ஜாவா காட்டில் திரௌபதி ஆலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாவா காட்டில் திரௌபதி ஆலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2020

ஜாவா காட்டில் திரௌபதி ஆலயம்

தமிழ் மலர் - 14.07.2020

இந்தோனேசியா ஜாவா தீவில் ஓர் உயரமான மலை. பெயர் பிராகு மலை. படகு போன்று வடிவத்தில் பச்சை பசேல் மலை. அங்கே தன்னந்தனியாய் தனித்து வாழும் ஓர் ஆலயம். தரணி மாந்தர்களுக்குத் தெரியாமல் தத்துவம் பேசும் அழகிய ஆலயம். அதுவே திரௌபதி அம்மன் ஆலயம். அங்கே அந்த பச்சைப் பசுங்காட்டில் பச்சை வண்ண ஓவியம்.



பெரிய ஒரு வனாந்திர மலைக் காட்டுப் பகுதியில் மிக மிக ஒதுக்குப் புறமாக அந்த ஆலயம் உள்ளது. ஓராண்டு அல்ல. ஈராண்டுகள் அல்ல. 1300 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

ஏன் அந்த ஆலயத்தை அங்கே போய் அப்படி ஒரு காட்டுப் பகுதியில் கட்டினார்கள். தெரியவில்லை. இருந்தாலும் இந்தோனேசியா கலிங்க நாட்டு அரசர்களில் ஒருவர் கட்டியது என்பது மட்டும் தெரியும்.

நீண்ட நாட்களாக மர்மமாக இருந்தது. கட்டிய அவர் பெயரும் தெரியாது. ஏன் அவர் அங்கே போய் கட்டினார் என்பதும் தெரியாது. கட்டியவர் ஒரு பல்லவர் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். ஏன் என்றால் கலிங்கா பேரரசு என்பது ஒரு பல்லவ அரசு.



ஆனாலும் அண்மையில் சில தகவல்கள் கசிகின்றன. கலிங்கா பேரரசின் மகாராணியார் ஷீமா கட்டி இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒன்றை மட்டும் நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த ஆலயம் அமைந்து இருக்கும் இடம் ஓர் எரிமலைப் பகுதி. எரிமலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த எரிமலை பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல முறை குமுறி உள்ளது.

ஒருக்கால் அந்த எரிமலையின் சீற்றத்தைத் தணிப்பதற்காக அல்லது நல்லது நடக்க வேண்டும் எனும் வேண்டுதலுக்காக அந்த ஆலயத்தை அங்கே கட்டி இருக்கலாம். சொல்ல முடியாது. இது ஓர் அனுமானம்.



இந்தோனேசியா முழுமைக்கும் பல ஆயிரம் ஆலயங்கள் உள்ளன. பற்பல அரசப் பரம்பரையினர் பற்பல காலக் கட்டங்களில் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.

ஆற்று ஓரங்களில் கட்டி இருக்கிறார்கள். ஏரிகளில் கட்டி இருக்கிறார்கள். சமவெளிகளில் கட்டி இருக்கிறார்கள். கடல்கரைகளில் கட்டி இருக்கிறார்கள். மலைகளின் உச்சியிலும் கட்டி இருக்கிறார்கள். திரௌபதி அம்மன் ஆலயத்தை எரிமலை அடிவாரத்தில் கட்டி இருக்கிறார்கள்.

காலம் செய்த கோலமோ; மனிதன் செய்த கோலமோ தெரியவில்லை. பல ஆலயங்கள் காணாமல் போய் விட்டன. பல ஆலயங்கள் இருந்தும் இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பிராகு மலை திரௌபதி அம்மன் ஆலயம்.


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் பிராகு மலை (Mount Prahu) உள்ளது. இது ஓர் எரிமலை. பல முறை வெடித்து உள்ளது. ஆகக் கடைசியாக 2019-ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெடித்து தீப்பிழம்புகளைக் கக்கி உள்ளது.

இந்த மலையின் அடிவாரத்தில் தான் திரௌபதி அம்மன் ஆலயத்தைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மலையின் அடிவாரத்தில் இந்த ஆலயம் மட்டுமே இருக்கிறது. இந்தோனேசியாவை ஆட்சி செய்த கலிங்கா பேரரசின் மன்னர்களில் ஒருவர் கட்டி இருக்கிறார். அவர் மகாராணியார் ஷீமாவாக இருக்கலாம்.

இந்தோனேசியாவின் ஆலயங்களைப் பார்க்க வருகிறவர்கள் இந்த திரௌபதி ஆலயத்திற்கு அதிகமாய்ச் செல்வது இல்லை. பாவம் என்று சொல்லும் அளவிற்குத் தனித்து விடப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த ஆலயத்தைக் கவனிப்பதற்கு ஒரு பாதுகாவலர்கூட இல்லை.




இந்த ஆலயம் தாயாங் கூலோன் கிராமத்தில் (Dieng Kulon Village) இருக்கும் பிராகு மலையில் (Mount Prahu), 2,500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஆலயத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். உயரம் 6 மீட்டர். யோக் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

ஜாவா தீவின் வடப் பகுதியில் ஜெப்பாரா (Jepara Regency) எனும் மாநிலம் உள்ளது. அங்குதான் கலிங்கா பேரரசு மையம் கொண்டு இயங்கியது. கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.850-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறது. இப்போது அந்த இடத்திற்கு கெலிங் (Keling) என்று பெயர்.

கலிங்கப் பேரரசின் கலிங்கம் எனும் சொல்லில் இருந்து தான் கெலிங் என்கிற பெயரையும் வைத்து இருக்கிறார்கள். சீனர்கள் இந்த அரசை ஹெலிங் (Helíng) என்று அழைக்கிறார்கள்.



இன்னும் ஒரு விசயம். கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு. இந்த மூன்று பேரரசுகளும் தான் இந்தோனேசியாவின் வரலாற்றில் மிக மிகப் பழமையான பேரரசுகள்.

1. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 605

2. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

3. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 650 – 850

கலிங்கா பேரரசு உருவான கதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கி.பி. 120-ஆம் ஆண்டுகளில் தேவ வர்மன் என்பவர் இந்தியாவில் இருந்து ஜாவா தீவிற்கு வந்தார். இவர் ஒரு வணிகர். ஜாவாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் வந்தவர்.



அப்படி வந்தவர் தான் சில ஆண்டுகளில் சாலகநகரம் (Salakanagara kingdom) எனும் அரசைத் தோற்றுவித்தார். எப்படித் தோற்றுவித்தார் என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் சாலகநகரப் பேரரசை ஓர் இந்திய வணிகர் தான் தோற்றுவித்தார். அவரின் பெயர் தேவ வர்மன் என்று கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கி.பி. 674-ஆம் ஆண்டில் சீமா சத்தியா என்பவர் கலிங்கா பேரரரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார். நேர்மையான அரசியல் வாழ்க்கை. இவர் காலத்தில் பிராகு மலை திரௌபதி ஆலயம் கட்டப்பட்டு இருக்கலாம் எனும் ஐயப்பாடு உள்ளது. சரி.



மேலே சொன்ன  கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு; இந்த மூன்று இந்தியர்ப் பேரரசுகளுக்கு முன்பே இன்னும் ஒரு பேரரசு இந்தோனேசியாவில் இருந்து இருக்கிறது.

திரௌபதி ஆலயம் போல பிரபலம் இல்லாத பெயர். அந்தப் பேரரசைப் பற்றி யாருமே எதையும் பேசுவது இல்லை. மறந்து போய் இருக்கலாம். அந்தப் பேரரசின் பெயர் தான் சாலகநகரப் பேரரசு (Salakanagara kingdom).

(Coedès, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. பக்:52)

இந்த சாலகநகரப் பேரரசு, மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த பேரரசு. வருடத்தைக் கவனியுங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தோனேசியாவில் இந்தியர்களின் ஆட்சி.



திரௌபதி ஆலயத்தில் துர்கா, அகஸ்தியர், மற்றும் விநாயகர் உள்ளிட்ட சில வளைவு வடிவங்கள் இருந்தன. இப்போது அந்த வடிவப் பொருட்கள் எதுவும் இல்லை. திருடப்பட்டு இருக்கலாம்.

அல்லது கைலாசா அருங்காட்சியகத்திற்கு (Kailasa Museum) மாற்றப்பட்டு இருக்கலாம். அப்படியும் ஒரு வதந்தி உலவுகிறது. சுருங்கச் சொன்னால் திரௌபதி ஆலயத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் வெற்று ஆலயத்தை மட்டுமே காண முடியும்.

இது போன்ற ஒரு வரலாற்று தளம் புறக்கணிக்கப் படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆலயம் பாழடைந்து விட்டது. அதற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.

ஆலயத்தை மேம்படுத்துவதில் உள்ளூர் அரசாங்கம் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆலயக் கட்டமைப்பின் வரலாறு தொடர்பான தகவல் பலகைகளை நிறுவ வேண்டும்.


திரௌபதி ஆலயக் குழுமத்தில் நான்கு ஆலயங்கள் இருந்தன. திரௌபதி (Dwarawati) ஆலயம்; அபிமன்யு (Abiyasa) ஆலயம்; பாண்டு (Pandu) ஆலயம்; மார்க்கண்டேயர் (Margasari) ஆலயம் என நான்கு ஆலயங்கள்.

இப்போது திரௌபதி ஆலயம் மட்டுமே உள்ளது. மற்ற மூன்று ஆலயங்களும் இடிந்து போய் விட்டன. இடிபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றைப் புனரமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அங்கே எப்படி செல்வது?

திரௌபதி ஆலயம் பத்தூர் (Batur) எனும் இடத்தில் உள்ள தாயாங் கூலோன் கிராமத்தில் இருக்கிறது. வோனோசோபோ (Wonosobo) நகரத்தில் இருந்து அந்த இடத்தை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும்.

பயணிகள் பேருந்தில் ஏறி தாயாங் ராயா சாலையைப் பயன்படுத்தி பத்தூருக்குச் செல்லலாம். கிராமத்திற்கு வந்த பிறகு, கோயிலை அடைவதற்கு ஒரு சிறிய மலையில் ஏற வேண்டும். போகும் வழியில் உருளைக்கிழங்கு விவசாயப் பண்ணைகள் இருக்கும்.



திரௌபதி ஆலயத்தின் வடிவம் கடோற்கஜன் ஆலயத்தின் பாணியைக் கொண்டு உள்ளது. ஆலயத்தின் கூரை ஒரு கோணமான கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

திரௌபதி ஆலயத்திற்கு அருகில் 1864-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பரிகேசிட் கோயில்களும் (Parikesit Temple) இருந்தன. இப்போது ஒரே ஒரு பரிகேசிட் கோயில் மட்டுமே தனியாக உள்ளது.

திரௌபதி ஆலயம் உண்மையில் தாயாங் பீடபூமி வளாகத்தில் உள்ள மற்ற கோயில்களை விட சுற்றுலாப் பயணிகளால் நன்கு அறியப் பட்டதாகும். ஆனால் அங்கு செல்பவர்கள் குறைவு. ஒரே ஒரு கோயிலைப் பார்ப்பதற்கு மலை மேல் ஏற வேண்டுமே என்று பலர் போவது இல்லை.

காலத்தால் மறைந்து வரும் வரலாற்றுச் சின்னங்களில் ஜாவா திரௌபதி ஆலயமும் ஒன்றாகும். இப்படி ஓர் ஆலயம் இந்தோனேசியாவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். அதுவே அந்த ஆலயத்திற்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

சான்றுகள்:

1. Romain, J. (2011). Indian Architecture in the ‘Sanskrit Cosmopolis’: The Temples of the Dieng Plateau.

2. Suherdjoko (28 April 2006). "Dieng tidies itself up to regain past glory". The Jakarta Post.

3. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet.

4. Dumarcay, J and Miksic J. Temples of the Dieng Plateau in Miksic, John 1996 (editor) 1996 Ancient History Volume 1 of Indonesian Heritage Series Archipleago Press, Singapore.