கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 டிசம்பர் 2019

கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 1

தமிழ் மலர் - 30.12.2019

தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது தப்பு. தவறுகள் செய்வது மனித இயல்பு. ஆனால் தெரிந்தே செய்வது மனிதத் தன்மை அல்ல. மன்னிக்க முடியாத விகாரத் தன்மை அல்ல. வக்கிரத் தன்மை. மன்னிக்கவும்.

கோலா தெர்லாவிலும் அது தான் நடந்து இருக்கிறது. தெரிந்தே தப்புகள் செய்து இருக்கிறார்கள். தவறு செய்வதற்கு முன்னால் யோசித்துப் பார்த்து இருக்க வேண்டும். 50-க்கு 50 என்கிற முறையில் அமலாக்க அதிகாரிகள் செயல்பட்டு இருக்க வேண்டும். 



எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பண்ணை அழிப்பு வேலைகளைச் செய்து இருக்கக் கூடாது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மறந்து இருக்கவும் கூடாது. பெருவாரியான மக்களின் வசை மாரிகளில் மாட்டிக் கொண்டு வாடி வதங்கவும் கூடாது.

சுமுகமாய்த் தீர்த்து இருக்க வேண்டிய விசயம். தூய்மைக் கேட்டுப் பண்ணைகள் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு இந்த 60 பேருடைய நிலத்தில் கை வைத்தது நியாயமாகப் படவில்லை.

அதிகாரப் பலம் இருக்கிறது என்று ஒரு சிறுபான்மை இனத்தைப் பழி வாங்கி இருக்கக் கூடாது என்றும் சொல்லலாம். என்ன செய்வது. வெள்ளம் அணை கடந்து போய் விட்டது. பேசி பிரயோசனம் இல்லை. 



வேறு ஏதாவது ஒரு மாற்று வழியை உடனடியாகக் காண வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு சரியான தீர்வு.

பண்ணை அழிப்பு விசயத்தில் பெரிய தப்பு என்ன தெரியுங்களா. என்ன செய்ய முடியும் என்கிற ஓர் இறுமாப்புத் தனம். அந்த மாதிரி அவர்கள் செய்து இருக்கவே கூடாது. இரு தரப்பும் கலந்து ஆலோசித்து ஒரு தீர்க்கமான ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் முடி இல்லாத தமிழர்களின் தலையில் மொட்டை அடிப்பது போல உள்ளது. இது ஒரு வகையில் இனவாதமே.



கோலா தெர்லாவில் நடந்த பண்ணை அழிப்பு விசயத்தில் இனவாதம் என்பது இச்சாட் ஆறு போல சிணுங்கிக் கொண்டு போவது நன்றாகவே தெரிகிறது. காரணங்களைப் பின்னர் சொல்கிறேன்.

கேமரன் மலையில் மொத்தம் 123 ஆறுகள் உள்ளன. எத்தனை ஆறுகள். 123 ஆறுகள். இவற்றில் 15 ஆறுகள் தான் ஆரோக்கிய நிலையில் உள்ளன. Regional Environment Awareness Cameron Highlands (REACH) எனும் கேமரன் மலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் 2017-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

(சான்று: https://www.nst.com.my/news/exclusive/2017/04/231620/three-camerons-rivers-declared-dead)

கேமரன் மலையில் உள்ள ஆறுகளை 5 வகைகளாகப் பிரித்து இருக்கிறார்கள்.



Class I (முதல் தகுதி); Class II (இரண்டாம் தகுதி); Class III (மூன்றாம் தகுதி); Class IV (நான்காம் தகுதி); Class V (ஐந்தாம் தகுதி).

கேமரன் மலையில் உள்ள ஆறுகளில் மூன்று ஆறுகளை ஐந்தாம் தகுதியில் சேர்த்து இருக்கிறார்கள். திரிங்காப் ஆறு (Sungai Tringkap), இச்சாட் ஆறு (Sungai Icat); பாராங் ஆறு (Sungai Parang). இதில் பாராங் ஆறு, தானா ராத்தா நகரத்திற்கும் ஹாபு சிறுநகரத்திற்கும் அருகில் ஓடுகிறது.

தூய்மைக் கேட்டால் மிக மிக மோசமாகப் பாதிக்கப் பட்டது திரிங்காப் ஆறு. அந்த ஆற்றுக்கு வாய் இருந்தால் என்னைக் கொல்ல வேண்டாம் என்று சத்தம் போட்டுக் கத்தி இருக்கும்.



அடுத்து பாதிக்கப்பட்டு வருவது பெர்த்தாம் ஆறு (Sungai Bertam). இது நான்காம் தகுதி பெற்ற ஆறு. கேமரன் மலையில் உள்ள முக்கியமான மூன்று ஆறுகளில் இதுவும் ஒன்று. செத்துக் கொண்டு வரும் ஆறுகளில் ஒன்று என வர்ணிக்கிறார்கள். இதைப் பற்றி யூடியூப்பில் ஒரு காணொலி உள்ளது.

அதன் முகவரி: https://www.youtube.com/watch?v=aJptrZoVdoA

போய்ப் பாருங்கள். இந்த ஆறு செத்துக் கொண்டு வருவதற்கு மூல காரணம் விவசாயம் அல்ல. கட்டடங்கள். நூற்றுக் கணக்கான கட்டடங்கள். அந்தக் கட்டடங்களில் இருந்து தூக்கி வீசப்படும் குப்பைகள்.

பெர்த்தாம் ஆறு 2031 மீட்டர் உயரத்தில் பிரிஞ்சாங் மலையில் உற்பத்தி ஆகிறது. அதற்கு முன்னர், மென்சுன் பள்ளத்தாக்கு (Mensun Valley); உலு பெர்த்தாம் வனக் காப்பகம் (Hulu Bertam Forest Reserve); ஆகிய மலைப் பகுதிகளில் இருந்து பல சிற்றோடைகள் வருகின்றன. அவை பெர்த்தாம் ஆற்றுடன் கலக்கின்றன. இந்தப் பெர்த்தாம் ஆறு, பூரோங் ஆற்றுடன் (Sungai Burung) கலக்கிறது.



பெர்த்தாம் ஆறு மக்கள் வாழும் பகுதிக்கு வந்த 2 கிலோ மீட்டரில் ஓர் அழுக்குச் சாக்கடையாக மாறுகிறது. அதற்குக் காரணம் மேம்பாட்டுத் திட்டங்கள்; விவசாய நடவடிக்கைகள் (Development Projects and Agricultural Activities).

கடும் மழை பெய்தால் வீடுகளில் உள்ள மலக்கூடக் கழிவுநீர் ஆற்றில் பாய்கிறது. அதே நேரத்தில் அங்கு வாழும் மக்களும் சும்மா இல்லை. திடமான, திரவமான கழிவுப் பொருட்களையும் மூட்டைக் கட்டி ஆற்றில் கொட்டுகின்றனர். எவன் எக்கேடு கெட்டால் என்ன; என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்கிற ஓர் அசட்டலான சுயநல நினைப்பு.

பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் (Pesticide and Fertilisers) போன்றவற்றில் ஆக்ஸிஜன் (Oxygen) எனும் உயிர்க் காற்றைக் குறைக்கும் நைட்ரிக் அமில உப்பு (Nitrate) உள்ளது. 



இந்த நைட்ரிக் அமில உப்புப் பொருட்கள், விவசாயப் பண்ணை மண்ணில் இருந்து ஆறுக்குள் கலக்கிறது. ஏற்கனவே கடுமையான சூழ்நிலை. அதில் இந்த உப்பு மேலும் நிலைமையை மோசமாக்கி விடுகிறது.

இவற்றால் பெர்த்தாம் ஆறு மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கேமரன் மலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே எச்சரிக்கை செய்து விட்டார்கள்.

(சான்று: https://www.nst.com.my/news/exclusive/2017/04/231620/three-camerons-rivers-declared-dead)

அது மட்டும் அல்ல. இந்த பெர்த்தாம் ஆற்றின் நீர் தான், பாரிட் (Parit Falls); ராபின்சன் (Robinson Falls) நீர்வீழ்ச்சிகளில் போய்ச் சேர்கிறது. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். 



பார்ப்பதற்குத் தெளிந்த நீரோடை நீர் மாதிரி இருக்கும். ஆனால் அந்த நீரில் நச்சு கலந்து இருப்பது கண்களுக்குத் தெரிவது இல்லை. நீர்வீழ்ச்சிகளில் குளிப்பவர்களுக்கும் தெரிவது இல்லை. சந்தோஷமாகக் குளித்துவிட்டுப் போகிறார்கள். இந்தத் தகவலைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விசயத்தில் உள்ளூர் அமலாக்க அதிகாரிகள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வது இல்லை என்று கேமரன் மலை விழிப்புணர்வு மையம் கவலை கொள்கிறது. புரியும் என்று நினைக்கிறேன். உள்ளங்கை புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை.

2015-ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் பூச்சிக்கொல்லி செயல்பாட்டு வலையமைப்பு

(Pesticide Action Network Asia and the Pacific - PANAP) ஓர் எச்சரிக்கை செய்தது. 



அதாவது கேமரன் மலை ஆறுகளில் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான் (Endosulfan), எட்ரின் கெத்தோன் (Edrine Ketone), அல்டிரின் (Aldrin); Dichloro Diphenyl Dichloro Ethylene (DDE) போன்ற நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.

(http://pan-international.org/release/world-environment-day-2015-pan-groups-renew-call-to-protect-children-from-hazardous-pesticides/)

கோலா தெர்லாவில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று கோலா தெர்லா ஆறு (Sungai Kuala Terla). பெரிய ஆறு. முக்கியமான ஆறு. கேமரன் மலை வாழ் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றின் நீரைத் தேக்கி, நீர்த் தேக்கம் செய்து, நீரைச் சுத்தம் செய்து விநியோகம் செய்கிறார்கள்.

மற்றொன்று இச்சாட் ஆறு (Sungai Ichat). சின்ன ஆறு. இந்த ஆறு கோலா தெர்லா ஆற்றில் கலக்கிறது. இந்த இச்சாட் ஆறு, கோலா தெர்லா ஆற்றில் கலப்பதற்கு முன்னதாகவே நீர்ப்பிடிப்பு இடம் உள்ளது. இச்சாட் ஆற்றுக்கும் நீர்ப்பிடிப்பு இடத்திற்கும் சம்பந்தமே இல்லை. 



நீர்ப்பிடிப்பு இடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில், ஓர் ஒதுக்குப் புறமான இடம். கடந்த 50 ஆண்டு காலமாகப் தமிழர்கள் பயிர் செய்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைக் கேட்டை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி அவர்களின் பண்ணைகளை இப்போது அழித்து இருக்கிறார்கள்.

அப்பாவுக்கு வயிற்று வலி. அதனால் அம்மாவின் பல்லைப் பிடுங்கினார்களாம். கதை எப்படி இருக்கு. அந்த மாதிரி தான் கோலா தெர்லாவிலும் நடந்து உள்ளது.

சட்டவிரோதமாகப் பயிர் செய்தார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னர் கோலா தெர்லாவில் இருந்து இரண்டரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள காடுகளை அழித்து விவசாயம் செய்து இருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். 1960- 1970-களில் நடந்த விசயம்.

அதற்காக கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் இருந்து தற்காலிக நில உரிமத்தைப் பெற்று (Temporary Occupation Licence - TOL) உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் உரிமத்தைப் புதுப்பித்து வந்து உள்ளனர். தற்காலிக நில உரிமத்திற்கான கட்டணத்தைத் தவணை தவறாமல் கட்டி வந்து இருக்கின்றனர்.

சென்ற 2018 ஆண்டு வரை நிலவரியை மாவட்ட இலாகாவில் முறையாகக் கட்டி இருக்கிறார்கள். அதற்கான அதிகாரப்பூர்வமான ரசீதுகளும் அவர்களிடம் உள்ளன.

இப்படி ஓர் அத்தாட்சி, ஆதாரம், சான்றுகள் அவர்களிடம் இருக்கும் போது எதை வைத்துக் கொண்டு பண்ணை அழிப்பு வக்கிரமத்தில் இறங்கினார்கள்.

அந்தத் கோலா தெர்லா தமிழர்கள் மட்டும் தான் மேலிடத்தின் பார்வைக்குத் தெரிந்ததா? செய்வதைச் செய்துவிட்டு பற்பல சால்சாப்புகள் சொல்வது சரியா? செய்த தவறுகளுக்கு பற்பல காரணங்களைச் சொல்லி மடைமாற்றம் செய்வது சரியா?

பகாங் மாநில அரசாங்கம் செய்தது சரியா? இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்போம்.

(தொடரும்)