வணக்கம் கூறும் தமிழர் இயல்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணக்கம் கூறும் தமிழர் இயல்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜூலை 2017

வணக்கம் கூறும் தமிழர் இயல்பு

எப்போது மனிதன் பேசக் கற்றுக் கொண்டானோ அப்போது இருந்தே வணக்கம் சொல்லும் பழக்கம் அவனுடைய வாழ்க்கையில் இணைந்து நனைந்து கனிந்து விட்டது. 



வணக்கம் கூறுவது என்பது வாழ்வியல் இயல்பு. அது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துப் போன அன்றாட இயல்பு.

உலகவாழ் மக்கள் அவர்களின் மொழிக்கும் அவர்களின் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு வணக்கம் சொல்லும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். 

மலேசியாவில் நம் சகோதர மலாய் இன மக்கள் ஒருவரைக் காலையில் பார்த்ததும் ‘செலாமாட் பாகி’ (Selamat Pagi);  மதியத்தில் ’செலாமாட் தெங்கா ஹரி’ (Selamat Tengahari); இரவில் ‘செலாமாட் மாலாம்’ (Selamat Malam) என்று சொல்கின்றனர். 


அது அவர்களின் இயல்பு. அது அவர்களுக்கு உரிய மொழி, பண்பாட்டு அடிப்படைச் செயல். அதை அப்படியே தமிழிலில் பார்த்தால் ‘நலம் மிக்க காலை நேரம்’, ‘நலம் மிக்க நண்பகல் நேரம்,’ ‘நலம் மிக்க மாலை நேரம்’ என்று பொருள் படுகின்றன. சரி.

அந்தப் பக்கம் பார்த்தால் ஆங்கிலேயர்கள் ‘குட் மார்னிங்’ (Good morning), ‘குட் ஆப்டர்நூன்’ (Good afternoon), ‘குட் ஈவ்னிங்’ (Good evening) என்று சொல்கிறார்கள். அது ஆங்கிலேயர்களின் இயல்பு. சரி.

இருந்தாலும் இன்றைய நாளில் தமிழர்கள் வணக்கம் சொல்லும் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு கலந்துவிட்டது. 



 காலையில் சந்திக்கும் போது ‘காலை வணக்கம்’; மாலையில் சந்திக்கும் போது ‘மாலை வணக்கம்’; இரவில் சந்திக்கும் போது ‘இரவு வணக்கம்’ எனச் சொல்லும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். தப்பு என்று சொல்லவில்லை. அது நம் பண்பாடு அல்ல என்று சொல்ல வருகிறேன்.

அதாவது காலத்தை முன் வைத்து வணக்கம் சொல்வது நம் தமிழர்களின் மரபு அல்லஎன்று சொல்ல வருகிறேன். அது ஆங்கிலேயர்களின் மரபு. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

வணக்கம் என்னும் சொல்லைத் தமிழர்களாகிய நாம் பண்பாட்டுக் கலப்பு இல்லாமல் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் சொல்லாக ‘வணக்கம்’ அமைந்து இருக்கிறது.

மற்ற பண்பாடுகளுடன் கலந்துவிட்ட ‘காலை வணக்கம்’, ‘நண்பகல் வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ போன்ற சொல் தொடர்கள் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டிற்கு முரண் பட்டவையாக உள்ளன என்பது என் கருத்து. 
 



 ஆக வணக்கம் என்பதை வணக்கம் என்று சொல்வதே சாலப் பொருத்தம். சாலவும் சிறப்பு.

உடனடியாக மாற்றுங்கள் என்று சொல்லவில்லை. காலப் போக்கில் சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டலாமே. யாரையும் வற்புறுத்தவில்லை. ஏன் என்றால் பழக்க தோஷம் என்னையும் விடவில்லை. 

சில வேளைகளில் நானும் காலை வணக்கம் கலந்த படச் செய்திகளைப் பகர்வதும் உண்டு. பகிர்வதும் உண்டு. சன்னம் சன்னமாய் மாற்றிக் காட்டுவோம்.