தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மார்ச் 2015

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1
முதல் பாகத்தைப் படிக்க மேலே சொடுக்கவும்
 

........................................................................................................

தமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே  - 2

பெங்களூரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம், அற்புதம். மிகவும் புத்திசாலித் தனமாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.




1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டன. ஒரு மாநிலத்துடன், வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு சொன்ன விதி முறை. தமிழகத்துக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி கன்னடத்திற்குத் தாரை வார்க்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

சரி. பெங்களூரு பிரச்சினை ஓசூரில் ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு அருகில் இருக்கிறது. 




இந்த ஓசூரில், 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள்.

ஓசூர் வேண்டாம் பெங்களூரு வேண்டும்

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். இருந்தாலும் அவர்கள், பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். அதனால், மொழி வாரியாக நிலப்பகுதிகள் பிரிக்கப்படும் போது, ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா கைகழுவியது.

இதில் ஒரு சூசகமான ரகசியம் என்ன தெரியுமா. ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது கடினம். அதனால், விவசாயமும் விளைச்சலும் மிகக் குறைவு. இதுதான் வெளியே சொல்லப்படாத காரணம். அதுதான் உண்மையிலும் உண்மை.





ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால், அது எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா சொல்லி விட்டது. சரி. அடுத்து எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அப்படிப் பார்த்தால் கன்னடர்கள் வருகிறார்கள். 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக, கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும். அதுதானே நியாயமும்கூட.

ஆனால், கர்நாடகா வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டது. தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்தது. ஆனால், கன்னடம் அங்கேதான் தன் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தியது. அப்போது  பெங்களூரு நிலப்பகுதி, தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தொடர்ந்து படியுங்கள்.

பெங்களூரு கர்நாடகாவிற்குப் போன கதை

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பெங்களூரு விவகாரம் வந்தது. அதாவது  பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போதுதான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது. 





கன்னடம் என்ன சொன்னது தெரியுமா. நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும், நாங்கள் பெரும்தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதே மாதிரி, பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும்,  பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும். கர்நாடகா நல்ல ஒரு கொடுக்குப் பிடி போட்டது.

மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது, தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது. பிடி எங்கே விழுந்தது பார்த்தீர்களா. 





உண்மையிலேயே பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. இப்படித்தான் பெங்களூரு, தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்குப் போனது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன

தமிழகம் அதற்குச் சொந்தமான நிலப் பகுதிகளை இழந்ததற்கு, முக்கியக் காரணம் வெறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன. கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால், காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது. மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.





தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப் பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள், அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இரங்கினர்.

அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப் பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும், இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்


ஆந்திராவில், தெலுங்கு மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்பு. வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். இருந்தாலும்,  ஆந்திர சட்டச் சபைக்கு தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது. 





ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்பு வரை, இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். இதை ஏன் சொல்கிறேன் என்றால், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். இது ஓர் இந்திய வரலாற்று ஆவணம். அதை இங்கே ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு.

ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் போய் இருக்கும். கதையும் வேறு மாதிரியாகப் போய் இருக்கும்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்து இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.





தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்று பேதம் பார்க்காமல், எல்லோருமே கைகோர்த்து அந்த இழப்புக்கு துணை போனார்கள். இது தமிழக வரலாறு சொல்லும் கசப்பான உண்மைகள்.

விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ்

இந்தியா சுதந்திரம் பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று மூலைக்கு மூலை ஆர்ப்பாட்டக் குரல்கள். அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்டவாதிகள் தான். என்ன யோசிக்கிறீர்கள். அதுதான் உண்மை. குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் தான் முழுமூச்சாக களம் இறங்கினார்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராடத் தொடங்கினார்.





அதன் பிறகு, எல்லாவற்றையும்விட பெரிய அளவில், தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. அப்போது அங்கு இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் முக்கியக் காரணங்கள்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது, சென்னை ராஜதானி என்ற பெயரில் சென்னைப் பெருநிலம் இருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்கலும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால், சென்னையும் சென்னை சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.

கேரளா கேட்ட நிலங்கள்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கத் தொடங்கினர். காலம் காலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை, தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராட்டம் செய்தனர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றது கேரள மாநிலம்.





அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்றவை இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியில் தமிழகத்துடன் தொடர்புடையவை. அப்படிப் பார்த்தால் அவை தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

1956-ஆம் ஆண்டு பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்தக் கமிஷனிடம் கேரளா மேலே சொன்ன பகுதிகளைக் கேட்டது. தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகளையும் கேட்டது.

அந்தக் காலக் கட்டத்தில், அரசியலிலும் நிர்வாகத்திலும் கேரளா செல்வாக்கோடு விளங்கியது. அன்று நேருவின் அமைச்சரவையின் முக்கியப் பதவிகளில் கேரளாவின் பங்கு தலையாயது. தூதரகப் பதவிகள், மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரள மாநிலத்தவர் அங்கம் வகித்தனர்.





தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்பவர் பொறுப்பில் இருந்தார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் சார்பில் யாரும் இல்லை. தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது என்று சொன்னதே கே.எம். பணிக்கர் தான்.

குளமாவது மேடாவது - இந்தியாவில்தானே இருக்கிறது

இந்த விஷயத்தில் கேரளாவைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் உரிமையை அவர்கள் கேட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தமிழ் மண்ணைவிட, தங்களின் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆக, அவர்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.

பி.எஸ்.மணி என்பவர் அந்தக் காலக் கட்டத்தில் தமிழகப் போராட்டவாதி. தேவிகுளம், பீரிமேடு பகுதிகளைக் கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடியவர். அவர் அப்போதைய தலைவர் காமராசரைப் போய்ப் பார்த்தார். ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது. காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

அப்போது ‘தினமணி’  பத்திரிகையின் ஆசிரியராக ஏ.என். சிவராமன் என்பவர் இருந்தார். அதைக் கேட்டு கோபம் அடைந்தார். அவர் ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கமே எழுதினார். அதனால், காமராசரின் கண்டனத்திற்கும் உள்ளானார்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் எல்லாக் கட்சிகளும் சேர்ந்து கூட்டம் நடத்தின. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்று தெரிந்ததும், பெரியார் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தக் கூட்டத்தைப் பற்றி ம.பொ.சி. அவருடைய ‘எனது போராட்டங்கள்’ எனும் நூலில் இப்படி எழுதி இருக்கிறார்.

தமிழகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பல்டி

‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்ட சோசலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’. இது ம.பொ.சி.யின் கருத்து.

1956-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், செல்வாக்கு காரணமாகக் கேரளாவுக்கு மாற்றப் பட்டது. அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போடப் பட்டது. தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். அப்புறம் என்ன நடந்தது என்பதையும் தேவி குளம், பீரிமேடு என்றால் என்ன என்பதையும் அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம். 

(தொடரும்)