மலாயா இந்தியர்களின் பான் பான் அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயா இந்தியர்களின் பான் பான் அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூன் 2020

மலாயா இந்தியர்களின் பான் பான் அரசு

பான் பான் பேரரசு. மலாயாவின் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை 1700 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சி செய்த இந்தியர்களின் அரசு. இந்து மதம் சார்ந்த பேரரசு. 



இது ஒரு சினிமாக் கதை அல்ல. ஸ்ரீ விஜயம் எங்கள் பாட்டன் சொத்து என்று வெட்கம் இல்லாமல் வீரவசனம் பேசுபவர்களின் கற்பனைக் கதை அல்ல. அல்வா அதிரசம் எல்லாம் எங்கள் பாட்டி சுட்ட வடை என்று வெட்டித் தனமாக விமர்சனம் பேசுபவர்களின் கரிசல் காட்டுக் கதையும் அல்ல. மரவள்ளிக் கிழங்கையும் ஆற்று மீனையும் சுட்டுப் பொசுக்கிச் சாப்பிட்டவர்கள் மறந்து போன கதையும் அல்ல. உண்மையாக நடந்த ஒரு வரலாற்றுக் கதை.

புத்த மதம் வருவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே தென்கிழக்காசியாவில் பல பகுதிகளை ஆட்சி செய்து ஆலாபனைகள் செய்து உள்ளன. அந்தக் காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்கு ஆசியாவையே இந்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்பது சிலர் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கசப்பான உண்மையாக இருக்கலாம். 




பான் பான் அரசு மாமாங்கங்கள் பல தாண்டி மலாயா மைந்தர்களின் கதைகளில் போய் முடிகிறது. பான் பான் (Pan Pan) எனும் இந்திய அரசின்  கதை, நெருடல் வருடல் இல்லாத நேர்த்தியான கதை.

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்தான். கங்கா நகரத்தின் மீது படை எடுத்தான். கோத்தா கெலாங்கி மீது படை எடுத்தான். இலங்காசுகத்தின் மீது படை எடுத்தான். உண்மை. மார்தட்டி பெருமை பேசுகிறோம். மலேசியா முழுமைக்கும் ‘ரோட் ஷோ’ போட்டு ஊர்க்கோலம் போகிறோம். நல்லது.

ஆனால் அதே அந்த மலாயாவில் இருந்த இந்திய அரசுகள் எல்லாவற்றையும் அழித்து ஒழித்து இல்லாமல் ஆக்கிவிட்டுச் சென்றான் என்பதை நினைத்துப் பார்க்கிறோமா. 




இராஜேந்திர சோழன் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் இருந்தால் இப்போதைய சந்ததியினர் அஞ்சுக்கும் பத்தும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

நான் சொல்லவில்லை. பலரும் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். என்ன செய்வது. மலாயா இந்தியர்கள் வாங்கி வந்த வரம். இனிவரும் காலங்களில் இராஜேந்திர சோழன் பெருமையைத் தோலில் சுமந்து தோப்புக் கரணம் போட வேண்டாம் என்று எவரும் சொல்ல வேண்டாம். ஓர் அசலான உண்மையைத் தெரிந்து கொண்டாலே போதும்.

Pan Pan or Panpan is a lost small Hindu Kingdom believed to have existed around the 3rd to 7th Century CE. It is believed to have been located on the east coast of the Malay peninsula, with opinion varying from somewhere in Kelantan or Terengganu, Malaysia.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Pan_Pan_(kingdom)

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)




மலாயா வரலாற்றில் மறக்க முடியாதவர்களின் பட்டியலில் மலாயா இந்தியர்கள் முதல் இடத்தில் இருந்து இருக்கிறார்கள். இந்த உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டி இருக்கிறது. மலாயா இந்தியர்கள் என்றுதான் சொல்கிறேன். மலேசிய இந்தியர்கள் என்று சொல்லவில்லை.

தென்கிழக்காசிய வரலாற்றில் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் காலத்திற்கும் மேலாக மலாயா இந்தியர்களின் வரலாறு ஆழமாய்த் தடம் பதித்து உள்ளது. அவர்களின் வரலாறுகளை மீட்டு எடுப்போம். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டுச் செல்வோம். அதுவே நம்முடைய இனம் சார்ந்த நோக்கமாக இருக்கட்டும்.

இன்னொரு பக்கம் பாருங்கள். இந்தோனேசியாவிலும் சரி; தாய்லாந்திலும் சரி; தடம் பதித்துச் சென்ற இந்தியர்களின் வரலாறுகளை அந்த நாட்டு மக்களே தோண்டி எடுத்துப் போற்றிப் புகழ்கிறார்கள். உச்சி முகர்ந்து பார்க்கிறார்கள். தலைப்பா கட்டி தண்டோரா போடுகிறார்கள்




மற்ற சில இடங்களில் அப்படியா நடக்கிறது. இல்லையே. புதைந்து கிடக்கும் இந்திய வரலாறுகளைத் தோண்டி ஒன்றும் எடுக்க வேண்டாம். மண்ணுக்குள் அப்படியே கிடந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் கண்ணுக்குத் தெரிகிற தடய விடயங்களை மட்டும் அழிக்காமல் குத்திக் குதறாமல் இருந்தாலே போதும். பெரிய புண்ணியம்.

பான் பான் எனும் சொல்லில் இருந்து தான் பான் தான் நீ (Pan tan i); பட்டாணி (Pattani) எனும் பெயர்கள் தோன்றின என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகச் சொல்கின்றனர். சுங்கை பட்டாணி நகரத்திற்கும் அப்படித் தான் பெயர் வந்தது.

கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. 




வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 300-ஆம் ஆண்டுகள். ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயாவில் ஓர் இந்திய அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம். உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும்.

ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. தெரியும் தானே. ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன இந்தியர்களின் ரகசியங்களை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் இந்திய அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

(சான்று: https://www.amazon.com/Ancient-Indian-History-Civilization-Sailendra/dp/8122411983 - Ancient Indian History and Civilization; Paperback – 1999; By Sailendra Nath Sen; Pg: 521) 




கங்கா நகரத்திற்கு அடுத்து மலாயாவில் தோன்றிய மற்றோர் இந்துப் பேரரசு லங்காசுகம் (Langkasuka). இந்த லங்காசுகம் கெடா மாநிலத்தின் மேற்கு கரையில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் சன்னம் சன்னமாகத் தாய்லாந்தின் பட்டாணி மாநிலம் வரை பரந்து விரிந்து படர்ந்து போனது.

அன்றைய பர்மாவில் இருந்து குடியேறிய மோன் (Mon) குடிமக்கள் தான் லங்காசுகத்தைத் தோற்றுவித்தார்கள். முதலில் இந்துக்களாக லங்காசுகத்திற்கு வந்த இந்த மோன் மக்கள் பின்னர் புத்த மதத்தைத் தழுவினர். இதுவும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு வரலாற்றுப் படிவம்.

ஒரு செருகல். இந்துப் பேரரசு என்று தான் சொல்கிறேன். இந்தியப் பேரரசு என்று சொல்லவில்லை. ஏன் என்றால் பர்மாவில் இருந்து வந்த மோன் குடிமக்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். 




இந்த மோன் இந்துக்கள் தான் பின்னர் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார்கள். ஆகவே லங்காசுகத்தைத் தோற்றுவித்தவர்கள் மோன் இந்துக்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

லங்காசுகத்தைச் சீனா நாட்டு வணிகர்கள் டுன்சுன் (Dunxun) என்று அழைத்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் சீனாவை லியாங் அரசப் பரம்பரையினர் (Liang Dynasty) ஆட்சி செய்தனர்.

கி.பி. 539-ஆம் ஆண்டு லங்காசுக அரசாங்கம் ஒரு தூதுக் குழுவையும் சீனாவிற்கு அனுப்பி வைத்து இருக்கிறது. சீன வரலாற்று ஏடுகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. சரி.

அதற்கும் அடுத்து மூன்றாவதாக வந்தது தான் பான் பான் பேரரசு. இந்தப் பான் பான் அரசிற்குப் பின்னர் நான்காவதாக வந்தது தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு. இந்தத் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றி 09.08.2017 தமிழ் மலர் நாளிதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. படித்துப் பாருங்கள்.




பான் பான் பேரரசின் தலைநகரம் சையா (Chaiya). இந்த நகரம் இன்னும் தாய்லாந்தில் இருக்கிறது. கிரா குறுக்குநிலம் (Kra Isthmus) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாய்லாந்தையும் மலாயாவையும் பிரிக்கும் ஒரு குறுக்குநிலம்.

அங்குதான் கிழக்குக் கரை பக்கமாக இந்தச் சையா நகரம் இருக்கிறது. இந்த நகரம் தான் முன்பு காலத்தில் பான் பான் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கி இருக்கிறது.

(சான்று: Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 130–131. ISBN 981-4155-67-5.)

1920-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் அகழாய்வு செய்தார்கள். மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் கட்டடச் சிதைவுகள்; சிலைச் சிதைவுகள், கரும்பாறைச் சிதைவுகள்; சிலை பீடங்கள்; கோயில் கருவறைத் தூண்கள் கிடைத்தன. 




அந்தச் சிதைவுகள் மூலமாகத் தான் பான் பான் பேரரசு எனும் ஓர் அரசு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. அப்படி ஓர் இந்திய அரசு இருந்தது எனும் செய்தியும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

மலாயா வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லுக்கு மிகச் சரியானவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிய வரும்.

அந்த வரலாற்றுப் பார்வையில் மலாயாவுக்கு வந்த இந்தியர்களின் அடிச்சுவடிகளும் அழகாய்த் தெரிகின்றன. இது உண்மையிலும் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது.

தாய்லாந்தில் இருக்கும் நாக்கோன் சி தாமராட் மாவட்டத்தில் சிச்சோன் (Sichon), தா சாலா (Tha Sala) எனும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தொல் பொருள் சிதைவு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது பான் பான் காலத்துச் சிதைவுகள். 




பெரும்பாலானவை இந்துச் சரணாலயங்கள். இந்தச் சரணாலயங்களில் காணப்பட்ட சிலைகள் அனைத்துமே சிவபெருமான் சிலைகளின் சிதைவுகள் ஆகும்.

(சான்று: https://southeastasiankingdoms.wordpress.com/tag/panpan-kingdom/ - Vestiges of former Hindu sanctuaries, mostly Shivaite, built from the fifth to the seventh centuries.)

கி.பி. 424; கி.பி. 453-ஆம் ஆண்டுகளில் பான் பான் அரசு சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்து இருக்கிறது. அப்போது பான் பான் அரசை கவுந்தய்யா II (Kaundinya II) எனும் இந்து அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இந்த அரசர் தான் பூனான் சாம்ராஜ்யத்தில் இந்து மதத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் செய்து இருக்கிறார். பூனான் சாம்ராஜ்யம் என்பது கம்போடியாவைச் சார்ந்த ஒரு பேரரசாகும்.

(சான்று: Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.)




சீனாவிற்குத் தூதுக் குழுக்களை அனுப்பிய பிறகு பான் பான் அரசு திறை செலுத்தத் தொடங்கியது.

கி.பி. 529; கி.பி. 533; கி.பி. 534; கி.பி. 535; கி.பி. 571-ஆம் ஆண்டுகளில் திறை செலுத்தப் பட்டது. அந்தச் சமயத்தில் லியாங் (Liang dynasty) எனும் அரசப் பரம்பரையினர் சீனாவை ஆட்சி செய்து வந்தனர்.

பின்னர் 50 ஆண்டுகள் கழித்து தாங் அரசப் பரம்பரையினர் (Tang dynasty) ஆட்சிக்கு வந்தனர். அவர்களுக்கும் பான் பான் அரசு கப்பம் கட்டி இருக்கிறது.

(Albert E. Dien, Six Dynasties Civilization. Yale University Press, 2007 ISBN 0-300-07404-2. Partial text on Google Books. P. 190.)

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பான் பான் அரசு நல்லபடியாகப் போய்க் கொண்டு இருந்தது. இருந்தாலும் பான் பான் அரசின் செல்வச் செழிப்பு கீழே இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கண்களை ரொம்ப நாட்களாக உறுத்தி வந்தது.

அப்புறம் என்ன. ஒரு நல்ல நாள் பார்த்து பான் பான் அரசைக் கொத்திக் கொண்டு போய் விட்டது. அப்போது ஸ்ரீ விஜய பேரரசின் அரசராக தர்மசேது (Dharmasetu) என்பவர் இருந்தார்.

இது நடந்தது கி.பி. 775-ஆம் ஆண்டில். அதோடு பான் பான் அரசாட்சியும் ஒரு முடிவிற்கு வந்தது. இப்படித் தான் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் சொந்தமான நில புலனங்களும் சொத்துப் பத்துகளும் காலாவதியாகிப் போயின. எல்லாம் அடிபிடி கோளாற்றினால் ஏற்பட்ட தவிடு பொடிகள்.

இப்போது இங்கே மட்டும் என்னவாம். நமக்குள் அடித்துக் கொள்ளவில்லையா. எல்லாம் தொட்டால் சிணுங்கி கேஸ் தான். இப்போது நடக்கிற மாதிரி தான் அப்போதும் நடந்து இருக்கிறது. இதில் என்ன பெரிய பேச்சு வேண்டிக் கிடக்கிறது. இந்தியர்களுக்கே சொந்தமான பரம்பரை புத்தி அவர்களை விட்டுப் போய் விடுமா என்ன.

பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் மலாயாவின் வரலாறு முடியவில்லை. ஹங் லீ போ காலத்தில் தொடங்கி மன்சூர் ஷா காலத்தில் முடியவில்லை. மலையூர் காலத்தில் தொடங்கி மஜபாகித் காலத்திலும் முடியவில்லை.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். வரலாற்று உண்மைகளைத் தேடிப் பிடித்து வரிந்து கட்டி எழுதுவதால் நம் மீது வழக்குப் பிணக்குகள் வரலாம். சொல்ல முடியாது. உண்மையைத் தானே எழுதுகிறோம். அதுவும் வலுவான சான்றுகளுடன் எழுதுகிறோம். சரிங்களா.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
09.06.2020