அந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மே 2016

அந்தமான் - தமிழர் வாழும் நாடுகள்

பர்மாவில் அராகன் மலை. அங்கிருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவு வரை நீண்ட நெடிய மலைத் தொடர். அதன் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள். 


அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர் (Port Blair). கோலாலம்பூரில் இருந்து 1,365 கி.மீ. சென்னையில் இருந்து 1191 கி.மீ. தொலைவு.

அந்தமான் தீவில் ஆப்பிரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்ச் சொற்கள் போன்றவை தமிழோடு இணைந்து போகின்றன.




இவர்களைப் போலவே நிக்கோபார் தீவுகளில் மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிக்கோபாரிகள் வாழ்கின்றனர். இவர்கள் மங்கோலியக் கலப்பு இனத்தவர். குடுமி வளர்த்தல், தமிழரோடு இணைந்து போன குடும்ப வாழ்க்கையும் பழக்க வழக்கங்களும் நிறைந்துள்ளன.

பெரிய நிக்கோபாரில் உள்ள 'சாம்பன்' பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதி இருக்கிறார். "இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழ்நாட்டுத் தமிழனைச் சந்தித்தால் 'சாம்பன்' பழங்குடியினரில் இருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாது" என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந் தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்து இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

அந்தமான் என்ற பெயரே தமிழர் கொடுத்தது தானே. மான்கள் நிறைந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயில் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. 

சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இதற்கான ஆதாரத்தைத் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் இன்றும் காணலாம். 

நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா. நக்கவரம். அந்தக் காலத்தில் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.

நிக்கோபாரில் இரு தீவுகள் உள்ளன. சின்ன நிகோபார் தீவை கார்தீவிபா என்றும் பெரிய நிக்கோபாரை நாகதீவிபா என்றும் சோழர் காலச் சமஸ்கிருத கல்வெட்டுகள் கூறுகின்றன. மார்கோ போலோ எனும் உலகப்புகழ் சுற்றுலா மனிதர் இங்கு வந்தார். அவர் வந்த பின்னர் இந்தத் தீவின் பெயரும் நெக்குவரம் என்று மாறி விட்டது. 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சாதுவன் என்ற வணிகன் பெயர் வரும். அவர் இந்தத் தீவில் தான் சிக்கிக் கொண்டான். நக்க சாரணர் நாகர் வாழ்மலை என்று மணிமேகலையில் குறிப்பிடப் படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு வாழ்நாள் தண்டணை வழங்கி இங்கு குடியேற்றினர். சிறைச்சாலைக் கட்டுவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர். கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தில் போராடிய 1400 மலையாக்களும் குடியேறினார்கள்.

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம். தமிழர்கள் இரண்டாம் இடம். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் மிகுதி. தமிழர்களின் இட்லி, தோசை, வடை, சாம்பாருக்கு அதிக வரவேற்பு.


அந்தமான் தீவுக் கூட்டத்தில் 567 தீவுகள் உள்ளன. இதுவரை மக்கள் குடியேறிய தீவுகள் 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகள். 1943-இல் ஜப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றினர். 1945 வரை மூன்றாண்டுகள் வைத்து இருந்தனர். 

பின்னர் இந்தத் தீவை நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் கொடுத்தனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கேதான் முதன்முதலில் ஏற்றப் பட்டது. முதல் ஆளுனராக நேதாஜியால் நியமிக்கப்பட்டவர் டாக்டர். கர்னல் லோகநாதன் னும் ஒரு தமிழர். 

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்ளின் செல்வாக்கே அதிகமாக இருந்தது. அவர்களின் தலைமையிடமாக ராஸ் எனும் சின்னஞ் சிறியத் தீவு. அங்கே ஒரே ஒரு கோயில். தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்.

தலைநகர் போர்ட் பிளையரில் இருக்கும் வெற்றிமலை முருகன் கோயிலை அங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள். இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயில். அந்தமான் தீவு எங்கும் முருகன், விநாயகர், மாரியம்மன் ஆலயங்கள். தமிழர்கள் தங்களின் பண்பாட்டைக் காப்பாற்றுகின்றனர். காதணிவிழா, திருமணம் போன்றவை கோயில்களில் நடப்பது உண்டு.

பெண்கள் தலையில் பூச்சூடுவது, நெற்றியில் திருநீறு, குங்குமம் இடுவதிலிருந்து தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணி தெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டு விட்டனர். தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப் பெயரிட்டுள்ளனர்.




'அந்தமான் முரசு' என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன. பிறமொழிகளில் இந்த அளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை. தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள்.

அந்தமானில் உள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கு ஒருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாட்கள் விமானத்தின் மூலமும் வருகின்றன. 




தமிழகத்தில் இருந்து வெளிவரும் இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். மலேசியாவின் ‘மயில்’ சஞ்சிகைக்கு இங்கே அதிக ஆதரவு.

இங்கே வங்ளாதேசியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழி பேசும் மக்கள் இருந்தாலும் 'இந்தி'யே ஆட்சிமொழியாக இருக்கிறது. அந்தமான் தமிழர் பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.


தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள். இருந்தாலும் தமிழ்க் கல்வியைத் தருவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கொடுக்காமல் இந்தி பேசும் இந்தியர்களாக ாற்ற வேண்டும் என்பதே அப்போதைய வியூகம். 

அந்தமான் தலைமைக் கமிஷனராக அப்போது இருந்த ஹர்மந்தர் சிங், "இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன. வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள்.

பிறகு அதுவும் போதனா மொழியாக்கப் பட்டது. இப்போது தமிழ்மொழி போதனாமொழியாக வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இது ஓர் இருவழிப் பிரச்சினை. 


இந்தப் பிரச்சினையைத் தூண்டுபவர்கள் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்தி மொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்குப் போக வருபவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்பி வருகிறார்கள்” என்றார்.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தமானில் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக் கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ இல்லை.




இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இங்குள்ள 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர்கள் மூவர்.

இதைத் தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி என்பவர் இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார். 1920-இல் மத்திய அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கே.ஆர். கணேஷ் என்பவர் அந்தமான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். கந்தசாமி இன்று மக்கள் கட்சித் தலைவராகவும், பிரதேசக் கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் என்பவர் இருக்கிறார்.


பத்திரிக்கை ஆசிரியராகத் தமிழர். ஆளும் கட்சிக்காரராகத் தமிழர். பெரிய பெரிய வணிகராக, தொழிலதிபராகத் தமிழர். ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உள்ளன. 

அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று உயிர்களைத் தியாகம் செய்தவனும் தமிழன் தான். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் முதன் முதலாக சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதியும் தமிழன் தான் என்கிறார். 

தீவில் முன்பு குடியேறியத் தமிழர்கள் அரசு ஊழியம் செய்தவர்கள். இப்போது எல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 

1970க்கு முன் தீவின் முக்கியப் பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். 

இருந்த போதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டுத் வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.

அந்தமான் அமைப்புக்கள் :

1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்


அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல இரங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இன ரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாசாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் தீவிரப் பணியாற்றுகின்றன.

தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி பாரதிதாசன் விழா, தமிழ்ப் புத்தாண்டு, முத்தமிழ் விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை நடத்தியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்சீவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
 

தமிழரின் எண்ணிக்கையைச் சிதடிப்பதற்குப் பெரும் முயற்சி நடந்து வருகின்றன. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்ளாதேசியர் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வங்ளாதேசியர் மறுக்கின்றனர்.

567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல மெல்ல வங்ளாதேசியர் தொகை மட்டும் கூடிக் கொண்டே போகிறது.

தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப் புயல் மழையில் தமிழர்களின் குடியிருப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது

அவர் சொன்ன பதில்: "உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப் படுகிறது. ஆளுனரின் நிலையே இதுவென்றால் மற்ற வங்ளாதேசியர் எப்படி இருப்பார்கள்?

ஆனால் இங்கே மலேசியர்கள் வங்காளதேசிகளைச் சகோதரர்கள் மாதிரி பார்க்கிறார்கள். அங்கே அந்தமானில் தமிழர்களை வங்காளதேசிகள் துச்சமாக நினைக்கிறார்கள். தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறார்கள். வங்காளதேசிகளை மனித நேயத்துடன் பார்க்கும் வழக்கத்தை மாற்ற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.


கட்டுரைக்கான சான்றுகள் :

1. அந்தமான் தீவில் தமிழர் நிலை - முகவை. முத்து.
2. உலகத் தமிழர் - பாகம் 2. இர.ந. வீரப்பன்.
3. பாரெல்லாம் பரந்த தமிழர் - சுப. சுப்பிரமணியம்.
4. இந்தியாவின் ஹவாய் - ஆனந்தவிகடன் 1974.
5. ப. திருநாவுக்கரசு