இலங்கை மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 அக்டோபர் 2020

இலங்கை மலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள்

தமிழ் மலர் - 03.10.2020

மலாயா கித்தா காடுகள்; இலங்கை தேயிலைக் காடுகள்; இந்தோனேசியா காண்டா காடுகள்; பசிபிக் பவளத் காடுகள்; கரிபியன் கரும்புக் காடுகள்; இந்தக் காடுகளிலும் இந்தத் தீவுகளிலும் ஆங்கிலேயர்கள் ஏகபோகமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களின் அந்தச் சொகுசு வாழ்க்கைக்குத் தீபம் ஏற்றி தூபம் காட்டியவர்கள் யார் தெரியுங்களா. சாட்சாத் கறுப்புத் தோல் கங்காணிகள்.

அலைகடல் தாண்டி ஆள் பிடித்து வருவதற்கு மலாயாவில் கங்காணி முறை என்று பெயர். அங்கே இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று பெயர். இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இரண்டுமே ஆள்கடத்தும் ஜீபூம்பா சதிராட்டங்கள்.

எருமை மாட்டின் மீது கொக்கு உட்கார்ந்தால் எருமைக்கு லாபம். கொக்கின் மீது எருமை மாடு உட்கார்ந்தாலும் எருமைக்குத் தான் லாபம். பாவம் கொக்கு!

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக் கூலி முறையால் இலங்கைக்குத் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலை. அதனால் மலாயாவில் பயன்படுத்தப்பட்ட கங்காணி முறையை இலங்கையிலும் கொண்டு வந்தார்கள்.

முதலில் மலாயாவில் கங்காணி முறையை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள். பக்குவமாக இருந்தது. பர்ஸ்ட் கிலாஸ் என்று டிக்கெட் கொடுத்தார்கள். அதன் பின்னர் இலங்கையிலும் அந்த முறையை அமலுக்கு கொண்டு வந்தார்கள்.

இலங்கையில் கங்காணி முறை அமல்படுத்தப் பட்டாலும் அதனை ஒப்பந்தக் கூலி முறை என்றே அங்கே தொடர்ந்து அழைத்தார்கள். பின்னர் காலத்தில் அது ஒரு வழக்குச் சொல்லாகவும் மாறிப் போனது. ஆனால் உண்மையாகப் பார்த்தால் அது மலாயாவின் கங்காணி முறை தான்.

ஒரு முக்கியச் செய்தி. மறுபடியும் வாசிப்பது மலாயா சஞ்சிக்கூலிகள். ஒப்பந்தக் கூலி முறை என்பது வேறு. கங்காணி முறை என்பது வேறு. சரிங்களா.

ஒப்பந்தக் கூலி முறை என்றால் ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் நேரடியாகச் செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம். கங்காணி முறை அப்படி இல்லை. கங்காணி முறையில் கங்காணியே நேரடியாகக் களம் இறங்கி பட்டை தீட்டுவார். ஆசை ஆசையாய் ஆயிரம் வார்த்தைகளை அவிழ்த்து விடுவார். அப்படியே ஆட்களை அள்ளிக் கொண்டு வருவார். அது ஒரு வழக்கம்.

இருப்பினும் சஞ்சிக்கூலிகள் விசயத்தில் மூலகர்த்தாவாக இருந்தவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள் தான். அதை நாம் மறந்துவிடக் கூடாது.  தமிழர்களை முதன்முதலாக இலங்கைக்குத் தான் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

ஆனால் அலிபாபா குகைகளில் இருந்து தங்கப் பேழைகள் கிடைக்கும் என்று ஆங்கிலேயர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 100 விழுக்காட்டு வெற்றி.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா. சுரண்டும் கலைக்கு ஒரு பெரிய கலைக் களஞ்சியத்தையே எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள். சும்மா இருப்பார்களா. ஆக சஞ்சிக்கூலிகளின் முன்னோடிகள் யார் என்றால் அவர்கள் இலங்கையின் மலையகத் தமிழர்கள் தான். மலாயாத் தமிழர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் வாழ்ந்த ஏழைக் குடியானவர்கள், இலங்கைக்குப் போய் வேலை செய்ய விரும்பினால் ஓர் ஒப்பந்தப் பத்திரத்தில் ஒரு கையெழுத்துப் போட்டால் போதும். அதாவது ஒரே ஒரு கைநாட்டு.

ஒப்பந்தக் காலம் முடியும் வரையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது. சத்தியம் செய்ய வேண்டும். மீறினால் முதலாளி தண்டனை கொடுப்பார். ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு கைநாட்டு. ஒரு தலையாட்டு. அதுவே ஓர் ஒப்பந்தம். சொல்வதற்கு எல்லாம் சரிங்க சாமி என்று தலையை ஆட்ட வேண்டும். ஒரு வாரத்தில் கப்பல் பங்க் டிக்கெட் கிடைத்துவிடும்.

இருந்தாலும் பாருங்கள். வேலைக்குப் போன இடங்களில் நிறைய அநியாயங்கள். நிறைய அக்கிரமங்கள். சகிக்க முடியாமல் சிலர் திருட்டுத் தனமாகத் தாயகத்திற்குத் திரும்பி ஓடிப் போய் இருக்கிறார்கள். இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களிடம் அது ஒரு வழக்கமாகின் போனது.

இரவோடு இரவாகத் தப்பித்துக் காட்டுப் பாதைகளில் நடந்தே போய் இருக்கிறார்கள். போகும் வழியில் யானைகளைப் பார்த்து இருப்பார்கள். புலிகளைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக பயந்து இருக்க மாட்டார்கள். ஏன் தெரியுங்களா.

கங்காணி, சின்ன துரை, பெரிய துரை என்று பெரிய பெரிய கொடிய மிருகங்களை எல்லாம் பார்த்தவர்கள். பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன அவர்களுக்கு நிஜப் புலிகள் எல்லாம் என்ன. பூனை மாதிரி தெரிந்து இருக்கலாம்.

காட்டு மிருகங்களைப் பொருத்த வரையில் அவை எல்லாம் அவர்களுக்கு திருநெல்வேலி அல்வாக்கள்! புலியும் அடித்து இருக்காது. கிலியும் அடித்து இருக்காது. செத்தால் இப்படியே செத்துப் போகலாம் எனும் விரக்தியில் அவர்கள் ஓடிப் போய் இருக்கலாம்.

ஆனால் இந்தப் பக்கம் மலாயாத் தமிழர்களால் அப்படி எல்லாம் ஒன்றும் தலைகாட்ட முடியவில்லை.தப்பித்து ஓட முடியவில்லை. மீண்டும் கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போவது என்பது எல்லாம் என்ன லேசு பட்ட காரியமா. நடக்கிற காரியமா. சொல்லுங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ, வாங்கி வந்த வரம் என்று எஞ்சிய நாட்களை எண்ணிப் பொருமி அழுது தொலைத்து ஆர்ப்பரித்து இருக்க வேண்டும். 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வயல் காட்டு மண்ணையும்; மணல் வீட்டுத் திண்ணை மேட்டையும் நினைத்து நினைத்துப் புலம்பி இருக்க வேண்டும். ஆக வேதனைப் பட்டது தான் மிச்சம்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடி வந்த மலையகத் தொழிலாளர்களின் கதை வேறு. தோட்ட முதலாளி போலீஸில் புகார் செய்வார். தமிழ்நாட்டுக் கிராமத்தில் இருக்கும் காவல் துறையினர், தப்பி வந்த தொழிலாளர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்வார்கள். மீண்டும் அதே பழைய ராகம். அதே பல்லவி. பழைய பாசறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவார்கள்.

தப்பித்து வந்தாலும் வெள்ளைக்காரர்களின் குரங்குப் பிடி கழுகுப் பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி தப்பிப் போய் பிடிபட்டவர்களுக்கு கன்னா பின்னா கசையடிகள் காத்து நின்று ஆரத்தி எடுக்கும். காட்டு மரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கட்டிப் போடுவார்கள். எறும்பு முசுடுகளைப் பிடித்து வந்து கடிக்க வைப்பார்கள். கஞ்சித் தண்ணி கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். கால்களில் பாதங்களில் சூடு போடுவார்கள்.

அதுதான் ஏற்கனவே கைநாட்டு போட்டுக் கொடுத்தாச்சே. அப்புறம் எப்படி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லுங்கள். தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கைநாட்டு போட்டுக் கொடுத்தாச்சு. வெள்ளைக்காரன் சும்மா விடுவானா.

ரொட்டியில் பட்டர் தடவ கத்தியைத் தேடுகிறவன்; இந்த மாதிரி குற்றம் செய்தர்வர்களுக்குப் பட்டர் தடவாமல் சும்மா விடுவானா. அந்த மாத்ரி பட்டர் தடவும் வேலைகளை வெள்ளைக்காரர்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

செய்து கொடுக்கத் தான் கறுப்புக் கங்காணிகள் தயாராக இருந்தார்களே. அது போதுமே? எள் என்றதும் எண்ணெயாய் வடிந்து உருக ஆள் இருந்த வரையில் வெள்ளைக்காரர்களின் வேலைகள் நன்றாகவே நடந்து முடிந்தன.

இங்கிலாந்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று வீரவசனம் பேசியவர்கள் ஆங்கிலேயர்கள். நாயைச் சுடுவது என்றாலும் தடவிக் கொடுத்து விட்டுத் தான் சுடுவோம் என்று பாளையங் கோட்டையில் மேஜர் பேனர்மேன் சொன்ன வசனங்கள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ்ப் பாட்டாளிகளுக்கு பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. கண்ணீர் விட்டு அழுத பாரதியார் தன்னுடைய பாடல்களில் இப்படி எழுதி இருக்கிறார்.

"கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!"

"நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!"


சரி. இங்கே இந்தப் பக்கம் பார்த்தால், மலாயா நாட்டில் தமிழர்களின் கண்ணீர்க் கதை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்கதையாய் நீண்டு போகின்றது. அந்த நீண்ட அத்தியாயத்தில் மலாயா தமிழர்கள் சிந்திய இரத்தம்; துடைத்த வியர்வை; இரைத்த தியாகம்; தூவிய அர்ப்பணிப்புகள் சொல்லில் மாளா.

இன்றைய இந்த மலையூர் மலாயா என்கிற நவீன உலகம் கம்பீரமாய் எழுந்து நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் பிடித்து அழகு பார்க்கின்றது. இவை வரலாறு சொல்லும் உண்மைகள். மலாயா தமிழர்களின் கட்டுமானத்தில் உருவான தோற்றங்கள். ஆக மலாயா தமிழர்களின் உண்மைகளும் உரிமைகளும் என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு விசயம். நாம் என்ன எழுதினாலும் அவற்றின் படிவங்கள் தேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தில் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப் படுகின்றன. தவிர இணையத்திலும் உடனுக்குடன் பதிந்து விடுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் சில பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்முடைய வாரிசுகள் அந்தப் படிவங்களை நிச்சயம் படிப்பார்கள். படிக்க வேண்டும்.

மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா மண்ணைத் தமிழர்கள் செம்மைப் படுத்தினார்கள். சாலைகளை அமைத்துக் கொடுத்தார்கள். கம்பிச் சடக்குகளில் ரயில் வண்டிகளை ஓட வைத்தார்கள் என்று நம்முடைய வாரிசுகள் பேசிக் கொள்வார்கள். பேசிக் கொள்ள வேண்டும்.

மலாயா தமிழர்களின் வரலாற்றுப் படிவங்கள் எதிர்காலத்தில் வலுவான சான்றுகளாக தடம் பிடிக்க வேண்டும். அதனால் நம் மூதாதையர்களைப் பற்றி இப்போதே எழுதி வைக்க வேண்டும். எழுதியவற்றை ஆவணப் படுத்தி வைக்க  வேண்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.10.2020