ஸ்ரீ விஜய பேரரசு கரைந்து போகின்றது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ விஜய பேரரசு கரைந்து போகின்றது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜூன் 2020

ஸ்ரீ விஜய பேரரசு கரைந்து போகின்றது

ஆறு வருடங்களுக்கு முன்னால் அதிரசம் காணாமல் போனது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அச்சு முறுக்கு காணாமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்னால் இடியப்பம் காணாமல் போனது. மூன்று வருடங்களுக்கு முன்னால் இட்லி மாவு, புட்டு மாவு, பூரி மாவு, தோசை மாவு காணாமல் போயின. 



பரமேஸ்வரா காணாமல் போன கையோடு பூஜாங் வெளி காணாமல் போனது. அப்புறம் கோத்தா கெலாங்கி காணாமல் போனது. அடுத்து கங்கா நகரம் கரைந்து போனது. இலங்காசுகம் இல்லாமல் போனது. இப்போது ஸ்ரீ விஜய பேரரசும் கரைந்து போகின்றது. மனசிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

இந்தோனேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு உள்ள கல்வியாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதாவது இந்தோனேசியாவிற்கு ஒரு தேசிய அடையாளம் வேண்டும். அது ஒரு வரலாற்று அடையாளமாக இருக்க வேண்டும் எனும் விவாதம்.




அப்படி என்றால் ஸ்ரீ விஜய பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா; அல்லது மஜபாகித் பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா. எந்த அடையாளம் இந்தோனேசியாவிற்குச் சரியாகப் பொருந்தி வரும் என்று இன்றைக்கு வரைக்கும் இந்தோனேசியக் கல்வியாளர்கள் விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஸ்ரீ விஜயம்; மஜபாகித் இந்த இரண்டுமே இந்தோனேசியாவின் அடையாளமாக இருக்கட்டும் என்று இந்தோனேசியத் தேசியவாதிகள் பலர் முன்மொழிகின்றனர்.

ஸ்ரீ விஜயம்; மஜபாகித் எனும் அந்த இரு பெயர்களுமே தங்களின் பழைமையான மகத்துவத்திற்கும் பழமையான மேன்மைக்கும் பெருமை சேர்ப்பதாகப் பெருமை படுகின்றனர். 




இருந்தாலும் பொதுவாக ஸ்ரீ விஜயம் எனும் பெயரே தேசியப் பெருமையின் அடையாளமாகக் கருதப் படுகிறது. பலேம்பாங் வாழ் மக்கள் ஸ்ரீ விஜயம் எனும் பெயர் தான் தேசிய அடையாளம் என்று போராடி வருகின்றனர்.

அந்தத் தாக்கத்தில் கெண்டிங் ஸ்ரீ விஜயா (Gending Sriwijaya) எனும் பாடலை உருவாக்கி அதனை இந்தோனேசியப் பாரம்பரிய நடனங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

இந்தோனேசியாவில் பல நகரங்களில் பல சாலைகளுக்கு ஸ்ரீ விஜயா சாலை என்று பெயர் வைத்து பெருமைப் படுகிறார்கள். 1960-ஆம் ஆண்டு பலேம்பாங்கில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீ விஜய பல்கலைக்கழகம் (Srivijaya University) என்று பெயர் வைத்துப் பெருமைப் பட்டார்கள்.




இந்தோனேசிய இராணுவத்தின் கமாண்டோ பிரிவிற்கு கோடாம் ஸ்ரீ விஜயா (Kodam Sriwijaya) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

தாவரங்களுக்கு உரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயர் பூப்புக் ஸ்ரீ விஜயா (PT Pupuk Sriwijaya). பலேம்பாங் நாளிதழுக்கு ஸ்ரீ விஜயா போஸ்ட் (Sriwijaya Post) என்று பெயர்.

ஓர் இந்தோனேசிய விமான நிறுவனம். அதற்குப் பெயர் ஸ்ரீ விஜய ஏர் (Sriwijaya Air). ஒரு விளையாட்டரங்கத்திற்கு கெலோரா ஸ்ரீ விஜயா (Gelora Sriwijaya Stadium) என்று பெயர். பலேம்பாங்கில் ஒரு காற்பந்து குழுவின் பெயர் ஸ்ரீ விஜயா (Sriwijaya F.C.).

2011 நவம்பர் 11 ஆம் தேதி தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பலேம்பாங்கில் உள்ள கெலோரா ஸ்ரீ விஜயா அரங்கில் நடைபெற்றது. அந்தத் தொடக்க விழாவில் மாபெரும் நடன நிகழ்ச்சி. அந்த நடனத்தின் பெயர் என்ன தெரியுமா. தங்கத் தீபகற்பமாக ஸ்ரீ விஜயா (Srivijaya the Golden Peninsula). 




அந்தப் பாரம்பரிய நடனத்தில் அந்தக் காலத்துக் கப்பல் ஒன்றைத் தவழச் செய்து ஸ்ரீ விஜயா பேரரசிற்கே பெருமை செய்தார்கள். ஸ்ரீ விஜயா என்கிற பேரரசு வரலாற்றின் பெருமைகளை அப்படி எல்லாம் அழகு செய்தார்கள். சொல்லும் போது உடல் புல்லரிக்கிறது.

அந்த நடனம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். நீங்களும் பார்த்து பெருமை படுங்கள். அதன் இணைய முகவரி:

https://www.youtube.com/watch?v=ci4n5Tmr4IQ

ஆக இப்படி பல்வேறு வகையில் ஸ்ரீ விஜய எனும் பெயருக்குப் பெருமை சேர்த்து பெருமை படுகிறார்கள். யார் பெருமை படுகிறார்கள். சொல்லுங்கள். பக்கத்து நாட்டில் இருக்கும் இந்தோனேசியர்கள்.




ஒரு பக்கம் வரலாற்றை வரலாறாக மதித்து கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அப்படியா நடக்கிறது. இந்தியர்கள் சார்ந்த பெரும்பாலான அடையாளங்களை எல்லாம் அடித்துத் துவைத்து மிதித்து அரிச்சுவடி இல்லாமல் சிதைத்து வருகிறார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் எதைக் கடிக்கக் கூடாதோ அதையும் கடித்து வருகிறார்கள்.

எது எப்படியோ சாம்பார், சட்னி, மோர், ரசம், தயிர் சாதம் எல்லாவற்றையும் எங்கள் முன்னோர்கள் தான் உருவாக்கினார்கள் என்று எவரும் சொல்லாமல் இருந்தால் சரி. பெரும் பாக்கியம். மன்னிக்கவும். பெரும் புண்ணியம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.06.2020