வாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 செப்டம்பர் 2017

வாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை

(பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வுப் பதிவு)

வாட்ஸ் அப் சமூகத்தளம் என்பது தகவல் பரிமாற்றத்தில் பல்வேறு வசதிகளைக் கொண்டது. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பற்பல வசதிகள் இருந்தாலும் பெண்களைத் தொல்லைப் படுத்தும் செயல்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.




உற்றார் உறவினர்கள், சுற்று வட்டங்கள், நண்பர்களை இணைக்கும் தளம் என அதற்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் இருக்கிறது. பெண்கள் வட்டாரத்திலும் வாட்ஸ் அப் பிரபலமானது. வெள்ளிடைமலை. ஆனாலும் அண்மைய காலங்களில் வாட்ஸ் அப்பில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

மற்ற வலைத் தளங்களைக் காட்டிலும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் மிக எளிதில் பரிமாறப் படுகின்றன. அதனால் யார் ஒருவர் ஒரு தகவலை உருவாக்கினார்; அந்தத் தகவல் எப்படி பரவியது என்பதைப் போலீசாரால் கூட சரியாகக் கண்டுபிடிக்க முடியாத ஓர் அவல நிலை. அதனால் பற்பல தவறான தகவல்கள் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.

வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைத் தளங்களில் ஒரு பெண் தன் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கு வேண்டாதவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். இல்லையா.

அவர்களில் யார் ஒருவர் வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவமானப் படுத்த முடியும். அவருடைய புகைப் படத்தை ஒரு சில ஒலி ஒளி காணொளிகளில் இணைத்து அவற்றை அப்படியே வாட்ஸ் அப்பில் பதிவு செய்து அசிங்கப் படுத்த முடியும்.

அதனால் அந்தப் பெண்ணின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறி ஆகின்றது... அதுவே பெண்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு.

*பெண்கள் என்ன செய்யலாம்*

எந்த ஒரு சமூக வலைத் தளமாக இருந்தாலும் சரி. முடிந்த வரையில் பெண்கள் தங்களின் அசல் புகைப் படங்களைப் பதிவேற்றம் செய்யவே கூடாது. மாற்றுப் போலியான படங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பேஸ்புக்கைப் பாருங்கள். காலையில் செய்த மேக்கப் கலைய விடாமல் இரவு படுக்கும் வரையில் செல்பி எடுத்து என்னையும் பார் என் அழகையும் பார் என்று அரங்கேற்றம் செய்து கொண்டு இருப்பார்கள் சில கிளியோபாட்ராவின் வாரிசுகள்.

அழகின் நினைப்பில் மிதக்கும் அவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்துகள் காத்துக் கொண்டே இருக்கின்றன. அது அவர்களுக்குத் தெரியுமா. புரியவில்லை.

வாட்ஸ் அப்-இல் நான் எனக்குத் தெரிந்தவர்களுடன் தானே தொடர்பில் இருக்கிறேன். அப்புறம் எப்படி பிரச்சினை வரும். எப்படி ஆபத்து வரும் என சிலர் கேட்கலாம். சரி.

வாட்ஸ் அப்-இல் உங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டுமே இணைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் உங்களின் கைப்பேசி எண்களை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். உங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரலாம். இல்லீங்களா.

நீங்கள் எந்தப் படத்தை Profile படமாக வைத்து இருக்கிறீர்கள்; என்னென்ன செய்திகளைப் பதிவு செய்கிறீர்கள்; எப்போது எல்லாம் வாட்ஸ் அப்பிற்குள் வருகிறீர்கள் போகிறீர்கள் என்பதை எல்லாம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

இவற்றில் இருந்து தப்ப ஒரே வழி தான் இருக்கிறது. உங்களின் வாட்ஸ் அப் Settings-களை மாற்ற வேண்டும். உங்களுடைய கைப்பேசியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே உங்களின் தனிப்பட்ட தகவல் தெரிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

அல்லது யாருக்குமே உங்களின் தனிப்பட்ட தகவல் தெரியாமல் செய்ய வேண்டும். அதற்கான வசதிகளை வாட்ஸ் அப்பில் இருக்கிறது அவற்றை முறையாகச் செயல் படுத்துங்கள்.

முடிந்த வரையில் உங்களின் அசல் புகைப்படம் மற்றும் நீங்கள் எந்தெந்த நேரங்களில் வாட்ஸ் அப் வருகிறீர்கள் போகிறீர்கள் என்பதை முற்றிலுமாக மறைப்பது நலம் பயக்கும்.

அடுத்து ஆண்கள் நிறைந்த வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதிலும் நிறைய பிரச்னைகள் உள்ளன. எனவே உங்களுக்குத் தெரியாத ஆண்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி விடுங்கள். அதுவே சிறப்பு.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் இருக்கும் குழுக்களில் மட்டுமே இணையுங்கள். நம்பிக்கையான தலைவர்கள் இருக்கும் குழுக்களில் இணையுங்கள்.

ஏன் என்றால் வாட்ஸ் அப் குழு மூலமாக உங்களின் விவரங்கள், உங்களின் தொலைபேசி எண்கள் போன்றவை கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத நபர்களுக்குப் போய்ச் சேரும் வாய்ப்புகள் உள்ளன. தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருதலைக் காதலில் தோல்வி அடையும் ஆண்கள் பலர். அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களைப் பழிவாங்க ரொம்ப நேரம் பிடிக்காது. அந்தப் பெண்களைக் கண்ட மாதிரி மிக மிக மோசமாக அவமானப் படுத்த முடியும். வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

எனவே உங்களுக்கு 100க்கு 100 நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படங்களைப் பகிருங்கள். மற்றவர்கள் எவரிடமும் உங்களின் புகைப்படங்களைப் பகிர்வு செய்ய வேண்டாம்.

வேலை வாய்ப்புகள், நேர்காணல்கள் பற்றிய தகவல்களைத் தருவதாகச் சொல்லும் இணையத் தளங்களை நம்பி உங்களின் புகைப் படங்களை இணைக்கவே இணைக்காதீர்கள்.

நாசம் செய்ய நினைக்கும் மோசக்கார ஆண்கள் பலர் நிறைந்த உலகில் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் இல்லை. அதை நினைவுபடுத்தவே இந்த நீண்ட பதிவு.