தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 7

தமிழ் மலர் - 15.10.2018 - திங்கள் கிழமை

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ்த் தினசரியை எடுத்துக் கொள்ளுங்கள். சராசரி பதினாறு பக்கங்கள். அதில் 12 பக்கங்களில் பிற மொழிச் செய்திகளைப் போட்டுவிட்டு மிச்சம் உள்ள நான்கு பக்கங்களில் மட்டும் தமிழில் செய்திகளைப் போட்டால் அதற்குப் பெயர் தமிழ்ப் பத்திரிகையா. அதை ஒரு தமிழ்ப் பத்திரிகை என்று சொல்ல முடியுமா. சொல்லுங்கள்.
 

அந்த 12 பக்கங்களில் நான்கு பக்கங்களில் ஆங்கில மொழி; நான்கு பக்கங்களில் மலாய் மொழி; நான்கு பக்கங்களில் சீன மொழி; நான்கு பக்கங்களில் தமிழ் மொழி. இப்படி ஒரு தினசரி வந்தால் எந்த ஒரு தமிழர் தான் அந்தத் தினசரியைக் காசு கொடுத்து வாங்குவார். வாங்கிப் படிப்பார் சொல்லுங்கள்.

அதற்குப் பதிலாக ஒரு ஆங்கிலத் தினசரி அல்லது ஒரு மலாய்த் தினசரியை வாங்கிவிட்டுப் போய் விடுவாரே. சீன மொழியை எழுத்துக் கூட்டிப் படிப்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஏதாவது ஒரு சினப் பேப்பரை வாங்கி இடுக்கில் செருகிக் கொண்டு போயே சேர்ந்து விடுவார். அது தானே நடக்கும். ஆக இதே மாதிரி ஒரு நிலைமை தான் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலும் நடக்கும் என்று சொல்ல வருகிறேன்.

இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் ஆங்கில, மலாய்ப் பாடங்களைச் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் கற்றுக் கொடுப்பார்கள். அதாவது கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.

அப்படிப் பார்த்தால் ஆக மொத்தம் 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்க வேண்டி இருக்கும். எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் இருக்கும்.
 

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை. எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் நடக்கப் போகிற ஓர் எதார்த்தம். புரிந்து கொள்ளுங்கள்.

அந்த வகையில் பார்த்தால் ஒரு தமிழ்ப் பிள்ளை ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லைங்க. மொத்தம் பத்துப் பாடங்களில் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் சொல்லிக் கொடுக்கப் பட்டால் அப்புறம் எதுக்குங்க தமிழ்ப் பள்ளிக்கூடம். எதுக்குங்க தமிழ்க்கல்வி. பேசாமல் சீனம் மலாய் பள்ளியில் சேர்த்துவிட்டுப் போகலாமே. இப்படித்தான் ஈப்போ தமிழ் ஆர்வலர் பி.கே.குமார் அவர்களும் தன் கருத்துகளை முன் வைக்கிறார்.

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ்த் தினசரியை எடுத்துக் கொள்ளுங்கள். சராசரி பதினாறு பக்கங்கள். அதில் 12 பக்கங்களில் பிற மொழிச் செய்திகளைப் போட்டுவிட்டு மிச்சம் உள்ள நான்கு பக்கங்களில் தமிழில் செய்திகளைப் போட்டால் அதற்குப் பெயர் தமிழ்ப் பத்திரிகையா. அதை ஒரு தமிழ்ப் பத்திரிகை என்று சொல்ல முடியுமா என்று நம்மையே கேட்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கெடா நகரில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு. அப்போது மலேசியாவில் தமிழ் கல்வி தொடங்கிய 200-வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. கல்வி அமைச்சர் டத்தோ மாட்சிர் பின் காலிட் திறப்பு விழா செய்தார்.
 

அவர் இப்படி பேசினார். உலகிலேயே தொன்மை மிக்க செம்மொழியாகத் தமிழ் திகழ்கிறது. மலேசிய நாட்டு கலாசாரத்தில் பிரிக்க இயலாத ஓர் அங்கமாக தமிழ் கல்வி பள்ளிகள் விளங்குகின்றன. தமிழ்ப் பள்ளிகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகளில் ஒரு மொழி கல்வி முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் 1957-ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் தமிழ்க் கல்வி நடைமுறையில் உள்ளது. தமிழ்க் கல்விப் பள்ளிகள் இங்கு தொடர்ந்து செயல்படும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார். அதாவது தொடர்ந்து இயங்கும் என்று உறுதி கூறினார். ரொம்ப சந்தோஷம்.

ஆனால் சொன்னது மாதிரியாகவா நடக்கிறது. இந்த 2018-ஆம் ஆண்டு 47 தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இருமொழித் திட்டத்தினால் தமிழ்க் கல்வி சன்னம் சன்னமாய் ஓரங்கட்டப் படும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து இயங்கும் என்று சொல்லிவிட்டு இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன அர்த்தம். தொடர்ந்து இயங்குமாம் தொடர்ந்து. விடுங்கள்.

2018 பிப்ரவரி 11-ஆம் தேதி கோலாலம்பூரில் மலேசியத் தமிழர் சமூக நல விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் இருமொழிப் பாடத்திட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு. பல தமிழர் அரசு சார்பற்ற இயக்கங்கள் கலந்து கொண்டன.
 

மலேசியாவில் தற்பொழுது 526 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இதில் 47 பள்ளிகளில் மட்டும் தான் இந்த இருமொழிப் பாடத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த 47 தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிப் பாடதிட்டத்தை நீக்கம் செய்யச் சொல்லி அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசியர்களுக்கு கோரிக்கை மனு அனுப்ப்பப் பட்டது.

அவற்றில் இரண்டே இரண்டு தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் ஏற்றுக் கொண்டனர். நடைமுறைப் படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சுக்கு கடிதம் வழி தெரிவித்து உள்ளனர். இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

எஞ்சியுள்ள 45 தமிழ்ப் பள்ளிகளில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளியும் ஒன்றாகும். அதில் இருமொழி பாடத் திட்டம் அமலாக்கம் செய்யப் பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று தமிழ் எங்கள் உயிர் இயக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் தொடுத்த சட்ட நடவடிக்கையினால் இருமொழி பாடத் திட்டத்தை நிறுத்தச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டது.

தமிழ் எங்கள் உயிர் இயக்க ஆர்வலர்களில் ஒருவரான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அந்தத் தகவலைத் தெரிவித்தார். இவர் சுவாரம் எனும் மனித உரிமை கழகதின் இயக்குனர்களில் ஒருவராகும்.

தமிழ் ஆர்வலர் பி.கே.குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
 

இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்வதற்குச் சில அடிப்படை வரைமுறைகள் உள்ளன. முதலாவதாக அந்தத் திட்டத்தை அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். அந்த ஆசிரியர்களுக்கு போதுமான ஆங்கில மொழி அறிவாற்றல் இருக்க வேண்டும்.

இப்போது உள்ள தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களே மிகுதியாக உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்றதும் தமிழ் மொழியில் தான் ஆக அவர்களிடம் இருந்து சிறப்பான ஆங்கில மொழி கற்பித்தலை எதிர்பார்க்க முடியாது.

ஆக இந்த நிலையில் மற்ற இனத்து ஆசிரியர்கள் ஆங்கில மொழியைக் கற்பிக்கத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப் படலாம். இந்தப் பிரச்சினையைக் களைய வேண்டும். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற தமிழாசிரியர்களைக் கல்லூரி நிலையிலேயே உருவாக்க வேண்டும்.

மலேசிய பள்ளிகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. இது நிதர்சனமான உண்மை. ஆங்கில மொழியில் திறன் பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. ஆகவே ஓய்வு பெற்ற ஆங்கில மொழி ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த திட்டம் வைத்து உள்ளதாகக் கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்து உள்ளது. அதே இந்த நிலை மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் பொருந்தி வரும்.

ஆக அந்த வகையில் ஆங்கில மொழி ஆற்றல் குறைந்த ஆசிரியர்களைக் கொண்டு இரு மொழிக் கல்வித் திட்டம் நடத்தப் பட்டால் நன்மைக்குப் பதிலாகப் பாதகமே அதிகமாகும்.
 

தமிழ் அல்லது மலாய் மொழியில் போதனா பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் திடுதிப் என ஆங்கிலத்தில் பாடத்தை நடத்த முடியாது. ஆக இந்த இரு மொழிக் கொள்கைக்காக அடித்துப் பிடித்து முன்னுக்கு நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு கருத்து முன்வைக்கப் படுகிறது.

கணித அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிக்கப் போதுமான அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ளனர் என்பதை அந்தப் பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அல்லது அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்து தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். சில காரணங்கள் நொண்டிச் சாக்குகள். உதாரணத்திற்கு புந்தோங்கை எடுத்துக் கொள்ளுங்கள். நான் (பி.கே.குமார்) ஒரு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடைபெற்ற சம்பவம்.

அந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை திடீரென்று குறைந்தது. அதனால் வீடு வீடாகச் சென்று பள்ளிக்கு வராத மாணவர்களை அடையாளம் கண்டு வந்தோம். அதில் ஒரு மாணவனின் பெற்றோர் சொன்னார்; என் மகன் தமிழ்ப்பள்ளிக்கு போவதாக இருந்தால் இரண்டு பஸ்களை எடுத்துப் போக வேண்டும். அந்த வகையில் இரண்டு பஸ் கட்டணங்களைக் கட்ட வேண்டி இருக்கிறது என்றார்.

ஆக ஒரு பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்படும் போது அந்த மேம்பாட்டுப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கு இடம் கொடுப்பது இல்லை. மற்ற மொழிப் பள்ளிகளுக்குப் புதிதாக இடம் கிடைத்து விடுகிறது. புதிதாக பள்ளிக்கூடங்களையும் கட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டப் படுவதற்கு இடம் கிடைப்பது இல்லை.
 

அதனால் தமிழ் மாணவர்கள் மற்ற மொழிப் பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். புதிதாக உருவாக்கப்படும் ஒரு மேம்பாட்டுப் பகுதியில் தமிழ்ப்பள்ளிக்கு என்று ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்து ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தால் தமிழ் மாணவர்கள் ஏன் வேற்று மொழிக்குப் போக வேண்டும்.

இந்திய அரசியல்வாதிகளும் ஒரு கண்ணை மூடிக் கொண்டு போய் விடுகிறார்கள். மேம்பாட்டுத் திட்ட நிறுவனங்கள் என்ன சொல்வார்களோ எதைக் கொடுப்பார்களோ தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகளும் கண்துடைப்புக்காக இந்தா இன்றைக்குச் செய்கிறேன் நாளைக்குச் செய்கிறேன் என்று சால்சாப்புகள் சொல்லி போய்க் கொண்டே இருக்கிறார்கள். ஒன்றும் நடந்த பாடு இல்லை.

2002-ஆம் ஆண்டில் பி.பி.எஸ்.எம்.ஐ. (PPSMI) எனும் முன்னைய இருமொழித் திட்டம் அவசரம் அவசரமாக அமலுக்கு வந்தது. அதில் அரசியல் அதிகாரம் அதிகமாகவே இருந்தது. அதை யாராலும் மறைக்க முடியாது.

முன்னால் தலைவர்கள் துன் மகாதீரும் துன் சாமிவேலும் அந்தத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியதாக அந்தக் காலக் கட்டத்தில் பரவலாகப் பேசப் பட்டது. இருந்தாலும் அந்தத் திட்டம் 2011-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப் பட்டது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

தமிழ்ப் பள்ளியின் பொதுவான விவகாரங்களில் இதுவரையிலும் மிக மெத்தனமாகச் செயல்பட்டு வந்த சில அரசியல் தலைவர்களும்; சில தமிழ்க் கல்விமான்களும்; சில தலைமையாசிரியர்களும்; அதே தமிழ்ப் பள்ளிகளை ஆங்கில மயமாக்கல் திட்டத்தில் மட்டும் துடித்துக் கொண்டு நிற்கின்றார்கள். இரவோடு இரவாகத் தமிழ்ப் பள்ளிகளின் மொத்த கட்டமைப்பையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ள வக்காளத்து வாங்குகின்றார்கள். வியப்பிலும் வேதனையாக இருக்கிறது.

தமிழ்ப் பள்ளிகளின் தலைவிதியை முடிவு செய்யக் கூடிய ஒரு மிக முக்கியத் திட்டத்திற்குப் போதுமான ஆய்வுகள் தேவை. வெறும் வெற்று உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படக் கூடாது. அதிகார அழுத்தங்களுக்கு அடிபணிந்து போகக் கூடாது. அப்படிச் செய்தால் அது அந்த இனத்திற்கே செய்யும் மாபெரும் துரோகமாக அமைந்து போகலாம்.


இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அறிவுஜீவிகளை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்மொழி மீது நம்பிக்கை அற்ற சிந்தனைச் சிப்பிகளாகவே தெரிய வருகிறார்கள்.

கடந்த 60 வருட காலமாக நாம் நம் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். இன்னமும் தவித்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியத்திற்காகப் பிச்சை எடுக்காத நிலையில் கையேந்துகிறோம். தமிழ்ப் பள்ளிக் கட்டிடச் சீரமைப்புகளுக்காகக் கரம்கூப்பும் நிலையில் கூனிக் குறுகி நிற்கிறோம். இதில் இப்போது இருமொழித் திட்டப் பிரச்சினை.

இந்த இருமொழித் திட்டம் சார்பாக இன்னமும் ஏனோ தானோ என்று அமைதி காப்பது புதிய ஒரு வான வேடிக்கைக்குப் புதிய ஒரு வர்ணஜாலம் காட்டுவது போல அமைகின்றது. இருமொழித் திட்டத்தில் குளிர்காய்வது என்பது சுயநலம் கலந்த ஒரு பொதுநல விளையாட்டு.

இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவை இல்லாத திட்டம். இந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளின் தமிழ்மொழி சார்ந்த கற்பித்தல் முறை வீழ்ச்சி அடையலாம். எதிர்காலத் தமிழர்களுக்கு நாம் செய்த பாவச் செயலாக அமையலாம்.

என் தாய்மொழி என் தமிழ் மொழி. என் உயிர் போன பிறகு அந்தக் கட்டையின் சாம்பலில் என் தாய்மொழி எனக்காகக் கண்ணீர் வடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய இறுதி ஆசை. தாய்த் தமிழே வணக்கம்.

(முற்றும்)

சான்றுகள்:

1. Taskforce vows to sue Tamil schools over dual-language programme - https://www.malaysiakini.com/news/408540

2. Tamil NGOs say no to dual language programme - https://www.thestar.com.my/news/nation/2016/12/25/tamil-ngos-say-no-to-dual-language-programme/

3. DLP will boost enrollment in Tamil schools - https://www.beritadaily.com/dlp-will-boost-enrollment-in-tamil-schools/

4. Ramasamy tells Education Ministry to abolish dual language programme - https://www.malaymail.com/s/1281805/ramasamy-tells-education-ministry-to-abolish-dual-language-programme

5. Tamil school’s dual-language legal limbo - https://www.themalaysianinsight.com/s/29830