பிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஜூன் 2019

பிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தன்னுடைய புதிய அமைச்சரவையில் பிரதாப் சந்திர சாரங்கி என்பவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்.


பிரதாப் சந்திர சாரங்கி ஓர் ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர் என்பது ஒரு பரவலான அதிருப்தி. அதைப் பற்றி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

1999-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஒடிசா மனோஹர்பூர் - கியோஞ்சார் (Manoharpur-Keonjhar) எனும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி.

*கிரஹாம் ஸ்டெயின்ஸ்* (Graham Staines - வயது 58) எனும் ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் அவர்களின் சரக்கு வாகனத்தில் படுத்துத் தூங்கும் போது தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். பாதிரியாரின் மூத்த மகன் பிலிப் 10 வயது; இளைய மகன் திமோதி 6 வயது.

அதற்கு பாஜ்ராங் டால் (Bajrang Dal) இந்து அமைப்பே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டது. சம்பவம் நடக்கும் போது அந்த அமைப்பிற்கு பிரதாப் சந்திர சாரங்கி தான் தலைவர். 



பாஜ்ராங் டால் அமைப்பின் செயற்பாட்டாளர் *டாரா சிங்* என்பவரும் மேலும் 11 பேரும் பாதிரியாரையும் அவரின் பிள்ளைகளையும் கொன்றதாக 2003-ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப் பட்டது.

டாரா சிங்கிற்குத் தூக்குத் தண்டனை. எஞ்சிய 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். அவர்களில் ஒருவர் பிரதாப் சந்திர சாரங்கி. 

ஆஸ்திரேலியப் பாதிரியார் உருவாக்கிய மாயூர் பஞ்ச் (Mayurbhanj) எனும் கிறிஸ்துவ அமைப்பு, ஏழ்மையில் வாழ்ந்த ஒடிசா ஆதிக்குடி மக்களை மதம் மாற்றியது எனும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

அதனால் அந்தக் கொலை வெறியாட்டம் நடந்து இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள்.

இந்திய அரசாங்கம் வாட்வா ஆணையத்தை (Wadhwa Commission) உருவாக்கி விசாரணையும் நடத்தியது. 



அதில் ஒடிசா இந்து ஆதிவாசிகள் பலர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றப் பட்டனர்; ஆனால் மதமாற்றத்திற்கு ஆதிவாசிகள் வற்புறுத்தப்படவில்லை; என்று அறிக்கை தயாரித்து வெளியிட்டது.

https://www.hvk.org/specialreports/wadhwa/main.html

மேலும் அந்த வாட்வா ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் தகவல்கள்:



1999 ஜனவரி 22-ஆம் தேதி மனோஹர்பூர் காட்டுக் கிராமத்தில் கிறிஸ்துவர்களுக்கான ஒரு சமூக முகாம். அதில் ஆண்டுப் பிரார்த்தனைக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கலந்து கொண்டார்.

ஒடிசா மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் மாயூர் பஞ்ச் எனும் கிராமத்திற்கும்; கியோஞ்சார் எனும் கிராமத்திற்கும் இடையில் அந்தப்  பிரார்த்தனை முகாம் அமைந்து இருந்தது. 



கூட்டம் முடிந்து கெந்துஜார் (Kendujhar) எனும் கிராமத்திற்கு தன்னுடைய இரு மகன்களுடன் பாதிரியார் சென்று கொண்டு இருந்தார்.

அவரின் இரு மகன்களும் ஊட்டியில் படித்துக் கொண்டு இருந்தவர்கள். அப்போது அவர்களுக்குப் பள்ளி விடுமுறை. அதனால் தந்தையாருடன் பிரார்த்தனை முகாமிற்குப் போய் இருக்கிறார்கள்.

கெந்துஜார் கிராமத்திற்குப் போகும் போது மிகவும் குளிர். அதனால் போகும் வழியில் மனோஹர்பூர் (Manoharpur) கிராமத்தில் தங்கலாம் என முடிவு செய்தார்கள். அவர்களின் வாகனம் ஒரு சரக்கு வாகனம் (station wagon). அந்த வாகனத்திற்குள் படுத்துத் தூங்க வசதிகள் இருந்தன. 



ஆனால் அன்றைக்கு பாதிரியாரின் மனைவி (Gladys Staines); அவர்களின் மூத்த மகள் (Esther); பாதிரியாருடன் பயணம் செய்யவில்லை. பாரிபாடா எனும் சிறு நகரில் மனைவியும் மகளும் தங்கிவிட்டார்கள். தந்தையும் மகன்களும் மட்டுமே பயணம் செய்து இருக்கிறார்கள்.

பாதிரியாரும் அவருடைய மகன்களும் வாகனத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது 50 பேர் அடங்கிய ஒரு கும்பல் அங்கே வந்து இருக்கிறது. அவர்களிடம் கோடாரிகள் அரிவாள்கள் இருந்து இருக்கின்றன.

பாதிரியாரின் வாகனத்தைத் தாக்கி இருக்கிறார்கள். அப்படியே அந்த வாகனத்திற்கு நெருப்பு வைத்து இருக்கிறார்கள். உள்ளே படுத்து இருந்து மூவரும் வெளியே வர முயற்சி செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அந்த முரட்டுக் கும்பல் அவர்களை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதனால் மூவரும் தீயில் கருகி மாண்டனர்.

அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாயிக்கு அனைத்துலக அளவில் கண்டனங்கள். அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்திய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியது. கிறிஸ்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய அரசாங்கம் தவறி விட்டதாகக் குற்றம் சுமத்தியது.



கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரான மகேந்திர எம்ராம் (Mahendra Hembram) என்பவர் இந்துஸ்தான் பத்திரிகைக்கு 2003-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் ”ஆதிக்குடி மக்களுக்கு மாட்டிறைச்சியைச் சாப்பிடக் கொடுத்துப் பழக்கி இருக்கிறார்கள். அதுவே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார்.

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரம். 2003-ஆம் ஆண்டில் அங்குள்ள நீதிமன்றம் டாரா சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 2005-ஆம் ஆண்டில் அந்தத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.

பின்னர் ஒரிசா உயர்நீதிமன்றம் அதே ஆயுள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தது. இதர 11 பேரும் விடுதலை ஆயினர். அந்த 11 பேரில் ஒருவர் தான் பிரதாப் சந்திர சாரங்கி. அவரும் விடுதலை ஆனார். 


டாரா சிங்

பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி கிலேடிஸ் தொடர்ந்து ஒரிசாவில் சமூகச் சேவைகள் செய்து வந்தார். ஆதிக்குடி மக்களின் தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்தார். ஒடிசா மக்களுக்கு நிறையவே சேவைகள் செய்து இருக்கிறார். பாராட்டுக்குரிய பெண்மணி.

அன்னை திரேசாவிற்குப் பின்னர் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவப் பெண்மணி (the best-known Christian in India after Mother Teresa) என கிலேடிஸ் புகழப் படுகிறார்.

அவர் இந்திய மக்களுக்குச் செய்த சேவைகளைப் பாராட்டி 2005-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு அன்னை திரேசா அனைத்துலக விருதும் வழங்கப்பட்டது. இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். 



இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 2012-ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் தயாரிக்கப் பட்டது. இந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தின் பெயர்: The Least of These: The Graham Staines Story.

இந்தத் துர்நிகழ்ச்சியில் சிக்கிக் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி என்பவருக்குத் தான் சென்ற வாரம் புதிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் குற்றம் சாட்டப்பட்டு 2005-ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப் பட்டவர். 1999 ஜனவரி 22-ஆம் தேதி இரவு நேரத்தில் ஒடிசா மனோஹர்பூர் கிராமத்தில் என்ன நடந்தது என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

பிரதாப் சந்திர சாரங்கி குற்றம் செய்தாரா இல்லையா அல்லது அவருடைய தீவிரவாத இந்து இயக்கம் குற்றம் செய்ததா என்பதைப் பற்றி நீதி தேவனுக்குத் தான் முழுமையாகத் தெரியும். பிரதாப் சந்திர சாரங்கியை மனித நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. 



ஆகவே நீதிமன்றத்தின் முடிவிற்கு மதிப்பு அளிப்போம். அவருக்கு இந்திய அரசாங்கமும் அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறது. அதற்கும் மதிப்பு அளிப்போம்.

இப்போது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் அமைச்சர் பதவியைச் செம்மையாகச் செய்யட்டும். இந்து தீவிரவாதத்தைத் திணிக்காமல் இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.

அவர் நல்லவரா கெட்டவரா என்பது ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். காலன் வரும் போது, ஆண்டவரின் சன்னிதானத்தில் அவர் பதில் சொல்லட்டும். நன்றி.

https://www.hollywoodreporter.com/review/graham-staines-story-1181467

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)