் இருந்து விமானங்கள் அமெரிக்காவுக்குப் பறந்த வண்ணம் இருந்தன.

மார்ச் மாதம் மத்திய வாக்கில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களுக்குப் பல நூறு விமானங்கள் போய் இருக்கின்றன. ஆனாலும் 250 விமானங்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். கூடுதலாகவே இருக்க வேண்டும் என்று சில நம்பக் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாட்டுச் சோதனைகளைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே குழப்படிகள் நடந்து முடிந்து விட்டன. கொரோனா வைரஸ்களும் பேரன் பேத்திகளுடன் படை எடுத்துப் போய் விட்டன.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைதற்கு முன்னதாகச் சீனாவில் இருந்து அமெரி்க்காவுக்கு 3 இலட்சத்து 81 ஆயிரம் பயணிகள் விமானங்கள் மூலமாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீன நாட்டு விமானங்கள். குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள்.




சீனாவில் இருந்து விமானங்களில் வந்தவர்களில் பலர் எவ்விதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள்.

அப்படி வந்த பயணிகளில் குறைந்த பட்சம் 25 விழுக்காட்டுப் பயணிகள் கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது.

இன்னும் ஒரு விசயம். அமெரிக்காவில் முதன்முதலில் 2020 ஜனவரி 20-ஆம் தேதி தான், வாஷி்ங்டன் தலைநகரில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

இருந்தாலும் அதன்பின் பல வாரங்கள் எவருக்கும் அடையாளம் தெரியாமல்; எவரும் அறிய முடியாத வகையில்; கொரோனா வைரஸ் வாரக் கணக்கில் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அமெரிக்கா முழுவதும் படர்ந்து பரவி சங்கீர்த்தனங்கள் பாடி இருக்கின்றன.




இதில் இன்னும் ஒரு வேடிக்கை. அமெரிக்காவுக்கு இந்தக் கொரோனா வைரஸை முதன்முதலாக யார் இறக்குமதி செய்தார் என்கிற விசயம் இதுவரையிலும் ஒரு தங்கமலை இரகசியமாகவே இருக்கிறது.

உலகத் தலைவர்கள் சிலர் சில சமயங்களில் பொருத்தமே இல்லாத கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். மன்னிக்கவும். வார்த்தை ஜோடனைகளில் பெரும் பேச்சு பேசுகின்றனர்.

எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவரின் ஏறுக்கு மாறான அணுகுமுறையைச் சொல்லலாம்.

''நாங்கள் வைரஸைக் கட்டுக்குள் வைத்து இருக்கிறோம். நாங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சீனாதான் கவலைப்பட வேண்டும். நாங்கள் அல்ல. எங்கள் நாடு எங்கள் பாதுகாப்புக் கரங்களில் பத்திரமாக இருக்கிறது''.

இப்படிச் சொன்னவர் டொனால்டு டிரம்ப். கடந்த மார்ச் மாதம் பெருமையாகப் பேசியதை நினைவில் கொள்வோம். 




2020 ஜனவரி 22-ஆம் தேதி அமெரிக்காவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. அதை உறுதி செய்து இரண்டு நாட்களாகி விட்டன. அதன் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ’நாங்கள் கொரோனா வைரஸை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறோம்’ என்று கூறி இருக்கிறார்.

இப்போது அமெரிக்காவின் நிலைமை என்ன. பார்த்தீர்களா. சீனாதான் கவலைப்பட வேண்டும். நாங்கள் அல்ல என்று சொல்லி இரண்டு மாதங்களில் அங்கே அமெரிக்காவில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சு. ஆனால் இப்படி தலை போகிற நேரத்தில் அப்படி பேசுவது முதிர்ச்சிக்கு அழகு அல்ல.

இப்போது உலகிலேயே கொரோனா எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 2020 ஏப்ரல் 7-ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 368,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

 

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் மருத்துவக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு. மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு. 

இப்போது அண்மையில் இந்தியாவுடன் மல்லுக்கட்டு. கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து ஹைட்ராக்சி குளோரோ குவின் (Hydroxychloroquine). அந்த மருந்தை அனுப்பி வைக்கும் படி அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டது. ஆயிரம் இரண்டாயிரம் மாத்திரைகள் அல்ல. நூறு மில்லியன் மாத்திரைகள். அதற்கு இந்தியப் பிரதமர் மறுப்பு தெரிவித்தார்.

எங்கள் நாட்டு மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டும்.  எங்களை நம்பி எத்தனையோ ஏழை நாடுகள் உள்ளன. அப்புறம் தான் மற்றவர்களுக்கு என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்ட அமெரிக்க அதிபருக்கு மோடியின் மீது கோபம். தலைக்கு மேல் ஏறிவிட்டது. அமெரிக்கா கேட்டபடி ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை இந்தியா கொடுக்க முன்வர வேண்டும். இல்லை என்றால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்து உள்ளார்.

அதாவது ’ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பவில்லை என்றால் பிரச்சினை இல்லை. அப்படியே இருக்கட்டும். ஆனால் அதற்கான எதிர் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை செய்து உள்ளார்.




இந்தியா சும்மா இருக்குமா. இப்படி பதில் கொடுத்தது. கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும்; இந்தியாவை நம்பி இருக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்தை இந்தியா வழங்க இருக்கிறது. ஆகவே ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று இந்தியா பதிலடி கொடுத்தது.

ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை இந்தியா பெரும் அளவில் தயாரித்து வருகிறது. இந்த மருந்து மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குளோரோ குவின் மருந்தைப் போன்றது. ஆனால் லேசான வேதியல் மாற்றங்களைச் செய்து இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், கொரோனாவைக் குணப்படுத்தும் என்பதற்கு சரியான ஆய்வு ஆதாரங்கள் இல்லை. 




இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (05.04.2020) இந்தியப் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாடினார். அப்போது, ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வருகிறது.

பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் நல்ல நண்பர்கள். கடந்த 2020 பிப்ரவரி மாதம் அதிபர் டிரம்ப் இந்தியா வந்த போது அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் பட்டது.

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளன. இந்த நிலையில் ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து உள்ளது.

வெளிநாடுகளின் தேவைகளை இந்தியா நிறைவு செய்ய முடியும். அதிக அளவில் ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது.




இருந்தாலும் அந்த மருந்தைத் தயாரிப்பதில் கொஞ்சம் பிரச்சினை. அந்த மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் 70 விழுக்காடு சீனாவில் இருந்து வந்தது.

அண்மையில் அந்த மூலப் பொருளின் ஏற்றுமதியைச் சீனா நிறுத்தி விட்டது. இருந்தாலும் இந்தியா முழு நம்பிக்கையுடன் மருந்து தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவிற்கு ஒரு சல்யூட். சரி. இந்திய அமெரிக்கப் பிரச்சினையை விடுங்கள்.

அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் இப்போது அமெரிக்க அதிபர் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ஏன் தெரியுங்களா. 2020 மார்ச் முதல் வாரம் வரை கொரோனா பிரச்சினையை அமெரிக்க அதிபர் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

விளையாட்டுத் தனமாக, சிறுபிள்ளைத் தனமாக ஓர் அதிபர் நடந்து கொண்டு இருக்கிறார் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் இப்போது விலாசித் தள்ளுகின்றன.

கொரோனா பிரச்சினையைப் பெரிது படுத்தினால் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி விடும். அப்புறம் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம். அப்படி ஒரு தூர நோக்கச் சிந்தனையில், கொரோனா விசயத்தைக் கிடப்பில் போட்டார்களாம்.

அந்த அமுக்கல் கிடப்பு வேலைதான் இப்போது பெரிய பிரச்சனையாகி விட்டது. பத்திரிகைகாரர்கள் சும்மா விடுவார்களா. அமெரிக்க அதிபர் இப்போது முள்வேலியின் முள்கம்பிகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்.

ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மாமன்னன் பிடில் வாசித்தானாம். அந்தக் கதை நினைவிற்கு வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.04.2020

சான்றுகள்:

https://www.nytimes.com/2020/04/05/us/coronavirus-deaths-undercount.html

https://www.aljazeera.com/news/2020/04/recession-coronavirus-crisis-live-updates-200403233012626.html