வெங்காயம் சொல்லும் கண்ணீர் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்காயம் சொல்லும் கண்ணீர் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 டிசம்பர் 2019

வெங்காயம் சொல்லும் கண்ணீர் கதை

தமிழ் மலர் - 29.12.2019

முன்பு எல்லாம் வெங்காயத்தை வெட்டினால் தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லீங்க. வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. வெங்காயத்திற்கு வந்த மவுசைப் பாருங்கள். 



ஓர் இந்தியக் குடும்பத்தில் சமையல் என்றால் அதற்கு அடிப்படையானவை வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு. இவை இல்லாமல் சமையல் செய்ய முடியாது. தெரிந்த விசயம்.

ஆக வெஙாயத்தின் விலை என்னதான் உயர்ந்தாலும் அவற்றைக் கண்டிப்பாக வாங்க வேண்டும். பயன்படுத்தியாக வேண்டும்.

வெங்காயத்தின் விலை கண்ணீர் சிந்தும் அளவிற்கு உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ஒரு வெள்ளிக்குக் கூவிக் கூவி விற்றார்கள்.

இப்போது ஒரு கிலோ 15 ரிங்கிட்டிற்கு உயர்ந்து போய் விட்டது. சில கடைகளில் 20 ரிங்கிட் வரை விற்கிறார்கள். இஷ்டத்திற்கு விலையைப் போட்டு கல்லா கட்டுகிறார்கள்.



கூவிக் கூவி விற்பது எல்லாம் இப்போது கிடையாது. வாங்கினால் வாங்குங்கள்... வாங்காவிட்டால் போங்கள் என்று சொல்கிற மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விற்கிறார்கள்.

நமக்கும் வேறு வழி தெரியாமல் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி வாங்கிக் கொண்டு தான் போகிறோம். என்ன செய்வது. காலம் செய்யும் அலங்கோலம்.

அதுதான் ஒன்று சொல்வார்கள். யாரையும் எந்த நேரத்திலும் தரம் குறைவாகப் பார்க்கக் கூடாது.

யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம். அதுவே இப்போது தலைகீழாய் மாறி விட்டது. வெந்தயத்திற்கு ஒரு காலம் என்றால் வெங்காயத்திற்கு ஒரு காலம். 



ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மலேசியாவில் இந்த வெங்காய விலை ஏற்றம் ஒரு தொடர் கதையாகி வருகிறது.

இந்த வெங்காயத்திற்கு ஏன் இப்படி ஒரு கிராக்கி. ஒரே ஒரு காரணம். உலகப் பருவநிலை மாற்றங்களே அதற்கு முக்கியக் காரணம். மழைக் காலத்தில் வெயில் அடிக்கிறது. வெயில் காலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர் பச்சைகள் வெயிலில் காய்ந்து கருகிப் போயின. பின்னர் அடைமழை அடித்துக் கொட்டியது. இப்போது அதே அந்தப் பயிர் பச்சைகள் அப்படியே அழுகிப் போகின்றன.



உலகத்திலேயே அதிகமாக வெங்காயம் பயிர் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. அங்கே இருந்துதான் மலேசியாவிற்கு வெங்காயம் வந்து கொண்டு இருந்தது.

உலகத்திலேயே அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளின், 2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்.

சீனா: 22,300,000 டன்கள்

இந்தியா: 19,299,000 டன்கள்

அமெரிக்கா: 3,159,400 டன்கள்

ஈரான்: 2,381,551 டன்கள்

ரஷ்யா: 1,984,937 டன்கள்

துருக்கி: 1,904,846 டன்கள்

எகிப்து: 1,903,000 டன்கள்

பாகிஸ்தான்: 1,660,800 டன்கள்


இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு உற்பத்தி செய்யப் படுகிறது. 



தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் சின்ன வெங்காயத்திற்குப் பேர் போனவை. தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய மூன்று இலட்சம் டன் சின்ன வெங்காயம்  உற்பத்தி செய்யப் படுகிறது.

தமிழகத்தின் இந்தப் பகுதிகளில் இருந்துதான் மலேசியாவிற்கு சின்ன வெங்காயம் வந்து கொண்டு இருந்தது. இனியும் வரும் என்று எதிர்பர்ப்போம்.

இந்தியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்களினால் வெங்காய விளைச்சலில் அதிகமான பாதிப்பு. அதன் காரணமாக வெங்காய ஏற்றுமதியை இந்தியா கட்டுப் படுத்த வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் இந்திய வெங்காயம் குறைவான அளவில் மலேசியாவிற்கு வந்தது. 



அதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையேற்றம். ஒரு பொருளின் விலை ஒரு தடவை ஏறினால் மறுபடியும் பழைய விலைக்கு இறங்கி வராது. மலேசியாவைப் பொருத்த வரையில் நிதர்சனமான உண்மை.

ஊட்டி ஊட்டி வளர்த்தால் ஊதி ஊதிக் கெடுப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஒரு தடவை ஒரு பொருளின் விலை ஏறினால் அதை அப்படியே ஊதி ஊதியே உயர்த்திக் கொண்டு போய் விடுவார்கள். இது ஒன்றும் பழைய அலி பாபா கதை அல்ல.

அந்த மாதிரி தான் வெங்காயத்தின் வெங்காயக் கதையும் வருகிறது. வேதாளம் முருங்கை மரம் ஏறினால் அந்த வேதாளத்தை முருங்கை மரத்தோடு வெட்டிச் சாய்த்தால் தான் முடியும் என்கிறது விக்கிரமாதித்தன் கதை. ஆனால் அது வெங்காய விசயத்தில் நடக்கிற காரியமா.



இந்தியாவில் வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கே பருவம் தவறிய மழை. அத்துடன் போதிய மழையும் இல்லை. அதனால் வெங்காய உற்பத்தியில் கடுமையாக பாதிப்பு.

மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பெல்லாரி எனும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப் படுகிறது.

பொதுவாக ஏப்ரல், மே, ஜூன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெங்காயம் பயிர் செய்யப்பட்டு அறுவடை செய்யப் படும்.

இருந்தாலும் இந்தியாவில் அண்மைய ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்கிறது. 



அதனால் தமிழகத்தில் வெங்காய உற்பத்தி பெரும் அளவு பாதிக்கப் பட்டது. இதைத் தவிர அதிகமான ஈரப் பதம். அதன் காரணமாக நோய் தாக்குதல்கள். அதனால் வெங்காய உற்பத்தியில் பாதிப்பு.

அதையும் தாண்டிய நிலையில் முக்கிய உற்பத்தி மையமான மகராஷ்டிராவில் போதிய விளைச்சல் இல்லை. அதனால் இந்தியா முழுமைக்கும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் வெங்காய விலையும் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் அதிகமாகப் பாதிக்கப் படுவது சாமானியப் பொதுமக்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்தியாவில் இருந்துதான் மலேசியாவுக்கு 75 விழுக்காட்டு வெங்காயம் வருகிறது. அதனால் தான் இந்தியாவின் பருவநிலை மாற்றங்களைப் பற்றியும்; அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் சொல்கிறேன். 



வெங்காய விலை ஏற்றத்திற்கு பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், சட்டவிரோதமாகப் பதுக்கி வைப்பதும் ஒரு காரணம் என்றும் சொல்ல வேண்டி உள்ளது.

பெரிய வெங்காயம் ஆறு மாத வரை நன்றாக இருக்கும். அதனால் தரகர்கள் பலர் பெரிய வெங்காயத்தைப் பதுக்கி வைக்கின்றனர்.

உற்பத்தி குறைச்சலான நேரங்களில் பெரிய வெங்காயத்தை அதிக விலைக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். உட்கார்ந்து கொண்டே கொழுத்த பணக்காரர் ஆகிறார்கள்.

வெங்காயத்தைக் கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடித்து பணக்காரர் ஆவது ஒரு கலையாக மாறி வருகிறது. பணம் சம்பாதிக்கலாம். அதற்கு இப்படியா. இந்த மாதிரியா ஏழைகளின் வயிற்றில் அடிப்பது.



இந்த மாதிரி மனிதர்கள் செத்துப் போனால் அழுகிப் போன வெங்காய மூட்டைகளில் கட்டி பத்து நாளைக்கு ஊறப் போட்டுத் தான் புதைக்க வேண்டும்.

நரகத்திற்குப் போனால் அவர்களுக்கு அங்கே கிடைக்கும் கொதிக்கும் கொப்பரைச் சட்டி அபிஷேகம் என்பது வேறு கதை. இது வயிற்றெரிச்சலில் ஒரு புலம்பல். சரி.

இந்திய வெங்காயத்திற்கு இந்தியாவிலேயே தட்டுப்பாடு. அதனால் மலேசியாவிலும் தட்டுப்பாடு. அதற்கு என்ன செய்து இருக்கலாம். சீனாவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்வதற்கு மலேசியா முயற்சி செய்து இருக்கலாம்.

அல்லது பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் அல்லது ஈரானில் இருந்து இறக்குமதி செய்து இருக்கலாம். அல்லது மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்து இருக்கலாம். 



அப்பேர்ப்பட்ட இந்தியாவே பக்கத்தில் இருக்கும் எகிப்தில் இருந்து 40 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது.

(https://www.vikatan.com/news/tamilnadu/people-did-not-like-imported-onions-from-egypt-says-traders)

ஆனால் மலேசியா அப்படி அல்ல. அதற்குப் பதிலாக 8000 கி.மீ. அப்பால் இருக்கும் துருக்கியில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்தார்கள்.

என்ன நடந்தது தெரியுமா. பாதி வெங்காயம் கப்பலிலேயே அழுகி விட்டதாம். இவர்களும் எதிர்பார்க்கவில்லை. துருக்கி நாட்டு பெரிய வெங்காயங்கள் ஆறு மாத காலம் வரை தாக்குப் பிடிக்கும்.

 

அப்புறம் என்ன செய்வது. எஞ்சிய வெங்காயத்தை மலேசியாவிற்குக் கொண்டு வந்து இருக்கிறார்கள். வாங்கிய விலையை விட சற்றுக் குறைவான விலையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்றுத் தீர்த்தார்கள்.

இப்படி ஏற்படும் என்று இங்கே உள்ள விவசாய அறிவாளிகளும் எதிர்பார்க்கவில்லை. ஒரு புதிய அனுபவம். இது அண்மைய காலத்து வெங்காயக் காப்பியக் கதை. 

வெங்காயத்தின் விலை உயர்ந்து போவதால் அதிகம் பாதிக்கப் படுகிறவர்கள் பாவம் விவசாயிகள் தான். வெயிலில் கருகிப் பொசுங்கிப் போன வெள்ளந்திகள். அடுத்து அதிகமாய்ப் பாதிக்கப் படுவது சாமானியப் பொதுமக்கள்.

இந்த இருவருக்கும் இடையில் தரகர் வேலை பார்க்கும் வியாபாரிகள் தான் அதிகமாகப் பணம் பார்க்கிறார்கள். மானவாரியாக விலையை உயர்த்தி விடுகிறார்கள். அப்படியே ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். அடித்துக் கொள்ளை லாபத்தில் கல்லா கட்டுகிறார்கள். பெரிய பாவம்.

வெங்காயக் கதையைக் கேட்டு பலருக்கு கண்ணீர் வரலாம். எனக்கு அப்படி இல்லை. மலேசிய இந்தியர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டுக் கேட்டு கண்ணீர் வற்றிப் போய் ரொம்ப நாளாகி விட்டது. 



அண்மைய காலமாகத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ்க் கல்விக்கும் பலவித நேரடி தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மூடி மறைக்க விரும்பவில்லை.

பொதுவாகச் சொன்னால் தமிழ் மொழிக்கும் இந்து சமயத்திற்கும் களங்கம் ஏற்படுத்தப் படுகின்றது. அடுத்து வரும் தலைமுறையினரைச் சீரழிக்கும் சக்திகள் ஆங்காங்கே நர்த்தனம் ஆடுகின்றன.

தன்மானத்துக்கும் உரிமைக்கும் களங்கம் ஏற்படுவதை அறிந்த பின்னரும் எதுவும் நடக்காதது போல் என்னால் வாளா இருக்க முடியவில்லை. வெங்காயத்தை நறுக்காமலேயே கண்ணீர் வருகிறது.