ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 9

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சிங்கள அரசியல்வாதிகளால் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு ஏராளமான துன்பங்கள் துயரங்கள். ஏராளமான வேதனைகள் சோதனைகள். ஏராளமான கெடுமைகள் கொடுமைகள்.



ஈழத் தமிழ்த் தலைவர்கள் தொடக்கக் காலத்தில் காந்திய அகிம்சைப் போராட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி வந்தனர். அதுவே பின்னர் காலத்தில் ஆயுதப் போராட்டமாக மாற்றம் கண்டது. என்னைக் கேட்டால் சுதந்திரத் தாகம் என்பது ஒரு சின்ன விதை மட்டுமே. ஓர் ஆலம் விதையாகக்கூட பார்க்கலாம்.
 
இன உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அடித்துப் பெற வேண்டிய நேரத்தில் அடித்துப் பெற வேண்டும்.
காந்தியின் அகிம்சா அமைதி வழியை எதிர்பார்த்தால் *இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையாகவே வாழ வேண்டும்*. அந்தத் தாரக மந்திரத்திற்குத் தனிப் பாதை அமைத்துக் கொடுத்தவர் பிரபாகரன். 




கொழும்புவில் பிரபாகரனின் அத்தை மாமா வாழ்ந்த போது அவர்கள் அனுபவித்த வேதனைகளைச் சின்ன வயதில் கேட்டு கொதித்துப் போனவர் பிரபாகரன்.

அதனால் அவருக்குள் சில உறுதிப்பாடுகள் வேரூன்றிப் போயின. அவையே பின்னாட்களில் ஆலம் விருச்சங்களாய் உச்சம் பார்த்து இமயம் தொட்டன.

1980 - 2000-ஆம் ஆண்டுகளில், விடுதலைப் புலிகள் இயக்கம் என்கிற பெயரும் சரி; வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற பெயரும் சரி; இலங்கை ஆட்சியாளர்களை நடுங்க வைத்த சிம்ம சொப்பனங்களாகும்.

சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசித் தோல்வியை அவ்வளவு எளிதாகத் திணித்துவிட முடியாது. ஈழத் தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றிக் காட்டலாம். ஆனால் அவர்களை நிரந்தரமான அடிமைகளாக மட்டும் மாற்றவே முடியாது. இது சத்தியம். சரி.



இலங்கையில் ஏழு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய பெயர் பரமேசுவரா கல்லூரி. 1921-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. அதே கல்லூரி 1974-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றது.

அந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்க ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வருகிறார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்கச் சொல்லி இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளைப் பிரபாகரன் கேட்டுக் கொள்கிறார்.

நல்ல ஒரு நிகழ்ச்சி தானே. அதை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்கலாம். ஒரு செருகல்.

மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் தடவி, மலர்மாலை போட்டு கழுத்து அறுக்கப்படும் ஆட்டுக் கிடாய் கதையும் சரி; மஞ்சளும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று அதே ஆட்டுக் கிடாய் வெட்ட வருபவரை முட்டி மோதித் தள்ளுவதும் சரி. அங்கேதான் பிரபாகரன் நிற்கிறார். சரி. 




தமிழ்ப்புலிகள் என்பது யாழ்ப்பாணத்தில் அப்போது புதிதாகத் தோன்றிய ஓரு போராட்ட அமைப்பு. அந்த அமைப்பின் வேண்டுகோளைப் பெரும்பான்மையான தமிழர் அரசியல் கட்சிகளும் ஏற்று கொள்கின்றன. பெரிய அதிசயம்.

ஆனால் அதன் பின்னணியில் சுயநல அரசியல் நோக்கங்கள் இருந்தன என்பது அப்போது பிரபாகரனுக்குத் தெரியவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடுவது இல்லை.

அதையும் தாண்டிய நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைப் பயமுறுத்த வேண்டும் என பிரபாகரன் முடிவு எடுக்கிறார். அடுத்தக் கட்டமாக ஆறு கைக் குண்டுகளைத் தயாரிக்கிறார். வெடிக்கவும் வைக்கிறார்.




ஒரு குண்டு காங்கேசன் போலீஸ் வளாகத்தில் வெடிக்கிறது. இன்னொரு குண்டு காங்கேசன் பஸ் நிலையத்தில் வெடிக்கிறது. இன்னொன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவரின் வீட்டின் வளாகத்தில் வெடிக்கிறது.

மற்ற குண்டுகள் மற்ற முக்கியமான இடங்களில் வெடிக்கின்றன. பண்டாரநாயக்காவிற்கு பெரும் அதிர்ச்சி.

இவற்றுக்கு எல்லாம் தமிழகத்தில் இருந்து வந்த செட்டி எனும் நண்பன் பிரபாகரனுக்கு உதவி செய்தார். அந்தக் குண்டு வெடிப்புகளில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. ஆனாலும் சிங்கள அரசிற்கு லேசான குளிர்க் காய்ச்சல்.

ஸ்ரீமாவோவின் திறப்புவிழா எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கவில்லை. பொது மக்கள் அதிகமாக வரவில்லை. பயம்தான் காரணம். 




ஆயிரக் கணக்கில் மக்களைச் சேர்த்து விழாவைச் சிறப்பாக நடத்தி விடலாம். பண்டாரநாயக்காவிடம் நல்ல பெயர் வாங்கி விடலாம் என நினைத்த அல்பிரட் துரையப்பாவிற்குப் பெருத்த ஏமாற்றம். பலமான அடி.

1974-ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கைக்குண்டுகளைத் தயாரிக்க பிரபாகரனுக்கு உதவியாக இருந்தவர் அவருடைய நண்பர் செட்டி.

அவர் போலீஸாரால் கைது செய்யப் படுகிறார். சித்திரவதை செய்யப் படுகிறார். முடிவில் பிரபாகரனைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் போலீஸாரிடம் சொல்லி விடுகிறார். பிரபாகரனுக்கு ஒரு துரோகியாகவும் மாறிப் போகிறார்.

காலம் செய்த கோலமா அல்லது சித்திரவதைகள் செய்த அலங்கோலமா. தெரியவில்லை.




அதனால் பிரபாகரனால் ஏற்கனவே மறைந்து வாழ்ந்த பழைய இடங்களில் மேலும் பேர் போட முடியவில்லை. அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டிய நிலைமை.

அப்போது காடு மலை மேடுகளில் சுதந்திரமாய்க் காற்றோடு நடந்தவர். இப்போது செடி கொடிகள், புற்கள் புதர்கள், குகை குன்றுகள் என மறைந்து மறைந்து வாழ்கிறார்.

கையில் பணமும் இல்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்குதல்; இலைகள் பழங்கள் வேர்கள் கிழங்குகள் என அவரின் அன்றாட வாழ்க்கை ஓடுகிறது. ஓரிரு முறை வல்வெட்டுத் துறையில் நண்பர்களிடம் கடன் வாங்கிக் காலத்தை ஓட்டுகிறார்.

சிவக்குமரனின் தற்கொலை பிரபாகரனின் நெஞ்சத்தில் ஆழமாய்ப் பதிந்து போகிறது. 




அல்பிரட் துரையப்பா என்கிற ஒரு தமிழர் துரோகி இனி உலகத் தமிழர்களுக்குத் தேவை இல்லை என பிரபாகரனின் தமிழ்ப்புலிகள் அமைப்பு முடிவு செய்கிறது. அதற்குத் திட்டம் போடுகிறார் தலைவர் பிரபாகரன்.

அந்தத் திட்டத்திற்குத் துணையாகக் கிருபாகரன், பற்குணராஜா, கலாவதி என்கிற மூன்று இளைஞர்களைச் சேர்த்துக் கொள்கிறார். மூவரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள்.

அந்த வகையில் அல்பிரட் துரையப்பாவைப் பழி வாங்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் பிரதான நுழைவாசல். 




புராதன வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டு விளங்கும் ஆலயம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயமாகும். யாழ்ப்பாணத்தில் பழமையும் பெருமையும் கொண்ட ஆலயம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைந்து உள்ள ஓர் அமைதியான இடம்.

வெள்ளிக் கிழமைகளில் அல்பிரட் துரையப்பா அங்கு வருவது வழக்கம். அதன்படி 1975 ஜுலை 27-ஆம் தேதி காலை ஆறு மணிக்கு எல்லாம் பிரபாகரன் கோயிலுக்குப் புறப்படுகிறார். கோயிலின் வாசலில் நண்பர்களுடன் காத்து நிற்கிறார்.

சொன்னபடி துரையப்பாவின் கார் வருகிறது. கோயிலின் மரநிழலில் நிற்கிறது. பிரபாகரனுக்குத் துரையப்பாவின் முகம் தெரியாது. கிருபாகரனுக்குத் தெரியும். கண் சாடை மூலம் அவர் தான் இவர் என அடையாளம் காட்டிக் கொடுக்கிறார் கிருபாகரன். 




அடுத்த நிமிடமே காரை நோக்கிப் பிரபாகரனும் கலாவதியும் போகிறார்கள். அல்பிரட் துரையப்பா காரை விட்டு இறங்கியதும் ’வணக்கம் ஐயா’ என வணக்கம் சொல்கிறார் பிரபாகரன்.

பதிலுக்கு துரையப்பா வணக்கம் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் ஒரு துப்பாக்கிக் குண்டு துரையப்பாவின் நெஞ்சைத் துளைக்கிறது. அடுத்தடுத்து  நான்கு குண்டுகள்.

அல்பிரட் துரையப்பா அங்கேயே சரிந்து விழுகிறார். கோயிலில் இருந்த மக்களுக்குள் அதிர்ச்சி. கூட்டமாக ஓடி வருகிறார்கள். அதைக் கண்டதும் துரையப்பாவின் காரை எடுத்துக் கொண்டு பிரபாகரன் குழுவினர் தப்பிச் செல்கின்றனர்.

சில கிலோ மீட்டர்கள் தள்ளி நீர்வேலி என்னும் இடம். அங்கே அந்தக் காரைப் போட்டு விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பயணிக்கிறார்கள். துரையப்பாவின் இறப்புச் செய்தியைக் கேட்டு இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். 




ஆனால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உச்சக் கட்டத்தில் கோபம் அடைந்தது தான் மிச்சம். அல்பிரட் துரையப்பாவின் இறுதி ஊர்வலம் நடப்பதற்கு முன்பாகவே கொலையாளிகள் பிடிபட வேண்டும் என கட்டளை போடுகிறார்.

தமிழர் மாணவர் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு மாதத்திற்குப் பின்னர் பற்குணராஜாவும் கலாவதியும் கைது செய்யப் படுகிறார்கள். சித்திரவதை தாங்க முடியாமல் பிரபாகரனின் பெயரையும்; புதிய தமிழ்ப்புலிகள் பெயரையும் சொல்லி விடுகிறார்கள்.

அதன் பின்னர் தான் அப்படி ஓர் அமைப்பு இருப்பதைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கே தெரிய வருகிறது. அப்புறம் என்ன. எலி வேட்டை புலி வேட்டையில் புதிய பரிமாணங்கள்.




அல்பிரட் துரையப்பாவின் கொலைக்குப் பின்னர் புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பைப் பற்றி பரவலாகப் பேசப் பட்டது. அதன் தலைவர் பிரபாகரன் என்பதும் ஈழம் முழுவதும் தெரிய வந்தது.

அல்பிரட் துரையப்பாவின் வழக்கில் பிரபாகரனை இலங்கை அரசு வலை போட்டுத் தேடியது. ஆனால் பிரபாகரனின் உருவப் படம் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. பிரபாகரன் வீட்டை விட்டுக் காட்டுக்குப் புறப்படும் போது அவரின் எல்லாப் புகைப் படங்களையும் எரித்து விட்டுத் தான் புறப்பட்டுச் சென்றார்.

போலீஸார் பிரபாகரனின் வீட்டைச் சல்லடை போட்டு தேடினார்கள். பிரபாகரனின் படம் கிடைக்கவே இல்லை. அவருடைய அக்காவின் திருமணப் படம் மட்டுமே கிடைத்தது.

அந்தப் படத்தில் பிரபாகரன் பால்மனம் மாறா பச்சைப் பிள்ளை. அந்த வைத்துக் கொண்டு பிரபாகரனை அப்படி ஒன்றும் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. சரி.

அல்பிரட் துரையப்பாவின் கொலையால் ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு புது பரிமாணம் ஏற்பட்டது என்று சொல்லலாம். அதனால் இளைஞர்கள் பலர் பிரபாகரனின் அணியில் வந்து சேர்ந்தார்கள்.

ஈழத் தமிழர்களின் உரிமைகள் காலா காலத்திற்கும் காக்கப்பட வேண்டும் எனும் தன்மான உணர்வுடன் பல இளைஞர்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். 




சரி. அப்படிச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிற துப்பாக்கிகளையும் இருக்கிற குண்டுகளையும் வைத்துக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். எங்கே கொண்டு போய் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது. அதற்கு பிரபாகரன் தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுங்களா. வவுனியா அடர்ந்த காடுகள்.

வவுனியா என்பது இலங்கையின் வட மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். காடுகள் நிறைந்த இடம். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

ஈழப் போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் இந்த வவுனியா மாவட்டத்திலேயே உள்ளனர்.

பிரபாகரனின் தந்தையார் ஓர் அரசு அதிகாரியாக இருந்த போது அந்த காடுகள் எல்லாம் பிரபாகரனுக்குத் தெளிவான அத்துப்படி. அடர்ந்த காட்டுப் பகுதிகள். ஆள் நடமாட்டமே இல்லாத இடம். அமைதியான சூழல்கள். யாருமே கண்டு கொள்ளாத தனிமையின் நிழல்கள்.

அப்படி ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்த பிரபாகரன் அதற்குப் பூந்தோட்டம் என பெயர் சூட்டினார். ஓர் அடர்ந்த காட்டிற்கு என்னே ஓர் அழகான பெயர். பிரபாகரன் என்பவர் தமிழருக்கும் வல்லவர். தமிழ் மொழிக்கும் வல்லவர்.

பிராபகரன் தேர்ந்து எடுத்த இடம் ஏறக்குறைய 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் அந்த இடத்தைச் சுத்தம் செய்தார்கள். அடர்ந்த காடுகள். அதை நினைவில் கொள்வோம்.

ஏற்கனவே அங்கு பல காய்கறிச் செடிகள்; பச்சைக் கொடிகள் இருந்தன. காட்டில் இயற்கையாக வளர்ந்தவை. அவற்றைக் கொண்டு சமைத்தார்கள். தங்களின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக பல கீரைப் பயிர்களையும் பயிரிட்டார்கள்.

எல்லாம் சரி. இடம் கிடைத்து விட்டது. பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டுமே. எப்படி. அந்த நேரத்தில் பிரபாகரனிடம் மிகக் குறைந்த அளவிலான ஆயுதங்கள்; தோட்டாக்கள்; தளவாடங்கள் மட்டுமே இருந்தன.

ஆக அவற்றைக் கொண்டு சமாளிக்க வேண்டுமே. தன் அமைப்பில் இருந்த அனைவரையும் பிரபாகரன் மன அளவில் வலுப்படுத்தினார். அச்சம் தவிர் ஆளுமை கொள் என்பதே அவர் அடிக்கடி சொன்ன வாசகம்.

காட்டுக் கம்புகளைச் சுற்றுதல், சிலம்பு கைவரிசை விளையாட்டுகள், மரம் ஏறுதல், நீச்சல் அடித்தல், வெட்டிய காட்டு மரங்களைத் தூக்குதல், மல்யுத்தம் செய்தல் என உடல் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதே சமயத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிகளையும் வழங்கினார். சரி.

ஒரு பக்கம் பார்த்தால் போலீஸார் யாழ்ப்பாணத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பிரபாகரனையும் மற்ற மற்ற போராளிகளையும் வலைபோட்டுத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால் பிரபாகரன் அண்ட் கோ வேறொரு காட்டுப் பகுதியில் தீவிரமான பயிற்சிகளில் சீறிக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் யார் தெரியும்ல... எனக்கேவா என்று பிரபாகரன் ஓர் அசால்ட் அதிகாரி போல அசத்தலாக உறுமிக் கொண்டு இருக்கிறார்.

(தொடரும்)

சான்றுகள்

1. ஈழ மலர் - ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கும் வலிகள் புரியும்.

2. பிரபாகரன் – ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி

3. https://ta.wikipedia.org/s/4rc - ஈழப் போருக்கான காரணங்களும் அதன் வளர்ச்சியும்