மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஏப்ரல் 2020

மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 2

மஜாபாகித் அரசு (Majapahit Empire) 1293-ஆம் ஆண்டில் ஜாவா தீவில் உருவான அரசு. அது ஒரு ஜாவானிய, இந்து, பௌத்தம் கலந்த மாட்சிமை அரசு. கடல் ஆதிக்கம் சார்ந்த பேரரசு (Javanese Hindu-Buddhist thalassocratic empire).

அந்தப் பேரரசை உருவாக்கியவர் ராடன் விஜயா (Raden Vijaya) இவரின் மற்றொரு பெயர் நாராய சங்கரம விஜயா (Nararya Sangramawijaya). 

 

ஒரு சருகு மான் சில வேட்டை நாய்களைத் தன் பின்னங் கால்களால்
எட்டி உதைத்துத் தள்ளியதை நல்ல சகுனமாகக் கருதிய
பரமேஸ்வரா அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைத்தார்.

அந்தப் பேரரசை ஹாயாம் வூரூக் (Hayam Wuruk) என்பவர் ஆட்சி செய்த போது மஜாபாகித் அரசு கடல் ஆளுமையில் சிறந்து விளங்கியது. ஹாயாம் வூரூக்கின் அசல் பெயர் ராஜா ஜனகரன் (Rajasanagara). இவருக்கு மற்றொரு பெயரும் இருந்தது. பத்ரா பிரபு (Bhatara Prabhu). இவரின் கீழ் ஒரு பிரதமர் இருந்தார். அவருடைய பெயர் கஜ மதன் (Gajah Mada). சிறப்பான நிர்வாகம். மஜபாகித் உச்சத்தைத் தொட்ட காலக் கட்டம்.

இந்த மஜபாகித் அரசு தோன்றுவதற்கு முன்னாலேயே, சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்து விட்டது. கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1377-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா தீவுக் கூட்டத்தையே ஆட்சி செய்த பேரரசு. 



1900-களில் மலாக்கா நகரம்
இங்கே ஒன்றைக் கவனியுங்கள். கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1377-ஆம் ஆண்டு வரையில் சுமத்திரா தீவில் ஸ்ரீ விஜய பேரரசு. அதே காலக் கட்டத்தில் கி.பி.1293-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1527-ஆம் ஆண்டு வரையில் ஜாவா தீவில் மஜபாகித் பேரரசு.

கால இடைவெளியைக் கவனியுங்கள். அதே சமயத்தில் ஆட்சிக் காலத்தையும் கவனியுங்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு 720 ஆண்டுகள் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து இருக்கிறது.

மஜபாகித் பேரரசு 370 ஆண்டுகள் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து இருக்கிறது.

ஸ்ரீ விஜய பேரரசின் வணிகத்துறை சீனா, இந்தியா, வங்காளம், மத்திய கிழக்கு நாடுகள் வரை பெருகி இருந்தது. சீனாவின் தாங் வம்சாவளியில் இருந்து சோங் வம்சாவளி வரை நீடித்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது. 



1700-களில் மலாக்கா பாலம்

அதாவது நீல உத்தமன் காலத்தில் இருந்து மறைந்து போனது. சிங்காசாரி (Singasari), மஜாபாகித் (Majapahit) அரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக வரலாறு சுத்தமாக மறந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏன் இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தோனேசியர்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.

1918-ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி வெளியுலகத்திற்குச் சொன்னார். அப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது உலகமே வியந்து போனது. 



மலாக்கா மணிக்கூண்டு
முதலில் அதிர்ச்சி அடைந்தது சுமத்திரா மக்கள் தான். ஏன் என்றால் அவர்கள் அங்கே தானே இருக்கிறார்கள்.

1984-ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங் பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள், குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தவிர கைவேலைப் பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின் பீங்கான் சாமான்களும் கிடைத்தன.

(2. Ahmad Rapanie, Cahyo Sulistianingsih, Ribuan Nata)

ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park) உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.



1600-களில் மலாக்கா பண்டார் ஹிலிர் கடற்கரை பகுதி

தென் சுமாத்திராவின் பலேம்பாங் (Palembang) நகரில் மூசி (Musi) எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் ஸ்ரீ விஜய பேரரசு மையம் கொண்டு இருந்தது எனும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது. அந்த முடிச்சை அவிழ்த்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர். அவருடைய பெயர் பியரி ஈவஸ் மாங்குயின் (Pierre-Yves Manguin).

(3. Munoz, Paul Michel)

2013-ஆம் ஆண்டு இந்தோனேசியப் பல்கலைக்கழகம் தீவிர ஆய்வுப் பணியில் இறங்கியது. அதன் பயனாக பாத்தாங் ஹாரி (Batang Hari River) ஆற்றுப் பகுதியில் ஜாம்பி (Muaro Jambi Regency, Jambi) எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசு இயங்கி வந்ததாக உறுதிப் படுத்தப்பட்டது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த பல இந்திய மர்மங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் தான் அதிகமாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

1511-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள் மலாக்காவில்
கரை இறங்கியதைச் சித்தரிக்கும் ஓவியம்

அங்கோர் வாட்டில் ஓர் அதிசயம் இருப்பதாகச் சொன்னவர் ஒரு பிரெஞ்சுக்காரர்.

இந்தோனேசியா பிராம்பனான் திருமூர்த்தி கோயிலைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர்.

போரோபுடூர் புத்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர்.

ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர் தான்.

ஆக ஒரு வகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு உலக இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டும். இது என் கருத்து. இன்னும் ஒரு விசயம்.

1700-ஆம் ஆண்டுகளில் மலாக்கா

இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இந்தோனேசியர்கள் பலரிடம் இந்திய இரத்தம் ஓடலாம். இதை மறுப்பவர்களும் இருக்கலாம்.

ஆக அங்கே இருந்து பக்கத்துப் பக்கத்து நாடுகளில் குடியேறியவர்களுக்கு எந்த மாதிரியான இரத்தம் ஓடலாம் என்பதை அவதானிக்க வேண்டிய பொறுப்பு பெரிய பொறுப்பு.

பரமேஸ்வரா எனும் சொல் ஒரு தமிழ்ச் சொல் தொடர். இரு சொற்கள் வருகின்றன. பரமா (Parama) எனும் சொல். அடுத்து ஈஸ்வரா (Ishvara) எனும் சொல். இந்த இரு சொற்களும் இணைந்து உருவாக்கிய சொல் தொடர் தான் பரமேஸ்வரா (Parameswara)

இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈஸ்வரன்.

(1.Tsang, Susan; Perera, Audrey)


1405-ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து மலாக்காவிற்கு வந்த
சீனக் கப்பல் படை தலைவர் செங் ஹோ என்பவரின் பயணக் கப்பல்கள்

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்

.
*   1375-ஆம் ஆண்டில் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தார். இவர் சிங்கப்பூரை 1389-ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த ஸ்ரீ மகாராஜாவிற்கு மகனாகப் பிறந்தவர் தான் பரமேஸ்வரா.

*    1389-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிற்றரசில் அரசியல் குழப்பங்கள். அதனால் ஸ்ரீ மகாராஜாவின் பொறுப்புகளை அவருடைய மகனான ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா ஏற்றுக் கொண்டு அரியணை ஏறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா 1389-ஆம் ஆண்டில் இருந்து 1399-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார். (2.Windstedt, Richard Olaf)

1826-ஆம் ஆண்டில் மலாக்காவில் பிரிட்டிஷார் ஆட்சி

* 1399-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

*    1401-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார்.

*    1405-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். மிங் அரசரின் நட்புறவைப் பாராட்டி அவரின் ஆதரவைப் பெற்றார்.

*    1409-ஆம் ஆண்டில் இந்தோனேசியா சுமத்திராவில் இருந்த பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா திருமணம் செய்து கொண்டார்.

*   1411-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்கு மறுபடியும் சென்றார். மிங் அரசரின் பாதுகாப்பை நாடினார்.

*  1414-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70-ஆவது வயதில் காலமானார். (3.Miksic, John N.)

பரமேஸ்வரா சிங்கப்பூருக்கு எப்படி வந்தார். இவருடைய பாட்டனார் முப்பாட்டனார்கள் சிங்கப்பூருக்கு ஏன் வந்தார்கள். எப்படி வந்தார்கள். 



1900-ஆம் ஆண்டுகளில் மலாக்கா

ஒரு காலக் கட்டத்தில் சுமத்திரா தீவை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது. அந்தப் பேரரசின் கீழ் பலேம்பாங் சிற்றரசு இயங்கியது.

அந்தச் சிற்றரசின் அரசராக பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன் இருந்தார். அவர் சிங்கப்பூருக்கு ஏன் வந்தார். இவற்றை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்திய அரச பரம்பரையினர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பரமேஸ்வராவின் உண்மையான வரலாற்றுப் பின்னணி தெளிவாகத் தெரிய வரும்.

அந்த வகையில் அடுத்த அத்தியாயத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவை ஆட்சி செய்த வர்மதேவா பேரரசைப் பற்றி தெரிந்து கொள்வோம்

இந்தோனேசியாவில் பற்பல காலக் கட்டங்களில் பற்பல பேரரசுகள் ஆட்சிகள் செய்து உள்ளன. பெரும்பாலானவை இந்தியர் பேரரசுகள். இந்தோனேசிய வரலாற்றின் தொடக்க காலக் கட்டங்களில் இந்தியர் பேரரசுகள் தான் மிகையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. 




இந்தியப் பேரரசுகள் என்றால் இந்தியாவின் பேரரசுகள். அதாவது இந்தியா எனும் நாட்டின் கீழ் இருந்த பேரரசுகளைக் குறிக்கும். இந்தியர் பேரரசுகள் என்றால் கடல் கடந்து வந்த இந்தியர்கள் ஆட்சி செய்த பேரரசுகளைக் குறிக்கும்.

இந்தியப் பேரரசுகள் என்பதிலும் இந்தியர் பேரரசுகள் என்பதிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்தோனேசியாவில் இருந்த பேரரசுகளை இந்தியர் பேரரசுகள் என்றே அழைக்க வேண்டும்.

இந்தோனேசியா முழுமைக்கும் ஆங்காங்கே சின்னச் சின்ன அரசுகளும் இருந்தன. அவை உள்ளூர் மக்களால் உருவாக்கப் பட்ட அரசுகள். பின்னர் காலத்தில் பெரும் அரசுகள் வளர்ச்சி பெற்று கோலோச்சின.

சின்ன அரசுகளால் அந்தப் பெரிய அரசுகளை எதிர்த்து நின்று போராட முடியவில்லை. வலிமை மிகுந்த அந்த அரசுகளை எதிர்த்து நின்று சமாளிக்கவும் முடியவில்லை. கால ஓட்டத்தில் அந்தச் சின்ன அரசுகள் கரைந்து போயின.



சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமன்

இந்தப் பெரும் பேரரசுகள் எப்படி உருவாகின என்பதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். துல்லியமான விவரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளை முன் நிறுத்திப் பதிவு செய்கிறேன்.

இதுவரையிலும் இந்தோனேசியாவில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள்; சிற்பச் சிலைகள்; சமயச் சின்னங்கள்; அகழாய்வு மண்பாண்டங்கள்; உலோகப் பொருட்கள் போன்றவை வரலாற்று ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் உதவியாய் இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள நாடு இந்தோனேசியா.

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காவது இடம் வகிக்கிறது. அங்கே 26 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தோனேசியா ஓர் அழகிய பச்சை மண். ஓர் அதிசயமான பசுமை வனம்

ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை

இந்தோனேசியாவில் மொத்தம் 17,508 தீவுகள் உள்ளன. ஜாவா, சுமத்திரா, போர்னியோ கலிமந்தான், செலிபஸ் ஆகியவை நான்கு பெரிய தீவுகள். பாலி, லொம்பாக், மதுரா, சும்பா ஆகியவை நடுத்தர தீவுகள். எஞ்சியவை அனைத்தும் குட்டிக் குட்டித் தீவுகள். எரிமலைகளுக்கும் பஞ்சம் இல்லை. ஏறக்குறைய 150 எரிமலைகள் உள்ளன..

இந்தோனேசியா எனும் சொல்லுக்குள் பற்பல பழைமைகள் பற்பல புதுமைகள். அவற்றில் பற்பல மர்மங்கள். அந்தச் சொல்லுக்குள் நீண்ட நெடிய ஒரு வரலாறு புதைந்து உள்ளது.

அந்த வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஒரு காலச்சுவடும் உள்ளது. இதைக் கேட்டு மலைக்கவும் வேண்டாம். திகைக்கவும் வேண்டாம். ஓர் உண்மையை மறைக்கவும் வேண்டாமே.

இந்தோனேசியாவைப் பொருத்த வரையில் இந்தியர்கள் என்றால் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த பல்லவர்கள். ஏன் என்றால் இந்தோனேசியாவில் முதன்முதலில் குடியேறிய இந்திய இனம் பல்லவ இனம் ஆகும். பல்லவர்கள் யார்; எங்கு இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தார்கள் என்பதைப் பற்றி இன்றும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பல்லவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். தமிழர்களின் கலைகளை வளர்த்தவர்கள். தமிழர்களின் கலாசாரங்களுடன் ஐக்கியமானவர்கள். ஆகவே அவர்களைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் என்று சொல்வதில் தப்பு இல்லை.

இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் பல இந்தியச் சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. பல்லவர்கள் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.04.2020

Copyright of KSMuthukrishnan
posted at https://ksmuthukrishnan.blogspot.com/


சான்றுகள்:

1. Pierre-Yves Manguin - Academic Staff, Senior Research Fellow at the French School of Asian Studies. He directed archaeological missions in Sumatra on the port sites of the Sriwijaya period (7th to 13th centuries) in 2010 and 2011.

2. Partogi, Sebastian (25 November 2017). "Historical fragments of Sriwijaya in Palembang". The Jakarta Post.

3. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet.

4. Sita W. Dewi (9 April 2013). "Tracing the glory of Majapahit". The Jakarta Post.