கோகினூர்_1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோகினூர்_1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 செப்டம்பர் 2009

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் -1 ( மறு பதிப்பு)

மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் கோகினூர் வைரம் மட்டும்தான்.


கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது. அதனை இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உரிமை கேட்கின்றன. பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்கள் ஏகபோகச் சொந்தம்  கொண்டாடுகின்றன. எங்க பாட்டன் சொத்து எங்க பாட்டிச்  சொத்து என்று சிலர் கட்சி கட்டுகிறார்கள். அருமையான சீரியல் நாடகம். இந்த நாடகத்தைப் பதினெட்டுப் பட்டி உலக நாடுகளும், டிக்கெட் வாங்காமல் முன் வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றன.


மகா அலெக்ஸாண்டர், கஜ்னி முகமது, ஜெங்கிஸ் கான், நாடிர் ஷா, பாபர் போன்ற மாபெரும் மண்ணாசைப் பிரியர்கள் எல்லாம் இந்தியா மீது படையெடுத்ததற்கு மூலகாரணம் இந்தக் கோகினூர் வைரம்தான். அழுத்தமாகச் சொன்னால், கொலை வாசம் வீசிய கோகினூர் வைரம். சும்மா அள்ளி விடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையைத் தவிர வேறொன்றும்தெரியாது. முதலில் படியுங்கள். அப்புறம்  சொல்லுங்கள்.

கோகினூர் வைரம் யாருக்குச் சொந்தம் ஆகிறதோ அவர் உலகத்தை ஆள்வார் எனும் அய்தீகம் இன்றும் புரையோடிக் கிடக்கிறது. என்ன அப்பேர்ப்பட்ட பெரிய அய்தீகம். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். இந்த வைரம் கிடைத்த பிறகுதானே ஆங்கிலேயர்கள் முக்கால்வாசி உலகத்தைத் தங்கள் பக்கம் வசப்படுத்திக் கொண்டார்கள்.
இதற்கு ஒரு சாபக்கேடும் இருப்பதாகக் கதை சொல்கிறார்கள். இதை வைத்திருக்கும் ஆண்கள் மௌனமாக இறந்து போவார்கள் அல்லது கண் குருடாகிப் போவார்கள். அவ்வளவுதான்!   பெண்களாக இருந்தால் அவர்களுடைய உறவுகள் சிதைந்தும் போகலாம். இதுதான் அந்தச் சாபம். இணையத்தில் இந்த மாதிரி கதை சொல்ல ஆள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. அப்புறம் என்ன! அதையும் கேட்டுப் பார்ப்போம்.

இதற்கு இங்கிலாந்து எலிசபெத் மகாராணியாரின் குடும்பத்தைச் சொல்லலாம். இப்போது கோகினூர் வைரம் அவர் தலையில்தானே இருக்கிறது. இளவரசி டயானா இறந்து போனார். இளவரசர் சார்ல்ஸ்-கமிலா காதல் விவகாரம். அவருடைய அக்காவின் விவாகரத்து. எலிசபெத் அரசியாரின் பெரியப்பா ஒர் அமெரிக்க நடிகையை மணந்து இங்கிலாந்து அரச முடியைத் தூக்கி வீசியது. விக்டோரியா மகாராணியாரின் காமக் களிபோகங்கள் வெளி யுலகத்திற்குத் தெரிய வந்தது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.


தெரிந்தும் ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி. ஆசை யாரை விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் விக்டோரியா மகாராணியார் சூட்டிக் கொண்ட கிரீடத்தின் தலையாய வைரம், இந்தக் கோகினூர் வைரம். வழிவழியாக வருகிறது. நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது.

கோகினூர் வைரம் உலகப் புகழ் பெற்ற உன்னதமான வைரம். இந்த வைரத்திற்காகப் பல பயங்கரமான போர்கள்நடந்துள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. பல கோட்டைகள் இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் வாயில்லா ஜ“வன்கள் அழிந்துள்ளன. பல்லாயிரம் அந்தப்புர பெண்கள், போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்க்கும் தீவனங்களாகத் தூக்கி வீசி இறைக்கப் பட்டனர். கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் தூக்கிப் பசியால் வாடித் திரியும் தெருநாய்களுக்குப் போட்ட கதைதான் அந்தப்புரத்து அழகிகளின் கதையும்! எல்லாம் கோகினூர் வைரத்தை அடைய வேண்டும் எனும் ஆதங்கத்தில் வந்தவை.

இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தப் போர் அட்டூழியங்களுக்கும் கோகினூர் வைரத்திற்கும் நேரடியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. மண்ணாசைப் பிடித்தவர்கள் செய்த கொடூரங்களுக்கு பாவம் கோகினூர் வைரம் என்ன செய்யும். அதைத்தான் நானும் கேட்கிறேன்.  பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

கோகினூர் வைரத்தின் அருமை பெருமைகளைப்பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால், அதன் வேதனையான பின்னணியைப் பற்றி கண்டிப்பாகக் கேள்விப் பட்டிருக்க முடியாது.பல கோடி ஆண்டுகள் பூமிக்குள்ளே புதைந்து கிடந்த கலைச் செல்வம் கோகினூர் வைரம். ஏறக்குறைய 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த கோல்கொன்டா நிலப்பகுதியில் கிடைக்கப் பெற்றது. வெகு காலமாக அதற்கு முகவரி இல்லை. அப்படிப்பட்ட ஒரு வைரம் இருப்பதாக யாருக்கும் தெரியாது. இருந்தாலும் பாருங்கள் வெளிநாட்டவர்   தெரிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காலத்து ஒற்றர்களைச் சும்மா சொல்லக்கூடாது.


கோல்கொன்டா என்ற பெயர் ஞாபகத்திற்கு வரலாம். 1950-60களில் ரேடியோ மலாயாவில் வாரத்திற்கு ஒருமுறை நேயர் விருப்பம் வரும். அதைக் கேட்க தோட்டமே திரண்டு நிற்கும். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அது ஒரு கனாக்காலம். அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும். அந்தக் கோல்கொன்டா தோட்டத்திற்கு இந்தியாவின் கோல்கொன்டா சாம்ராஜ்யத்தின் பெயர் அப்போது வைக்கப் பெற்றது. நான் பிறந்து வளர்ந்த டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும்.

இப்போது அந்தக் கோல்கொன்டா தோட்டம் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அந்த அளவுக்கு பல தோட்டங்கள் அத்திம்மேடுகளாகி விட்டன. கதைக்கு வருகிறேன்.

ஒரு காலத்தில் கோல்கொன்டா சாம்ராஜ்யம் பேர் போனது. ஹைதராபாத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அந்தச் சாம்ராஜ்யத்தின் கால வடுக்கள் இன்னும் மகிமை பாடுகின்றன. அடித்து நொறுக்கப்பட்ட கோட்டைகள், கலைத்திரை கிழிக்கப்பட்ட கல்தூண்கள். கற்புத்திரை கசக்கப்பட்ட கலைச் சிற்பங்கள். காம்போதி ராகம் பாடும் கவின்மிகு கோயில்கள். அரிச்சுவடி இல்லாத அரச வளாகங்கள். பார்க்கும் எல்லாமே சிதைந்து சிதிலடைந்து போய் கிடக்கின்றன.வந்து போன காட்டு மிராண்டிகள் யாரும் எதையும் விட்டு வைக்கவில்லை. கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டனர். கிடைக்காதவர்கள் உருட்டிப் பெயர்த்துப் போட்டனர். நானும் என் மனைவி ருக்குமணியும் இந்தியாவில் பார்த்த வரலாற்றுக் கலைபாடுகளில் மனதில் நிற்பவை   செஞ்சிக் கோட்டையும் இந்தக் கோல்கொன்டாவும்தான். ஆக, இந்தியாவிற்குப் போனால் போய்ப் பாருங்கள்.


கோல்கொன்டா சாம்ராஜ்யம் நல்ல நிலையில் போய்க் கொண்டிருந்த போது, மேலே டில்லியில் ஓர் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த துக்ளக் மன்னராட்சியில் போர் வெறி தலைதூக்கியது. இவை எல்லாம் 14ஆம் நூற்றாண்டில் நடந்தது.அந்தக் காலத்தில் அந்தப்புரங்களிலும் ஆஸ்தானங்களிலும்  ஒரே புலம்பல் மயம். என்ன தெரியுமா. ஓர் அரசன் இருந்தால் அந்த அரசனுக்கு போர் ஆசை எந்த நேரத்தில் வந்து தொலைக்கும் என்று யாருக்குமே தெரியாது.

பக்கத்தில் படுத்திருக்கும் மகாராணிக்கே தெரியாதாம். படுத்து இருக்கும் அரசன் எழுந்து உட்கார்ந்த அடுத்த நொடியே போர்ப்பாசறைச் சாற்றி சண்டைக்கு கிளம்பி விடுவானாம். அப்படிப்பட்ட நிலைமை இருந்தது.

காற்று வேக கண வேகத்தில் துக்ளக் படை கீழே இறங்கி வந்தது. வாராங்கல் எனும் தலைநகரத்தைத் தாக்கியது. நார் நாராகக் கிழித்துப் போட்டது. கோல்கொன்டாவின் செல்வம் சிறப்பு எல்லாவற்றையும் கபளீகரம் செய்தது. அந்தச் சூரையாடலில் மாட்டிக் கொண்டதுதான் நம்முடைய இந்தக் கோகினூர் வைரம். டில்லிக்குப் போன  வைரம் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு துக்ளக் மன்னர்களின் அந்தப்புரங்களில் அலங்கார மாகக் காற்று வாங்கியது. அந்தச் சகவாசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அப்போது அதன் எடை 793 காரட்.

இது இப்படியிருக்க மங்கோலிய பாரம்பரியத்தில் இருந்து வந்த பாபர், 1526ல் இந்தியாவின் மீது படை எடுத்தார். இந்த பாபர்தான் இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். பாபரின் பேரன்தான் புகழ்பெற்ற அக்பர். பாபர் டில்லியைத் தாக்கினார். அவருடைய மகன் ஹுமாயுன் ஆக்ராவைத் தாக்கினார்.


அப்போது டில்லியில் முகமது பின் துக்ளக் ஆட்சி நடைபெற்று வந்தது. அதற்கு சுல்தான் இப்ராஹ’ம் லோடி என்பவர் மன்னர். அவர்தான் துக்ளக் ஆட்சியின் கடைசி சுல்தான். அவருக்குத் துணையாக விக்கிரமாதித்தியா என்பவர் இருந்தார். பயங்கரமான போர் பானிபட் என்ற இடத்தில் நடந்தது. இந்தப் போரில் மன்னர் இப்ராஹ’ம் லோடியும், தளபதி விக்கிரமாதித்தியாவும் இறந்து போனார்கள். சரி! கோகினூர் வைரம் என்ன ஆனது. விஷயத்திற்கு வருவோம்.
(தொடரும்)